ராணி லட்சுமிபாயின் நினைவுநாள் : ஜான்சியின் ராணி எவ்வாறு இந்திய தேசியவாதத்தின் என்றும் அழியாத ஒரு அடையாளமாக மாறினார்? -அத்ரிஜா ராய்சௌத்ரி

 ராணி லட்சுமிபாய், இந்திய தேசியவாதத்தின் மிக முக்கியமான மற்றும் அனைவராலும் அறியப்பட்ட ஒரு அடையாளமாக மாறியது உடனடியாக நடந்துவிடவில்லை. அது எப்படி சாத்தியமானது மற்றும் அவர் எவ்வாறு வரலாற்றில் அத்தகைய இடத்தை அடைந்தார் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

1857-ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின்போது, ஜான்சி ராணி லட்சுமிபாய் ஜூன் மாதம் 18-ஆம் தேதி, 1858-ஆம் ஆண்டு குவாலியர் அருகே ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வீர மரணம் அடைந்தார். 150 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவின் நினைவுகளில் காலனித்துவ எதிர்ப்பின் மிக முக்கியமான மற்றும் அழியாத அடையாளங்களில் ஒருவராக ஜான்சி ராணி லட்சுமிபாய் திகழ்கிறார்.              அவரது வீரத்தைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் சிலைகள் நிறுவப்பட்டு, வீதிகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் அவரது வீரக் கதைகளை பாடப்புத்தகத்தின் வழியே அறிந்து கொள்கின்றனர். மேலும், அனைத்து அரசியல் கோட்பாடுகளைக் கொண்ட அரசியல் தலைவர்களும் அவரது பாரம்பரியத்தையும் பெருமையையும் இன்றும் நினைவுகூருகின்றனர்.


ராணி லட்சுமிபாய், இந்திய தேசியவாதத்தின் மிக முக்கியமான மற்றும் அனைவராலும் அறியப்பட்ட ஒரு அடையாளமாக மாறியது என்பது, உடனடியாகவோ அல்லது தானாகவோ நடந்துவிட்ட ஒரு விஷயம் அல்ல. பல ஆண்டுகளாக நாட்டுப்புறக் கதைகள், மக்களிடையே புகழ்பெற்ற இலக்கியங்கள், சுயசரிதைகள் மற்றும் தேசியவாத எழுத்துக்கள் மூலமாகவே சாத்தியமானது என்கின்றனர்.


ராணி லட்சுமிபாய் மற்றும் 1857 பெரும் புரட்சியின் கதை


ராணி லட்சுமிபாய் ‘ஜான்சி’ (Jhansi) என்ற சமஸ்தானத்தின் (Princely state) மகாராணியாக இருந்தார். அந்த நாட்டின் மன்னரான கங்காதர ராவ் மறைந்த பிறகு, அரியணைக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. இதனால், ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி (East India Company), அவர்கள் தத்தெடுத்த இளவரசரை வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதோடு 'வாரிசுரிமை இழப்புக் கொள்கை' (Doctrine of Lapse) என்ற சட்டத்தின் மூலம், ஜான்சி சமஸ்தானப் பகுதியை ஆங்கிலேயர் ஆதிக்கத்தின்கீழ் இணைத்துக் கொண்டது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்கீழ் உள்ள ஒரு சுதேச சமஸ்தானத்தின் ஆட்சியாளர், தனக்குப் பின் ஒரு மகனை வாரிசாக விட்டுச் செல்லாமல் இறந்துவிட்டால், அந்த நாடு ஆங்கிலேய இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்பதே இந்த வாரிசுரிமை இழப்புக் கொள்கையாகும்.

இதன் விளைவாக, ஜான்சி ராணி லட்சுமிபாய் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது படைகளை மறுசீரமைப்பு செய்து ஆங்கிலேயக் காலனித்துவவாதிகளுக்கு (Colonialists) எதிராகப் போரிட்டார். ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் தீவிரமாகப் போராடிய போதிலும், அந்தப் போரில் தோல்வியடைந்து தனது உயிரையும் இழந்தார். வரலாற்றாசிரியர் ஹர்லீன் சிங் தனது ‘The Rani of Jhansi: Gender, History and Fable in India’ (2014) என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்: "ராணி லட்சுமிபாய் எல்லாவற்றையும் இழந்த ஒரு நபராக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் வீழ்ந்தவர் அல்ல. அவர் தனது குடும்பத்தையும், ராஜ்யத்தையும் இழந்து போர்க்களத்தில் வீரமரணமடைந்தார், ஆனால் இந்திய வரலாற்றில் அவர் ஒரு புகழ்பெற்ற காவிய நாயகியாக மாறிவிட்டார்."


ஜான்சி ராணியின் தேசியவாத மறுவடிவமைப்பு


ஜான்சி ராணியின் மறைவுக்குப் பிறகு, அவர் மாபெரும் அடையாள ஆளுமையாகவும், ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற நாயகியாகவும் மாறினார். எழுத்தாளர் சிங் தனது புத்தகத்தில், ராணி லக்ஷமிபாயை "இந்தியாவின் மிகச்சிறந்த வீராங்கனை" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கையும் வீரம் செறிந்த மரணமும் நாட்டுப்புறக் கதைகளாகவும் புராணக் கதைகளாகவும் மாறின.


19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ராணி லட்சுமிபாயின் பெயர் இந்திய தேசியவாதத்துடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், இந்திய விடுதலைக்கான தேசியவாத இயக்கம் வலுவடைந்து கொண்டிருந்தது.  அதன் தலைவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பைக் வெளிப்படுத்தும் வரலாற்று நாயகர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். அதற்கு லட்சுமிபாய் ஒரு மிகச்சிறந்த தேர்வாக அமைந்தார். ஏனெனில், ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து ஒத்துழைத்த பல சமஸ்தான மன்னர்களைப் போலல்லாமல், அவர் எதிர்ப்பிற்கும் தியாகத்திற்கும் ஒரு அடையாளமாக மாறியிருந்தார்.


1857-ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்ட பதிவுகளை ஆங்கிலேய அதிகாரிகள் தடுத்து, தணிக்கை செய்த அந்தக் காலகட்டத்தில், ஜான்சி ராணியைப் பற்றிய ஆரம்பகால தேசியவாதச் சித்தரிப்புகள் வாய்மொழி மரபுகள், கதைகள் மற்றும் பாடல்கள் மூலமாகவே மக்களிடையே சென்று சேர்ந்தன. அவரைப் பற்றிய முதல் இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக,       1877-ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'Jhansir Rani' கட்டுரை அமைந்தது.


ஜான்சி ராணியைப் பற்றிய இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது 1930-ஆம் ஆண்டில் சுபத்ரா குமாரி சவுகான் எழுதிய 'Jhansi ki Rani'  என்ற கவிதை ஆகும். இக்கவிதை, பின்னர் மே மாதம் 2007-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 1857 புரட்சியின் 150-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சுபா முத்கல் என்பவரால் பாடப்பட்டது.                குறிப்பாக, இக்கவிதையில் வரும் வரிகள் இன்றும் மக்களால் பெரிதும் நினைவுகூரப்படுகின்றன: "பந்தேலா இன மக்களின் வாயிலாக நாங்கள் இந்த கதையைக் கேட்டோம் / ஆண்களைப் போல துணிச்சலுடன் போரிட்டவள் அந்த ஜான்சி ராணி" என்பதே அவ்வரிகளின் பொருளாகும்.


ராணி லட்சுமிபாயை ஒரு தேசியவாத வீராங்கனையாக மக்களிடையே நிலைநிறுத்துவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு படைப்பு, பிருந்தாவன் லால் வர்மா 1946-ஆம் ஆண்டில் எழுதிய 'Jhansi ki Rani Lakshmibai' என்ற நாவலாகும். வரலாற்று ஆய்வாளர் பிராச்சி தேஷ்பாண்டே, தனது 2008-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையான 'The making of an Indian nationalist archive: Lakshmibai, Jhansi, and 1857' என்பதில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்: வர்மாவின் நாவலில், ராணி லட்சுமிபாய் "பாரம்பரியத்தில் ஆழமான வேர்களைக் கொண்ட, அதேநேரத்தில் முற்போக்கான இந்திய நவீனத்துவத்தின் அடையாளமாகவும், "ஓர் இலட்சிய இந்தியப் பெண்மையின்" வடிவமாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தார்.


20-ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு, 1956-ஆம் ஆண்டில் மகாஸ்வேதா தேவி எழுதிய ‘Jhansi Rani’  ஆகும். இந்த நூல், சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாய்மொழி சாட்சியங்கள், கதைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளுக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், ராணி லட்சுமிபாயைப் பற்றிய வரலாற்றுப் பார்வையை ஒரு புதிய கோணத்திற்குக் கொண்டு சென்றது.



ராணி லட்சுமிபாயை சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பெரும் வீராங்கனையாக வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கான மற்ற முயற்சிகளில் ஒன்றாக, சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army (INA)) இருந்த பெண்களின் படைப்பிரிவிற்கு 'ஜான்சி ராணி படைப்பிரிவு' (Rani of Jhansi Regiment) என்று பெயரிடப்பட்டது.


ராணி லட்சுமிபாய் அவர்கள் மறைந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், அவரது புகழும் பெருமையும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும், துணிச்சலான முன்னோடிப் பெண் தலைவராகவும், வரலாற்றுச் சின்னமாகவும் கொண்டாடப்படுகிறார்.     மேலும், சத்ரபதி சிவாஜி மற்றும் மகாராணா பிரதாப் போன்ற மாவீரர்களுடன் இணையாக, எதிர்ப்பின் மற்றும் வீரத்தின் அடையாளமாக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.


Original article : On Rani Lakshmibai’s death anniversary: How the queen of Jhansi became an enduring nationalist icon. -Adrija Roychowdhury

Share: