இந்தியத் தொண்டு நிறுவனங்கள், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்க உதவும். -ரோகிணி நிலேகனி

 கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு, வேளாண்மை அல்லது மற்ற எந்தத் துறையாக இருந்தாலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சவால்களை நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சூழலில், எதிர்காலத்தை மறுசீரமைக்கத் தேவையான அதிக நிதி அபாயம் கொண்ட முதலீடுகளையும் (high-risk capital) மற்றும் நீண்ட காலப் பொறுமையுடன் கூடிய மூலதனத்தையும் (long-term patient capital) வழங்குவதில் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கின்றனர். 


பேரிடர் நிவாரணத்திற்காக நீங்கள் கடைசியாக எப்போது ஒரு நிறுவனத்திற்கு காசோலை அனுப்பினீர்கள்? இந்தக் கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், பலர் தாங்கள் அனுப்பியதாகச் சொல்லியிருக்கக் கூடும். ஆனால், அதன் பிறகு, நாட்டில் அதிகரித்து வரும் "பேரிடர் சோர்வை" (disaster fatigue) நாம் காண்கிறோம். இது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும் கவலைக்குரிய விஷயமாகப் பாரக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் பேரிடர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், மக்களிடையே உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


இந்திய நாட்டின் தொண்டு நிறுவனம் ஒன்று டால்பெர்க் (Dalberg) நிறுவனத்துடன் இணைந்து 'பின்னடைவை எதிர்கொள்ளும் திறன் - காலநிலை பேரிடர்களில் இருந்து உயிர் பிழைப்பதோடு மட்டுமின்றி, சமூகங்கள் செழிக்க ஆதரவளித்தல்' (Resilience — Moving beyond surviving climate disasters to supporting communities to thrive) என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யும் மனநிலையை இந்த அறிக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தற்போதைய காலநிலை மாற்றம் நம் அனைவரையும், குறிப்பாகப் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் உள்ள எளிய மக்களைப் பெருமளவில் பாதித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

2023-ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 85 சதவீத மாவட்டங்கள் வெள்ளம், வறட்சி அல்லது சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இமயமலைத் தொடர் முதல் கடற்கரைப் பகுதிகள் வரை அனைத்துப் பகுதிகளும் இன்று அபாயகட்டத்திலேயே உள்ளன. அந்த ஆண்டில் 86 சதவீத நாட்களில் கடுமையான வெப்பம் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. நாம் முன்வைத்துள்ள தரவுகளும் கணிப்புகளும் உண்மையானால், வருங்காலத்தில் இதைவிட மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு மிகவும் மோசமானது; நாடு தழுவிய அளவில் ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, ஏழைக் குடும்பங்கள் ஒரே ஒரு பேரிடரின் மூலம் தங்கள் ஆண்டு வருமானத்தில் 85 சதவீதம் வரை இழக்க நேரிடுகிறது. எனவே, சமூக அளவில் வலுவான தற்காப்பு மற்றும் மீண்டெழும் திறனை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. சூறாவளி மற்றும் வெள்ளத்தின் போது உயிர்களைக் காப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது உண்மைதான் என்றாலும் அது மட்டுமே இப்போது போதுமானதல்ல என்றும், மக்கள் வெறுமனே உயிர் பிழைக்க மட்டும் விரும்பவில்லை என்றும், அவர்கள்  பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். 


உறுதியான மீள்திறனை உருவாக்க, நாம் வளர்ச்சியைப் பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டும். உதாரணமாக, அணைகளை மாற்றி வடிவமைப்பது மற்றும் உள்ளூர் அளவில் நம்பிக்கை மற்றும் திறனை வலுப்படுத்துவதன் மூலம் சமூகம்  பேரிடர்களுக்கு முன்னும் பின்னும் திறம்பட செயல்பட முடியும் என்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் நிதி ரீதியாக அதிகாரம் பெற வேண்டும். மேலும், சந்தைகளும் இதில் ஒரு ஆக்கபூர்வமான பங்கினை வகிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய முதலீடுகள் புத்திசாலித்தனமானவை என்பதற்கு உலகளாவிய சான்றுகள் உள்ளன: பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு 1 டாலரும், பேரிடருக்குப் பிந்தைய மீட்புச் செலவுகளில் 15 டாலர் வரை மிச்சப்படுத்த உதவும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். 



கீழ்மட்ட அளவில் விரிவுபடுத்துவதற்குத் தயாராக உள்ள பல புதுமையான யோசனைகள் உள்ளன. சுயதொழில் புரியும் பெண்களின் சங்கம் (Self-Employed Women’s Association (SEWA) வெப்பக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 40°C-க்கு மேல் இருக்கும்போது தானாகவே இழப்பீடு வழங்குகிறது. இந்தத் திட்டம் தற்போது மூன்று மாநிலங்களில் 50,000 பெண் உறுப்பினர்களுக்குப் பயன் அளிக்கிறது. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு (Council on Energy, Environment and Water (CEEW)) ஒரு தேசிய காலநிலை மற்றும் வெப்ப அபாய வரைபடத்தை உருவாக்கியுள்ளதுடன், நடைமுறைச் செயல் திட்டங்களை உருவாக்க அரசாங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. ASAR மற்றும் Equinoct ஆகிய அமைப்புகள் கேரளாவின் எர்ணாகுளத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் கடல் அலை வெள்ளத்தைப் பதிவு செய்ய அந்தந்த சமூகங்களுக்கு ஆதரவளித்துள்ளன. நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழகம் (Sustainable Environment and Ecological Development Society (SEEDS) செயற்கை நுண்ணறிவு சார்ந்த ‘e-disaster wallet’ ஒன்றை உருவாக்கியுள்ளது. இது ஒரு பேரிடருக்கு முன்பே ஏற்படக்கூடிய சொத்து இழப்புகளைச் சரிபார்க்க மக்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் பேரிடருக்குப் பிறகு அரசாங்க மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் விரைவாக அவர்களைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கின்றனர். 


கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் பிற துறைகளில் காலநிலை தொடர்பான சவால்களுக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது; எதிர்காலத்தை மறுசீரமைக்க அதிக நிதி அபாயம் கொண்ட நிதி முதலீடுகள் (high-risk funding) மற்றும் நீண்ட கால பொறுமை தேவைப்படும் மூலதனத்தை (long-term patient capital) வழங்குவதன் மூலம் பல தொண்டு நிறுவனங்கள் இதற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.


இதுவரை, பேரிடர்கள் மேலிருந்து-கீழ் நோக்கிய, தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை (top-down approach) மூலமே கையாளப்பட்டு வருகின்றன. அரசாங்கங்கள் பொதுவாக சமூகங்களுக்காகப் பணியாற்றுகின்றன. ஆனால், அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். மக்கள் தங்களின் சொந்த மீள்திறனை (resilience) உருவாக்குவதில் வெறும் பயனாளிகளாக இல்லாமல், செயலில் ஈடுபடும் முக்கியப் பங்குதாரர்களாக மாற வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கிராமப்புற அளவில் உடல்நலம், நிதி, மனித வளம், சமூகம் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் ஒரு நாடு தழுவிய முயற்சியைத் தொடங்க இதுவே சரியான தருணம் என்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பெருந்தொற்று காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் காட்டிய அந்தப் பரிவுணர்வையும் பிணைப்பையும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Panchayati Raj Institutions (PRI)) மூலமாக நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதிப்புகளையும் எதிர்கொள்ள இந்தியா முழுத் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


ரோகிணி நிலேகனி, Rohini Nilekani Philanthropies (RNP) அமைப்பின் தலைவராகவும், 'Samaaj, Sarkaar, Bazaar: A citizen-first approach’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.


Original article : Indian philanthropy can step in to mitigate climate disasters’ effects -Rohini Nilekani

Share: