வனப்பகுதிகளுக்கு சிறந்த கண்காணிப்பு ஏன் தேவைப்படுகிறது? -அபினவ் ராய்

 புவி வெப்பமடைதல், வெப்ப அலைகள், காற்று மற்றும் நீர் மாசுபாடு, வெள்ளம், மண் அரிப்பு மற்றும் பாலைவனமாக்கல் போன்ற பல சுற்றுச்சூழல் சவால்களைத் குறைக்க வனப்பகுதி மற்றும் இயற்கை தாவரங்கள் உதவுகின்றன. இருந்த போதிலும், வனபகுதிகள் எவ்வாறு வரையறுக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன? இந்தியாவில் வன நிர்வாகம் அவற்றின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை எவ்வாறு வடிவமைக்கிறது?


வனப்பகுதிகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகின்றன. நீர் ஆதாரங்களை நிலைநிறுத்துகின்றன. நுண்தட்பவெப்பநிலைகளை (Microclimate)) ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் கார்பன் பிரித்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மலைகளில், மரங்கள் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவுகளுக்கு எதிராக இயற்கையான தடைகளாக செயல்படுகின்றன. ஏனெனில், அவற்றின் வேர்கள் மண்ணிற்கு அடியில் ஒன்றாக இணைந்துள்ளன. அவற்றின் பல சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைத் தவிர, மரம் அல்லாத வனப் பொருட்கள் (Non-Timber Forest Products (NTFPs)) மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாக அமைகின்றன.


இத்தகைய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும், வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதிலும், வன வளங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் வன நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த மாதம்,  ஒன்றிய  சுற்றுச்சூழல் அமைச்சகம் வான் (Sanrakshan Evam Samvardhan) ஆதினியம், 2023-ன் கீழ் வழிகாட்டுதல்களை தளர்த்தி, எளிமைப்படுத்தியது. இது அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வணிகத் தோட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு போன்ற வனவியல் நடவடிக்கைகளுக்கு வன நிலத்தை குத்தகைக்கு எடுக்க அனுமதிக்கிறது.


வனபகுதிகள் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால், இது இந்தியாவின் வன மேலாண்மை முயற்சிகளில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization (FAO)) உலகளாவிய வன வள மதிப்பீட்டு (Global Forest Resources Assessment (GFRA)) அறிக்கை 2025-ன் படி, இந்தியா மொத்த வனப் பரப்பளவில் (72,739 ஆயிரம் ஹெக்டேர்) உலகளவில் 9-வது இடத்திலும், நிகர வருடாந்திர வனப் பரப்பளவு அதிகரிப்பில் 3-வது இடத்திலும் உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகளாவிய வன வள மதிப்பீட்டு அறிக்கை, மொத்த உலகளாவிய நிலப்பரப்பில் 32 சதவீதம் (தோராயமாக 4.14 பில்லியன் ஹெக்டேர்) வனபகுதிகளால் சூழப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. முதல் ஐந்து நாடுகள் ரஷ்ய கூட்டமைப்பு, பிரேசில், கனடா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் உலக வனப்பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்டவற்றை (54 சதவீதம்) கொண்டுள்ளன.


இந்தியாவில் வனப்பகுதிகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன, அவற்றின் வகைகள், பரவல் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.


இந்திய வன ஆய்வு (FSI) 'வனப்பரப்பு' என்பது ஒரு ஹெக்டேர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவைக் கொண்ட அனைத்து நிலங்களையும், 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மரக் கவிகை (tree canopy) அடர்த்தியைக் கொண்ட நிலங்களையும், உரிமை அல்லது சட்டப்பூர்வ நிலையைப் பொருட்படுத்தாமல் வரையறுக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்திய வன நிலை அறிக்கையை (India State of Forests Report (ISFR)) வெளியிடும் இந்திய வன ஆய்வு அறிக்கை, முக்கியமாக ResourceSat-2, லீனியர் இமேஜிங் சுய-ஸ்கேனிங் சென்சார்-III) செயற்கைக்கோள் தரவை வரைபடத்திற்காகப் பயன்படுத்துகிறது. இந்த செயற்கைக்கோள் 23.5 மீட்டர் இடம்சார்ந்த தெளிவுத்திறனை வழங்குகிறது. இருந்தபோதிலும் மிகச் சிறந்த விவரங்களை இதனால் கண்டறிய முடியாது.


எனவே, இது ஒற்றைப் பயிர் சாகுபடி, தோட்டங்கள், பழத்தோட்டங்கள், மூங்கில், பனை போன்றவற்றை வனப்பகுதிகளாக கருதுகிறது. அவை இயற்கையான வனப்பகுதிகளைப் போன்ற சுற்றுச்சூழல் மதிப்பைக் கொண்டிருக்காமல் இருக்கலாம். இருப்பினும், இயற்கையான வனப்பகுதிகள் மற்றும் தோட்டங்களைத் தனித்தனியாகக் கருதும் கட்டமைப்புகள் உள்ளன. அவை:


1. பிரேசிலின் வன-கார்பன் கணக்கியல்.


2. ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் அகற்றுதல் சான்றிதழ் கட்டமைப்பு.


3. காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் நிலப் 

   பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல் (Good Practice  

   Guidance for Land Use, Land-Use Change and Forestry (GPG-LULUCF)) 

  ஆகியவற்றிற்கான சிறந்த  நடைமுறை வழிகாட்டுதல்  போன்றவை  இதில் 

  அடங்கும்.


எனவே, ஒரு வனப்பகுதியை பாதுகாக்க, மீட்டெடுக்க மற்றும் பாதுகாக்க பயனுள்ள தலையீடுகளுக்கு மிகவும் நுணுக்கமான வரையறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வழிமுறை உதவும்.


இந்தியாவில் வனப்பகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?


இந்தியாவின் தாவர பன்முகத்தன்மை அதன் தனித்துவமான புவியியல் இருப்பிடத்திலிருந்து வருகிறது. இது மாறுபட்ட காலநிலை நிலைகளை வழங்குகிறது. தாவரங்களை பாதிக்கும் முதன்மையான காரணிகளில் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் அதன் பருவகால பரவல் மற்றும் நிலப்பரப்பின் உயரம் ஆகியவை அடங்கும்.


கடக ரேகை நாட்டை இரண்டு பரந்த காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கிறது: அவை தெற்கில் வெப்பமண்டல காலநிலை மற்றும் வடக்கில் துணை வெப்பமண்டல காலநிலை ஆகும். காலநிலை நிலைமைகள் மற்றும் பிரதான தாவர வகையின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள வனப்பகுதிகள் வெப்பமண்டல பசுமையான மற்றும் அரை-பசுமைமாறா, வெப்பமண்டல இலையுதிர் காடுகள், வெப்பமண்டல முள் காடுகள், கடற்கரை மற்றும் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மலைக்காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. மலைக்காடுகள் உயர் இமயமலைத் தொடர்கள் மற்றும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் உயர்ந்த மலைகள் போன்ற அதிக உயரம் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.


1000 மீட்டர் உயரம் வரை, வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகள் இரண்டும் கோடை வெப்பம் (35°C-45°C) மற்றும் மிதமான வெப்பம் (10°C-15°C) மற்றும் குளிர் (5°C-10°C) ஆகிய ஒரே மாதிரியான காலநிலையை அனுபவிக்கின்றன. இதனால், இந்த காலநிலைகளின் வனப்பகுதிகள் அதிக 'ஒற்றுமைகளையும்' குறைவான 'வேறுபாடுகளையும்' வெளிப்படுத்துகின்றன.


உயரம் அதிகரிக்கும் போது வெப்பநிலை குறைகிறது. இது அதிக உயரம் கொண்ட இமயமலைத் தொடர்களில் மேல்நோக்கிச் செல்லும்போது வெப்பமண்டலத்திலிருந்து டன்ட்ரா வகைக்கு (tundra type) தாவரங்களில் தொடர்புடைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அடிவாரத்தில் உள்ள இலையுதிர் காடுகள் ஈரமான-மிதமான (1000-2000 மீட்டர்), குளிர் மிதமான (2000-3000 மீட்டர்), துணை-ஆல்பைன் (3000-4000 மீட்டர்) மற்றும் ஆல்பைன் தாவரங்கள் (4000-5000 மீட்டர்) ஆகியவற்றால் மாற்றப்படுகின்றன.


இடையில், மிதமான புல்வெளிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. அவை மேய்ச்சல் நிலங்களும், குஜ்ஜார்கள், பக்கர்வால்கள், போட்டியாக்கள், காடிஸ் மற்றும் பிற பழங்குடியினரால், பிராந்தியங்களுக்கு இடையே மக்கள் தங்கள் கால்நடைகளுடன் பருவகால இயக்கம் - மனிதகுலத்தை விட்டு இடம் பெயரும் நடைமுறையை ஆதரிக்கின்றன.


மேலும், இமயமலையின் தெற்கு நோக்கிய சரிவுகள், நிலப்பரப்பில் மழை பொழிவதற்கு முக்கியக் காரணியாக இருந்து வருகின்றன. வறண்ட வடக்கு சரிவுகளைவிட அடர்த்தியான தாவரங்களைக் கொண்டுள்ளன. அடர்த்தியின் அடிப்படையில், வனப்பகுதி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:


1.மிகவும் அடர்ந்த வனம் (VDF, மரச்சிறை அடர்த்தி ≥ 70%)


2.மிதமான அடர்ந்த வனம் (MDF, 40% ≤ மரச்சிறை அடர்த்தி < 70%)


3.திறந்தவெளி வனம்  (OF, 10% ≤ மரச்சிறை அடர்த்தி < 40%)


4.புதர்க்காடு (மரச்சிறை அடர்த்தி < 10%) மற்றும் வனம் அல்லாத பகுதி


வனம் அல்லாத பகுதிகளின் விரிவாக்கம் கவலைக்குரியதா?


இந்தியாவின் இயற்கை தாவரங்களின் மிகப்பெரிய பன்முகத்தன்மை, பல்வேறு வகையான காலநிலை மற்றும் புவியியல் நிலைமைகளை பிரதிபலிக்கிறது. இது இமயமலையின் உயரமான பகுதிகளில் மிதமான தாவரங்கள்; வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பமண்டல இலையுதிர் வனபகுதிகள்; மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வெப்பமண்டல மழைக்காடுகள்; மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தின் டெல்டா பகுதிகளில் சதுப்புநிலங்கள்; ராஜஸ்தானின் அரை வறண்ட பகுதிகளில் வெப்பமண்டல முள் காடுகள், புற்கள் மற்றும் புதர்கள் போன்றவற்றை கொண்டுள்ளது.


இந்திய வன நிலை அறிக்கை (India State of Forests Report (ISFR)) 2023-ன் படி, இந்தியாவின் புவியியல் பரப்பளவில் 21.76 சதவீதம் வனபகுதியைக் கொண்டுள்ளது. இது 2021 மதிப்பீடுகளை விட 156.41 சதுர கிலோமீட்டர் அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுகிறது. மரங்களின் பரப்பளவு 1,12,014 சதுர கிமீ (3.41 சதவீதம்) ஆக உள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட வனபகுதிகளுக்குள் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள், வகைப்படுத்தப்படாத அல்லது ஊரக பகுதிகளில் காடுகள், அத்துடன் பதிவு செய்யப்பட்ட வனபகுதிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் ஆகியவை அடங்கும்.


பரப்பளவு வாரியாக, மத்தியப் பிரதேசம் (77,073 சதுர கி.மீ), அருணாச்சலப் பிரதேசம் (65,882 சதுர கி.மீ) மற்றும் சத்தீஸ்கர் (55,812 சதுர கி.மீ)  போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய வனப்பகுதியைக் கொண்டுள்ளன. சதவீத அடிப்படையில், லட்சத்தீவுகள் அதிக வனப்பகுதியைக் கொண்டுள்ளன (91.33 சதவீதம்), அதைத் தொடர்ந்து மிசோரம் (85.34 சதவீதம்), மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (81.62 சதவீதம்) வனப்பகுதியைக் கொண்டுள்ளன.

ஆனால், மிக நெருக்கமாகப் படித்தால், பதிவு செய்யப்பட்ட காடுகளுக்கு வெளியே மிகவும் அடர்ந்த காடு  (-63.88 சதுர கி.மீ.), மிதமான அடர்ந்த காடு (-416.47 சதுர கி.மீ.), மற்றும் புதர் பகுதிகள் (-1,912.46 சதுர கி.மீ.) குறைந்துள்ளன என்பது தெரிகிறது. பதிவு செய்யப்பட்ட காடுகளுக்குள் கூட, மிகவும் அடர்ந்த காடுகளில் (+2,431.50 சதுர கி.மீ.) அதிகரிப்பு தவிர, மற்ற அனைத்து காட்டு வகைகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பதிவு செய்யப்பட்ட காடுகளுக்குள் (+1,197.48 சதுர கி.மீ.) மற்றும் பதிவு செய்யப்பட்ட காடுகளுக்கு வெளியே (+1,763.33 சதுர கி.மீ.) இரண்டிலும் காடு அல்லாத பகுதிகளின் விரிவாக்கம் மிகப் பெரிய கவலையளிக்கும் காரணியாக உள்ளது.


நிலையான வளர்ச்சியை நோக்கி


சுருக்கமாக, இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், நீண்டகால நிலையான வளர்ச்சிக்கு அதன் வளர்ச்சி இலக்குகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சமநிலைப்படுத்த வேண்டும். வனப்பகுதி மற்றும் இயற்கை தாவரங்கள் புவி வெப்பமடைதல், வெப்ப அலைகள், காற்று மற்றும் நீர் மாசுபாடு, வெள்ளம், மண் அரிப்பு மற்றும் பாலைவனமாக்கல் போன்ற சுற்றுச்சூழல் சவால்களை குறைக்க உதவுகின்றன. எனவே, வன வளங்களை திறம்பட கண்காணித்தல், பாதுகாத்தல், மீட்டமைத்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு மிகவும் நுணுக்கமான வரையறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வழிமுறை தேவை என்று வாதிடலாம்.


Original article : Why forests demand more effective monitoring?. -Abhinav Rai


Share: