270 ஜிகாவாட் உச்சபட்ச மின்தேவைக்கு அப்பால் : தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை குறித்து . . . -தேபஜித் பாலிட், மந்தர் ஜோஷி

 நவீன மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பொருளாதாரத்திற்கு (Digital-first economy), தடையற்ற மற்றும் சீரான மின்சாரத் தரம் ஒரு புதிய எல்லையாக உருவெடுத்து வருகிறது.


சமீபத்தில் இந்தியாவின் மின்சாரத் தேவை இதற்கு முன் இல்லாத அளவாக 270 கிகாவாட் (GW) என்ற புதிய உச்சத்தைத் தொட்டது, இது இந்திய மின்சக்தி துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இவ்வளவு பெரிய மின்தேவையை எந்தவொரு தட்டுப்பாடும் இல்லாமல் தேசிய மின் கட்டமைப்பு மிகத் திறம்படக் கையாண்டு தனது மீள்திறனை நிரூபித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சாதனையை இந்தியாவால் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.       கடந்த ஆண்டின் உச்சபட்ச மின்தேவையைவிட இது 10 சதவீதத்திற்கும் மேல் அதிகமானது. அனல் மின்சாரம் (Thermal), நீர் மின்சாரம் (Hydro), அணு மின்சாரம் (Nuclear) மற்றும் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) ஆகிய பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும் மின்சாரத்தை இவ்வளவு கடுமையான அழுத்தத்திற்கு இடையிலும் ஒருங்கிணைத்து வழங்கியிருப்பது, இந்தியாவின் தேசிய மின் கட்டமைப்பின் தொழில்நுட்ப முதிர்ச்சியைக் காட்டுகிறது.


சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தனியாருக்குச் சொந்தமான பரவலாக்கப்பட்ட மின்சார மின்கட்டமைப்புகளிலிருந்து, சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் 'குடிர் ஜோதி' (Kutir Jyoti) திட்டத்தின் மூலம் வேளாண்மைக்கான மின் மோட்டார்கள் மற்றும் வீடுகளுக்கு அடிப்படை விளக்குவசதி ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக 2003-ஆம் ஆண்டில் மின்சாரச் சட்டம் (Electricity Act) நிறைவேற்றப்பட்ட பிறகு, இத்துறை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. தீன் தயாள் உபாத்யாய் கிராம ஜோதி திட்டம் (Deen Dayal Upadhyay Gram Jyoti Yojana (DDUGJY)) மற்றும் சௌபாக்யா திட்டம் (SAUBHAGYA Scheme) போன்ற மாபெரும் உள்கட்டமைப்பு முயற்சிகள் மூலம், நாடு முழுவதும் இறுதி நிலை மின் இணைப்புக்கான கட்டமைப்பு ஏறக்குறைய 100 சதவீத வீடுகளைச் சென்றடைந்துள்ளது. இருப்பினும், தற்போதைய 1,600 kWh என்ற அளவிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க இலக்காக, 2047-ஆம் ஆண்டுக்குள் தனிநபர் மின்சார பயன்பாட்டை சுமார் 4,000 kWh என நிர்ணயிக்கும் தனது இலக்கை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே, இனி அனைவருக்கும் மின்சார வசதி மற்றும் தடையில்லா மின்சாரம் என்பது வெற்றியல்ல; மாறாக, வழங்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையும் மிகவும் முக்கியமாகிறது. 


DDUGJY (Deen Dayal Upadhyay Gram Jyoti Yojana): கிராமப்புறங்களில் மின்சார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் திட்டம்.


SAUBHAGYA (Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana): நாட்டின் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளுக்கும் இலவச அல்லது மலிவு விலையில் மின் இணைப்பு வழங்கும் திட்டம்.





நவீன, டிஜிட்டல்-சார்ந்த பொருளாதாரத்திற்கு மின்சாரத்தின் தரம், என்பது ஒரு முக்கியத் தேவையாக மாறி வருகிறது. தற்போது விளக்குகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள் முதல், மேம்பட்ட குறைமின்கடத்தி (semiconductor) உற்பத்தி நிலையங்கள், குளிர்பதனக் கிடங்குகள், மின்சாரத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள், மருத்துவமனைகள் போன்ற பொது உள்கட்டமைப்புகள் வரை விரிவடைந்துள்ள பயன்பாட்டுத் தளத்திற்கு, மின்சார விநியோகம் மட்டும் இனி போதுமானதாக இல்லை. துல்லியமான மின்னழுத்த நிலைத்தன்மை, முறையான அதிர்வெண் கட்டுப்பாடு, மற்றும் அலைவடிவச் சிதைவு இன்மை ஆகியவற்றைக் கொண்ட மின்சாரத் தரம் ஒரு அவசியத் தேவையாகும். மின்சார விநியோகத்தில் ஏற்படும் ஒரு சிறிய ஏற்ற இறக்கம் கூட இயந்திரங்களின் செயல்பாட்டை நிறுத்தக்கூடும். இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய மின்னணு உபகரணங்களைச் சேதப்படுத்தலாம், மற்றும் தொழில்துறை செயல்பாடுகளையும் பாதிக்கலாம்.


மேலும், மின் உற்பத்தி மற்றும் மின் பரிமாற்றத்தில் ஒட்டுமொத்தமாகச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தாலும், விநியோகத் துறையில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு இடையே ஒரு தொடர்ச்சியான இடைவெளி நீடிக்கிறது. நகர்ப்புறங்களில் மின்விநியோகம் மிகவும் சீராகிவிட்ட நிலையில், மக்கள்தொகையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருக்கும் கிராமப்புறங்கள், மொத்த மின்சார பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இங்குள்ள சிக்கல் என்பது மின் இணைப்பு தொடர்பானது மட்டுமல்ல, கிராமப்புறங்களில் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும். பெரும்பாலான மாநிலங்களில் கிராமப்புறங்களில் சராசரி மின்விநியோக நேரம் 22 மணிநேரத்தை எட்டியுள்ள போதிலும், சீரான மற்றும் கணிக்கக்கூடிய மின்விநியோக அட்டவணை இல்லாதது ஒரு முக்கியப் பிரச்சினையாகத் தொடர்கிறது. ஒரு சிறு உற்பத்தி நிறுவனத்திற்கோ அல்லது ஒரு கிராமப்புற புத்தொழில் நிறுவனத்திற்கோ, ஒரு முக்கியமான உற்பத்திச் சுழற்சியின் போது ஏற்படும் எதிர்பாராத மின்-தடை நிதி ரீதியாகப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இத்தகைய தடைகளால், வணிக நிறுவனங்கள் பெரும்பாலும், ஒரு மாற்று ஏற்பாடாக விலை உயர்ந்த மற்றும் மாசுபடுத்தும் டீசல் ஜெனரேட்டர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியைக் குறைப்பது என்பது வெறும் தொழில்நுட்பத் தேவை மட்டுமல்ல, அது ஒரு அத்தியாவசியமான வளர்ச்சியாகும்.

மின்உற்பத்தி மற்றும் மின் பரிமாற்றத் துறைகள் படிப்படியாக சந்தை சார்ந்த செயல்திறனை நோக்கி முன்னேறி வந்தாலும், பல அரசுக்குச் சொந்தமான மின்விநியோக நிறுவனங்கள் (Distribution Company (DISCOM)) பழைமையான மின் வலையமைப்பு உள்கட்டமைப்பு, போதுமான மின்மாற்றித் (transformer) திறன் இல்லாமை மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் மொத்த தொழில்நுட்ப மற்றும் வர்த்தக (Aggregate Technical and Commercial (AT&C)) இழப்புகள் ஆகியவற்றால் போராடி வருகின்றன. இந்த இழப்புகள் பல மாநிலங்களில் இன்னும் 20%-ஐத் தாண்டுகின்றன. இந்தத் தடைகள், தானியங்கி கண்காணிப்பு, முன்கணிப்புப் பராமரிப்பு, மற்றும் சரியான நேரத்தில் மின்மாற்றிகளை மாற்றுதல் போன்ற முக்கியமான அமைப்பு மேம்பாடுகளில் முதலீடு செய்யும் அவற்றின் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் விளைவாக, மோசமான சேவை வழங்கல் மற்றும் பலவீனமான நிதிச் செயல்திறன் என்ற ஒரு சுழற்சி தொடர்கிறது. சிறந்த மின்னணு விநியோகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவை நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரிக்கவும், தேவையை அதிகரிக்கவும், வருவாயை மேம்படுத்தவும், இறுதியில் மின்விநியோக நிறுவனங்களின் நிதி நிலையை வலுப்படுத்தவும் உதவும்.


இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்திய அரசு 2021-ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டு காலத்திற்கான 'மேம்படுத்தப்பட்ட மின் விநியோகத் துறைத் திட்டத்தை' (Revamped Distribution Sector Scheme (RDSS)) அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், அனுமதிக்கப்பட்ட மொத்தத் தொகையில் சுமார் 54% இழப்பைக் குறைப்பதற்கான கட்டமைப்புப் பணிகளுக்கும், 46% ஸ்மார்ட் மீட்டரிங் (smart metering) பொருத்துவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மீட்டர்கள் பொருத்துவதற்காகச் செய்யப்பட்ட முதலீட்டின் அளவைக் கருத்தில் கொள்ளும்போது, ​​4 ஆண்டுகளில் கட்டணம் மற்றும் வசூல் செயல்திறனில் கிடைத்த ஆதாயம் சுமார் 4 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது. மின்விநியோக நிறுவனங்களில் (DISCOM) உள்ள செயல்பாட்டுத் திறமையின்மை மற்றும் பழைமையான மின்விநியோக உள்கட்டமைப்பு ஆகியவை முக்கிய சவால்களாகத் தொடர்கின்றன. கிராமப்புறங்களில், வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதைவிட, மின்மாற்றிகளை மாற்றுதல் மற்றும் மின் வலையமைப்பின் நிலையை கண்காணிக்கும் கருவிகள் உள்ளிட்ட விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அதிக சதவீத நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டவுடன், மின்விநியோக நிறுவனங்கள் ஸ்மார்ட் மீட்டர்களில் முதலீடு செய்து, நம்பகத்தன்மையுடன் மின்சாரத்தை வழங்குவதன் மூலமும், வாடிக்கையாளர் சேவைகளை திறம்பட வழங்குவதன் மூலமும் வருவாய் அதிகரிப்பின் முழுப் பலனையும் பெற முடியும்.


மின்சாரத் துறையானது, மின்சார விநியோகத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு, மின்சார வசதி மற்றும் தூய எரிசக்தி இருப்பு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் ஒரு வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கையாள வேண்டும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக, மின் தடையின் கால அளவு (System Average Interruption Duration Index(SAIDI)), மின் தடை ஏற்படும் அதிர்வெண் (System Average Interruption Frequency Index (SAIFI)), மற்றும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் சராசரி நேரம் (Customer Average Interruption Duration Index(CAIDI)) போன்ற நம்பகத்தன்மைக் குறியீடுகள் மூலம் விநியோகத் தரத்திற்கான அளவுகோல்களை அமைப்பதையும், அத்துடன் வழக்கமான அறிக்கையிடல் மற்றும் பொது வெளிப்படுத்தலையும் 2026-ஆம் ஆண்டின் தேசிய மின்சாரக் கொள்கை வரைவு வலியுறுத்துகிறது. இருப்பினும், இந்தக் குறியீடுகள் தற்போது துணை-விநியோக (sub-transmission) நிலையில் மட்டுமே கண்காணிக்கப்படுகின்றன. இது நுகர்வோர் பெறும் உண்மையான சேவையைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு, இவை மின்மாற்றி மற்றும் குறைந்த மின்னழுத்த மின் வலையமைப்பு மட்டம் வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கேற்ப, முதலீடுகள் வெறும் கணக்குத் தணிக்கையைத் தாண்டி, உண்மையான சேவைத் தரத்தின் முடிவுகளை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டு, உபகரணங்கள் மற்றும் நம்பகத்தன்மை கண்காணிப்பு அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


அதே நேரத்தில், முடிவெடுத்தல் மற்றும் நிர்வாகம் சார்ந்த அணுகுமுறையிலிருந்து 'நிறுவனத் தொழில்மயமாக்கல்' முறைக்கு மாறுதல், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட பரவலாக்கப்பட்ட விநியோக மேலாண்மை மாதிரி, சிறந்த சொத்து மற்றும் சரக்கு இருப்பு நடைமுறைகள், மற்றும் விநியோக மட்டத்தில் மேலாண்மை தகவல் அமைப்பு (Management Information System (MIS)) மற்றும் மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் (Supervisory Control and Data Acquisition (SCADA)) அமைப்புகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை சேவைத் தரத்தையும் வாடிக்கையாளர் அனுபவங்களையும் மேம்படுத்துவதற்கு அவசியமானவை. இலாபகரமான நகர்ப்புறங்களில் மட்டும் கவனம் செலுத்தும் தனியார் பங்கேற்பு குறித்த கவலைகளை, சமச்சீரான கிராமப்புற-நகர்ப்புறப் பரவலை உறுதிசெய்து, கடுமையான ஒழுங்குமுறை செயல்திறன் தரநிலைகளை அமல்படுத்தும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட பொது-தனியார் அல்லது தனியார் மாதிரிகள் மூலம் நிவர்த்தி செய்ய முடியும்.


வளர்ந்த நாடுகளின் அனுபவங்கள் நமக்குக் காட்டுவது என்னவென்றால், நம்பகமான மின்சார விநியோகம் என்பது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு மிக அடிப்படையான உந்துசக்தியாகும். மின்சாரம் என்பது தொழில்துறை வளர்ச்சி, நவீன வேளாண்மை, டிஜிட்டல் சேவைகள், சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.                            இதனால் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி என்பது வலுப்படுத்தப்பட்ட மின்சார உள்கட்டமைப்பைச் சார்ந்துள்ளது, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கு மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானதாகும்.


மின்விநியோகத் துறையில், மின்சாரத்தின் தரம் மற்றும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பது ஆகியவற்றின் அடிப்படைக் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம், இந்தியாவின் மின்சாரத் துறை உச்சபட்ச மின்தேவையை மட்டும் பூர்த்தி செய்வதோடு நின்றுவிடாமல், அதற்கும் மேலாகச் செயல்படுவதை உறுதி செய்ய முடியும். 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) இலக்கை நோக்கிய பயணத்திற்கு, மின்சாரத்தை வெறும் ஒரு விநியோகப் பொருளாகக் கருதாமல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பற்றாக்குறையை மேம்படுத்தும் ஒரு ஆக்கப்பூர்வமான முதலீடாகவும், உருமாற்றும் சக்தியாகவும் பார்க்கப்பட வேண்டும்.


டாக்டர். தேபஜித் பாலிட், காலநிலை மாற்றம் மற்றும் ஆற்றல் மாற்றத்திற்கான மையத்தின் (Centre for Climate Change & Energy Transition) மையத் தலைவர் ஆவார். மந்தர் ஜோஷி சிந்தன், ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Chintan Research Foundation) ஆராய்ச்சி ஆலோசகர் ஆவார்.


original article : Beyond the 270 GW Peak Demand: Prioritising Quality and Reliability. -Debajit Palit, Mandar Joshi

Share: