டிஜிட்டல் உள்கட்டமைப்பு எவ்வாறு உழவர்களை சந்தைகள் மற்றும் நிதியுடன் நேரடியாக இணைக்கிறது? -அமித் அகர்வால்

டிஜிட்டல் வேளாண்மையின் உண்மையான பலன், மேலும் இணைக்கப்பட்ட மற்றும் மதிப்பு சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரத்தை உருவாக்குவதே ஆகும்.


57% என்பது, தங்கள் விளைபொருட்களை இணையவழியில் விற்கும் உழவர்களுக்கும், பாரம்பரிய வர்த்தக வழிகளைச் சார்ந்திருக்கும் உழவர்களுக்கும் இடையே காணப்படும் வருமான வேறுபாடு ஆகும். (இணையவழியில் விற்கும் உழவர்கள் கணிசமாக அதிக வருமானம் ஈட்டுகின்றனர்).


கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் உள்ள பருத்தி உழவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, தெளிவான புள்ளிவிவரங்களைக் காட்டியது. டிஜிட்டல் முறையில் விற்கும் உழவர்களுக்கு ஒரு மூட்டைக்கு ₹2,718 ஆகவும், பாரம்பரிய வழிகளில் விற்கும் உழவர்களுக்கு ₹1,735 ஆகவும் உள்ளது.


இந்த மாற்றம், உழவர்கள் இணையவழியில் நிதியைப் பெறும் முறையை மறுவடிவமைத்து வருகிறது.


கர்நாடகாவில் உள்ள சிறு உழவர்களிடையே டிஜிட்டல் நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்துவதில் நிதிதொழில்நுட்பத்தின் (fintech) பங்கை ஆய்வு செய்த ஒரு தனி ஆய்வில், இதில் 58 சதவீதம் பேர் கடன் பெறுவது எளிதாக இருப்பதாகவும், சுமார் 55 சதவீதம் பேர் நிதிப் பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும் தெரிவித்தனர்.


வரையறுக்கப்பட்ட அணுகல்


இருப்பினும், இந்த நன்மைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. டிஜிட்டல் அமைப்புகள் உழவர்களுக்கு அதிகளவில் கிடைத்து வந்தாலும், வேளாண் நடவடிக்கைகளில் அவற்றின் அன்றாடப் பயன்பாடு குறைவாகவே உள்ளது.


இந்திய நுகர்வோரின் நிதிப் பழக்கவழக்கங்களை மறுவரையறை செய்துள்ள ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகப் (Unified Payments Interface (UPI)) புரட்சியின் அடிப்படையில், வேளாண்மையில் பரவலான டிஜிட்டல் பயன்பாடு ஒரு படிநிலை வடிவத்தைப் (layered pattern) பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


• முதல் கட்டம் உள்கட்டமைப்பு (infrastructure) ஆகும். இதில் இணைப்பு வசதி (connectivity), அடையாளம் (identity) மற்றும் புறநிலைக் கட்டமைப்புகள் (physical structures) அடங்கும். வேளாண்மையில், கிராமப்புற இந்தியாவில் அதிகரித்து வரும் திறன்பேசி மற்றும் இணைய அணுகல், ஆதார் மற்றும் ஆதாரால் இயக்கப்படும் பணப்பரிவர்த்தனை அமைப்பு (Aadhaar Enabled Payment System (AEPS)) போன்ற டிஜிட்டல் அடையாள அமைப்புகள், மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) போன்ற திட்டங்களின்கீழ் வங்கிக் கணக்குகளின் பரவல் ஆகியவற்றின் மூலம் இந்த அடித்தளம் கட்டப்பட்டுள்ளது.


• இரண்டாவது கட்டம் வேளாண் தொழில்நுட்பத் தளங்கள் (agritech platforms) ஆகும். அதாவது, இந்த உள்கட்டமைப்பின் மீது செயல்படும் மின்-சந்தைகள், நிதித் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் வேளாண்-டிஜிட்டல் ஆலோசனை அமைப்புகள் ஆகியவை அடங்கும். டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் போன்ற முன்முயற்சிகளும், வேளாண் இருப்பு (AgriStack) போன்ற வளர்ந்து வரும் அமைப்புகளும் ஒரு டிஜிட்டல் சூழல் அமைப்புக்குள் உழவர்களுக்கான சேவைகளையும் தரவுகளையும் ஒழுங்கமைக்கத் தொடங்கியுள்ளன.


• மூன்றாவது கட்டம் நடத்தை சார்ந்த பயன்பாடு (behavioural adoption) ஆகும். இதில் பயனர்கள் இந்த அமைப்புகளைச் சார்ந்து தொடங்கும்போது இந்தக் கட்டம் தொடங்குகிறது. அவர்கள் தங்களின் அன்றாட முடிவெடுக்கும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.


டிஜிட்டல் வேளாண் இயக்கம்: தொலைநோக்குப் பார்வையை நனவாக்குதல்


இந்தியாவின் வேளாண் துறையின் டிஜிட்டல்மயமாக்கல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வேளாண் இருப்பு (AgriStack) மற்றும் கிருஷி முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு (Krishi Decision Support System) போன்ற லட்சியத் திட்டங்கள் மூலம் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DPI) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் வேளாண்மை இயக்கம், 2024-ல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் அடிமட்ட அளவில் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலமும், உழவர்களை முதன்மைப் பயனாளிகளாகக் குறிவைப்பதன் மூலமும், தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, ஜிபிஎஸ் அடிப்படையிலான வேளாண் நில வரைபடம் மற்றும் தொலை உணர்வு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வழியாக, அரசுத் திட்டங்கள், பயிர்க் கடன்கள் மற்றும் நேரடி ஆலோசனைகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அணுகல் உட்பட, உழவர்களுக்கான சேவை வழங்கலை இந்த இயக்கம் மேம்படுத்த உள்ளது.


இந்த இயக்கத்தின் முதல் இரண்டு கட்டங்கள் பெரும்பாலும் நடைமுறையில் உள்ள நிலையில், நாம் உரையாடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் மூன்றாவது கட்டம் உருவாகி வருகிறது. இந்தக் கட்டம் ஒரு மாற்றத்தின் கட்டமாகும். இந்தக் கட்டத்தில், உழவர்கள் சந்தைகளை அணுகவும், நிதியைப் பெறவும், வேளாண் முடிவுகளைச் சுதந்திரமாக நிர்வகிக்கவும் டிஜிட்டல் அமைப்புகளை வழக்கமாகப் பயன்படுத்தத் தொடங்கும் நிலை ஆகும்.


இந்த மாற்றம் வெற்றிபெற, இந்த அளவிலான செயல்பாடுகளுடன், தளங்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கை, தொழில்நுட்ப இடைமுகங்களைக் கையாள்வதற்கான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் தானியங்குப் பரிவர்த்தனைகள் மீதான நம்பிக்கை ஆகியவையும் துணைபுரிய வேண்டும். தலைமுறை தலைமுறையாக உள்ளூர் சந்தை (மண்டி) அமைப்புகளுக்குள் இயங்கி வரும் சிறு உழவர்களுக்கு, தங்கள் தொழிலின் மையமாக இருந்த உறவுகளை மறுபரிசீலனை செய்வது என்பது ஒரு பெரும் நம்பிக்கைப் பாய்ச்சலாகும்.


2 முக்கிய காரணிகள்


இந்தியாவில் வேளாண் தொழில்நுட்பத்தின் பயன்பாடு 2 சதவீதமாக உள்ள நிலையில், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலான இந்திய உழவர்கள் டிஜிட்டல் வேளாண் சூழல் அமைப்பில் இன்னும் தீவிரமாகப் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும், டிஜிட்டல் கல்வியறிவு (digital literacy) மற்றும் நம்பிக்கை (trust) ஆகிய இரண்டு காரணிகளும், வேளாண் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு முக்கிய மையமாகச் செயல்படுகிறது.


பாரத் விஸ்தார் (Bharat VISTAAR) போன்ற முன்முயற்சிகள், உழவர்களின் அதிகப் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான சரியான திசையில் எடுக்கப்பட்ட படிகளாகும். இந்தத் திசையில் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுவதால், இதை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த முயற்சிகள் தேவைப்படும். இதற்கு ஒரு உதாரணமாக, முறையான வங்கிச் சேவைகளைப் போலல்லாமல், வேளாண்-வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (Agri-NBFC) பெரும்பாலும் உழவர்களுடன் நீண்டகால உறவுகளைக் கொண்ட களப் பிரதிநிதிகள் மூலம் செயல்படுகின்றன. டிஜிட்டல் தளங்கள் மீதான நம்பிக்கை இன்னும் உருவாகிவரும் பகுதிகளில், இந்த இடைத்தரகர்கள் உழவர்களின் ஏற்றுக்கொள்ளும் நடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்றனர். வேளாண்-வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மூலதன அடித்தளம் வலுப்படுத்தப்பட்டால், அவை மேலும் திறம்பட செயல்பட முடியும். அவற்றை டிஜிட்டல் சூழல் அமைப்புகளுக்கும் உழவர்களுக்கும் இடையே ஒரு திட்டமிட்ட பாலமாக நிலைநிறுத்தக்கூடும்.


இந்தச் சூழல் அமைப்பு வளர்ந்து வலுவடையும்போது, அதில் உழவரின் பங்கும் உருவாகும். உழவர்கள் இனிமேலும் சிதறிய மற்றும் ஒன்றோடொன்று தொடர்பற்ற அமைப்புகளைக் கையாள வேண்டியதில்லை. பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு அவர்கள் பல இடைத்தரகர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. மாறாக, உழவர்கள் சந்தைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைச் சேவைகளுடன் நேரடியாகவே அதிகம் தொடர்புகொள்வார்கள். தேவையற்ற இடைத்தரகர்கள் எவருமின்றியே, அவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யவும், கடன் வசதிகளைப் பெறவும், உரிய வழிகாட்டுதல்களைப் பெறவும் இயலும். இந்த மாற்றத்தில்தான், டிஜிட்டல் வேளாண்மையின் உண்மையான வாக்குறுதி அடங்கியுள்ளது. அதாவது, அதிக அளவில் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கிராமப்புறப் பொருளாதாரத்தை உருவாக்க உள்ளது


இக்கட்டுரையின் ஆசிரியர், இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான 'StarAgri'-யின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.                  

               


Original Link: How digital infrastructure is linking farmers more directly to markets and finance? 

Share: