ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குத் தீர்வு, இராஜதந்திரத்தில் உள்ளது -சி. ரங்கராஜன், என்.ஆர். பானுமூர்த்தி

  முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் ரூபாய் மதிப்பின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த நிலை தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பு திடீரென சரிந்து வருவது மக்களையும் பொருளாதார சந்தை நிபுணர்களையும் கவலையடையச் செய்துள்ளது. அதிக வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் மற்றும் கட்டுக்குள் இருக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என அனைத்தும் சாதகமாக இருக்கும்போது, இந்த வீழ்ச்சி ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர்.


இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4%-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதியில் நுகர்வோர் விலை குறியீட்டு (Consumer Price Index (CPI)) பணவீக்கம் 1.33%-ஆக இருந்தது. இது இந்திய ரிசர்வ் வங்கியின்  குறைந்தபட்ச விகித இலக்கத்திற்கும் குறைவாகவே தொடர்ந்து நான்கு மாதங்களாக நீடிக்கிறது. 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) வெறும் 0.76% மட்டுமே. இது கடந்த ஆண்டின் 1.35%-ஐவிடக் குறைவு. ஒட்டுமொத்தமாக, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 6% சரிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


பொருளாதார சிக்கல்களுக்கான முக்கிய காரணம் 


சரக்கு மற்றும் சேவைகள் பரிமாற்றத்தில் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) அவ்வளவு பெரியதாக இல்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இது 88.43 பில்லியன் டாலராக இருந்தது, தற்போது (ஏப்ரல்-டிசம்பர் 2025-ஆம் ஆண்டுக்குள்) 96.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவின் முக்கியப் பிரச்சனை என்பது அதிக அளவில் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதுதான் (Capital Outflows) என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, இந்திய ஏற்றுமதி பொருட்களின்மீது 50% இறக்குமதி வரியை விதித்ததில் இருந்தே, முதலீடுகள் நாட்டை விட்டுத் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. முதலில், "இருதரப்பு அடிப்படையில்" (Reciprocal basis) எனக் கூறி அமெரிக்கா 25% வரியை விதித்தது. பிறகு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் ஒரு 25% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இப்போது, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு மேலும் 25% வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா தற்போது மிரட்டல் விடுத்து வரும் நிலையில். இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் ஈரானின் பங்கு வெறும் 0.15% மட்டுமே என்றாலும், இந்த மிரட்டல் இந்தியாவிற்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.


கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், இந்தியாவிற்கு வந்த நிகர மூலதன வரத்து (inflows) 10,615 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால், 2025-ஆம் ஆண்டின் அதே காலக்கட்டத்தில், இது தலைகீழாக மாறி 3,900 மில்லியன் டாலர் நிகர வெளியேற்றமாக (Outflow) அமைந்தது. அமெரிக்காவுடன் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், சில சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாததால் இன்னும் எந்தவித ஒப்பந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சிக்கல் தொடர்ந்து நீடித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


தற்போதைய சூழ்நிலையில், மூலதன வெளியேற்றமானது (capital outflows) பொருளாதார காரணிகளைவிட, அமெரிக்காவின் விரோதமான அணுகுமுறையால் உருவான அச்சத்தினாலேயே அதிகம் தூண்டப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியது போன்ற தெளிவான பொருளாதாரக் காரணங்களால் ரூபாய் மதிப்பு சுமார் 10% சரிந்தது. ஆனால் இந்த முறை, அத்தகைய தெளிவான பொருளாதாரக் காரணம் ஏதுமில்லை. எனவே, இந்தப் பிரச்சனை பொருளாதாரத்திலிருந்து நாடுகள் உடனான ராஜதந்திர (diplomacy) உறவுகள் சார்ந்ததாக மாறியுள்ளது. சுங்க வரிகள் (tariffs) புவிசார் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்படும்போது, அதற்கான தீர்வைக் காண்பதற்கு ராஜதந்திரரீதியிலான நடவடிக்கைகளே முதன்மையானதாகக் கருதப்படுகிறது .


ரிசர்வ் வங்கி தலையீடு


1993-ஆம் ஆண்டில் தனது நாணய மாற்று விகித முறையை இந்தியா மாற்றியது. இதன் மூலம், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இந்த முறையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட அனுமதி உண்டு என்கின்றனர். ரூபாயின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிலைநிறுத்துவதற்காக தாங்கள் தலையிடுவதில்லை என்றும், சந்தையில் ஏற்படும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களைக் குறைப்பதற்காகவே தலையிடுவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


“நிலையற்ற தன்மை” (Volatility) என்ற சொல்லிற்கு ரிசர்வ் வங்கி (RBI) இதுவரை தெளிவான விளக்கம் அளித்ததில்லை. ஆனால், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, “பொருளாதார சூழல்களில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைக் குறைப்பது” என்பது தினசரி மாற்றங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், ரூபாயின் மதிப்பில் ஏற்படும் திடீர் வீழ்ச்சிகளைத் தடுப்பதையும் குறிக்கிறது. ரூபாயின் மதிப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய அதிர்ச்சிகளைக் குறைப்பதற்காகவே ரிசர்வ் வங்கி இந்த நடைமுறைகளில் தலையிடுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ரூபாயின் வீழ்ச்சியை முழுமையாகத் தடுப்பது ரிசர்வ் வங்கியின் நோக்கமல்ல என்றும் அந்த வீழ்ச்சி மிகவும் வேகமாகக் கீழ்நோக்கிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே ரிசர்வ் வங்கியின் நோக்கமாகக் கருதப்படுகிறது. ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அதிரடி வீழ்ச்சிகளைக் குறைப்பதும் “ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குள்” அடங்கும் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவாகத் தெரிவிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், ரிசர்வ் வங்கியின் இத்தகைய தலையீடுகள் ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ரூபாயின் பரிமாற்ற மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில், பொருளாதார காரணங்கள் மட்டுமின்றி மற்ற காரணிகளும் ரூபாயின் மதிப்பை பாதிக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட்டால், ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


பணத்தின் மதிப்பை குறைப்பது ஏன் சரியான தீர்வாக இருக்காது?


இந்தியாவின் தற்போதைய ஏற்றுமதி வர்த்தகம், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே பெரிதும் நம்பியுள்ளது. இதன் காரணமாக, ரூபாய் மதிப்பு குறைவதால் ஏற்றுமதிக்குக் கிடைக்கக்கூடிய ஊக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும். அமெரிக்கச் சந்தையில் விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி (High Tariffs) காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அங்கு பெரிய அளவில் லாபம் ஈட்ட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் இறக்குமதியில் பெரும்பாலானவை அத்தியாவசியப் பொருட்கள் ஆகும். குறிப்பாக, மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய் (Crude Oil) மட்டுமே சுமார் 25% பங்கைக் கொண்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கும் என்றும் இது நாட்டில் விலைவாசி உயர்வுக்கு (Inflation) வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.


இந்தியாவின் பணவீக்கம் (Inflation), வளர்ந்த மேற்கத்திய நாடுகளைவிட அதிகமாக இல்லை. பணவீக்க விகிதத்தில் பெரிய இடைவெளி இருக்கும்போது மட்டுமே ஒரு நாட்டின் பணமதிப்பைக் குறைக்க (Currency devaluation) வேண்டிய அவசியம் ஏற்படும். இத்தகைய சூழலில், 'உண்மையான பயனுள்ள மாற்று விகிதத்தை' (Real Effective Exchange Rate - REER) கவனிப்பது அவசியம். இது ஒரு நாட்டின் பணமதிப்பை, அதன் முக்கிய வர்த்தக நாடுகளின் பணமதிப்போடு பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்து அளவிடுகிறது. சீனா போன்ற சில நாடுகள் தங்கள் நாட்டின் பணமதிப்பை வேண்டுமென்றே குறைவாக வைத்துள்ளன. ஆனால், இது போன்ற நடவடிக்கைகள் பணமதிப்பு மோசடியாகக் (Currency manipulation) கருதப்படுவதால் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது.


இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி (Tariff) விதித்துள்ளதால் ஏற்பட்ட அச்சத்தினால், கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. புதிய அமெரிக்க சட்டங்களால் இந்த வரி இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது. இந்த வரி விதிப்பின் முழுமையான தாக்கம் 2026-27-ஆம் ஆண்டுகளில் தான் தெரியவரும்  என்று எச்சரிக்கின்றனர். 


தற்போது, முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து வருகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்தப் பொருளாதார பாதிப்புகள் தொடர வாய்ப்புள்ளது. ரூபாயின் மதிப்பு சரிவதை நாம் அலட்சியப்படுத்த முடியாது; ஏனெனில் ஒவ்வொரு வீழ்ச்சியும் முதலீடுகள் மேலும் முதலீடுகள் வெளியேறுவதற்கே வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமானால், அவர்களுக்கு ரூபாய் மதிப்பில் அதிக லாபம் கிடைக்கச் செய்ய வேண்டும். முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறும்போது, அது பங்குச்சந்தையை நேரடியாகப் பாதிக்கும் என்கின்றனர். எனவே, இந்தியாவின் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவுடன் விரைவில் ஒரு புரிதலுக்கு வர வேண்டும். அதுவரை, ரிசர்வ் வங்கியால் (RBI) ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி வேகத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்  என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


சி. ரங்கராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்; என்.ஆர். பானுமூர்த்தி., சென்னையில் உள்ள மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் இயக்குநர் ஆவார்.


Original Article : The solution to the falling rupee lies in diplomacy -C. Rangarajan, N.R. Bhanumurthy

Share: