ஜூலை 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) Act (VB-G RAM G)) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? இந்தியாவில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி
20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)), 2005-ஆம் ஆண்டிற்க்கு பதிலாக, 2025-ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டம், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அன்று, VB-G RAM G திட்டத்தின்கீழ் பணிபுரியும் திறனற்றத் தொழிலாளர்களுக்கான (unskilled manual workers) ஊதிய விகிதங்களையும் அறிவித்தது.
இந்தச் சூழ்நிலையில், ஜூலை 1 அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் (MGNREGS) பதிலாக புதிய வேலைவாய்ப்புத் திட்டம் அமலுக்கு வருவதால் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்வது முக்கியமானதாகிறது.
முக்கிய அம்சங்கள்:
மத்திய அரசு இந்த நிதியாண்டிற்கு (2026-27) VB-G RAM-G திட்டத்திற்காக ரூ.95,692.31 கோடியை ஒதுக்கியுள்ளது. வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
1 உத்தரவாத ஊதிய வேலை நாட்கள் அதிகரிப்பு: VB-G RAM G சட்டம் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 125-ஆக அதிகரிக்கிறது.
வேளாண் பருவங்களில் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு இடைநிறுத்தம்: வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டம் உச்சகட்ட விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில், வேளாண் தொழிலாளர்கள் பண்ணை வேலைகளுக்கு போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை 60 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கிறது.
3.நிதிச் சுமையை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்திலிருந்து (MGNREGA) மாறுபட்டு, VB–G RAM-G Act சட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதிச் சுமையில் மாநிலங்களின் பங்களிப்பை அதிகரிக்க முன்மொழிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) மத்திய அரசு 100% ஊதியச் செலவைச் செலுத்தியதற்கு மாறாக, விபி-ஜி ராம் VB–G RAM G Act சட்டம் 40% நிதிச் சுமையை மாநிலங்கள்மீது சுமத்துகிறது. வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்கள் இதிலிருந்து விதிவிலக்கு பெற்றுள்ளன. இந்த மாநிலங்களின் 90% நிதிச் சுமையை மத்திய அரசு ஏற்கும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, முழு நிதி சுமையையும் மத்திய அரசே ஏற்கும்.
4. மேலிருந்து கீழான வள ஒதுக்கீட்டு அணுகுமுறை: இது, மாநில தொழிலாளர் நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) மாதிரியைத் தலைகீழாக மாற்றுகிறது. இதில் தற்போது மத்திய அரசே அதிகாரப் பகிர்வுகளைத் தீர்மானிக்கிறது.
5. புதிய விதிகள்: ஊரக வளர்ச்சி அமைச்சகம் மே 23 அன்று, VB-G RAM G திட்டத்தின் ஊதிய வழங்கல், வேலையின்மை உதவித்தொகை, மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் திட்டச் செயலாக்கக் கண்காணிப்பு தொடர்பான விதிகளை உள்ளடக்கிய 8 வரைவு விதிகளை வெளியிட்டது. அந்த விதிகள் பின்வருமாறு:
• தேசிய அளவில் வழிநடத்தல் குழு விதிகள்
• குறை தீர்க்கும் விதிகள்
• நிர்வாகச் செலவுகள் தொடர்பான விதிகள்
• VB–G RAM G விதிகளின் கீழ் இடைக்கால ஏற்பாடுகள் தொடர்பான விதிகள்
• நெறிமுறை அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டிற்கான புறநிலை அளவுகோல் விதிகள்
• மத்திய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத மன்றத்தின் விதிகள்
• ஊதியம் மற்றும் வேலையின்மை உதவித்தொகை வழங்கும் முறை தொடர்பான விதிகள்
• சட்டமன்றம் இல்லாத யூனியன் மாநிலங்களுக்கான திட்டத்தின்கீழ், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு அதிகமாக மாநிலத்தால் மேற்கொள்ளப்படும் 2026-ஆம் ஆண்டு செலவினங்களின் முறை மற்றும் நடைமுறை விதிகள் ஆகும்.
6. வேலை அட்டைகளுக்குப் பதிலாக 'கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை' (Gramin Rozgar Guarantee Card) அறிமுகம்: புதிய விதிகளில், இடைக்கால ஏற்பாடுகள் (Transitional Provisions) தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, மின்னணு வாடிக்கையாளர் அடையாளச் Electronic (Know Your Customer (e-KYC)) சரிபார்ப்பு மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு, தற்போது அவர்களிடம் உள்ள MGNREGS வேலை அட்டைகள், VB-G RAM G திட்டத்தின்கீழ் வேலை கோருவதற்கு செல்லுபடியாகத் தொடரும். மாநில அரசுகள் புதிய சட்டத்தின்படி கிராமிய வேலை உறுதி அட்டைகளை (Gramin Rozgar Guarantee Cards) வழங்கும் வரை, இந்த இடைக்கால ஏற்பாடு நடைமுறையில் இருக்கும். இது தற்போதைய பயனாளர்கள் எந்த இடையூறும் இல்லாமல் புதிய திட்டத்தின்கீழ் தொடர்ந்து வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்யும்.
VB-G RAM G திட்டமானது, திறன் தேவைப்படாத உடல் உழைப்புப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திலிருந்தும் வயதுவந்த ஒரு உறுப்பினருக்கு கிராமின் ரோஜ்கார் உத்தரவாத அட்டைகளை வழங்க வழிவகை செய்கிறது. புதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொள்ள, இத்தகைய நபர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்திடம் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயது மற்றும் முகவரி போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், திருமணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், மிகவும் நலிவடைந்த பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு கிராமிய வேலை உத்தரவாத அட்டைகளை வழங்குவதற்கான விதிகளும் இதில் உள்ளன. இந்தச் சிறப்பு அட்டை (special card) தனித்துவமான நிறத்தைக் கொண்டிருக்கும்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு அட்டையை சரிபார்ப்பின் மூலம் புதுப்பிக்கலாம்.
7. மாநிலங்களுக்கான நெறிமுறைசார் ஒதுக்கீடு: '2026-ஆம் ஆண்டிற்கான நெறிமுறைசார் ஒதுக்கீட்டு விதிகளுக்கான குறிக்கோள் சார்ந்த அளவுகோல்கள்' (Draft Objective Parameters for Normative Allocation Rules) என்ற விதிகளின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும், இந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள் சார்ந்த அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்குமான நிதியின் ஒதுக்கீட்டை மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும்.
விதிகளின்படி, மாநிலங்களுக்கான வழக்கமான நிதியை தீர்மானிக்க, மத்திய அரசு 16-வது நிதிக் குழுவின் கிடைமட்ட பகிர்வு (Horizontal Devolution) பரிந்துரைகளைப் பயன்படுத்தும்.
#8 திறன்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள்: மத்திய அரசு, 2025-ஆம் ஆண்டு VB-G RAM G சட்டத்தின்கீழ், பணிபுரியும் திறன்சாராத உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, VB-G RAM G திட்டத்தின்கீழ் வழங்கப்படும் திறன்சாரா உடல் உழைப்புக்கான ஊதிய விகிதத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், இந்தச்சட்டத்தின் பிரிவு 10-ன் மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, மத்திய அரசு வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு ஊதிய விகிதங்களை அறிவிக்கலாம். VB G RAM G சட்டத்தின்கீழ் அறிவிக்கப்படும் ஊதிய விகிதமானது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005-ன் பிரிவு 6-ன்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய விகிதத்திற்குக் குறைவாக இருக்கக்கூடாது என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.
மத்திய ஊரக வளர்ச்சி (Ministry of Rural Development) அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநிலங்கள் முழுவதும் தினக்கூலி ரூ.300 முதல் ரூ.409 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கிமில் உள்ள சில கிராம பஞ்சாயத்துகளில் ரூ.450 என்ற சிறப்பு ஊதிய விகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், அசாம், திரிபுரா, சிக்கிம் மற்றும் மேற்குவங்கம் போன்ற வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு ஏற்ப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்களில் 3 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான உயர்வு காணப்பட்டது.
இந்தியாவில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களின் பரிணாம வளர்ச்சி
1. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவில் பல்வேறு ஊரக வளர்ச்சிக் கொள்கைகள் வறுமையைக் குறைத்தல், வேளாண் உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் உபரியாகவும் பகுதி நேரமாகவும் பணிபுரியும் ஊரகப் பகுதிகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஊதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள், அடிப்படை உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, ஊரக வளர்ச்சிக்கான முக்கியக் கருவிகளாகவும் படிப்படியாக மாறியுள்ளன.
2. 1960-ஆம் ஆண்டு கிராமப்புற மனிதவளத் திட்டம் (Rural Manpower Programme) மற்றும் 1971-ஆம் ஆண்டு கிராமப்புற வேலைவாய்ப்புக்கான விரைவுத் (Crash Scheme for Rural Employment) திட்டம் போன்ற ஆரம்பகாலத் திட்டங்கள் தொடங்கி, அரசாங்கம் அவ்வப்போது பல்வேறு ஊதிய வேலைவாய்ப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
3. இதைத் தொடர்ந்து 1980-கள் மற்றும் 1990-களில் கட்டமைக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 'தேசிய ஊரக வேலைவாய்ப்புத் (National Rural Employment Programme) திட்டம்' மற்றும் 'நிலமற்ற ஊரகத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்' (Rural Landless Employment Guarantee Programme) ஆகியவை அடங்கும். இந்தத்திட்டங்கள் பின்னர் 'ஜவஹர் ரோஜ்கார் யோஜனாவில் (Jawahar Rozgar Yojana) 1993-ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டன. மேலும், செயல்பாட்டு வரம்பையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கதோடு, 1999-ல் இவை அனைத்தும் 'சம்பூர்ண கிராமீன் ரோஜ்கார் யோஜனா' (Sampoorna Grameen Rozgar Yojana) திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.
4. 1977-ஆம் ஆண்டின் மகாராஷ்டிர வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், வேலை செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை என்ற கருத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஊதிய வேலைவாய்ப்புக் கொள்கைகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, 2005-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) இயற்றப்பட்டது. இது கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நாடு முழுவதும் ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்கியது.
Original article : VB-G RAM G comes into effect: What changes under India’s new rural employment scheme? -Roshni Yadav