அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை: இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்பிற்கான விலையை யார் கொடுக்கிறார்கள்? -அபிலாஷா செம்வால்

தொழில்நுட்பம் பிரச்சினை அல்ல: பிரச்சினை தரவு ஆளுமைகளில்தான் உள்ளது. அங்கு  நம்பிக்கைக்குப் பதிலாக இலக்குகள் முக்கியமாகின்றன; மக்களுடன் நேரடி தொடர்பு கொள்ளுவதற்குப் பதிலாக அளவீடுகள் முன்னிலைப்படுத்தபடுகின்றன. டிஜிட்டல் சுகாதாரம் வெற்றிபெற வேண்டுமெனில், சீர்திருத்தம் முதலில் தொழிலாளர்களிடமிருந்து தொடங்க வேண்டும். தேவையற்ற பதிவுகளை குறைக்க வேண்டும். டிஜிட்டல் உழைப்பிற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான முடிவுகளை கேள்விக்குட்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டும்.


ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர் தனது மொபைல் போனைச் சரிபார்க்கிறார். அதில் செயல்திறன் எச்சரிக்கைகள், நிரப்பப்படாத பதிவுகள் மற்றும் நிலுவையில் உள்ள பதிவேற்றங்கள் போன்ற அறிவிப்புகள் வருகின்றன. வீட்டுக்கு வீடு சென்று பணியைத் தொடங்குவதற்கு முன்பே, கணினி அடிப்படையிலான வினாடி வினா (quiz) அமைப்பு அவரது  திறனை மதிப்பீடு செய்து விடுகிறது. இந்தியாவின் சுகாதாரத் தொழில்நுட்பப் புரட்சியானது தகவல் பலகைகள் மற்றும் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், வீடு தேடி செல்லும் பெண்களே முக்கியமான நபர்களாக திகழ்கின்றனர்.


இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்களும், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்களும் இறுதிக்கட்ட சுகாதாரப் பணிகளை செய்துவருகின்றனர். இது உலகின் மிகப்பெரிய சமூக சுகாதார வலையமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. கோவிட்-19 தடுப்பூசித் திட்டம், காசநோய் கண்காணிப்பு மற்றும் குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு முயற்சிகள் அனைத்தும் அவர்களைச் சுற்றியே இருந்து வருகிறது. இன்றைய டிஜிட்டல் அரசியல் சூழலில், அவர்களின் பங்கு குறைக்கப்படவில்லை. மாறாக, அது மறுபரிணாமம் பெற்று, உரிய அங்கீகாரம் இன்றி  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


ஒரு தரவுப் பலகை நோயாளிகளை பதிலீடு செய்யும்போது


ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (Ayushman Bharat Digital Mission) மூலம் 65 கோடிக்கும் மேற்பட்ட சுகாதார தரவு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன; மேலும், 80 கோடிக்கும் அதிகமான சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. eSanjeevani என்ற தேசிய தொலைமருத்துவ திட்டத்தின் மூலம் 39 கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பம், உணவுமுறை, தடுப்பூசி, மற்றும் நோய் கண்காணிப்பு போன்றவை அனைத்தும் மொபைல் பயன்பாடுகள் மூலம் பதிவுசெய்யப்படுகின்றன. வளங்கள் ஒதுக்கீடு மற்றும் அபாயங்களை முன்கூட்டியே கணிக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) பயன்படுத்தப்படுகிறது. இந்த கொள்கையின் தனிச்சிறப்பு அதன் செயல்திறனாகும். இருப்பினும், இதை செயல்படுத்துவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது.


காகிதப் பணிகளை முற்றிலும் ஒழிப்பதற்குப் பதிலாக, டிஜிட்டல் மயமாக்கல் அதை மேலும் அதிகரித்துள்ளது. பல்வேறு செயலிகளில் தரவை பதிவு செய்வதுடன், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் (ASHA) கையால் எழுதும் பதிவுப் புத்தகங்களையும் பராமரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இணைய இணைப்பு சிக்கல்கள் காரணமாக, டிஜிட்டல் வேலைகள் இரவு நேரம் வரை தள்ளிப் போகின்றன. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், தாமதமான பதிவுகள் எச்சரிக்கைகளுக்கும் அல்லது ஊக்கத் தொகை இழப்பிற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இறுதியில், இந்த அமைப்பு பராமரிப்பு (care) சேவையைவிட, தரவு பதிவேற்றத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது.


பெருநகரங்களில்- தடையற்ற மின்சாரம், நம்பகமான இணைய வசதி மற்றும் ஆங்கில அறிவுதான் இந்த செயலியின் (app) வடிவமைப்புக்கு அடிப்படையாக உள்ளது. ஆனால், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அவ்வாறு நடக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும்போது, செயலி உருவாக்குபவர்களோ அல்லது நிர்வாகிகளோ பொறுப்பேற்பதில்லை, மாறாக முன்கள பணியாளர்களே (Frontline workers) பொறுப்பேற்க வைக்கப்படுகிறார்கள். துல்லியமானதாக டிஜிட்டல் செயல்முறையில் பொறுப்புடைமை (accountability) போதுமான அளவு இல்லை.


இந்த இடைவெளியை செயற்கை நுண்ணறிவு மேலும் அதிகரிக்கிறது. அது ஒரு பகுதியை “செயல்திறன் குறைவானது” என்று சுட்டிக்காட்டுகிறது. ஆனால், சாதி சார்ந்த பிரச்சினைகள், இடம்பெயர்வு போக்குகள் அல்லது பொது நிறுவனங்களின் மீது உள்ள நம்பிக்கையின்மை போன்றவற்றை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மீண்டும், மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நபர்கள் — அதாவது பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் விளக்கத்தின் முழுச் சுமையையும் ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.


டிஜிட்டல் அரசு, ஊதியம் பெறாத பெண்கள்


சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகளில் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்களின் பெரும்பகுதியை பெண்களே சுமக்கின்றனர்.


அதிகாரப்பூர்வமாகத் தன்னார்வலர்கள் என வகைப்படுத்தப்பட்டாலும், செயற்பாட்டாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பொதுவாகத் தங்களின் திறன்பேசிகள், இணைய இணைப்பு மற்றும் மின்சாரத்திற்குத் தாங்களே பணம் செலுத்துகின்றனர். படிப்படியாக அதிகரிக்கும் பணிகளின் வரம்பு இருந்தபோதிலும், ஊக்கத்தொகைகள் உட்பட, ஒரு குறிப்பிட்ட மாதாந்திர மதிப்பூதியம், 2025-ஆம் ஆண்டு பிறகும்கூட, ரூ.3,500 என்ற அளவிலேயே உள்ளது. இதன் பொருள், அரசு முறைசாரா தொழிலாளர்களின் (informal) உழைப்பை பயன்படுத்தி சுகாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குகிறது என்பதாகும்.


இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சுகாதாரத் தரவுகளைச் சேகரித்து வருகிறது. ஆனால், கீழ்மட்ட ஊழியர்கள் இந்தத் தரவுகள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.


சீர்திருத்தம் தேவைப்படும் இடம்


தொழில்நுட்பம் ஒரு பிரச்சனையல்ல: சில மாநிலங்களில், டிஜிட்டல் பணம் செலுத்துதல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தொலைமருத்துவம் அணுகலை விரிவுபடுத்தியுள்ளது. பிரச்சனை தகவல் பலகைகளில்தான் உள்ளது. அங்கு நம்பிக்கைக்குப் பதிலாக இலக்குகளும் நோக்கங்களும் முக்கியமாகின்றன.


டிஜிட்டல் சுகாதாரத்தின் இலக்கு வெற்றிபெற வேண்டுமானால், சீர்திருத்தம் உழைப்பிலிருந்து தொடங்க வேண்டும்: தேவையற்ற பதிவுகளைக் குறைத்தல், டிஜிட்டல் உழைப்பிற்கு ஊதியம் வழங்குதல், தொடர்ச்சியான பயிற்சி அளித்தல், மற்றும் செயற்கை நுண்ணறிவின் தேர்வுகளை கேள்விக்குட்படுத்தக்கூடியதாக  மற்ற வேண்டும். இல்லையெனில், டிஜிட்டல்மயமாக்கல் சுரண்டலாக மாறிவிடும், அப்போது ஏழைகளிடமிருந்து தரவுகளைச் சுரண்ட பெண்களின் ஊதியமற்ற உழைப்பு பயன்படுத்தப்படும்.


இந்தியாவின் சுகாதார அமைப்பின் வெற்றிக்கு, அரசு மற்றும் மக்களுக்கிடையில் இடைத்தரகர்கள்மீது இருக்கும் நம்பிக்கைதான் முக்கிய காரணமாக உள்ளது. அந்த நம்பிக்கை உடைந்துவிட்டால், அமைப்பு செயலிழந்து விடும்; ஆனால் தரவு மட்டும் அப்படியே இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் சுகாதாரம் இருக்குமா என்பது பிரச்சனை அல்ல; மாறாக, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மருத்துவ வல்லுநர்கள் இருப்பார்களா என்பதே உண்மையான பிரச்சினையாகும்.


அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, பொதுச் சுகாதாரத்தின் எதிர்காலம் தொழில்நுட்பத்தைவிட அரசியல் சூழலை சார்ந்தே உள்ளது. வெறும் செயல்திறன் மட்டும் முக்கியமா, அல்லது மனித மரியாதையுடன் செயல்திறனும் சேர்ந்து இருக்கவேண்டுமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.


அபிலாஷா செம்வால், ASIA-வின் திட்டங்கள் மற்றும் செயல்முறைகளுக்கான துணை இயக்குநராகவும், குர்கானில் உள்ள SGT பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார். 


Original Link: From ASHA to AI: who pays the price of India’s digital health push?


Share: