8-ஆவது மத்திய ஊதியக் குழு அமைக்கப்படவுள்ள நிலையில், இந்தியாவின் பொதுத்துறை ஊழியர்களின் மொத்த ஊதியமும் சலுகைகளும், அறிவிக்கப்பட்டதைவிட ஏன் அதிகமாக உள்ளன என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர். -அனூப் சிங் மற்றும் ஷ்ருதி குப்தா

 8-வது மத்திய ஊதியக் குழு அரசு ஊழியர்களின் ஊதியங்களை மறுபரிசீலனை செய்துவரும் வேளையில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ தரவுகள் அரசு ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் அரசுத் திட்டப் பணியாளர்களின் உண்மையான முழுச் செலவையும் துல்லியமாகப் பிரதிபலிக்கிறதா இல்லையா என்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.


இந்தியா எட்டாவது மத்திய ஊதியக் குழுவிற்காக தயாராகி வருகிறது. இதன் பரிந்துரைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் பொது நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அரசு ஊழியர்களுக்காக அரசாங்கம் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன்பாக, இன்னும் அடிப்படையான ஒரு கேள்விக்கு நாம் விடையளிக்க வேண்டியுள்ளது: இன்று அரசாங்கங்கள் தங்களது ஊழியர்களின் ஊதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக உண்மையில் எவ்வளவு செலவிடுகின்றன?

இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பது என்ன?


ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2015-16 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சராசரியாக 2.4%-ஆக இருந்தது. மாநில அரசாங்கங்களைப் பொறுத்தவரை, 2022-23-ஆம் ஆண்டில் இந்தச் செலவு அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5%-ஆக இருந்தது. ஒன்றிய அரசின் மொத்த வருவாய் வரவுகளில் சுமார் நான்கில் ஒரு பங்கும் (25%), மாநில அரசுகளின் வருவாய் வரவுகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கும் (33%) ஊழியர்களின் ஊதியத்திற்காகவே செலவிடப்படுகிறது.


இருப்பினும், இந்த அதிகாரப்பூர்வமான தகவல் முழுமையானது அல்ல. இந்தியா தனது பொதுத்துறை பணியாளர்களாக முக்கியமாக நிரந்தர ஊழியர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது. ஒப்பந்தப் பணிகள், அரசுத் திட்டங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் பணிபுரியும் பெருமளவிலான மக்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.


ஒன்றிய அரசாங்கத்தில், நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020-21-ஆம் ஆண்டில் 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு நிரந்தர ஊழியர்களுக்கு ஒரு ஒப்பந்தத் தொழிலாளி என்ற விகிதத்தில்தான் நிலைமை இருந்தது. ஆனால், இந்த 10 ஆண்டு காலப்பகுதியில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


அரசுச் செலவினங்களில் ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். பொது நிதி கணக்கியலுக்கான உலகளாவிய தரநிலையான, சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) அரசு நிதி புள்ளிவிவரக் கையேட்டின்படி (Government Finance Statistics Manual (GFS Manual)), நிதிநிலை அறிக்கையில் எப்படிக் காட்டப்பட்டாலும், ஒரு முதலாளி-தொழிலாளி உறவின் அடிப்படையில் வழங்கப்படும் எந்தவொரு வழக்கமான பணபலனும் இந்த ஊதிய வரம்பிற்குள்ளேயே அடங்கும்.



செய்தி அறிக்கை முக்கியமாக மூன்று வழிகளில் மாறுபடுகிறது.


முதலில்: முக்கிய புள்ளிவிவரங்களுக்குள் விடுபட்டவர்கள் யார்?

ஒப்பந்தத் தொழிலாளர்கள்: இவர்கள் பல்வேறு அமைச்சகங்களில் பராமரிப்பு, தரவுப் பதிவு மற்றும் பாதுகாப்பு போன்ற வழக்கமான அரசுப் பணிகளைச் செய்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இவர்கள் நிரந்தர ஊழியர்களுக்குப் பதிலாகப் பணியமர்த்தப்படுகிறார்கள். இருப்பினும், அரசாங்கத்தின் முக்கியச் ஊதியச் செலவினக் கணக்குகளில் இவர்கள் முற்றிலும் சேர்க்கப்படுவதில்லை. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் இருந்து, தொடர்ச்சியற்ற 6 ஆண்டுகளுக்கெனக் கிடைத்த தரவுகளின்படி, ஒன்றிய அரசில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.6 லட்சத்திலிருந்து 24.3 லட்சம் வரை உள்ளது. இந்தத் தொழிலாளர்களைப் பற்றிய அமைச்சகம் வாரியான மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் எதுவும் அரசிடம் இல்லை. இவர்களது ஊதியம் குறைந்தபட்ச கூலி விகிதத்தின்படி கணக்கிடப்பட்டால்கூட, ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியத்திற்காக ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 14,000 கோடி ரூபாயைச் செலவிடுகிறது. ஆனால், இந்தத் தொகை அரசாங்கத்தின் 'சம்பளக் கணக்கு') என்ற தலைப்பின்கீழ் சேர்க்கப்படுவதில்லை.


திட்டப் பணியாளர்கள்: பிரதமர் போஷான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)) திட்டத்தின்கீழ் உள்ள சுமார் 10 லட்சம் ஆஷா (Accredited Social Health Activist (ASHA)) பணியாளர்களும், ஏறத்தாழ 37 லட்சம் சமையல்காரர் மற்றும் உதவியாளர்களும் ஊதியம் பெறும் ஊழியர்களாகக் கருதப்படாமல், வெறும் 'கௌரவ ஊதியம்' மட்டுமே பெறும் 'தன்னார்வலர்களாகவே' நடத்தப்படுகிறார்கள். இவர்களைப் போலவே பல லட்சம் அங்கன்வாடி பணியாளர்களும், துணை செவிலியர்களும் இதே போன்ற சேவைகளை வழங்கி வருகின்றனர். மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் ஆரம்பநிலை ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் இந்த ஊழியர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அரசாங்க நிதிப் புள்ளியியல் (GFS) கட்டமைப்பின்படி, இத்தகைய திட்ட அடிப்படையிலான கொடுப்பனவுகள், அவை 'ஊதியம்' என்று அழைக்கப்பட்டாலும் அல்லது 'கௌரவ ஊதியம்' என்று அழைக்கப்பட்டாலும், அவை அரசு ஊழியர்களின் ஊதியமாகவே கணக்கிடப்படுகின்றன.


அரசாங்கங்கள் தங்களது பணிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அரசுத் திட்டங்களின்கீழ் பணியாற்றும் ஊழியர்களை அதிகளவில் நம்பியிருக்கத் தொடங்கியுள்ளதால், வழக்கமாக வெளியிடப்படும் ஊதியப் புள்ளிவிவரங்கள் உண்மையான அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கையையோ அல்லது அவர்களது நிதியாதாரம் பற்றிய விபரங்களையோ துல்லியமாகப் பிரதிபலிப்பதில்லை.


இரண்டாவது: அறிக்கைகள் தனித்தனியாக இருக்கின்றன 


பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கங்கள் உருவாக்கும் தன்னாட்சி நிறுவனங்களுக்கு ஊழியர்களின் ஊதியத்திற்காக இந்த 'ஊதியங்களுக்கான மானிய உதவி' வழங்கப்படுகிறது. 2024-25-ஆம் நிதியாண்டில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences (AIIMS)), இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology (IITs)), இந்திய மேலாண்மைக் கழகங்கள் (Indian Institutes of Management (IIMs)) மற்றும் பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் ஆராய்ச்சி முகமைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஊதிய மானியமாக சுமார் 60,000 கோடி ரூபாயைப் பெற்றுள்ளன. மாநில அளவில், 232 மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகை (சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் மேல்), பெரும்பாலும் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஊதியக் கணக்குகளில் சேர்க்கப்படுவதில்லை.


இந்தச் செலவு நிதிநிலை அறிக்கைகளில் விடுபடவில்லை. இது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஊதியப் பட்டியலுடன் சேர்க்கப்படாமல், அதற்குப் பதிலாக வெவ்வேறு நிதிநிலை அறிக்கைகளில் தனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பொதுவாக அரசுத் துறைகள் செய்யவேண்டிய பணிகளையே செய்கின்றன. எனவே, இவர்களுடைய ஊதியத்தை ஒட்டுமொத்தக் கணக்கில் சேர்க்காமல் தனியாக வைப்பது என்பது வெறும் நிதிநிலை வகைப்பாடு சார்ந்த விஷயமே தவிர, இதில் பொருளாதாரரீதியாக எந்த வேறுபாடும் இல்லை.


மூன்றாவது: வரையறைகள் சீரற்றதாக உள்ளன


ஒரே மாதிரியான செலவுகளைப் வெவ்வேறு அரசாங்கங்களும் நிறுவனங்களும் பெரும்பாலும் வெவ்வேறு பிரிவுகளின்கீழ் வகைப்படுத்துகின்றன. பொதுமக்களுக்கான ஒரே மாதிரியான வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகையாக இருந்தாலும்கூட, அவை ஊதியங்கள், கௌரவ ஊதியங்கள், மானியங்கள், ஒப்பந்தக் கொடுப்பனவுகள் அல்லது திட்டச் செலவினங்கள் எனப் பலவாறாகப் பதிவேடுகளில் குறிக்கப்படலாம்.


இந்த வேறுபாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான தரவுகளையும், சர்வதேச அளவிலான தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை கடினமாக்குகின்றன. மேலும், இவை ஊதியக் குழுக்கள் மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் போன்ற கொள்கைகளால் ஏற்படும் நீண்டகால நிதி தாக்கங்களை மதிப்பிடுவதையும் கடினமாக்குகின்றன.


சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் எதைக் காட்டுகின்றன?


ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம், திட்டப் பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கான கௌரவ ஊதியம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் தனியாகக் கணக்கிடப்படும் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றைக் கூட்டும்போது, ஒன்றிய அரசின் மொத்த ஊதியச் செலவினமானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.4%-லிருந்து 3.8%-ஆக உயர்கிறது. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தையும் சேர்த்தால், இது மேலும் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6%-ஆக உயர்கிறது.


மாநில அரசாங்கங்களைப் பொறுத்தவரை, இந்த மாற்றி அமைக்கப்பட்ட ஊழியர் ஊதியக் கணக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5%-ல் இருந்து 4.1%-ஆக உயர்கிறது. மகாராஷ்டிராவின் மாற்றி அமைக்கப்பட்ட ஊழியர் ஊதியம், அந்மாநிலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த தொகையைவிட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. கர்நாடகாவின் ஊதியம் 2.5 மடங்காகவும், உத்தரப் பிரதேசத்தின் ஊதியம் இரண்டு மடங்காகவும் உள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் குறித்த ஓரளவுக்கு முழுமையான தரவுகள் கிடைக்கப்பெற்ற சில மாநிலங்களுக்கு மட்டுமே இந்த மதிப்பீடுகளைச் செய்ய முடியும்.




புள்ளிவிவரங்களுக்கும் அப்பால்


ஊதியப் பட்டியலுக்கான உண்மையான செலவு மிகக் குறைவாக மதிப்பிடப்படும்போது, நாட்டின் நிதிப் பற்றாக்குறை இலக்குகளும், நடுத்தர காலச் செலவினக் கணிப்புகளும் முழுமையற்ற தரவுகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. சரிசெய்யப்பட்ட ஓய்வூதியம் மற்றும் வட்டிச் செலுத்தல்களையும் சேர்த்துக் கணக்கிட்டபிறகு, ஒன்றிய அரசின் கட்டாயச் செலவினம் என்பது அதன் மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 82%-ஆக உள்ளது. இதனால், கூடுதல் கடன் வாங்காமல், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு முதலீடுகள் போன்ற விருப்பப் பூர்வமானச் செலவுகளைச் செய்வதற்கு அரசாங்கத்திடம் மிகக் குறைந்த அளவே நிதி உள்ளது.


ஒட்டுமொத்த தொழிலாளர் குழுக்களும் அதிகாரப்பூர்வ ஊதியப் புள்ளிவிவரங்களில் இருந்து விடுபடும்போது அல்லது சேர்க்கப்படாதபோது, அரசாங்கங்கள் தங்களிடம் உள்ள நிதி வசதியை மிக அதிகமாகக் கணித்துவிடுகின்றன. அதேநேரத்தில், பொதுத்துறை பணியாளர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான நீண்டகாலச் செலவைக் குறைவாக மதிப்பிட்டுவிடுகின்றன.


மேலும் துல்லியமான ஒரு கணக்கியல் கட்டமைப்பு 


இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு பல முக்கியமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.


அனைத்து வகையான தொழிலாளர்களையும் சர்வதேச தரமுறைகளைப் பின்பற்றும் ஒரே மாதிரியான ஊதியக் கட்டமைப்பின்கீழ் கணக்கிட வேண்டும். இதற்கு, ஊதியம் என்பதற்கான பொதுவான வரையறை அவசியமாகும். மேலும், இந்த வரையறையை ஒன்றிய அரசும் அனைத்து மாநில அரசுகளும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் வெவ்வேறு மாநிலங்களின் தரவுகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியும். தற்போது கிடைக்கும் தகவல்களுக்குப் பதிலாக, மத்திய அமைச்சகங்களும் மாநில அரசுகளும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் திட்டப் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது ஊதியம் குறித்த துல்லியமான, ஆண்டுத் தரவுகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும்.


8-ஆவது மத்திய ஊதியக் குழு, பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம், வகைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அளவிடும் முறையை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.


அரசாங்கங்கள் அரசு ஊழியர்களுக்காக மிக அதிகமாகச் செலவிடுகின்றனவா அல்லது மிகக் குறைவாகச் செலவிடுகின்றனவா என்பது  தற்போதைய பிரச்சினை இல்லை. அவர்கள் தாங்கள் உண்மையில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்துள்ளார்களா என்பதுதான் உண்மையான பிரச்சினை. நிதி , சிறந்த கொள்கை உருவாக்கம் மற்றும் நிதியின் நீடித்த நிலைத்தன்மையைச் சரியாகக் கணக்கிடுவது ஆகியவற்றுக்குத் துல்லியமான செலவினத் தரவுகள் மிகவும் அவசியமானவை ஆகும்.


அனூப் சிங், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் சிறப்பு உறுப்பினராகவும், ஸ்ருதி குப்தா, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றுகின்றனர்.


Original article : Ahead of 8th CPC, experts explain why India’s public sector compensation is higher than reported. -Anoop Singh and Shruti Gupta

Share: