சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கும் அப்பால்... - ஆஞ்சல் சிங்கால்

பெண் வேட்பாளர்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும்  குறைப்பதையும், தேர்தல் தொடர்பான செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும், தொடர்ச்சியான மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை நடத்துவதையும், அவர்களுக்கு அத்தியாவசியமான நிதி மற்றும் டிஜிட்டல் திறன்களை வழங்குவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.


2023-ஆம் ஆண்டு பெண்கள் இட ஒதுக்கீடு (Nari Shakti Vandan Adhiniyam) சட்டம், முதலில் வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்த தொகுதி மறுவரையறைப் பணிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமான, வீடு பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறைப் பணிக்கான தெளிவான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், இந்தச் சட்டம் 2034-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


 ஒன்றிய அரசு, நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிறகு ஒரு சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி, ஒரு திருத்த மசோதாவை கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறது. ஒன்றிய அரசின்  நோக்கம், தொகுதி மறுவரையறை (delimitation) செயல்முறையை 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து, 2029-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவது ஆகும். இந்த நடவடிக்கை, இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீட்டின் பின்னணி, இடஒதுக்கீட்டால் கிடைத்த பயன்கள் மற்றும் அதில் உள்ள வரம்புகள், மேலும் இடஒதுக்கீட்டைத் தாண்டி நாம் எதை நோக்க செயல்பட வேண்டும் என்பதுக் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உருவாக்குகிறது.


பெண்கள் இயக்கம் (Women’s movement)


இந்தியாவில் தேர்தல் தொகுதிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் 1920-கள் மற்றும் 1930-களில் தொடங்கியது. அந்தக்காலகட்டத்தில், காலனித்துவம், எழுச்சி பெற்ற தேசிய விடுதலை இயக்கம் மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் ஆகியவை ஒன்றிணைந்து "புதுமைப் பெண்களை" (new women) உருவாக்கின. இதன் விளைவாக, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அரசியலமைப்பின் முகவுரையில் "அரசியல் நீதி" (Justice-Political) என்ற கருத்து, ஆட்சியில் பெண்கள் பங்கேற்பது முக்கியம் என்பதை வலியுறுத்தியது. மேலும், சுதந்திரம் கிடைத்த காலத்தில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பெண்கள் 48.04%-ஆக இருந்ததால், இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டிய தேவை இருந்தது. ஆனால், அது அப்போது அமல்படுத்தப்படவில்லை. அகில இந்திய மகளிர் மாநாட்டின் பிற்காலத் தலைவர்களான சரோஜினி நாயுடு மற்றும் முத்துலட்சுமி ரெட்டி போன்ற பெண் தலைவர்கள், பெண்கள் இட ஒதுக்கீடு என்ற கருத்தை நிராகரித்தனர். ஏனெனில், அது பெண்களைத் தாழ்வாகக் கருதும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினர்.


1970-களில், பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் மீண்டும் எழத் தொடங்கின. 'இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த குழு' (Committee on the Status of Women in India), சட்டரீதியான 'பெண்கள் பஞ்சாயத்தை' (statutory women’s panchayat) உருவாக்கப் பரிந்துரை செய்தது. அதனைத் தொடர்ந்து, 'தேசிய தொலைநோக்குத் திட்டம்' (National Perspective Plan), மாவட்டப் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தது. இறுதியாக, 1993-ஆம் ஆண்டில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்கும் வகையில், நாடாளுமன்றம் 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இயற்றியது. சரியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டும் காலாவதியாகியும் வந்த நிலையில், நாடாளுமன்றம் 106-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை,  பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டமாக (women’s reservation Act) நிறைவேற்றியது.


இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் நன்மைகள்


பஞ்சாயத்து அளவில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாபில் பின் தங்கியுள்ள பிரிவினரின் முன்னேற்றத்திற்காக பெண் தலைவர்கள் தீவிரமாகப் பங்கேற்றுப் பணியாற்றியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில், பெண் தலைவர்கள் பாலின சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். கேள்விகள் பாலினம் மற்றும் அரசியல், அம்ரிதா பாசு தொடர்பானதாகும். சமீபத்தில், COVID-19 காலத்தில், பீகார் மாநிலத்தின் கிராமப்புறங்களில் பெண்கள் அரசியல் தலைவர்கள் முதன்மையான உதவி செய்பவர்களாக (first responders) உருவெடுத்து, தங்கள் தொகுதிகளின் அவசர தேவைகளை பூர்த்தி செய்தனர். இதன்மூலம் அவசரநிலைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். மேற்குவங்க மாநிலத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையை குறைப்பது (below the poverty line (BPL)), பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களை குறைப்பது, திருமண வயதை மற்றும் கல்வியறிவு அளவை உயர்த்துவது போன்ற முயற்சிகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இத்தகைய சாதனைகளுக்கு துணையாக, சுயஉதவி குழுக்கள் (Self-Help Groups  (SHGs)) முக்கிய பங்காற்றியுள்ளன. உதாரணமாக, குடும்பஸ்ரீ' (Kudumbashree) இயக்கம் போன்ற அமைப்புகள் கேரளா மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில், பெண்களின் தன்னம்பிக்கை போன்ற தனி திறன்கள் அதிகரித்துள்ளன. இதனால், அவர்கள் இடஒதுக்கீடு இல்லாத தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். பொதுவாக, பெண் ‘கிராம பஞ்சாயத்து தலைவர்கள் (Pradhans) சுகாதாரம், மின்சாரம், வீட்டுவசதி மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதன் மூலம், மக்களின் குரல் தெளிவாக கேட்கப்படுவதையும் உறுதி செய்கின்றனர்.


அதிகரித்த பிரதிநிதித்துவத்தின் மற்றொரு நேர்மறையான விளைவாக, அத்தொகுதிகளில் பெண்கள் குற்றங்கள் குறித்துப் புகாரளிப்பது அதிகரித்துள்ளது. பெண்களைத் தலைமைப் பொறுப்புகளில் ஏற்றுக்கொள்வதில் சமூகத்திற்கு இருக்கும் தயக்கத்தின் விளைவாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதே இத்தகைய புகார் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என்றபோதிலும்; குற்றங்களைப் பற்றி புகாரளிக்கும் செயல்முறையில் உள்ள பல்வேறு காரணிகளை  காவல்துறையின் விரைவானச் செயல்பாட்டையும், அச்சமின்றி புகார் அளிக்கும் பெண்கள் போன்ற அம்சங்களை மேம்படுத்துவதன் மூலமும், குற்றங்களை புகார் செய்யும் செயல்முறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.


பெயரளவு பிரதிநிதித்துவம் (Proxy representation)


கிராமப்புறங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் ஒரு முக்கிய குறைபாடு பெயரளவிலான பிரதிநிதித்துவம் அல்லது பதிலிப் பிரதிநிதித்துவம் பரவலாக இருப்பதே ஆகும். இந்தியில் பொதுவாக “சர்பஞ்ச்-பதி” அல்லது “பிரதான்-பதி” என்று குறிப்பிடப்படும் அடையாளப் பிரதிநிதித்துவம் என்பது, சமத்துவத் தோற்றத்தை அளிப்பதற்காக விளிம்புநிலைக் குழுக்களை அடையாளப்பூர்வமாகவோ அல்லது மேலோட்டமாகவோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், பல நேரங்களில் சக்திவாய்ந்த மேல்சாதி ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்து, அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்கிறார்கள். ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கு, “பெண்ணின் கணவர் அவருக்காக அதிகாரப்பூர்வ கூட்டங்களை நடத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து” ஒரு பெண் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பெண்தலைவர்களிடையே தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் அதிகமான கல்வியறிவு குறைவு (illiteracy), இத்தகைய நடைமுறைகளுக்கு காரணமாகின்றன. மேலும், இது “பொதுமக்கள் மத்தியில் ஆணாதிக்கம்” (public patriarchy) என்ற ஒரு பண்பாட்டையும் உருவாக்குகிறது. பெண்கள் அரசியலில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவம் வழங்கப்படாது. மேலும், அவர்களின் உழைப்பு தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்படுகிறது. இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் உள்ள பெண்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் இயல்பிலேயே பன்முகத்தன்மை கொண்டவர்களாகத் திகழ்கின்றனர் என்றபோதிலும், பாலினம், சாதி மற்றும் ஆணாதிக்கம் போன்ற உள்ளூர் அளவிலான சமத்துவமின்மை கட்டமைப்புகளே அவர்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன.


அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு எதிராக,   விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக, வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. இத்தகைய அரசியல் வன்முறையானது, பாலியல்ரீதியான வற்புறுத்தல் மற்றும் நற்பெயரைக் கெடுப்பது முதல், வாய்மொழி அத்துமீறல், அச்சுறுத்தல்கள் மற்றும் உணர்ச்சிரீதியான மிரட்டல் வரை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. தலித் பெண்ணான கிரண் குமாரி, தனது பிரச்சாரத்தின்போது ஒரு கிராம கவுன்சிலரின் கால்களைத் தொட வைக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், சாதி மற்றும் பாலினப் படிநிலைகளின் ஆழமாக வேரூன்றிய தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. சமூக ஆராய்ச்சி மையம் நடத்திய ஓர் ஆய்வின்படி, இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்  எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அல்லது ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த ஆண்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் நபர்களாகவே உள்ளனர்.


பஞ்சாயத்தில் உள்ள மற்றொரு குறைபாடு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் சுழற்சி முறை மற்றும் தலைவர் பதவிகளின் கட்டாய சுழற்சிமுறை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இது பெண்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைக் கட்டுப்படுத்துவதோடு, தொகுதி மக்கள் பிரதிநிதிகளைப் பொறுப்பேற்க வைப்பதையும் கடினமாக்குகிறது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், ஒரு வெற்றிகரமான பதவிக்காலத்திற்குப் பிறகு, மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் பெண்களுக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு ஆண்களுக்கு அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. மாறாக, நிரந்தரமாக இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், அவை உயர்சாதி அல்லது செல்வாக்குள்ளவர்களின் கட்டுப்பாட்டை (elite capture) ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், உண்மையான தேர்தல் தேர்வுகளை குறைக்கும் வாய்ப்பும் உள்ளது.


இதை 50 சதவீதமாக உயர்த்துதல்


பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது, அரசியல் சமத்துவத்தை அடைவதற்கான இந்திய அரசின் முக்கிய முயற்சியாகும். ஆனால், இந்த அமைப்புக்குள், பெண்களின் மக்கள்தொகை விகிதத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 50% இடஒதுக்கீட்டை  வழங்க வேண்டும் என்ற தேவை உள்ளது. இடஒதுக்கீட்டைத் தாண்டி, தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின்னரும் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து வகையான வன்முறைகளையும் - இணையவழித் துன்புறுத்தல்கள் உட்பட - முழுமையாக ஒழிப்பதை அரசாங்கம் தனது இலக்காகக் கொள்ள வேண்டும். வாக்காளர் பதிவு முதல் தேர்தல் தலைமை அலுவலர்கள் வரையிலான தேர்தல் தொடர்பான அனைத்துச் செயல்முறைகளிலும் பெண்களின் இருப்பை அதிகரிப்பது, அவர்கள் பங்கேற்பதற்கு  ஏற்ப மற்றும் நம்பிக்கையான சூழலை மேலும் உருவாக்க உதவும். குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களுக்கு அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றித் தெளிவுபடுத்தவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை நிதி மற்றும் டிஜிட்டல் திறன்களை உருவாக்கவும், தொடர்ச்சியான மற்றும் பங்கேற்பு சார்ந்த பயிற்சித் திட்டங்களை உருவாக்குவது முக்கியமானதாகும்.


இட ஒதுக்கீடு என்பது உண்மையான பிரதிநிதித்துவமாக உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்; அந்தத் தருணம் வெகு தொலைவில்  இல்லை என்றே தோன்றுகிறது.


ஆஞ்சல் சிங்கல் ஒரு சுயாதீனமான கொள்கை மற்றும் நிர்வாக ஆய்வாளர் ஆவார்; மேலும் இவர், 2023-24-ஆம் ஆண்டிற்கான 'நாடாளுமன்ற உறுப்பினருக்கான சட்டமன்ற உதவியாளர்' (Legislative Assistant to Member of Parliament (LAMP)) ஆய்வுத் திட்டத்தின் முன்னாள் ஆய்வாளராகவும்  பணியாற்றியவர்.

Original Link: Beyond reservation for women in legislative bodies.


Share: