இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தடை: அரசாங்கத்தால் எவ்வாறு செயலிகளையும் சமூக ஊடகத் தளங்களையும் முடக்க முடியும்? -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலி ஏன் முடக்கப்பட்டுள்ளது? அரசாங்கத்தால் ஒரு செயலியை எவ்வாறு தடை செய்ய முடியும்? இந்தியாவில் சமூக ஊடகங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? 


ஏன் செய்திகளில் இடம்பெற்றது?


மே மாதம் 3-ஆம் தேதி நடந்த நீட் (National Eligibility cum Entrance Test (NEET)) தேர்வுத் தாள் கசிவு குறித்த விசாரணைக்கு டெலிகிராம் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், ஜூன் மாதம் 21-ஆம் தேதி நடக்கவிருக்கும் மறுதேர்வு வினாத்தாள் தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக யாரும் தவறான வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) டெலிகிராம் செயலியை ஜூன் மாதம் 22-ஆம் தேதி வரை முடக்கியது. இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்ட அடுத்த நாளே, தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த வழக்கு, ஜூன் மாதம் 17-ஆம் தேதி புதன்கிழமையன்று நீதிபதி தேஜஸ் காரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய அரசாங்கத்தால் எவ்வாறு செயலிகளை முடக்க முடியும் மற்றும் இந்தியாவில் சமூக ஊடகங்கள் எவ்வாறு முறைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியாவில் மிக பிரபலமாக இருக்கும் தனிநபர் குறுஞ்செய்தி செயலிகளில் டெலிகிராமும் (Telegram) ஒன்றாகும். சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கும் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு (WhatsApp) அடுத்தபடியாக, டெலிகிராம் சுமார் 150 மில்லியன் பயனர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.


2. தேசிய தேர்வு முகமையின் (NTA) கோரிக்கையை ஏற்று, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act) பிரிவு 69A-ன்கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும், "தேசிய அளவிலான தேர்வுகளில், வினாத்தாள் கசிந்த பிறகு, அது முன்கூட்டியே கசிந்தது போன்ற போலி ஆதாரங்களை உருவாக்குவதற்கு டெலிகிராமின் ஒரு குறிப்பிட்ட அம்சம் பயன்படுத்தப்படுகிறது" என்ற புகாரைத் தீர்க்க ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, டெலிகிராம் தளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளை மாற்றியமைக்கும் வசதியை, இந்தியாவில் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை முடக்கி வைக்குமாறு அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


3. டெலிகிராம் செயலிக்கு எதிராக மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என்பது குறித்து, தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைமை இயக்குனர் அபிஷேக் சிங், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளார். தேர்வுக்கு முன்பே வினாத்தாள்களைத் தருவதாகக் கூறும் டெலிகிராம் சேனல்களுக்கு எதிராக அந்த நிறுவனம் எந்தவொரு தீவிரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


ஆனால், இந்தியாவில் சமூக ஊடகங்கள் எவ்வாறு முறைப்படுத்தப்படுகின்றன?

சமூக ஊடகத் தளங்களைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.


இந்தியாவில் உள்ளடக்கங்களைத் தடுக்கும் வழிமுறைகள்


1. தற்போதைய நிலையில், இந்தியாவில் இணைய உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கு அல்லது நீக்குவதற்கு இரண்டு இணையான வழிமுறைகள் உள்ளன. முதலாவது வழிமுறை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69 (A)-ன்கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் அல்லது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உள்ளடக்கங்கள் இணையத்திலிருந்து நீக்கப்படுகின்றன.


பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளில் இதற்கென பொறுப்பு அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர். இந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கான இறுதி உத்தரவை பிறப்பிக்கும் முதன்மை அமைப்பாகும்.



2. இரண்டாவது வழிமுறை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு-79 (3)(b)-ன்கீழ் செயல்படுகிறது. இதன் மூலம், பல்வேறு அரசு அமைச்சகங்கள் இணையதளங்களுக்கு நேரடியாகவே உள்ளடக்கத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரம் பெற்றுள்ளன. இது பெரும்பாலும் மத்திய உள்துறை அமைச்சகம் வழிநடத்தும் 'சஹ்யோக்' (Sahyog) போர்டல் மூலமாகச் செய்யப்படுகிறது.


தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021


1. பொதுமக்களுடனும், இந்தத் துறையோடு தொடர்புடையவர்களுடனும் விரிவான ஆலோசனைகள் நடத்திய பிறகு, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) பிரிவு-87(2)-ன்கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) விதிகள், 2021 இயற்றப்பட்டுள்ளன. இதன் மூலம், இதற்கு முன்பு இருந்த 2011-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் நீக்கப்பட்டு, புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.


2. இந்தப் புதிய விதிகளின்படி, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் பயனர்களின் புகார்களைத் தீர்ப்பதற்கும், சட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றுவதற்கும் ஒரு குறைதீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும். இதற்காக, இந்தியாவில் வசிக்கும் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி, தலைமை அதிகாரி மற்றும் ஒரு முதன்மைப்  பொறுப்பு நபர் ஆகியோரை அந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும்.


3. மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), பயனர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சமூக ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் போன்ற உடனடி செய்தி அனுப்பும் செயலிகளுக்கான மூன்றாவது நிபந்தனை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட செய்தி முதன்முதலில் யாரால் உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறியும் வசதியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.


4. இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு சமூக ஊடக நிறுவனம் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு-79-ன்கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும்.


தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு-79 


1.  தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு-79-ன்படி: சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்கள் போன்ற இடைநிலை அமைப்புகள், தங்களது தளத்தில் பிற நபரால் பகிரப்படும் எந்தவொரு தகவல், தரவு அல்லது செய்தித் தொடர்புகளுக்கு சட்டப்படியோ அல்லது வேறு எந்த வகையிலோ பொறுப்பாகாது (Safe Harbour Protection). இந்தச் சட்டப்பூர்வப் பாதுகாப்பு அந்த அமைப்புகளுக்குக் கிடைக்க வேண்டுமானால், அவர்கள் சம்பந்தப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்களாகவே அனுப்பியிருக்கக் கூடாது, அதை யார் பெற வேண்டும் என்பதை அவர்கள் தேர்வு செய்திருக்கக் கூடாது, மற்றும் அந்தச் செய்தியில் உள்ள எந்தவொரு தகவலையும் அவர்கள் மாற்றியமைத்திருக்கக் கூடாது.


2. இருப்பினும், அரசாங்கமோ அல்லது அதன் முகமைகளோ ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது தளம் பற்றி முறைப்படி தகவல் தெரிவித்தும், அந்த இடைநிலை அமைப்பு உடனே அந்தப் பதிவிற்கான அணுகலை முடக்கவில்லை என்றால், பிரிவு 79-ன்கீழ் வழங்கப்படும் இந்தச் சட்டப் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்காது. மேலும், அவர்கள் தங்களது தளத்தில் உள்ள அந்தச் செய்திகள் அல்லது பதிவுகள் தொடர்பான எந்தவொரு ஆதாரங்களையும் அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் இந்தச் சட்டத்தின்கீழ் தங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


3. குறிப்பாக, ஏப்ரல் மாதம் 2023-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள், எந்தத் தகவல் தவறானது என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன. இதன் விளைவாக, அரசாங்கம் 'பொய்யானது' அல்லது 'தவறாக வழிநடத்துவது' என்று கண்டறியும் பதிவுகளை நீக்குமாறு இந்த இணையதள அமைப்புகளைக் கோர முடியும். இதன் மூலம் அரசாங்கத்திற்கு இணையப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் பரந்த அதிகாரம் கிடைக்கிறது.


வயது அடிப்படையிலான சமூக ஊடகத் தடை


1. கடந்த ஆண்டு, சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு குறைந்தபட்ச வயதை நிர்ணயித்து அதைக் கட்டாயமாக்கிய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியது. இன்ஸ்டாகிராம் (Instagram), யூடியூப் (YouTube) மற்றும் ஸ்னப்சாட் (Snapchat) போன்ற தளங்கள் 16 வயதிற்குட்பட்ட பயனர்களின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


2. சமீபத்தில், குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பை பலப்படுத்திய நாடுகளின் வரிசையில் இங்கிலாந்தும் இணைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், 2027 வசந்த காலத்திற்குள் (Spring 2027) 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.


3. அரசாங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஆஸ்திரேலியா பின்பற்றிய அதே முறையைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்க இங்கிலாந்தும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நடவடிக்கை ஸ்னப்சாட் (Snapchat), டிக்டாக் (TikTok), யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் எக்ஸ் (X) போன்ற பயனர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் (User-to-user) தளங்களை இலக்காகக் கொண்டு செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவை மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வதற்கும், குறிப்பிட்ட வழிமுறைகளின் (Algorithms) உதவியோடு தங்களின் கருத்துக்கள்/பதிவுகளைப் பகிர்வதற்கும் வழிவகை செய்யும் தளங்களாகும். மேலும், "வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் சிக்னல் (Signal) போன்ற செய்தி அனுப்பும் செயலிகளை இந்தச் சமூக ஊடகத் தடை நடவடிக்கையில் உட்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வயது அடிப்படையிலான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளுக்கான மாநில அரசுகளின் முன்மொழிவுகள்


1. இந்தியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயதுக் கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை ஒன்றிய அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ சட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றாலும், இது குறித்த ஆரம்பகட்ட விவாதங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


2. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2025–26-ஆம் ஆண்டிற்கான பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic Survey 2025–26), குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், அவர்களைக் குறிவைத்து இணையதளங்களில் காட்டப்படும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கும் வயது சார்ந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.              இளம்வயது பயனர்களிடையே அதிகரித்துவரும் "டிஜிட்டல் அடிமைத்தனம்" (Digital addiction) குறித்த பரவலான கவலைகளே, இந்தப் பரிந்துரைக்கு முக்கியக் காரணமாகும்.


3. கர்நாடகா அரசு தனது சமீபத்திய நிதிநிலை அறிக்கையில்,                          16-வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ஆந்திரப் பிரதேச அரசு                    13-வயதிற்குட்பட்ட குழந்தைகள் இத்தகைய இணையதள சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய விதியைக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சமூக ஊடகத் தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க இந்தியாவில் அதிகரித்துவரும் தீவிர முயற்சியைக் காட்டுகின்றன.

Original article : Telegram app Banned in India: How Government can block apps and social media platforms? -Roshni Yadav

Share: