உள்துறை அமைச்சகம் வந்தே மாதரம் பாடலுக்கான முதல் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. -குஷ்பூ குமாரி

 மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது, 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களும் தேசிய கீதத்திற்கு முன்பாக பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த வழிகாட்டுதல்களை ஜனவரி மாதம் 28-ஆம் தேதி உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) அறிவித்தது. தேசியப் பாடல்களுக்கான இத்தகைய நெறிமுறைகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பாடலின் ஆறு சரணங்களையும் பாடுவதற்கு ஏறக்குறைய 3 நிமிடம் 10 வினாடிகள் ஆகும்.


முக்கிய அம்சங்கள்:


1. பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட 'வந்தே மாதரம்', சுதேசி இயக்கத்தின் (1905–08) போது ஒரு எழுச்சிக் குரலாக மாறியதுடன், இந்திய சுதந்திரப் போராட்டத்தோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை இதற்கு தேசிய கீதத்திற்கு இணையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்கியது. இருப்பினும், இதனைப் பாடும்போதோ அல்லது வாசிக்கும்போதோ பின்பற்ற வேண்டிய உடல் அசைவுகள், ஒழுக்கமுறைகள் அல்லது சட்டப்பூர்வமான கட்டாய விதிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.


2. தேசியப் பாடலைப் பாடுவதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) முதல் வழிகாட்டுதல்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறைத் தலைவர்களுக்கும், தலைமைச் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டன. அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் 3 நிமிடங்கள் 10 வினாடிகள் நீடிக்கக்கூடிய ஆறு பத்திகள் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ, அங்கிருப்பவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


3. செய்திப்படங்கள் அல்லது ஆவணப்படங்களின் போது நாட்டுப்பண் இசைக்கப்பட்டால், பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அந்தச் சூழலில் எழுந்து நிற்பது படத்தின் ஓட்டத்தைத் தடை செய்வதுடன், தேவையற்ற குழப்பத்தையும் ஒழுங்கீனத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இது பாடலுக்குப் பெருமை சேர்ப்பதற்குப் பதிலாக இடையூறாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


4. அதிகாரப்பூர்வமாக தேசியப் பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:


(i) அரசு கௌரவங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில்.


(ii) முறையான அரசு விழாக்களிலும், அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இதர நிகழ்வுகளிலும் குடியரசுத் தலைவர் வருகை தரும்போதும் அல்லது அங்கிருந்து புறப்படும்போதும்.


(iii)  அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும்.


(iv) அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் முறையான அரசு விழாக்களுக்கு ஆளுநர்கள் அல்லது துணை நிலை ஆளுநர்கள் வரும்போதும், அங்கிருந்து புறப்படும்போதும்.


(v) தேசியக் கொடி அணிவகுப்பிற்கு கொண்டு வரப்படும் போது.


இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மற்ற சிறப்பு நிகழ்வுகளிலும் தேசியப் பாடல் இசைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 


5. தேசியக் கொடி ஏற்றப்படும் போதும், அணிவகுப்புகள் அல்லாத பிற கலாச்சார அல்லது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின் போதும், மற்றும் அரசு அல்லது பொது விழாக்களுக்குக் குடியரசுத் தலைவர் வருகை தரும் போதும், தேசியப் பாடல் இசைக்கப்பட்டு அனைவராலும் பாடப்பட வேண்டும். இத்தகைய தருணங்களில், இசைக் கருவிகளுடனோ அல்லது அவை இல்லாமலோ, குழுவாக இணைந்து தேசியப் பாடலைப் பாடுவது ஊக்குவிக்கப்படுகிறது.


6. அனைத்துப் பள்ளிகளிலும், அன்றைய நாள் செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்கள் அனைவரும் இணைந்து பாடும் தேசியப் பாடலுடன் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் தங்களுடைய பாடத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடுவதை ஊக்கப்படுத்தவும், மாணவர்களிடையே தேசியக் கொடிக்கு மதிப்பளிக்கும் பண்பை வளர்க்கவும் போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


7. தாய்நாட்டிற்குச் செலுத்தும் வணக்கமாகவும், உரிய மரியாதையுடனும், முறையான ஒழுக்கத்துடனும் பாடும் வரை, தேசியப் பாடலை அனைவரும் இணைந்து கூட்டாகப் பாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


8. சமீப காலங்களில், 'வந்தே மாதரம்' பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகள் குறித்தும், தேசியச் சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் இதற்குத் தண்டனைகள் விதிக்க முடியுமா என்பது குறித்தும் பல நீதிமன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


9. தேசியப் பாடலைப் போலல்லாமல், தேசிய கீதமானது (National Anthem) தெளிவான அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51A(a)-ன்படி, தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். மேலும், தேசிய கீதத்தைப் பாடுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான விரிவான நடைமுறைகள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவுகளின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.


10. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், அதனை எவ்வாறு பாட வேண்டும் மற்றும் இசைக்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிமுறைகளை இந்த ஆணைகள் வழங்குகின்றன. உதாரணமாக, அரசு விழாக்களில் தேசிய கீதத்தின் முழு வடிவம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். மேலும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அதனை மாற்றி அமைப்பதற்கோ அல்லது நாடகத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கோ அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


11. சட்டத்தின்படி, யாராவது வேண்டுமென்றே தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தாலோ அல்லது தேசிய கீதம் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்தாலோ, அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


150-வது ஆண்டில் வந்தே மாதரம்


1. "வந்தே மாதரம்" பாடல் உருவானதன் 150-வது ஆண்டை முன்னிட்டு, 2025 டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் 10 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த ஆண்டு அந்தப் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிப்பதால், மத்திய அரசு ஓராண்டு கால கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்டம் இந்த பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம்  2026-ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக நவம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2. சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி கலந்து எழுதப்பட்ட இந்தப் பாடல், 1875-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 1881-ஆம் ஆண்டு 'பங்கதர்ஷன்' (Bangadarshan) இதழில் தொடராக வெளிவந்த சட்டோபாத்யாயவின் 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலில் இது சேர்க்கப்பட்டது. 1896-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ரவீந்திரநாத் தாகூர் இந்தப் பாடலுக்கு இசையமைத்து முதன்முதலில் பாடியதாகக் கூறப்படுகிறது. 


3. "தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்" என்று பொருள்படும் "வந்தே மாதரம்" பாடல், 1905-ஆம் ஆண்டு கர்சன் பிரபு மேற்கொண்ட வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தின் போதுதான் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இது வங்காளத்தைத் தாண்டி நாடு முழுவதும் பரவியது. மேலும், இந்தப் பாடல் சமஸ்கிருத மொழியில் இருந்ததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்களும் இதனை எளிதில் புரிந்துகொண்டு தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.


4. 1882-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'ஆனந்தமடம்', முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக சந்நியாசிகள் மேற்கொண்ட கிளர்ச்சியைப் பற்றிய கதையாகும். இந்த நாவலில், மகேந்திரன் என்ற இல்லறவாசி, பவானந்தர் என்ற போர்வீரத் துறவியைச் சந்திக்கும் போது இந்தப் பாடல் இடம்பெறுகிறது. பவானந்தர் இப்பாடலின் முதல் வரிகளைப் பாடுகிறார்.


5. மகேந்திரன் ஆர்வத்துடன் இந்த "தாய்" யார் என்று கேட்கிறான், ஆனால் பவானந்தர் அதற்குப் பதிலளிக்காமல், மேலும் சில வரிகளைப் பாடுகிறார். குழப்பமடைந்த மகேந்திரன், "துறவி பாடுவது ஒரு தாயைப் பற்றி அல்ல, நாட்டைப் பற்றி" என்று கூறுகிறான். அதற்கு பவானந்தர், கண்களில் கண்ணீருடன், "எங்களைப் பெற்றெடுத்த இந்த மண்ணைத் தவிர வேறு எந்தத் தாயையும் நாங்கள் அறியமாட்டோம்" என்று பதிலளிக்கிறார்.


6. இந்தப் பாடல் நாட்டின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்தியதால் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதே சமயம், இது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இப்பாடல் ஒரு இந்து பெண் தெய்வத்தை போற்றுவது போல் அமைந்துள்ளதாகக் கூறி, முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


7. தேசிய கீதத்தைத் தேர்ந்தெடுப்பது குறித்து அரசியலமைப்புச் சபை விவாதித்தபோது, 'வந்தே மாதரம்' பாடலுக்குப் பதிலாக தாகூரின் 'ஜன கண மன' தேர்ந்தெடுக்கப்பட்டது. மே மாதம் 21-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு எழுதிய குறிப்பில் நேரு இதனை விளக்கினார். 'வந்தே மாதரம்' இந்தியர்களால் "ஆழமாக மதிக்கப்படும்" ஒரு பாடலாக இருந்தாலும், இசைக்குழுவினர் இசைப்பதற்கு 'ஜன கண மன' பாடல் மிகவும் எளிதாக இருந்ததாக நேரு குறிப்பிட்டுள்ளார்.


Original article : MHA issues first protocol on Vande Mataram -Khushboo Kumari

Share: