தமிழக வெற்றிக் கழக அரசின் வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் கடன் ₹13.18 லட்சம் கோடியாக உள்ளது.

 2025-26 ஆம் ஆண்டில் ₹10 லட்சம் கோடி என்ற முதன்மைக் கடன் தொகையானது, சந்தைக் கடன்கள், நிறுவனக் கடன்கள் மற்றும் பொதுக் கணக்குக் கடப்பாடுகள் (public account liabilities) மூலமான அரசின் நேரடிக் கடன்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது என்றும், அரசு உத்தரவாதம் அளிக்கும் அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs), சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் சிறப்பு நோக்க நிறுவனங்களின் (SPVs) கடன்களை அது உள்ளடக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.


பொதுத்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த கடனையும் சேர்த்து, தமிழகத்தின் உண்மையான நிலுவைக் கடன் ₹13.18 லட்சம் கோடியாக உள்ளது என நிதியமைச்சர் என். மரிய வில்சன் ஜூன் மாதம் 16-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், "தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை - பொது நிதிநிலை குறித்த ஓர் ஆய்வு: 2021-22 முதல் 2025-26 வரை" என்ற வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார். கடந்த மாதம் பதவியேற்ற பிறகு, மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைத் தனது அரசு வெளியிடும் என்று முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் கூறியிருந்தார்.


இந்த அறிக்கையின்படி, 2025-26-ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் தொகையாகக் காட்டப்பட்டுள்ள ₹10 லட்சம் கோடி என்பது, சந்தைக் கடன்கள், நிறுவனக் கடன்கள் மற்றும் பொதுக் கணக்குக் கட்டுப்பாடுகள் மூலம் மாநில அரசு நேரடியாக வாங்கிய கடன்களை மட்டுமே குறிக்கிறது. மாநில அரசு உத்தரவாதம் அளிக்கும் அல்லது மறைமுகமாக ஆதரவு வழங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Sector Undertakings (PSUs)), சட்டப்பூர்வ வாரியங்கள் (Statutory boards) மற்றும் சிறப்பு நோக்கக் கூட்டமைப்புகள் (Special Purpose Vehicles (SPVs)) வாங்கியுள்ள கடன்கள் இதில் சேர்க்கப்படவில்லை.


கடன் சுமைக்கு மிகப்பெரிய காரணம்


பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களில் மின்சாரத் துறைதான் ₹2.47 லட்சம் கோடியுடன் இப்போதும் மிக அதிக கடன் கொண்ட முதன்மைத் துறையாக உள்ளது. இந்த மின்சாரத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (முன்னதாக TANGEDCO/TNEB என்று அழைக்கப்பட்ட நிறுவனம்) ₹1.07 லட்சம் கோடி நிலுவைக் கடனைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் (TNPGCL) ₹1.03 லட்சம் கோடி கடனைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) ₹30,965 கோடி கடனையும், தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் ₹5,672 கோடி கடனையும் கொண்டுள்ளன.




மேலும், எட்டு அரசுப் போக்குவரத்து நிறுவனங்களின் நிலுவைக் கடன் ₹43,865 கோடியாகவும், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்தின் (Tamil Nadu Civil Supplies Corporation) கடன் ₹27,181 கோடியாகவும் உள்ளது என அந்த அறிக்கை தெரிவித்தது. மொத்தத்தில், இந்த பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.



இந்த அறிக்கை, தமிழ்நாட்டின் முக்கிய நிதிநிலைக் குறியீடுகளை கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுள்ளது. இந்த மாநிலங்கள் தமிழ்நாட்டைப் போலவே தோராயமான தலா வருமானம் (Per capita income), பல்வகைப்படுத்தப்பட்ட தொழில்துறை கட்டமைப்பு, கணிசமான நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் வரலாற்று ரீதியாக ஒரே மாதிரியான நிதித் தொடக்க நிலைகளைக் கொண்டவை ஆகும்.


கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 2021-ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் நிலுவையில் உள்ள கடன் ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்து, ₹5.13 லட்சம் கோடியிலிருந்து மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் ₹10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலம் முழுவதும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடனின் விகிதம் (Debt-to-GSDP ratio) 28.3% (2025-26) என்ற உயர்ந்த அளவிலேயே நீடிக்கிறது. பிற மாநிலங்கள் கொரோனா பெருந்தொற்று கால உச்சத்திலிருந்து தங்களது நிதிநிலையைச் சீரமைத்து மீண்டு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் அத்தகைய குறிப்பிடத்தக்க நிதிச் சீரமைப்பு எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மூலதனச் செலவைவிட வட்டிச் செலவு அதிகம்


மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் வரவில் சுமார் 23% மற்றும் மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் ஏறக்குறைய 35% வட்டி செலுத்துவதற்கே செலவாகிறது. 2025-26-ஆம் நிதியாண்டில், வருடாந்திர வட்டிச் செலவு ₹67,050 கோடியாக உள்ளது. இது மாநிலத்தின் வருடாந்திர மூலதனச் செலவைவிட (Capital expenditure) சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.


வருவாய் பற்றாக்குறை என்பது கட்டமைப்பு ரீதியானதாக மாறியுள்ளது என்று இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டியது. 2025-26-ஆம் ஆண்டிற்கான மதிப்பீடுகள் ₹78,324 கோடி வருவாய் பற்றாக்குறையைக் காட்டுகின்றன. இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 2.2%-க்கு சமமாகும். முழுமையான அளவின் அடிப்படையில் இதுவே மிக அதிகபட்ச வருவாய் பற்றாக்குறையாகும். மேலும், இது கொரோனா பெருந்தொற்று காலத்தில் பதிவான அளவைவிடவும் இது அதிகம். மாநில அரசு புதிய முதலீடுகளைச் செய்வதைவிட, அன்றாடத் தேவைகளுக்கும் நுகர்வுகளுக்கும் நிதி திரட்டவே கடன் வாங்குகிறது என்று அறிக்கை கூறுகிறது.


மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இடையிலான விகிதம் (SOTR-to-GSDP ratio), 2021-22-ஆம் ஆண்டில் 5.93%-ஆக இருந்த நிலையில், 2025-26-ஆம் ஆண்டில் 5.45%-ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் கடுமையான வீழ்ச்சியாகும்.


ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வட்டி செலுத்துதல்கள் உள்ளிட்ட உறுதிசெய்யப்பட்ட செலவினங்கள், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளன. இது ₹1.25 லட்சம் கோடியிலிருந்து ₹1.89 லட்சம் கோடியாக உயர்ந்து, வருவாய் வரவுகளில் அதன் பங்கை சுமார் 60%-லிருந்து 64%-ஆக அதிகரித்துள்ளது. இது மற்ற மாநிலங்கள் பராமரிக்கும் 50%-க்கும் குறைவான அளவைவிட அதிகமாகும். இதன் விளைவாக, மூலதனச் செலவு மற்றும் முதலீட்டிற்கான நிதிஒதுக்கீட்டு வாய்ப்பு குறைந்துள்ளது. மூலதனச் செலவினம்-மொத்தச் செலவின விகிதம் 11.8%-ஆக உள்ளது.                                இது மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைவு என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


வருவாய் பற்றாக்குறையை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வருவதையும், நிதிப் பற்றாக்குறையை 3%-ஆகக் கட்டுப்படுத்துவதையும் ஒத்திவைப்பதற்காக,       2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிப் பொறுப்புச் சட்டம் (Tamil Nadu Fiscal Responsibility Act) இதுவரை எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கை


இந்த அறிக்கை, மாநிலத்தில் அதிகரித்து வரும் முதியவர்களின் மக்கள்தொகையைச் சுட்டிக்காட்டியுள்ளது. 2031-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் முதியவர்கள் 18.2-சதவீதம் இருப்பார்கள் எனக்  கணிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Union Ministry of Health and Family Welfare) மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2031-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பெரிய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் முதியவர்களின் விகிதம் மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


மேலும், உழைக்கும் வயதில் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும், மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவர்களின் விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த அறிக்கை விவரித்துள்ளது. இதனால் வரி வருவாய் தளம் சுருங்குவது மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவிகளுக்கான அரசின் செலவுகள் அதிகரிப்பது போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்ற பிற மாநிலங்கள் இந்த ஆய்வுக் காலத்தில் தங்களின் நிதிநிலையை மேம்படுத்திய அல்லது சீராக வைத்திருந்த வேளையில், தமிழ்நாட்டின் நிதிநிலை அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் மோசமடைந்துள்ளது என்றும், வரவிருக்கும் ஆண்டில் இதிலிருந்து உடனடி நிவாரணம் கிடைப்பது கடினம் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


ஒரே ஒரு நிதியாண்டு காலத்திற்குள் இதைச் சரிசெய்துவிட முடியாது என்றும், வருவாயைப் பெருக்குதல், செலவின மேலாண்மை, பொதுத்துறை நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மேலாண்மை ஆகியவற்றில் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


கட்டமைப்புரீதியான இழப்புகள்

வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை, சுங்கத்துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவற்றில் உள்ள நிர்வாகச் சீர்குலைவு மற்றும் கட்டமைப்பு ரீதியான முறைகேடுகளால் ஏற்படும் வருவாய் இழப்புகளைச் சரிசெய்வதில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் வில்சன் கூறினார்.                இந்தத் துறைகளில் நடக்கும் வருவாய் இழப்புகளைத் தடுப்பதன் மூலம், இந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ₹20,000 கோடி கூடுதல் வருவாயை அரசாங்கத்தால் திரட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த அவற்றில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை அரசாங்கம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


original article : TVK government’s White Paper puts Tamil Nadu’s debt at ₹13.18 lakh crore.

Share: