பருவமழையால் மட்டும் இந்தியாவின் நீர் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. சரியான கொள்கை முடிவுகளால் அதைச் சாத்தியமாக்கலாம்.
பெங்களூரு முதல் முசோரி (உத்தராகண்ட்) வரையிலான இந்திய நகரங்கள் கடுமையான நீர் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஜூன் மாதத்தில் பருவமழை அளவு இயல்பைவிட 40% குறைவாக இருந்தது. டெல்லியும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. அந்நகரின் மொத்த தினசரித் தேவை 1,250 மில்லியன் கேலன் நீரில், சுமார் 70% மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. 'எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில்' (Council on Energy, Environment and Water (CEEW)) நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள 15 முக்கிய ஆற்றுப் படுகைகளில் 11 படுகைகள் நீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இப்படுகைகளில், தனிநபருக்கான ஆண்டு நீர் இருப்பு 1,700 கன மீட்டருக்கும் (m³) குறைவாகவே உள்ளது. கிருஷ்ணா, காவிரி, மாகி மற்றும் தபதி உள்ளிட்ட பல ஆற்றுப் படுகைகளில், ஒரு நபருக்கான நீர் இருப்பு 1,000 கன மீட்டருக்கும் குறைவாக உள்ளது. இது நீர் பற்றாக்குறைக்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோலாகும்.
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் கழகம் (United Nations University Institute for Water, Environment and Health (UNU-INWEH)) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்று, உலகளாவிய 'நீர் திவாலாகும் நிலை' (global water bankruptcy) குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பல ஆற்றுப் படுகைகள் மாசுபட்டுள்ளன மற்றும் கடலுக்கு நீர் வெளியேறாத வகையில் அடைபட்டுள்ளன. நிலத்தடி நீர் ஆதாரங்கள் பாதுகாப்பான அளவைத் தாண்டித் தீர்ந்து வருகின்றன. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கினர் நீர் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் வசிக்கின்றனர். மேலும், சுமார் 400 கோடி (4 பில்லியன்) மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மாதமாவது கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
நீர் உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள்
இந்தியாவின் நீர் வளங்கள் நாடு முழுவதும் சீரற்ற முறையில் பரவியுள்ளன. உலகின் மொத்த நீர் வளத்தில் 4%-ஐக் கொண்ட இந்தியாவானது, 18% மக்கள்தொகைக்கு ஆதாரமாக இருப்பதுடன், வரலாற்று ரீதியாகவே நீர் கிடைப்பதில் நிச்சயமற்றத் தன்மையுடனேயே விளங்குகிறது. 'ஜல் ஜீவன் மிஷன்' (Jal Jeevan Mission) மற்றும் 'பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா' (Pradhan Mantri Krishi Sinchayee Yojana) போன்ற திட்டங்கள் நீர் விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவியிருந்தாலும், பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. குறிப்பாக, ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பராமரிப்பதில் உள்ள குறைபாடுகள், போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாமை, நீர் விநியோகத்தின் போது ஏற்படும் பெரும் இழப்புகள், அதிக அளவிலான நீர் மாசுபாடு மற்றும் செலவுக்கேற்ற வருவாய் ஈட்ட முடியாமை ஆகியவை இதில் அடங்கும்.
இந்த 'நீர் திவால் நிலை'யிலிருந்து (state of bankruptcy) மீண்டு, நீர் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவுக்கு உதவக்கூடிய நான்கு ஒன்றோடொன்று தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளன.
முதலாவதாக, நீர் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் குறித்த விரிவான காலநிலை இடர் மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய நீர் அமைப்புகளை உருவாக்க முதலீடு செய்யவேண்டும். இந்தியாவின் நகர்ப்புற வெள்ள அபாய மேலாண்மை குறித்த எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (Council on Energy, Environment and Water (CEEW)) பகுப்பாய்வு, இத்தகைய மதிப்பீடுகள் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க உதவுவதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தானே (மகாராஷ்டிரா) மற்றும் நவ்சாரி (குஜராத்) போன்ற கடலோர மற்றும் தாழ்வான பகுதிகள் அல்லது அகமதாபாத்தில் காணப்படுவது போல பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளைக் கொண்ட பகுதிகள் இதில் அடங்கும். நிதி நெருக்கடியில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு இத்தகைய மதிப்பீடுகள் மிகவும் அவசியமானவை. இதற்கான நிதியைப் பெற நகரங்கள் 'நகர்ப்புற சவால் நிதி' (Urban Challenge Fund(UCF)) போன்ற ஏற்கனவே உள்ள நிதி வழங்கும் வழிமுறைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) சமீபத்தில் குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளுக்காக நகர்ப்புற சவால் நிதியின் (UCF) கீழ் ₹1,501 கோடி நிதியைப் பெற்றது. இந்த நிதியின் ஒரு பகுதியை நீர் சார்ந்த பற்றாக்குறையான மதிப்பீடுகளுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக, நகர்ப்புறங்களில் குடிநீரல்லாத தேவைகளுக்கு நீரை மீண்டும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். நன்னீர் வளங்களின் (freshwater resources) மீதான அழுத்தத்தைக் குறைக்க, நீர் பயன்பாட்டில் நேர்கோட்டு (linear) அணுகுமுறையிலிருந்து வட்டமுறை (circular) அணுகுமுறைக்கு மாறுவது அவசியமாகும். பயன்படுத்தப்பட்ட நீரைச் சுத்திகரித்து, கார் கழுவுதல், நிலச்சீரமைப்பு மற்றும் தரவு மையங்களைக் குளிர்வித்தல் போன்ற செயல்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தலாம். இதை அடைவதற்கு நகர அளவிலான மறுபயன்பாட்டுத் திட்டமிடல் முக்கியமானது. தானே (மகாராஷ்டிரா) மாநகராட்சி, தனது தினசரி 53 மில்லியன் லிட்டர் நன்னீர் பற்றாக்குறையைக் குறைக்கவும் வருவாய் ஈட்டவும், கட்டுமானம் உட்பட சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதை விரிவுபடுத்த ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) பகுப்பாய்வின்படி, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வாய்ப்பு ₹3 லட்சம் கோடியை எட்டக்கூடும் மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் கூடுதலாக 1,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
மூன்றாவதாக, வெள்ளப் பாசனத்தைவிட அதிகத் திறனுடன் பயிர்களுக்கு நீரை வழங்கும் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் தொழில்நுட்பங்கள் (drip and sprinkler technologies) உள்ளிட்ட நுண்பாசன அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவின் 72 மில்லியன் ஹெக்டேர் பாசனப் பரப்பில் தற்போதுள்ள 20% மட்டுமே நுண்-நீர்ப்பாசனத்தின்கீழ் உள்ளது. இந்த அளவை அதிகரிக்கப் பெரிய அளவிலான முயற்சிகள் தேவைப்படுகின்றன. முதலில், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) குஜராத் ஆய்வு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான நுண்-நீர்ப்பாசன மானியங்களை, ஒரு ஹெக்டேருக்குப் பதிலாக 0.4 ஹெக்டேரை அடிப்படை அலகாகப் பயன்படுத்தி மறுவடிவமைக்க வேண்டும் என்று காட்டுகிறது. இரண்டாவதாக, ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் காணப்படுவது போல, செலவுகளை ஈடுசெய்ய, தோட்டக்கலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற குறைந்த நீர் தேவைப்படும், அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு மாறுவதற்கு விவசாயிகளுக்கு ஆதரவு தேவை. மூன்றாவதாக, வலுப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) உட்பட, விரைவான இழப்பீட்டு கோரிக்கைகளுடன் கூடிய குறைந்த செலவிலான காப்பீடு, சிறு விவசாயிகள் காலநிலை மற்றும் பயிர் சார்ந்த இடர்பாடுகளைச் சமாளிக்க உதவும்.
நீர் தொடர்பான தரவு இடைவெளிகளை நிரப்புதல்
இறுதியாக, முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த, ஆற்றுப் படுகை (river basin) என்ற நிலையில் தரவுகளை உருவாக்க வேண்டும். இந்தியாவில் நீர் இருப்பு குறித்த நல்ல தரவுகள் உள்ளன. இருப்பினும், ஆற்றுப் படுகை அளவில் நீர் எடுப்பு, நீர் இழப்பு மற்றும் உண்மையான நுகர்வு குறித்த தரவுகள் குறைவாகவே உள்ளன. மேலும், இது நீர் பயன்பாட்டுத் திறனை மதிப்பிடுவதோ அல்லது பல்வேறு துறைகளுக்கு இடையே நீரை நியாயமாகப் பகிர்ந்தளிப்பதோ சவாலாக அமைகிறது. இதன் விளைவாக, ஒரு துறை பெரும்பாலும் மற்ற துறைகளின் இழப்பில் பயனடைகிறது. அதே நேரத்தில் தரவுகளின் பற்றாக்குறை, பயனர்கள் நீர் ஆதாரம் அனுமதிக்கும் அளவுக்கு நீரை எடுக்கும் "இலவசப் பயன்பாட்டு மனப்பான்மையை" (free riding) ஊக்குவிக்கிறது. அதாவது, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நீர் கொண்டுசெல்லும் உள்கட்டமைப்பைக் கண்காணிப்பது, இழப்புகளைக் கண்டறிந்து அளவிடவும், தரவுகளை உருவாக்கவும் உதவும். டெல்லி மற்றும் புவனேஸ்வர் (ஒடிசா) போன்ற நகரங்கள், நீர் விநியோகத்தின் போது ஏற்படும் நீர் இழப்பைக் கண்டறிந்து அதைக் குறைப்பதற்காக, திறன்மிகு மொத்த நீர் அளவீட்டுக் கருவிகளை (smart bulk water meters) நிறுவி வருகின்றன. திறன்மிகு நீர் அளவீட்டுக் கருவியை (smart water meters) விரிவுபடுத்துவதன் மூலமும், மேம்பட்ட நீர் கணக்கீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் இறுதிப் பயனர் நுகர்வைப் பகுப்பாய்வு செய்வது சம முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் 4.93 கோடிக்கும் அதிகமான திறன்மிகு மின்சார அளவீட்டுக் கருவிகள் (smart electricity meters) நிறுவப்பட்டிருப்பது, நீர் துறைக்கு ஒரு முன்மாதிரியாக அமையலாம்.
நீர் என்பது ஒரு முக்கியமான பொருளாதார வளமாகும். இது மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் சூழல் மண்டலங்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நீர்ப் பற்றாக்குறையை மாற்றுவதே சமூக நலனின் அடித்தளமாக அமையும். அரசியல் உறுதி, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சமூக நம்பிக்கை ஆகியவை தேவைப்படுகின்றன. அவற்றைச் செயல்படுத்தினால், இந்தியாவால் இன்னும் நீர் பாதுகாப்புள்ள எதிர்காலத்தை நோக்கிப் போக்கைத் திருப்ப முடியும்.
நிதின் பாசி, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) ஆய்வாளர் ஆவார்.
Original articles : Building water security in a rapidly drying India -Nitin Bassi