இந்த விலங்குகள் எங்கிருந்து கொண்டுவரப்படும் மற்றும் இவை சுற்றுச்சூழலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் வெளியான தகவலின்படி, இந்தியா–வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுக்க, பாம்புகள் மற்றும் முதலைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலிகள் அமைக்க முடியாத சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில், ஊடுருவல்காரர்களை அச்சுறுத்தித் தடுக்க இந்த ஊர்வன விலங்குகளைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. மற்றொரு முக்கியச் செய்தியாக, காடுகளில் விலங்குகளைத் திருட்டுத்தனமாக வேட்டையாடுவதைத் தடுக்க, கர்நாடகாவில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களிலும் மோப்ப நாய் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே பல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வேட்டைக்காரர்களைப் பின்தொடர்ந்து பிடிக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கொள்கைகளுமே விலங்குகளை அரசின் பயன்பாட்டுப் பொருட்களாகவே கருதுகின்றன. பல வழிகளில், இந்திய அரசு இன்றும் விலங்குகளைக் ஆங்கிலேயர் ஆட்சிகால கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. அதாவது, அவை கட்டுப்படுத்தப்பட வேண்டிய அல்லது அழிக்கப்பட வேண்டிய உயிரினங்களாகவே கருதப்படுகின்றன. கடந்த 100 ஆண்டுகளில், விலங்குகளைக் கொல்வதில் இருந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் மாறினாலும், அவற்றைப் பற்றிய அடிப்படை மனநிலை இன்னும் முழுமையாக மாறவில்லை.
இந்தியாவின் மிக உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்ட விலங்கான புலியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 1973-ஆம் ஆண்டில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' (Project Tiger) தொடங்கப்பட்டதில் இருந்து, புலிகளுக்கான வாழ்விடத்தை உருவாக்க காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதே அரசின் முக்கியக் கொள்கையாக இருந்து வருகிறது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழ்வது குறித்த கருத்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், அது சாத்தியமில்லை என்றே அரசாங்கம் பெரும்பாலும் கூறி வருகிறது. நாகர்ஹோலே புலி காப்பகத்தில் (Nagarhole Tiger Reserve) உள்ள ஜென்னு குருபா (Jennu Kuruba) போன்ற ஆதிவாசி குழுக்கள், தங்களால் புலிகளுடன் இணைந்து வாழமுடியும் என்று கூறியபோதும், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
அரசாங்கம் பல விலங்குகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய உயிரினங்களாகக் கருதுகிறது. அவை அந்தப் பகுதியை விட்டு வெளியே வரும்போது, அவை "பிரச்சனைக்குரிய விலங்குகள்" என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மற்ற விஷயங்களைப் போலவே, விலங்குகளுக்கு இடையேயும் ஒரு அடுக்குமுறை (Hierarchy) உள்ளது. முன்பெல்லாம், புலிகள் மனிதர்களைக் காக்கும் காவலர்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால், இப்போது அவை மனிதர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. அதேவேளையில், அகழிகளில் உள்ள முதலைகள், நுழைவாயில்களில் இருக்கும் பாம்புகள் மற்றும் மனிதர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வேட்டை நாய்கள் போன்றவை மனிதர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
வனப்பகுதியை ஒரு "கோட்டை" போலக் கருதி, விலங்குகள் அந்த எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்த மக்கள், "புலிகளுக்காகவே இந்த இடம் ஒதுக்கப்பட்ட பிறகு, அவை ஏன் இன்னும் எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன?" என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்த எல்லைகள் முழுமையான பாதுகாப்பு கொண்டவை அல்ல; செல்வாக்கு மிக்கவர்கள் பணத்தைப் பயன்படுத்தி இந்த எல்லைகளுக்குள் நுழைய இன்னும் வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நமீபியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் (Kuno National Park) விடப்பட்ட சிறுத்தைகள், அந்தப் பூங்காவை விட்டு வெளியேறும் போதெல்லாம் மீண்டும் பிடிக்கப்பட்டு உள்ளேயே கொண்டு வரப்படுகின்றன. சிறுத்தைகள் இயல்பாகவே நீண்ட தூரம் பயணம் செய்யும் குணம் கொண்டவை என்றாலும், அவை இந்த ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இது போன்ற இன்னும் பல பூங்காக்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன). இந்தச் சிறுத்தைகள் காட்டில் விரிவடைந்து செல்லும்போது ஏற்படும் சவால்களைச் சமாளிக்க, அரசாங்கம் முழுமையான திட்டங்களை இன்னும் வகுக்கவில்லை என்பது போலத் தெரிகிறது.
இந்த விலங்குகள் எங்கிருந்து கொண்டுவரப்படும் என்பது குறித்தும், அவை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் எல்லைப் பாதுகாப்புப் படை கவலை தெரிவிவித்துள்ளது. மேலும், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மற்றும் நடமாடும் மக்களைப் பற்றிய கவலைகளும் எழுந்துள்ளன. வழக்கம்போல, அவர்களே இதற்கான மிகப்பெரிய பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இந்த மிருகங்களை தொடர்ந்து சிறைப்படுத்துவதையும், பின்னர் தேவைப்படும்போது கட்டவிழ்த்து விடுவதையும் அரசாங்கம் வழக்கமாகக் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது.
ஸ்ரீவாஸ்தவா வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மனித-விலங்கு உறவு குறித்து எழுதுகிறார்.
Original Link: When animals become instruments of power.