‘120 பகதூர்’ திரைப்படம் ரெசாங் லா போரை கவனத்திற்குக் கொண்டுவருகிறது : அதைப் பற்றியும் இந்தியாவின் முக்கியமான மலைப்பாதைகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியவை

அஹிர் சமூகத்தினரின் அதிகரித்துவரும் அழுத்தங்களுக்கு மத்தியில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமையன்று வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பில், ஃபர்ஹான் அக்தர் நடிப்பில் வரவிருக்கும் பாலிவுட் போர் நாடகமான 120 பகதூரின் சான்றிதழ் மற்றும் வெளியீட்டை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை (Public Interest Litigation (PIL)) தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில், ரெசாங் லா போர் மற்றும் இந்தியாவின் முக்கியமான மலைப்பாதைகள் பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்திய-சீனப் போரின்போது, நவம்பர் 18-ஆம் தேதி 1962-ஆம் ஆண்டு நடந்த ரேசாங் லா போர், மிகவும் வீரமிக்க கடைசிப் போராட்டங்களில் ஒன்றாக இராணுவ வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு அத்தியாயமாகக் கருதப்படுகிறது. 


2. பாதுகாப்பு அமைச்சகத்தின் 1962-ஆம் ஆண்டில் சீன மோதல் வரலாறு (History of the Conflict with China, 1962) குறித்த அதிகாரபூர்வப் பதிவுகள், 13-வது படைப்பிரிவு, குமாவோன் ராணுவப் படைப்பிரிவின் (13 Kumaon) சார்லி படைப்பிரிவைப் பற்றி விவரிக்கின்றன. அந்த படைப்பிரிவில் 120 வீரர்கள் இருந்தனர் என்றும் அவர்களில் 117 பேர் ஹரியானாவின் ரேவாரி, நார்நௌல், மகேந்திரகார் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த அஹிர் இனத்தவர் ஆவர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. உறைபனிக்குக் குறைவான வெப்பநிலையிலும், தங்களைவிட 10 மடங்கு அதிக எண்ணிக்கையிலான சீனப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு 16,000 அடி உயரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மலைப்பாதையை பாதுகாத்து நின்றனர் என்று அவர்களின் வீரம் போற்றப்படுகிறது. 


3. பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் ஷைத்தான் சிங்கின் தலைமையில், லடாக்கிற்கான இந்தியாவின் விநியோக வழித்தடங்களுக்கு ஒரு முக்கிய இடமாக இருந்த சுஷுல் பகுதியை இந்தப் படைப்பிரிவானது தக்க வைத்துக் கொண்டது. குளிர்கால உடைகள், பீரங்கி ஆதரவு மற்றும் வெடிமருந்துகள் போதுமானதாக இல்லாதபோதிலும், அவர்கள் எதிரிப் படைக்கு 1,300-க்கும் மேற்பட்ட உயிர் சேதங்களை ஏற்படுத்தினர் என்று கூறப்படுகிறது. 


4. மொத்தம் 120 பேரில் 114 பேர் வீரமரணம் அடைந்தனர். ஐந்து பேர் படுகாயமடைந்து உயிர் தப்பினர். மேலும், ஒருவர் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டார். வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சீனர்கள் மரியாதையுடன் போர்வைகளை போர்த்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் பின்னர் அனுப்பப்பட்ட செய்திகளில் நினைவுகூரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


5. இறுதியில் சீனப் படைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், 120 வீரம் மிக்க பாதுகாவலர்கள் இந்தியாவிற்கு மிகவும் தேவையான ராஜதந்திர ரீதியிலான வெற்றியை அளித்தனர். முக்கியமாக சுஷுல் விமானத் தளத்தை சீனப் படைகளிடமிருந்து பாதுகாத்தனர். இதன் விளைவாக, லடாக்கின்  முழுப் பகுதியிலும் சீனப் படைகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டது என்கின்றனர். 


"..…[வெறும்] 120 காலாட்படை வீரர்களே உலகின் மிகப் பெரிய நிலைப்படையை நிறுத்தி நின்றார்கள்…” என்று ஆசிரியர் குல்பிரீத் சிங் தனது The Battle of Rezang La (2021) நூலில் எழுதியுள்ளார். “…[அவர்கள்] எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும், ஆயுதங்களில் பின்தங்கியும், வானிலைச் சூழலிலும் தோல்வியடைந்த நிலையிலும் இருந்தார்கள், ஆனால் அவர்களில் ஒவ்வொருவரும் உண்மையான வீரரைப் போல போரிட்டு, உறுதிப்பாடு, துணிச்சல் மற்றும் நம்பிக்கை ஆகியவை எந்தவொரு பௌதிக இடர்ப்பாடுகளை விட மிகவும் பெரியவை என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்கள்.” என்றும் குறிப்பிட்டார்.


6. ரெசாங் லா போருக்கு அடுத்த நாள் லடாக் வழியாக முன்னேறிய சீனப் படைகளின் முன்னேற்றத்தை நிறுத்திவிட்டு, நவம்பர் மாதம் 21-ஆம் தேதி  ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரெசாங் லாவின் முக்கியத்துவம்


ரெசாங் லா என்பது 16,000 அடி உயரமான மலையாகும், இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control) உள்ள ஒரு முக்கியமான கணவாயான ஸ்பாங்கூர் இடைவெளியை (Spanggur Gap) ஒட்டி அமைந்துள்ளது. சுஷுலில் உள்ள முன்னோக்கி விமானத் தளத்தையும், லடாக்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் பேணுவதற்கு இதன் பாதுகாப்பு மிக முக்கியமானது. சீனப் படைகள் இந்தப் பகுதியில் வலுவான இருப்பை நிலைநிறுத்தினால், அது லே (Leh) பகுதியை நோக்கி எளிதாக முன்னேறக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. 


செய்திகளில் உள்ள மலைக் கணவாய்கள் 


மலைக் கணவாய் என்பது ஒரு மலைத் தொடர் அல்லது ஒரு மலை முகடு வழியாகச் செல்லும் ஒரு போக்குவரத்து வழி ஆகும். இது ஒரு நாட்டிற்குள் இருக்கும் பகுதிகளையும், எல்லை நாடுகளையும்கூட இணைக்கிறது. இந்தக் கணவாய்கள் நீண்டகாலமாக வர்த்தகம், மோதல் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றிற்கான முக்கியமான தாழ்வாரங்களாக செயல்பட்டு வருகின்றன. செய்திகளில் உள்ள குறிப்பிடத்தக்க கணவாய்கள்: 


1. லிபுலேக் கணவாய் (Lipulekh Pass): இது 5,115 மீட்டர் உயரத்தில், உத்தரகண்ட் மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு இடையிலான எல்லையில், நேபாளத்துடனான முச்சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது இந்திய துணைக்கண்டத்திற்கும் திபெத்திய பீடபூமிக்கும் இடையிலான ஒரு பழமையான பாதையாகும். வணிகர்கள் மற்றும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் நபர்களால் இருவராலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


2. நாது லா கணவாய் (Nathu La Pass): சிக்கிம் மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு இடையிலான எல்லையில் நாது லா கணவாய் 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள இரண்டு மலைப்பாதைகளில் ஒன்றாகும் - மற்றொன்று ஜெலெப் லா - இது பண்டைய காலங்களிலிருந்து சிக்கிம் மற்றும் திபெத்தை இணைக்கும் பகுதியாக உள்ளது. 


3. சாங் லா (Chang La): இது லே (Leh) பகுதியில் இருந்து பாங்காங் ஏரிக்குச்  (Pangong Lake) செல்லும் வழியை வழங்கும் ஒரு முக்கியமான கணவாய் ஆகும். இது 17,590 அடி உயரத்தில் உள்ளது. மேலும், இது உலகின் மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய மிக உயரமான கணவாய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


4. ஷிப்கி லா (Shipki La): இது இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் (Kinnaur) மாவட்டத்தை திபெத்துடன் இணைக்கும் ஒரு உயரமான கணவாய் ஆகும். இந்தக்  கணவாய் வழியாக வெளிநாட்டினர் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை.  இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான வரையறுக்கப்பட்ட எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.


5. சோஜி லா கணவாய் (Zoji La Pass): இது டிராஸுக்கு (Dras) அருகில் அமைந்துள்ளது. மேற்கில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கை கிழக்கில் உள்ள சிந்து சமவெளி மற்றும் வடகிழக்கில் உள்ள சுரு சமவெளியுடன் இணைக்கும் ஒரு முக்கியமான இணைப்பாகவும் இந்தக் கணவாய்ப் பகுதி  செயல்படுகிறது.

இந்தியாவின் மறக்கப்பட்ட அத்தியாயங்களை மீண்டும் பார்வையிடும் சினிமா


தற்போதைய ஆண்டுகளில், பாலிவுட் சினிமாவானது இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. அதிகம் அறியப்படாத கதைகளை முதன்மை நீரோட்டத்தில் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் திரைப்படங்கள், இந்தியாவின் கடந்தகாலத்தின் முக்கியமான நிகழ்வுகளை எடுத்துக்காட்ட சினிமாவைப் பயன்படுத்தும் ஒரு வளர்ந்துவரும் போக்கைப் பிரதிபலிக்கின்றன. இந்த முயற்சியானது சமகால பார்வையாளர்களுக்காக வரலாற்று விவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க உதவுகிறது.


1. சாவா (Chhaava): விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் வரலாற்று திரைப்படமான சாவா பிப்ரவரி 14-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படம் அதே பெயரிலான சிவாஜி சாவந்தின் மராத்தி நாவலின் தழுவலாகும். சாவா என்பது ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் மட்டுமல்ல. இது சத்ரபதி சிவாஜியின் வீரமிக்க மகனான சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. அவருடைய ஆட்சி, கொள்கைகள், இராணுவ உத்திகள், மற்றும் முகலாயர்களுக்கு எதிரான எதிர்ப்பு ஆகியவற்றை சித்தரிக்கிறது.


2. கேசரி அத்தியாயம் 2 (Kesari Chapter 2): அக்‌ஷய் குமார், அனன்யா பாண்டே மற்றும் ஆர் மாதவன் ஆகியோர் நடித்துள்ள கேசரி அத்தியாயம் 2, ஏப்ரல் 13-ஆம் தேதி 1919-ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகான சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


Original Article:  ‘120 Bahadur’ brings Battle of Rezang La into focus: What should you know about it and India’s crucial mountain passes?


Share: