நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அரசியல் நிர்ணய சபையிலேயே இதனை எதிர்த்த பெண்களை நினைவுகூர்தல் - சித்தி தேஷ்முக்

அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்களுக்கு ஹன்சா மேத்தாவும் ரேணுகா ரேயும் தலைமை தாங்கினர். இதற்கு ஆதரவாக இருந்த ஒரேநபர், ஒரு ஆண் ஆர். கே. சௌத்ரி ஆவார்.


இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான சட்ட வரலாறு மிகவும் சிக்கலானதாக இருந்து வருகிறது. இன்று இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், அதன் தொடக்கம் 1946-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அரசியலமைப்பு சபை விவாதங்களிலேயே தொடங்கியது.


இந்த விவாதங்களில், சபையின் ஒரு பகுதியாக இருந்த 15 பெண்களில் இருவர், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராகத் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக இருந்த ஒரே நபர் ஒரு ஆண்  ஆர். கே. சௌத்ரி ஆவார்.


மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கோரும் அரசியலமைப்புத் திருத்த மசோதா (Women’s Reservation Bill, 2023) 2008-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டபோது, இந்த விவாதம் மீண்டும் அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இருப்பினும், இந்தச் சட்டம் நிறைவேற மேலும் 15 ஆண்டுகள் ஆனது. 023-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, 2023 ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இது அரசியலமைப்பின் 106-வது திருத்தச் சட்டமாக மாறியது.

தற்போது, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால், தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பிறகே இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரிய மற்றொரு சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தக் கருத்தை எதிர்த்த பெண்கள்


அரசியலமைப்பு நிர்ணயசபை விவாதங்களின்போது, ​​பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான முக்கிய நபர்களாக ஹன்சா மேத்தா மற்றும் ரேணுகா ரே ஆகியோர் இருந்தனர். இந்த இரண்டு நபர்களும் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய செயற்பாட்டாளர்கள் ஆவர். ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சுதேசி இயக்கங்களில் பங்கேற்றதுடன், பெண்களின் நலனை மேம்படுத்துவதற்காகச் செயல்படும் 'அகில இந்தியப் பெண்கள் மாநாடு' (All India Women’s Conference) எனப்படும் ஒரு அரசு சாரா அமைப்பிலும் பணியாற்றியுள்ளனர்.


பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவில் (United Nations subcommittee on the Status of Women) உறுப்பினராக இருந்ததன் காரணமாக மேத்தா முக்கியத்துவம் பெற்றார். அதேவேளையில், ரே 1949-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர்.


1946-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, ​​சுதந்திரப் போராட்டத்தின் எல்லைகளைப் பெண்கள் மத்தியில் விரிவுபடுத்தியதற்காக மகாத்மா காந்திக்கு மேத்தா தனது நன்றியைத் தெரிவித்தார். 1937-ஆம் ஆண்டு பம்பாய் சட்டமன்றப் பேரவையில் பொதுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளராகப் போட்டியிட்ட மேத்தா, பெண்கள் ஒருபோதும் சிறப்புச் சலுகைகளைக் கோரியதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.


"நாங்கள் கேட்டதெல்லாம் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி மட்டுமே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமமான மதிக்கத்தக்க உறவு மேம்பட வேண்டுமானால், அதற்கு அடிப்படையான 'சமத்துவத்தை' தான் நாங்கள் கோருகிறோம். அது இல்லாமல், இருபாலினருக்கும் இடையே உண்மையான ஒத்துழைப்பு சாத்தியமில்லை," என்றும் அவர் கூறினார்.


தனித் தொகுதிகள் அல்லது இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் மீது மேத்தாவுக்கு இருந்த தயக்கமானது, அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த பெண்களை ஒன்றிணைத்த ஒற்றுமை உணர்விலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.


1947-ஆம் ஆண்டு, ரே மேத்தாவின் கருத்தை வலுவாக ஆதரித்தார். 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் (Government of India Act) பெண்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை, தான் எதிர்த்ததை அவர் நினைவுகூர்ந்தார்.


பெண்களுக்கு எனத் தனி இடஒதுக்கீடு இருக்கும்போது, ​​அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், பொதுப் பிரிவின்கீழ் வரும் இடங்களுக்கு அவர்களைப் பரிசீலிக்கும் கேள்வி வழக்கமாக எழுப்பப்படாது என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, பெண்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில்  அல்லது அவர் குறிப்பிட்டது போல, ‘திறமையின்’ அடிப்படையில் மட்டுமே முன்னேற வேண்டும். மேலும், இடஒதுக்கீடு என்பது பெண்களின் வளர்ச்சிக்கு ஒரு தடையாகவும், எங்கள் அறிவுத்திறன் மற்றும் ஆற்றலுக்கே இழைக்கப்படும் அவமதிப்பாகவும் அமையும் என்றும்  குறிப்பிட்டார்.


அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக மட்டுமல்லாமல், இந்தியத் தூதராகவும் பணியாற்றிய விஜயலட்சுமி பண்டிட்டை அவர் சுட்டிக்காட்டினார். பண்டித் அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது அவர் ஒரு பெண் என்பதற்காக அல்ல, மாறாக அவரது “நிரூபிக்கப்பட்ட தகுதியின்” காரணமாகவே என்று ரே குறிப்பிட்டார்.


மாற்றுக் கருத்து


நவம்பர் மாதம் 9-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுநடைபெற்ற விவாதத்தில், ஆர். கே. சௌத்ரி ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை முன்வைத்தார். அதாவது, ஒரு பெண் நம்மிடம் ஏதாவது கேட்கும்போது, அதை எளிதாகப் பெற்று அவருக்குக் கொடுத்துவிடலாம் என்பது நமக்குத் தெரியும் என்று அவர் கூறினார். ஆனால், அவர் எதையும் குறிப்பாகக் கேட்காதபோது, அந்தப் பெண் என்ன விரும்புகிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது என்று தெரிவித்தார். 


ஒரு "நாடாளுமன்ற உறுப்பினராகவும், உலகியல் அனுபவம் வாய்ந்த மனிதராகவும்" தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பேசுவதாக அவர் கூறினார். ஆண்களிடம் அன்றாட வாழ்வில் காணப்படும் ஒருவித அக்கறையின்மையே பெண்களுக்கு எதிரான கட்டமைப்புரீதியான பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.  அதன் அடிப்படையிலேயே அவரது வாதம் அமைந்திருந்தது. அந்தக்குழுவில் இருந்தவர்கள் "பெண்களுடன் குடும்ப உறவு இல்லாதவர்கள்" என்றும், அதன் காரணமாகவே பெண்களுக்குச் சாதகமான சட்டங்களைக் கொண்டுவர அவர்கள் தயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அவைக்கு வெளியேயும் இந்தியாவின் வீதிகளிலும் ஆண்களிடம் இருந்த 'பெண்களை மதிக்கும் பண்பு' மறைந்துவிட்டதாக அவர் வருத்தப்பட்டார்.  பெண்கள் பொதுவாக ஆண்களின் கண்ணியத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும்  இன்றைய இளைஞர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட பெண்களுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை  என்றும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.


சௌத்ரியின் வாதத்தை ரே அவர்கள் உடனடியாக மறுத்தார். அதே நேரத்தில், அவரை கிண்டலாக "பெண்களின் ஆதரவாளர் மற்றும் பாதுகாவலர்" என்று அழைத்த அவர், தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.


சௌத்ரி அவர்கள் முன்வைத்த வாதம், சட்டமன்றமானது கோட்பாட்டுரீதியான சமத்துவத்திற்கும் நடைமுறை சமத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டியது. இந்த இடைவெளியை அவர் ஒரு வகை "அமைப்புரீதியான புறக்கணிப்பு" என்று கருதினார். இடஒதுக்கீடு இந்த இடைவெளியைக் குறைக்க உதவும் என்பதே அவரது பார்வையாக இருந்தது.


இந்தியப் பெண்களை ஒரு குறிப்பிட்ட சமூகமாகப் பிரித்து, அவர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒரு குழுவாகச் சித்தரிப்பதாக சௌத்ரியின் வாதம் அமைந்தது. மேலும், பெண்களுக்குத் தனித் தொகுதிகளை ஒதுக்கினால், அவர்கள் பொதுத் தொகுதிகளுக்குள் வராமல், தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளட்டும். இல்லையெனில், நாம் அவ்வப்போது பலவீனமடைந்து, அவர்களுக்குத் தகுதியற்ற இடங்களை விட்டுக்கொடுத்துவிடுவோம் என்றும் கூறினார். 


அன்றைய நிலை vs  இன்றைய நிலை


1949-ஆம் ஆண்டில், அரசியல் நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்கள், 'திறமை' மற்றும் 'சம உரிமை' ஆகியவற்றின் து மிகுந்த நம்பிக்கை வைத்தனர். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை போன்ற திட்டங்கள் மூலம் இந்தச் சமத்துவத்தை அடைந்துவிடலாம் என்றும் அவர்கள் நம்பினர்.


ஆனால், புள்ளிவிவரங்கள் காலப்போக்கில் வேறுபட்ட உதாரணத்தை காட்டுகின்றன. இன்று, மக்களவையில் பெண் உறுப்பினர்கள்  13.6%-ஆக உள்ளனர். இது 1951–52-ஆம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலில் இருந்த 4.9% உறுப்பினர்களைவிட ஒரு தெளிவான முன்னேற்றம் என்றாலும், சமமான பிரதிநிதித்துவத்தை அடைய இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.


இந்தக்கட்டுரையின் ஆசிரியர், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'  இதழில் ஒரு பயிற்சிப் பணியாளராகப் பணியாற்றுகிறார்.


Original Link: As Bill on women’s reservation in Houses is defeated, remembering the women who opposed it in Constituent Assembly,


Share: