முக்கிய தாதுக்களை இந்தியாவின் இராஜதந்திர மையமாக மாற்றுதல் -ரிஷப் ஜெயின்

 மத்திய நிதிநிலை அறிக்கையானது, கனிம வளங்கள் விஷயத்தில் இந்தியாவின் புதிய 'உறுதியான முடிவை' வெளிப்படுத்தியுள்ளது.


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா G20 தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, கொள்கைரீதியான விவாதங்களில் முக்கியத் தாதுக்கள்(Critical Minerals) ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகப் பார்க்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் 2023-ஆம் ஆண்டில்கூட, லித்தியம் உள்ளிட்ட பல முக்கியத் தாதுக்கள் 'அணுத் தாதுக்கள்' (Atomic Minerals) என்றே வகைப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் தனியார் நிறுவனங்கள் அவற்றை ஆய்வு செய்யவோ அல்லது சுரங்கம் அமைக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், சமீபத்திய மத்திய நிதிநிலை அறிக்கையானது, இந்தியாவின் இந்த அணுகுமுறையில் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.


ஒன்றிய அரசு தற்போது 'முக்கியமான கனிமங்களை' (critical minerals) நாட்டின் முக்கிய திட்டப்பணிகளின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளது. இவை இந்தியாவின் தொழில் துறை, எரிசக்தி மற்றும் புவிசார் அரசியல் உத்திகளில் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நிதிநிலை அறிக்கை உரையில் "முக்கியமான தாதுக்கள்" என்ற சொல் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டது இந்த மாற்றத்தையே உணர்த்துகிறது. இந்தியாவிற்கு இத்தகைய தாதுக்கள் தொடர்பான கொள்கை தேவையா என்பது குறித்த விவாதங்கள் இப்போது முடிந்துவிட்டன. மாறாக, தேவையான நிபுணத்துவத்தை சரியான வேகம், ஆழம் மற்றும் அளவோடு வளர்த்துக்கொண்டு, இக்கொள்கையை இந்தியாவால் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. 


தெளிவான கொள்கை முன்னெடுப்பு

இந்தக் கொள்கையில் ஒரு வலுவான வேகம் காணப்படுகிறது. இந்தியா 30 முக்கியமான தாதுக்களை அடையாளம் கண்டுள்ளதுடன், சிறிய அளவிலான சுரங்க நிறுவனங்கள் ஆய்வுப் பணிகளை எளிதாக மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது மற்றும் உரிமத் தொகை விகிதங்களையும் முறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் இந்திய அரசு ₹16,300 கோடி மதிப்பிலான ‘தேசிய முக்கியமான தாதுக்கள் திட்டத்தை’ (National Critical Mineral Mission (NCMM) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், முக்கியமான தாதுக்களுக்கான விரிவான மற்றும் லட்சியமான கொள்கைக் கட்டமைப்பைக் கொண்டுள்ள ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா இப்போது உருவெடுத்துள்ளது.


இருந்தபோதிலும், வெறும் லட்சியம் மட்டுமே தாது வளப் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது என்றும் அதைத் திறம்படச் செயல்படுத்துவதே மிக முக்கியமானது என்றும் கூறுகின்றனர். தாதுக்களைக் கண்டறிந்து சுரங்கப்பணிகளைத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகள்கூட ஆகலாம் என்கின்றனர். அதுமட்டுமின்றி, அவற்றை வெட்டியெடுப்பது மட்டுமே இங்குள்ள ஒரே சிக்கல் அல்ல என்றும் உலகின் பல முக்கியமான கனிமங்களைச் சுத்திகரிக்கும் (processing) திறனில் 90% வரை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைப்பின் (Council on Energy, Environment and Water (CEEW)) ஆய்வுப்படி, இந்தியா ஏற்கனவே சில கனிமங்களை மிக உயர்ந்த தரத்திற்குச் சுத்திகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உதாரணமாக, இந்தியத் தொழிற்சாலைகள் தாமிரம், கிராஃபைட், அரிய மண் ஆக்சைடுகள் (rare earth oxides), தகரம் மற்றும் டைட்டானியம் போன்றவற்றை 99.9 சதவீதத்துக்கும் அதிகமான தூய்மையுடன் உற்பத்தி செய்கின்றன. இருப்பினும், இந்த உற்பத்தி பெரும்பாலும் வழக்கமான தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. சுத்தமான எரிசக்தித் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்தியாவிற்கு மேம்பட்ட தொழில்நுட்பம், ஆழ்ந்த சுத்திகரிப்பு முறைகள் மற்றும் கூடுதல் உற்பத்தித் திறன் தேவைப்படுகிறது. தாதுக்களை அதிகத் தூய்மையுடனும், பெரிய அளவிலும் பதப்படுத்துவதற்கு ரசாயனம், மருந்துப் பொருட்கள் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் உள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.




முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பகுதிகள்


இந்தச் சூழலில், 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை திட்டமிடல் நிலையிலிருந்துச் செயல்பாட்டு நிலைக்கு மாறுகிறது; இந்த முன்னேற்றத்தைத் தக்கவைக்க இந்தியா மூன்று முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, பதப்படுத்தப்பட்ட தாதுக்களுக்கான வலுவான தேவையை உருவாக்க வேண்டும். முக்கியமான தாதுக்களைப் பதப்படுத்தப் பயன்படும் மூலதனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்த நிதிநிலை அறிக்கையானது நீக்கியுள்ளது, இது புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் அதிகப்படியான மூலதனச் செலவுகளைச் சமாளிக்கவும் உதவுகிறது. இருப்பினும், முதலீட்டாளர்களின் முக்கிய சிக்கலாக இருப்பது செலவு மட்டுமல்ல, உள்நாட்டில் இதற்கான தேவை உறுதியாக இருக்குமா என்ற அச்சமே ஆகும். மின்கலன்கள், சூரிய சக்தி தகடுகள், காற்றாலைகள் மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தியை அரசு ஆதரித்தாலும், இந்தத் துறைகளைத் தாதுப் பதப்படுத்துதல் துறையுடன் இணைப்பதில் ஏற்படும் தாமதம் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது. எனவே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது, சுரங்கம் மற்றும் தாதுப் பதப்படுத்துதல் வரையிலான முழு சங்கிலியையும் வலுப்படுத்தும் என்கின்றனர். ஏனெனில், ஒரு பொருளுக்கான தேவையை உருவாக்குவதே மிகச்சிறந்த தொழில்முறை கொள்கையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


இரண்டாவதாக, கனிம ஆய்வில் செயற்கை நுண்ணறிவிற்கு (AI-first) முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தேசிய முக்கியமான தாதுக்கள் இயக்கம் (National Critical Minerals Mission - NCMM), 2031-ஆம் நிதி ஆண்டிற்குள் 1,200 ஆய்வுத் திட்டங்களை முடிக்க இலக்கு வைத்துள்ளது. ஒன்பது முக்கியமான கனிமங்களின் ஆய்வுச் செலவுகளுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம் இத்திட்டங்களின் சாத்தியக்கூறுகளை மத்திய நிதிநிலைத் திட்டம் (Budget) மேம்படுத்துகிறது. குறிப்பாக பெரிலியம், டான்டலம், லித்தியம் மற்றும் நையோபியம் ஆகிய நான்கு தாதுக்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு தாதுக்கள் பட்டியலில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய தாதுக்களுக்கான ஆய்வில் உள்ள அபாயங்களைக் குறைக்க இந்தியா மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கம் (India AI Mission), தேசிய புவிசார் கொள்கை மற்றும் 'மிஷன் அன்வேஷன்' (Mission Anveshan) [Anveshan என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு அகழ்வாராய்ச்சி / முற்றாய்வு என்று பொருள்] ஆகியவற்றோடு இணைந்த ஒரு செயற்கை நுண்ணறிவிற்கு (AI-first) முன்னுரிமை அளிக்கும் உத்தி இதற்கு அவசியமாகும். தற்போது மிஷன் அன்வேஷன் ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பிற்காக நில அதிர்வு சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துகிறது. இதேபோன்ற கருவிகளை தேசிய புவி அறிவியல் தரவு களஞ்சியத்திற்கு (National Geoscience Data Repository) விரிவுபடுத்துவதன் மூலம், கனிம வளங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் துல்லியமாக ஆய்வு செய்யவும், புதிய இடங்களைக் கண்டறியவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. 


மூன்றாவதாக, புவிசார் அரசியல் மாற்றங்களை தொழில்நுட்பரீதியான தற்சார்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2025-ஆம் ஆண்டில், அரிய வகை மண் காந்தங்கள் (rare earth magnets) மற்றும் மின்கல விநியோகச் சங்கிலிகள் ஆயுதமாக்கப்பட்ட நிகழ்வானது, உலகளாவிய தொழில்முறை மற்றும் தூய எரிசக்தி அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியது. இதற்குப் பதிலடியாக, கடலோர மாநிலங்களில் அரிய வகை மண் வழித்தடங்களை (rare earth corridors) அமைப்பதாகவும், மோனாசைட் மணல் (monazite sands) மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தது. எனவே, மாநிலங்கள் இப்போது தங்களிடம் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் திறமையான உழைப்பாளர்களைப் பயன்படுத்தி, உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஆதரிக்கவும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


சர்வதேச கூட்டாண்மைகள் முக்கியம்


உள்நாட்டு முயற்சிகளைத் தாண்டி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது நிறுவன மற்றும் தொழில்முறை கூட்டாண்மைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நாடுகள் மேம்பட்ட தாது பதப்படுத்துதல் மற்றும் சிக்கலான உற்பத்தித் திறன்களைக் கொண்டிருந்தாலும், தொழில்நுட்பத்தைப் பகிர்வதில் தயக்கம் காட்டுகின்றன, எனவே அவற்றின் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை செய்யும் வகையில் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். ஊற்றுப்படிவ அரிய வகை பூமி நிரந்தர காந்தங்களுக்கான (sintered rare earth permanent magnets) ₹7,280 கோடி மதிப்பிலான திட்டம் ஒரு நல்ல தொடக்கமாகும், ஆனால் ஒழுங்குமுறை தெளிவு, வலுவான சட்டக் கட்டமைப்பு, சந்தை அணுகல் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஆகியவையும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் உள்ள இங்கிலாந்து-இந்தியா முக்கியத் தாது விநியோகச் சங்கிலி கண்காணிப்பகம் (UK-India Critical Minerals Supply Chain Observatory) போன்ற உலகளாவிய அமைப்புகளுடன், இந்தியாவின் சிறந்த மையங்கள் (centres of excellence) தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். 


நாடுகளுக்கிடையே பொருளாதார ஒருங்கிணைப்பு இல்லாத தற்போதைய உலகத்தில், வேகம், தன்னம்பிக்கை மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் 2026-ஆம் ஆண்டை தனது இலக்குகளை விரைவாக அடையும் ஆண்டாக மாற்ற இந்தியாவால் முடியும் என்கின்றனர். குறிப்பாக, கனிம வளங்கள் துறையில் இந்தியாவின் தலைமைத்துவமானது அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, மாநில அரசுகளின் ஆக்கபூர்வமான தலைமை மற்றும் சர்வதேச நாடுகளுடனான கூட்டாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது. 


ரிஷப் ஜெயின், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைப்பின் (CEEW) உறுப்பினராக பணியாற்றுகிறார். இங்கு அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே ஆகும்.


Original article : The shift of critical minerals to India’s strategic centre -Rishabh Jain

Share: