நீர் மேலாண்மையின் பெண்களின் பங்களிப்பை அனைத்து நிலைகளில் உள்ள அரசாங்கங்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்டு அதனை ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலகத் தண்ணீர் தினம் (World Water Day) கொண்டாடப்படுகிறது. இது உலகளாவிய நீர் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான தீர்வுகளை நோக்கிச் செயல்படவும் ஒரு முக்கியமான அழைப்பாக அமைகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “தண்ணீர் மற்றும் பாலினம்” (Water and gender) என்பதாகும்; மேலும் “தண்ணீர் பாயும் இடத்தில், சமத்துவம் வளரும்” (Where water flows, equality grows) என்பது இதன் பிரச்சாரமாக முன்னிறுத்தப்படுகிறது. இக்கருப்பொருள், பாலின சமத்துவத்திற்கும் தண்ணீர் கிடைப்பதற்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை வலியுறுத்துகிறது. குறிப்பாக, நீர் மேலாண்மை மற்றும் அது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குத் தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இக்கருப்பொருள் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிலையான வளர்ச்சி இலக்குகளான (UN Sustainable Development Goals (SDG)) இலக்கு 5 பாலின சமத்துவம் (gender equality) மற்றும் இலக்கு 6 தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் (clean water and sanitation) ஆகியவற்றுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பான குடிநீர் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்றாலும், உலக மக்கள் தொகையில் சுமார் 25% பேர் (அதாவது 2.1 பில்லியன் மக்கள்) இன்னும் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமலேயே வாழ்கின்றனர். இந்த உலகளாவிய தண்ணீர் நெருக்கடி அனைவரையும் பாதித்தாலும், அந்த பாதிப்பு அது அனைவரையும் ஒரே சீராகப் பாதிப்பதில்லை. பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான உரிமைகள் மறுக்கப்படும் இடங்களில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை இழக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதால், இதன் நேரடிப் பாதிப்பை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
பெண்கள் பொதுவாக வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைச் சேகரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பற்ற நீரினால் நோய்வாய்ப்படுபவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் அவர்களே சுமக்கின்றனர். இருப்பினும், நீர் மேலாண்மை தொடர்பான முடிவெடுத்தல், தலைமைப் பொறுப்புகள், நிதி ஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பெரும்பாலும் விலக்கி வைக்கப்படுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் இந்தச் சூழல் தண்ணீர் நெருக்கடியை ஒரு 'பெண்களுக்கான நெருக்கடியாக' மாற்றுகிறது. இதனைச் சரிசெய்ய, பெண்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையிலான மாற்றத்தை நோக்கிய, உரிமைகள் சார்ந்த அணுகுமுறை அவசியமாகிறது. நீர் மேலாண்மைத் தலைமையின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
வேளாண்மையில் பெண்களின் பங்கு
உலகெங்கிலும் உள்ள வேளாண்மை மற்றும் உணவு முறைகளில் பெண்களின் முக்கியப் பங்கினை அங்கீகரிப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டைப் "பெண் விவசாயிகளுக்கான சர்வதேச ஆண்டாக" (International Year of the Woman Farmer) அறிவித்துள்ளது. இந்தியாவில், சிறந்த வேலைவாய்ப்புகளுக்காகப் பல ஆண்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வருவதால், நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு, உள்நாட்டு மீன்பிடித்தல் போன்ற தொடர்புடைய பணிகளில் பெண்கள் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organisation (FAO)) கூற்றுப்படி, உலகளாவிய வேளாண்-உணவுத் தொழிலாளர் தொகுப்பில் பெண்கள் சுமார் 41% பங்களிக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு நில உரிமை, கடன் வசதி, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் கிடைப்பதில் இன்னும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த இடைவெளிகளைக் குறைப்பதன் மூலம் உற்பத்தியை 30% வரை அதிகரிக்க முடியும், 15 கோடி மக்களின் உலகளாவிய பசியைப் போக்க முடியும் மற்றும் கிராமப்புற சமூகங்களின் பொருளாதார வலிமையை வலுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய இமயமலைத் தொடர்கள் மற்றும் நீண்ட கடற்கரைப் பகுதிகளைக் கொண்ட இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்பு, காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் காலநிலை தொடர்பான பேரிடர் அபாயம் உள்ள மாவட்டங்களிலேயே வசிக்கின்றனர். அதிகரித்து வரும் வெப்பநிலை, மாறிவரும் மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பனிப்பாறைகள் உருகுதல், கடுமையான சூறாவளிகள் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவை வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் இதில் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த காலநிலை மாற்றங்கள் ஏற்கனவே பயிர் விளைச்சலையும் அதன் ஊட்டச்சத்து தரத்தையும் பாதித்து வருகின்றன. முறையான காலநிலைத் தகவமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050-ஆம் ஆண்டிற்குள் மழையை நம்பியுள்ள நெல் சாகுபடி 20% வரையிலும், கோதுமை 19% வரையிலும் மற்றும் மக்காச்சோளம் 18% வரையிலும் குறையக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பாதிப்புகள் உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இந்தியாவில், விவசாயத்தின் மீது ஏற்படும் இத்தகைய மோசமான காலநிலை மாற்ற விளைவுகளால் ஆண்டுதோறும் சுமார் $9-10 பில்லியன் (சுமார் ₹75,000 - 80,000 கோடி) இழப்பு ஏற்படுவதாகப் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் இத்தகைய பருவநிலை அச்சுறுத்தல்களை உணர்ந்து, இந்திய அரசு பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய வேளாண்மையை (Climate-Resilient Agriculture) மேம்படுத்தப் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அவற்றில் முக்கியமானவை: நிலையான வேளாண் விளைச்சளுக்கான தேசிய இயக்கம் (National Mission for Sustainable Agriculture (NMSA)), பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண் விளைச்சளுக்கான தேசிய கண்டுபிடிப்புகள் (National Innovations in Climate Resilient Agriculture (NICRA)) மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (Weather-Based Crop Insurance Scheme. (WBCIS)) ஆகும். இவை தவிர, உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இந்தியாவில் இத்தகைய நவீன வேளாண் முறைகளுக்குத் தீவிரமாக ஆதரவு அளித்து வருகின்றன.
தற்பொழுது நடைபெற்று வரும் திட்டங்களில், புதுமையான மேம்பாடு மூலம் விவசாய மீள்தன்மைக்காக நீர்நிலைகளைப் புதுப்பிக்கும் திட்டம் (Rejuvenating Watershed for Agricultural Resilience through Innovative Development Programme (REWARD)), இது உழவர்களின் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், உற்பத்தி மற்றும் வருமானத்தைப் பெருக்கவும் உதவும் வகையில் சிறந்த நீர்நிலை மேலாண்மை முறைகளை அரசு நிறுவனங்கள் பின்பற்ற உதவுகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் (Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project (TN-IAMP)), இது உற்பத்தித் திறன், காலநிலை மீள்தன்மை மற்றும் நீர் மேலாண்மையை மேம்படுத்துகிறது. காலநிலை மீள்தன்மை கொண்ட வேளாண்மைக்கான ஒருங்கிணைந்த நீர்ப்பாசனத் திட்டம், இது காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய விதைகள் மற்றும் நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. கேரளா காலநிலை மீள்தன்மை கொண்ட வேளாண்-மதிப்புச் சங்கிலி நவீனமயமாக்கல் திட்டமானது (Kerala Climate-resilient Agri-value Chain Modernization Project), காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதையும் வேளாண் தொழில்முனைவையும் ஆதரிக்கிறது. மேலும், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டம் (International Rice Research Institute’s project (IRRI)), நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய நெல் சார்ந்த பயிரிடும் முறைகளை விரிவுபடுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறது.
இந்தத் திட்டங்களின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இவை அனைத்தும் பெண்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளிக்கின்றன. வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற கடுமையான காலநிலைப் பேரிடர்களின் போது, நீர் மேலாண்மை மற்றும் பயிர் மேலாண்மையில் பெண்களின் தலைமைப் பண்பை வலுப்படுத்த இத்திட்டங்கள் உதவுகின்றன. அதே நேரத்தில், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய நவீன வேளாண் முறைகளின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
தெற்காசியாவில் நீர் மேலாண்மைத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பது, பாலின உணர்வுடன் கூடிய நீர் மேலாண்மைக்கு ஒரு தடையாகக் கருதப்படுகிறது. அதே வேளையில், இத்துறையில் உள்ள பல பெண்களுக்கு பெரிய அளவிலான (Macro level) அறிவியல் ரீதியான நீர் மேலாண்மை அறிவில் போதிய புரிதல் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலான ஆய்வுகள், சமூக அடிப்படையிலான நீர் திட்டங்களில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
இதனைச் சரிசெய்ய, இந்தியாவில் உள்ள தெற்காசிய பல்துறை நீர் ஆதார ஆய்வு கூட்டமைப்பு (South Asia Consortium for Interdisciplinary Water Resources Studies (SaciWATERs)) மற்றும் நெதர்லாந்தின் வாகனிங்கன் (Wageningen) பல்கலைக்கழகத்தின் நீர்ப்பாசனம் மற்றும் நீர் பொறியியல் குழு இணைந்து தெற்காசியாவில் 'எல்லைகளைக் கடக்கும் திட்டம்' (Crossing Boundaries Project) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளன. உயர்கல்வி, ஆராய்ச்சி, அறிவு மேம்பாடு மற்றும் தகவல் பரிமாற்றக் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் "ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை மற்றும் பாலினம் மற்றும் நீர்" (Integrated Water Resources Management and Gender and Water) ஆகிய துறைகளில் திறன்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தெற்காசியாவைச் சேர்ந்த ஆறு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்களிப்பு நிறுவனங்களாக உள்ளன. வங்கதேசத்தைச் சேர்ந்த வங்கதேச மேம்பட்ட ஆய்வுகள் மையம் (Bangladesh Center for Advanced Studies (BCAS)) மற்றும் வங்கதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Bangladesh University of Engineering and Technology (BUET)), இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழக நீர் வள மையம் (Centre for Water Resources of Anna University (CWR)), நேபாளத்தின் நேபாள பொறியியல் கல்லூரி, இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக (University of Peradeniya) முதுகலை வேளாண்மை நிறுவனம் மற்றும் இந்தியாவின் டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS) ஆகியவை இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
2002 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை மூலம் சுமார் 200 பெண் நீர் மேலாண்மை வல்லுநர்கள் ஒருங்கிணைந்த நீர் ஆதார மேலாண்மையில் (Integrated Water Resources Management (IWRM)) முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றனர். இந்தத் திட்டம் பின்னர் தெற்காசியா முழுவதும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்தப் பெண்களில் பெரும்பாலானோர் தற்போது அரசு மற்றும் அரசு சாரா நீர் ஆதாரத் துறைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வருகின்றனர். அங்கு அவர்கள் நீர் திட்டமிடல் மற்றும் மேலாண்மை முடிவுகளை எடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை
மனித வாழ்விற்கு தண்ணீர் இன்றியமையாததாகும். தண்ணீரானது, தனிநபர் சுகாதாரம், பொதுச் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு இது அவசியமாகிறது. மனித மேம்பாடு மற்றும் நலனை ஆதரிக்கும் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் அதிக தண்ணீர் தேவைப்படும் தொழில்துறைகள் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தண்ணீர் மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகவே, ஒரு நிலையான சமூகத்தைப் பேணுவதில் தண்ணீர் ஒரு மையப் பங்கை வகிக்கிறது; இதில் பெண்களுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. பெண்களுக்கும் நீருக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு இருப்பதால், நீர் மேலாண்மையின் பல்வேறு நிலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். அனைத்து நிலைகளிலுமுள்ள அரசுகளும், பொதுமக்களும் பெண்களின் இத்தகைய பங்கேற்பை ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்க வேண்டும்.
பிரகாஷ் நெல்லியத், சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் அதிகார அமைப்பின், பல்லுயிர் கொள்கை மற்றும் சட்ட மையத்தில் முன்னாள் ஆய்வாளர் ஆவார்.
Original link:
Bringing women to the helm of water management.