கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்கள் என்றால் என்ன? -ஷாம்பவி நாயக்

 இத்தகைய தொழில்நுட்பங்கள் எவ்வாறு கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க முடியும்? ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்சார் பொருளாதார உத்தி (EU Bioeconomy Strategy) மற்றும் சுழற்சி பொருளாதார செயல் திட்டம் என்றால் என்ன? மேலும், இந்தியா எவ்வாறு கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு (CCU) தொழில்நுட்பத்தை பெரிய அளவில் மேம்படுத்த முடியும்?


கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு (Carbon Capture and Utilisation (CCU)) என்பது தொழிற்சாலைகளில் இருந்தோ அல்லது நேரடியாக காற்றில் இருந்தோ கார்பன்-டை-ஆக்சைடைப் பிடித்து, அவற்றை உபயோகமான பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும். இது வளிமண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றி, அதை எரிபொருட்கள், ரசாயனங்கள், கட்டுமானப் பொருட்கள் அல்லது பாலிமர்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறது. பிடிபட்ட கார்பன் டை ஆக்சைடை நிலத்தடியில் நிரந்தரமாகச் சேமித்து வைக்கும் 'கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு' (CCS) முறையைப் போலல்லாமல், கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொழில்நுட்பம் அந்த கார்பனைச் சேமிப்பதற்குப் பதிலாக மீண்டும் பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறது.




இந்தியாவுக்கு ஏன் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது?


இந்தியா உலகளவில் கார்பன்-டை-ஆக்சைடு (CO₂) வெளியேற்றத்தில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட், எஃகு, ரசாயனம் போன்ற தொழில்துறைகளே ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வருங்கால உமிழ்வைக் குறைக்க உதவினாலும், பல தொழில்முறைச் செயல்பாடுகள் இயற்கையாகவே அதிக கார்பனை வெளியேற்றுபவையாகவும், அவற்றை மாற்றுவது கடினமாகவும் உள்ளன. இத்தகைய சவாலான துறைகளில் இருந்து வெளியேறும் கார்பனைப் பிடித்துப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் (Carbon Capture and Utilisation - CCU), உமிழ்வைக் குறைப்பதோடு புதிய தொழில்முறை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இது 2070-ஆம் ஆண்டுக்குள் 'நிகர பூஜ்ஜிய' (Net-Zero) உமிழ்வு இலக்கை அடையவும், சுழற்சி முறையிலான குறைந்த கார்பன் பொருளாதாரத்தை உருவாக்கவும் இந்தியாவின் முயற்சிகளுக்குப் பெரும் துணையாக அமைகிறது.


இன்று இந்தியா எந்த நிலையில் உள்ளது?


இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி நிதியுதவி மற்றும் இதற்கான பிரத்யேக மேம்பாட்டுத் திட்டவரைவு மூலம் இந்தியா கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டிற்கு (CCU) ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2030-ஆம் ஆண்டிற்கான கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) வரைவுத் திட்டத்தை வெளியிட்டு, அதற்குப் பொருத்தமான திட்டங்களைக் கண்டறிந்து வருகிறது. தனியார்துறையில், அம்புஜா சிமெண்ட்ஸ் (அதானி குழுமம்) IIT பாம்பே உடன் இணைந்து பிடிபடும் CO₂-வை எரிபொருளாகவும் மற்ற பொருட்களாகவும் மாற்றும் இந்திய-ஸ்வீடிஷ் முன்னோடித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது, அதே நேரத்தில் ஜே.கே. சிமெண்ட் நிறுவனம் (JK Cement), கார்பன்-டை-ஆக்சைடை (CO₂) சேகரித்து, அதை இலகுரக கான்கிரீட் கற்கள் மற்றும் ஓலிஃபின்கள் (olefins) தயாரிப்பதற்கு பயன்படுத்துவதற்காக ஒரு பரிசோதனை மையத்தை உருவாக்கி வருகிறது. அதேவேளையில் சிமெண்ட் துறையைத் தாண்டி, Organic Recycling Systems Limited (ORSL) என்கிற நிறுவனம் இந்தியாவின் முதல் 'உயிரி-கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு' (Bio-CCU) என்கிற முன்னோடித் திட்டத்தை

முன்னெடுத்து, உயிரி எரிவாயுவிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடை உயிரி-ஆல்கஹால்கள் மற்றும் சிறப்பு ரசாயனங்களாக மாற்றி பல புதிய தொழில்நுட்பப் பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


மற்ற நாடுகள் என்ன செய்கின்றன?


ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்சார் பொருளாதார உத்தி மற்றும் சுழற்சி பொருளாதார செயல் திட்டம் ஆகியவை, கார்பன்-டை-ஆக்ஸைடை ரசாயனங்கள், எரிபொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான மூலப்பொருட்களாக மாற்றும் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு முறையை நிலைத்தன்மை இலக்குகளுக்காக ஆதரிக்கின்றன. அதேவேளையில் பெல்ஜியத்தில் உள்ள ஆர்செலர் மிட்டல் (ArcelorMittal) ஆலையில் சேகரிக்கப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடை எஃகு மற்றும் ரசாயன உற்பத்தியில் பயன்படும் கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை மிட்சுபிஷி (Mitsubishi) மற்றும் டி-கார்பன் (D-CRBN) நிறுவனங்கள் இணைந்து சோதித்து வருகின்றன. மேலும், அமெரிக்கா வரிச்சலுகைகள் மற்றும் நிதியுதவி மூலம் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு விரிவாக்கத்தை ஊக்குவிப்பதோடு, ஐக்கிய அரபு அமீரகம் அல் ரேயாதா (Al Reyadah) போன்ற திட்டங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜனுடன் இணைந்த ரசாயன மையங்கள் மூலம் இத்துறையில் முன்னேறி வருகிறது.


எதிர்காலத்தில் வரவிருக்கும் அபாயங்கள் யாவை?


இந்தியாவுக்கான கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு (CCU) தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதில் உள்ள முதன்மையான சவால் அதன் அதிகப்படியான செலவாகும்; ஏனெனில் காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடைப் பிரித்து, தூய்மைப்படுத்தி, மற்ற பொருட்களாக மாற்றுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதோடு பெரும் செலவும் ஆகிறது. அரசாங்கத்தின் ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் இல்லையெனில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் நிலக்கரி போன்ற படிம எரிபொருள் சார்ந்த பொருட்களுடன் விற்பனைச் சந்தையில் போட்டியிடுவது கடினம் என்கின்றனர். அத்துடன், தொழிற்சாலைகள் அனைத்தும் அருகருகே அமைந்திருப்பது, கார்பன்-டை-ஆக்சைடை கொண்டு செல்வதற்கான முறையான போக்குவரத்து வசதிகள் மற்றும் உற்பத்தித் துறையுடனான இணைப்பு போன்ற கட்டமைப்பு வசதிகள் இந்தியாவின் அனைத்துத் தொழில் மண்டலங்களிலும் சமமாக வளர்ச்சி அடையவில்லை என்பதும் ஒரு பெரிய தடையாககச் சுட்டிக்காட்டப்படுகிறது. இறுதியாக, இத்துறைக்கான முறையான தரநிலைகள், சான்றிதழ்கள் மற்றும் தெளிவான சந்தை வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர், இது கார்பன் சார்ந்த பொருட்களுக்கான தேவையையும் குறைப்பதாகக் கூறப்படுகிறது. 


கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டிற்கான (CCU) திட்ட வரைபடங்களை உருவாக்கியதன் மூலம் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், அதன் இலக்குகளை அடைவதற்கு அவற்றைச் சரியாகச் செயல்படுத்துவது அவசியமாகிறது.


சாம்பவி நாயக், தக்ஷஷிலா நிறுவனத்தின் ஆரோக்கியம் மற்றும் உயிரியல் அறிவியல் கொள்கை துறையின் தலைவர் ஆவார்.


Original tittle :  What are carbon capture and utilisation technologies? -Shambhavi Naik

Share: