இந்திய அரசியலமைப்பில் நிதிநிலை மசோதா (Finance Bill) என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், புதன்கிழமை அன்று மக்களவையில் கொண்டு வந்த 33 அரசு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களை நிராகரித்தும், 2026-ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா (Finance Bill 2026) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


• இந்த மசோதா இனி மாநிலங்களவைக்கு (Rajya Sabha) அனுப்பப்படும். அங்கு மேலவை இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை  செயல்முறைகள் முழுமையடையும் என்கின்றனர்.


• 2026-27-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலைத் திட்டம் மொத்தம் ₹53.47 லட்சம் கோடி செலவினத்தை மதிப்பிட்டுள்ளது. இது மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 7.7 சதவீதம் அதிகமாகும். மேலும், 2026-27 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் 4.4 சதவீதத்தைவிடக் குறைவு ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசியலமைப்பின் பிரிவு 110(1)-ன்கீழ், ஒரு மசோதா பின்வரும் விவகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பற்றிய விதிகளை மட்டுமே கொண்டிருந்தால், அது ஒரு பண மசோதாவாக (Money Bill) கருதப்படும், அவை:


(a) ஏதேனும் ஒரு வரியை விதித்தல், நீக்குதல், குறைத்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் தொடர்பான விஷயங்கள்.


(b) அரசின் கடன் பெறுதல் முறையை ஒழுங்குபடுத்துதல்;


(c) இந்தியாவின் தொகுப்பு நிதி (Consolidated Fund) அல்லது அவசரகால நிதி (Contingency Fund) ஆகியவற்றைக் கையாளுதல், அவற்றில் பணத்தைச் செலுத்துதல் மற்றும் நிதியைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.


(d) இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) பணத்தைப் பயன்படுத்துதல்.


(e) இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் கட்டாயச் செலவினங்களாக சில குறிப்பிட்ட செலவுகளை அறிவிப்பது அல்லது அத்தகைய செலவினங்களின் அளவை அதிகரிப்பது.


(f) இந்தியாவின் தொகுப்பு நிதி அல்லது பொதுக் கணக்கில் பணத்தைப் பெறுதல், அத்தகைய நிதியைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், அதன் பயன்பாடு, அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல் ஆகியவற்றை இது குறிக்கிறது.


(g) மேலே குறிப்பிடப்பட்டுள்ள (a) முதல் (f) வரையிலான நிபந்தனைகளுடன் தொடர்புடைய எந்தவொரு விவரமும் பணமசோதாவாகக் கருதப்படும்.


இருப்பினும், ஒரு மசோதாவில் அபராதங்கள், பணத்தண்டனைகள் (Financial Penalties), உரிமங்கள் அல்லது சேவைகளுக்கான கட்டணங்கள் இடம் பெற்றிருப்பதாலேயே அல்லது உள்ளூர் தேவைகளுக்காக உள்ளூர் அதிகார அமைப்புகளால் விதிக்கப்படும் வரிகளைக் கையாள்கிறது என்பதாலேயே, அந்த மசோதாவை ஒரு பண மசோதா (Money Bill) என்று கருதிவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


• அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 110(3)-ன்படி, “ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்ற கேள்வி எழும்போது, மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், சபாநாயகர் ஒரு மசோதாவைப் பண மசோதா என்று அங்கீகரித்துவிட்டால், அதன் தன்மையை நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது குடியரசுத் தலைவராலோகூட கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.


• அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 109(1)-ன்கீழ், ஒரு பண மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சபாநாயகரின் ஒப்புதலுடன் மாநிலங்களவையின் பரிந்துரைகளுக்காக அனுப்பப்படுகிறது. மாநிலங்களவை இந்த மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது என்கின்றனர்.  மாறாக, 14 நாட்களுக்குள் அதைத் திருப்பி அனுப்ப வேண்டும். மாநிலங்களவை வழங்கும் பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம், எப்படி இருந்தாலும் மசோதா நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும் என்கின்றனர். ஒருவேளை மாநிலங்களவை 14-நாட்களுக்குள் மசோதாவைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், சட்டப்பிரிவு 109(5)-ன்படி தானாகவே நிறைவேறியதாகக் கருதப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


• சபாநாயகரால் சான்றளிக்கப்படாத நிதி மசோதாக்கள் இரண்டு வகைப்படும், அவை: முதலாவது, இந்திய அரசியலமைப்பின் 110-வது பிரிவில் உள்ள விஷயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவை மட்டுமே தனித்துவமாக இல்லாமல் மற்ற விஷயங்களையும் சேர்த்துக்கொண்ட மசோதாக்கள் [பிரிவு 117(1)] ஆகும்.  இரண்டாவது, இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள வேண்டிய சாதாரண மசோதாக்கள் [பிரிவு 117(3)] ஆகியனவாகும்.


பண மசோதாவைப் போன்றே, முதல் வகை நிதி மசோதாக்களும் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இதற்கு குடியரசுத் தலைவரின் பரிந்துரை கட்டாயம் தேவைப்படும் என்றும் இருப்பினும், பண மசோதாக்களுக்கு விதிக்கப்படும் மற்ற கட்டுப்பாடுகள் இந்த வகை மசோதாக்களுக்குப் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியலமைப்புச் சட்டம் 117 (3)-ன்கீழ் வரும் மசோதாக்களை நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் (மக்களவை அல்லது மாநிலங்களவை) அறிமுகப்படுத்தலாம் என்றும் ஆனால், இந்த மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கும் குடியரசுத் தலைவரின் பரிந்துரை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.


Original Link: What is Finance Bill in Indian Constitution?


Share: