கடலில் மாலுமிகளைப் பாதுகாப்பது யார்? கடல்சார் நிர்வாகம் மற்றும் சர்வதேச சட்டங்களைப் புரிந்துகொள்ளுதல். -குஷ்பூ குமாரி

 ஓமன் வளைகுடாவில்  சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதல்கள், இந்திய மாலுமிகள் எதிர்கொள்ளும் அபாயங்களை எடுத்துக்காட்டியுள்ளன. கப்பல் கொடிகள், துறைமுக அரசுக் கட்டுப்பாடு, மாலுமிகள் கைவிடப்படுதல், நிழல் கப்பல் குழுக்கள் மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்கள் போன்றவை உலகளாவிய கப்பல் போக்குவரத்தை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதைப் பற்றி  அறிந்து கொள்வோம்.


தற்போதைய செய்தி?


ஓமன் வளைகுடாப் பகுதியில் இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய தொடர் தாக்குதல்கள் குறித்து இந்தியா தனது "கடுமையான எதிர்ப்பை" பதிவு செய்துள்ளது. ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில், ஓமன் வளைகுடாவில் ‘MT Settebello’ என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.


முக்கிய அம்சங்கள்:


1. கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி அருகே விதிக்கப்பட்ட கடற்படை முற்றுகையால்  ஏற்ப்பட்ட மேற்கு ஆசியப் போர், பொருளாதாரத் தாக்கத்தைத் தவிர, இந்தியர்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை  ஏற்ப்படுதியுள்ளது.


2. இந்திய மாலுமிகள் உலகளாவிய கப்பல் போக்குவரத்துத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்கள் தற்போது நடைபெற்று வரும் மோதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடல்சார் தொழிலாளர் உடன்படிக்கையின்படி (Maritime Labour Convention (MLC)), இந்த ஒப்பந்தம் கப்பல் மாலுமியை பின்வருமாறு வரையறுக்கிறது: "இந்த உடன்படிக்கையின் விதிகள் பொருந்தக்கூடிய ஒரு கப்பலில், எந்தவொரு பணியில் ஈடுபட்டுள்ள அல்லது வேலை செய்யும் எவரும்" கப்பல் மாலுமி ஆவார்.


3. உலக அளவில் கப்பல்களில் வேலை செய்யும் மாலுமிகளில் சுமார் 15% பேர் இந்தியர்கள் ஆவர். தேசிய அளவிலான எண்ணிக்கையில் இது உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பங்காகும். இந்தியாவின் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தில் சுமார் 7,40,000 மாலுமிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 3,23,479 பேர் தற்போது பணியில் இருக்கும் மாலுமிகள் ஆவர்.


கப்பல் போக்குவரத்தில் நாடுகளின் கொடிகள் எதைக் குறிக்கின்றன?


4. கப்பல்களில் இருக்கும் கொடிகள், முதன்மையாக அந்த கப்பலின் உரிமையாளர் அல்லது அதில் வேலை செய்யும் ஊழியர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டாது; மாறாக, அந்த கப்பல் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு வணிகக் கப்பலும் ஒரு சட்டப்பூர்வமான தேசியத்தைப் பெறுவதற்காக, ஏதேனும் ஒரு நாட்டில் தனது கொடியைப் பதிவு செய்ய வேண்டும். இந்தக் கொடிதான், அந்த கப்பல் எந்த நாட்டுச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் மற்றும் கப்பலில் இருக்கும் ஊழியர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு உரிமைகள் கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது.


5. சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation (IMO)),     “ஒரு கப்பலை ஒரு நாட்டுடன் இணைப்பதன் மூலம், சர்வதேச சட்டத்தின்படி அந்தக் கப்பலைப் பாதுகாக்கும் உரிமை அந்த நாட்டிற்கு உள்ளது என்பதை கப்பல் பதிவு முறை சுட்டிக்காட்டுகிறது என்று கூறுகிறது. கப்பல்கள் எந்த ஒரு நாட்டின் அதிகார வரம்பிற்கும் வராத சர்வதேச நீர்வழிகள் வழியாகச் செல்வதாலும் இந்த அடையாள முறை மிகவும் அவசியமானதாகிறது.


6. சர்வதேச சட்டத்தின்படி, அனைத்து நாடுகளும் தங்களது நாட்டின் தேசியத்தை கப்பல்களுக்கு வழங்குவதற்கும், தங்களது கொடியைப் பயன்படுத்துவதற்கும் உரிய விதிகளை உருவாக்க வேண்டும். இருப்பினும், இந்த ஒட்டுமொத்தப் பதிவு முறைக்கும் தற்போது உலகளாவிய அளவில் பொதுவான, அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒரு சட்டக் கட்டமைப்பு இல்லை.


7. இந்தியாவில், கப்பல்கள், அவற்றின் உரிமையாளர்கள், ஆள்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு முகமைகளின் சான்றுகளைச் சரிபார்க்கும் பொறுப்பு கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்திடம் உள்ளது. ஆனால், தளர்வான கண்காணிப்பு மற்றும் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாததே, மாலுமிகள் கப்பல்களிலேயே கைவிடப்படுவது போன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ளதாகக் கப்பல் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.


8. தலைமை இயக்குநரகத்தின் இணையதளத்தின்படி, இந்தப் பதிவு, சம்பந்தப்பட்ட சொத்தைக் கையாள்பவர்களுக்குக் கப்பலின் உரிமைக்கான ஆதாரத்தை வழங்குகிறது. மேலும், காயங்கள் அல்லது உயிரிழப்பு சம்பந்தப்பட்ட விபத்துக்கள் ஏற்படும்பட்சத்தில், கப்பல் பணியாளர்கள் இந்திய நீதிமன்றங்களில் இந்தியச் சட்டங்களின்படி இழப்பீடு கோருவதற்கு இது  தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.


9. நாடுகள் தங்களது  கொடியை ஏந்திய கப்பல்கள் மீது நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் சமூகம் தொடர்பான விவகாரங்களில் தங்கள் அதிகார வரம்பையும் கட்டுப்பாட்டையும் செலுத்த வேண்டும். பாதுகாப்பு, மாசு தடுப்பு மற்றும் கப்பலில் வேலை செய்யும் சூழல் போன்ற சர்வதேசத் தரங்களை அந்த கப்பல் சரியாகப் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணிக்கும் முதன்மைப் பொறுப்பு, கொடி வழங்கிய அந்த நாட்டிற்கே உரியது ஆகும்.


சர்வதேச கப்பல் போக்குவரத்தில் “வசதிக்கேற்ற கொடி” என்ற கருத்துரு என்றால் என்ன?


10. 1982-ஆம் ஆண்டின் கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) என்பது கடல்சார் செயல்பாடுகளுக்கான உலகளாவிய ஒப்பந்தமாகும். ஒரு நாட்டிற்கும், அந்த நாட்டில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுக்கும் இடையே ஒரு "உண்மையான தொடர்பு" இருக்க வேண்டும் என்று இது கூறுகிறது. ஆனால், அப்படிப்பட்ட தொடர்பு என்றால் என்ன என்பதற்கான தெளிவான வரையறை இதில் இல்லை.

11. சில நாடுகள், தங்களது நாட்டுடன், உரிமையாளர்  அல்லது கப்பல் பணியாளர்கள் மூலம் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தங்கள் நாட்டுக் கொடியின்கீழ் பதிவு செய்ய அனுமதிக்கின்றன. இவை “மூடிய பதிவேடுகள்” (Closed Registries) என அழைக்கப்படுகின்றன. மற்ற நாடுகள், வெளிநாட்டுக்குச் சொந்தமான அல்லது வெளிநாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல்களை ஒரு “வெளிப்படையான பதிவேட்டின்” மூலம் தங்கள் கொடியைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. இன்னும் சில நாடுகள், சர்வதேச வர்த்தகத்திற்குத் தங்கள் கொடியைப் பயன்படுத்துவதை முழுவதுமாக அனுமதிப்பதில்லை. வெளிப்படையான பதிவேடுகள் இப்போது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organization (IMO)) கூறுகிறது.


12. ‘The Diplomat’ இதழில் 2023-ஆம் ஆண்டு வெளியான ஒரு கட்டுரையின்படி, ஒரு கப்பலை குறிப்பிட்ட ஒரு நாட்டில் பதிவு செய்வது  அந்தக் கப்பலுக்கு அந்த நாட்டின் வரிச் சலுகைகள் (tax breaks), சான்றிதழ் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்  போன்ற பல நன்மைகளைப் பெற உதவுகிறது. இந்த நடைமுறை வசதிக்கேற்ற கொடி பதிவு (Flag of Convenience)  என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, பெரும்பாலான வணிகக் கப்பல்கள் ஒரு சில நாடுகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி 2023-ஆம் ஆண்டின் முதல் எட்டு கொடி நாடுகளாக பனாமா, லைபீரியா, மார்ஷல் தீவுகள், ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, மால்டா மற்றும் பஹாமாஸ் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.


துறைமுகக் கட்டுப்பாட்டு வாரியம் என்றால் என்ன?


1. கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் கூற்றுப்படி, கப்பல்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை சர்வதேசக் கடல்களில்தான் செலவிடுகின்றன. இதனால், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கப்பல்களின் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் போகவோ, அல்லது பல்வேறு காரணங்களால் அவற்றின் பொதுவான பராமரிப்புப் பணிகள் விடுபடவோ வாய்ப்புள்ளது.



2. எனவே, பாதுகாப்பு, முறையான பராமரிப்பு, போதிய பணியாளர்கள் போன்ற விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, பல்வேறு துறைமுகங்களில் கப்பல்களை ஆய்வு செய்வது அவசியமாகிறது.                      இந்தக் கண்காணிப்பு நடைமுறைதான் 'துறைமுகக் கட்டுப்பாட்டு வாரியம்' (PSC) என அழைக்கப்படுகிறது, என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (Ministry of Ports, Shipping, and Waterways (MoPSW)) தெரிவிக்கிறது.



3. தரம் குறைந்த கப்பல்களை ஒழித்து, பாதுகாப்பான கப்பல் பயணங்களையும், தூய்மையான பெருங்கடல்களையும் உறுதி செய்வதே இந்த துறைமுகக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய நோக்கமாகும். எந்தவொரு துறைமுகத்திலும் தரம் குறைந்த கப்பல்களைக் கண்டறிந்து, அவை மீண்டும் கடலில் பயணம் செய்ய அனுமதிக்கும் முன்பாகவே தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதே இதன் முதன்மைக் கொள்கையாகும்.




கப்பல் மாலுமிகள் கைவிடப்படுதல் என்றால் என்ன?


4. மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில், ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு (Bandar Abbas Port) அருகே, தீவிரக் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் 'MV Manali' என்ற கப்பலில் 20 இந்தியர்கள் உட்பட 22 பேர் தத்தளித்துக் கொண்டிருந்தனர். தங்களை அவசரமாக மீட்கக் கோரி அவர்கள் சமூக ஊடகங்களில் உதவி கோரினர். இதேபோல, 2025-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியில் 'Global Peace' என்ற எண்ணெய் கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 19 பேர் இதேபோல் பாதிக்கப்பட்டனர்.


5. மாலுமிகள் கைவிடப்படுதல் என்பது, கப்பல் உரிமையாளர்கள் தங்களது பணியாளர்களுக்கான அனைத்து உதவிகளையும் திடீரென நிறுத்திவிடுவதைக் குறிக்கும். இதனால் பணியாளர்கள் ஊதியம், உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி அல்லது சொந்த ஊர் திரும்புவதற்கான வழி ஏதுமின்றி, நடுக் கடலிலோ அல்லது ஒரு புதிய வெளிநாட்டுத் துறைமுகத்திலோ தவிக்க நேரிடுகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தமான 'கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம்' (MLC) 2006-ன்படி கப்பல் உரிமையாளர்கள் தங்களின் இந்த அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறுவதே "கைவிடப்படுதல்" என்று வரையறுக்கப்படுகிறது.


சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) 'கப்பல் மாலுமிகள் தினம்' (Day of the Seafarer) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் கப்பல் தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்குவதற்காக இந்த அமைப்பு இந்த உலகளாவிய பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.


கப்பல்கள் ஏன் அதிகளவில் நிழல் கடற்படைகளைப் பயன்படுத்துகின்றன?


6. தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடலில் பிடிபடாமல் கடத்துவதற்காக, ஏமாற்றும் கப்பல் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தும் கப்பல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய சொல்லே  'நிழல் கப்பல் படை' (Shadow fleet) ஆகும். 3 இந்திய மாலுமிகளைக் கொன்ற பலாவ் கொடி ஏற்றப்பட்ட கப்பலை, ஒரு அமெரிக்க அதிகாரி நிழல் கப்பல் படை கப்பல் என்று விவரித்தார். சட்டவிரோதமாக ஈரானிய எண்ணெயைக் கடத்துவதற்கும், தடைகளைத் தவிர்ப்பதற்கும் அந்த எண்ணெய்க் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அவர் கூறியதாக ‘Associated Press’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


7. நிழல் கடற்படைக் கப்பல்களைக் கண்காணிப்பதோ, கண்டறிவதோ அல்லது அவற்றின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதோ மிகவும் கடினமான ஒன்றாகும். அவை தங்களின் ஏமாற்று வேலைகளின் ஒரு பகுதியாக, கப்பலின் உண்மையான உரிமையாளர் யார் மற்றும் கடத்தப்படும் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை மறைக்க பினாமி மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன.


8. தடைசெய்யப்பட்ட துறைமுகங்களுக்குள் நுழைவது அல்லது சட்டவிரோதமான கப்பல்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை மேற்கொள்வது போன்ற அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகளின் போது, ​​நிழல் கப்பல் படை எண்ணெய்க் கப்பல்கள் தங்களின் தானியங்கி அடையாள அமைப்பை (automatic identification system (AIS)) அடிக்கடி அணைத்துவிடுகின்றன.


9. சர்வதேச கடல்சார் அமைப்பின் (International Maritime Organization (IMO)) வழிகாட்டுதல்களின்படி, ஒரு கப்பல் பயணம் செய்யும்போதோ அல்லது  நிலையாக நிற்கும்போதோ, தகவலை ஒளிபரப்புவது அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கப்பல் தலைவர் முடிவு செய்தால் தவிர, மற்ற நேரங்களில் தானியங்கி அடையாள அமைப்பு   செயல்பாட்டில் இருக்க வேண்டும்.


10. பாதுகாப்பான கடல்வழிப் பயணத்திற்கு தானியங்கி அடையாள அமைப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சிக்னல் அனுப்பும் கருவியை (Transponder) அணைப்பது, கப்பலைக் கண்காணிக்க முடியாததாகவும்,                மற்ற கப்பல்களின் அமைப்புகளுக்குத் தெரியாததாகவும் மாற்றிவிடுகிறது.             இது கடலில் கப்பல்கள் மோதிக்கொள்ளும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி போன்ற நெரிசல் அதிகமாக உள்ள  நீர்வழிகளில் இந்த அபாயம் இன்னும் அதிகமாக தெரிகிறது.




மாலுமிகளை நிர்வகிக்கும் முக்கிய சர்வதேச சட்டங்கள்


1. 2006-ஆம் ஆண்டு கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம் (Maritime Labour Convention (MLC)): சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (International Labour Conference (ILC)) 94-வது, கடல்சார் அமர்வில் 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா இதில் 2015-ஆம் ஆண்டு கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.

கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் கூற்றுப்படி, கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம், சர்வதேச கடல்சார் சட்டத்தின் 4-வது தூணாகவும், கடல்சார் பணியாளர்களுக்கான "உரிமைகள் சாசனமாகவும்" (bill of rights) கருதப்படுகிறது. இது அவர்களுக்குத் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கை மற்றும் பணிச்சூழலுக்கான குறைந்தபட்ச சர்வதேச தரநிலைகளையும் உறுதி செய்கிறது.


2. கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒப்பந்தம் (Safety of Life at Sea (SOLAS)), 1974: உலகம் முழுவதிலும் உள்ள வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றியுள்ளது. உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு இது  முக்கியமான ஒப்பந்தமாகும். இந்தியாவும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது.


3. கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)): இது உலகம் முழுவதும் உள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் மேற்கொள்ளப்படும் சட்டபூர்வமான செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்த விரிவான கட்டமைப்புகளை வகுக்கும் ஒரு முழுமையான சர்வதேச சட்டமாகும். கடல்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை இந்த ஒப்பந்தம்  வரையறுக்கிறது. இறையாண்மை, கடற்பாதையைப் பயன்படுத்துவதற்கான உரிமைகள் மற்றும் பிரத்யேக பொருளாதாரப் பயன்பாட்டு உரிமைகள் போன்ற சிக்கல்களுக்கும் தீர்வு காண்கிறது.


original article : Who protects seafarers at sea? Understanding maritime governance and international laws. -Khushboo Kumari

Share: