இந்தியாவின் ஆளில்லா விமானம் (drone) சார்ந்த இலக்குகளுக்கு மேம்பட்ட ஒப்பந்தங்களும் தொடர்ச்சியான புத்தாக்கமும் தேவைப்படுகின்றன.
உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆளில்லா விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது, உள்நாட்டு உற்பத்திக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, நாட்டின் வளர்ந்துவரும் ஆளில்லா விமானத் தொழில்துறைக்கும் ஊக்கமளிக்கும். மேலும், போர் விமானங்கள் போன்ற பெரிய, அதிநவீன தளங்களை வாங்குவதிலிருந்து, சிறிய, மலிவான மற்றும் எளிதில் இழப்பைத் தாங்கக்கூடிய (அதாவது, போரில் சேதமடைந்தாலும் பெரிய இழப்பு ஏற்படாத) அமைப்புகளை வாங்கும் ஒரு மாற்றத்தையும் இது குறிக்கிறது. இந்த மாற்றம், கொள்முதல் நடைமுறைகள் இத்தொழிலில் உள்ள சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
டாங்கிகள் (tanks) மற்றும் போர் விமானங்கள் (fighter jets) போன்ற அமைப்புகளைக் கையாளும் நீண்டகால மூலதனக் கொள்முதல், மேம்படுத்தல்கள் மற்றும் மாற்றங்களுக்கான விரைவான தேவையை ஈடுகட்டுவதில் சிரமப்படக்கூடும். இந்தத் தளங்களில் பணம் செலவழிக்கத் தயாராக இருப்பது ஒரு நல்ல அறிகுறி, ஆனால் கொள்முதல் அமைப்புகள் அதைச் சரியான முறையில் செலவழிக்குமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாக உள்ளது.
ஆளில்லா விமானங்களின் பொருளாதாரம் (The economics of drones)
இராணுவ ஆளில்லா விமானங்கள் பற்றிய பொது விவாதங்கள் பொதுவாக MQ-9B ரீப்பர் (MQ-9B Reaper) மற்றும் பேரக்டர் TB-2 (Bayraktar TB-2) போன்ற பெரிய ஆளில்லா போர் வானூர்திகளை (uncrewed combat aerial vehicles (UCAV)) மையமாகக் கொண்டிருந்தாலும், சமீபத்திய மோதல்கள் சிறிய, மலிவான ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை எடுத்துக்காட்டியுள்ளன.
இவை பொதுவாக ‘மைக்ரோ’ மற்றும் ‘நானோ’ அளவிலான ஆளில்லா விமானங்களைக் கொண்டுள்ளதோடு, இவை குறைந்த செலவில் தயாரிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியதும், ரஷ்யா-உக்ரைன் போரில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதும் இந்தக் கொள்கையைப் பின்பற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக விலை கொண்ட கருவிகளைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை இடைமறிப்பது, பொதுவாக அந்த ஆளில்லா விமானங்களின் விலையை விட மிகவும் அதிகமாகும். சமீபத்திய போர்களில், மலிவான ஆளில்லா விமானங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, அவற்றை பெருமளவில் களமிறக்குவதே ஒரு முக்கிய நிலையாக இருந்து வருகிறது. முதலில் வணிகப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளும் மாற்றியமைப்புகளும், இராணுவ நோக்கங்களை அடைவதற்கான ஒரு குறைந்த செலவிலான ஒரு வழியாக அமைந்துள்ளது.
போர்முனைகள் பொருத்தப்பட்ட, நேரடிப் பார்வை (first-person-view (FPV)) ஆளில்லா விமானங்களை உக்ரைன் பயன்படுத்தியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, இராணுவ ஆளில்லா விமானத் துறையில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள், பொதுமக்களுக்கான ஆளில்லா விமானத் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளன. இது தொடர்ச்சியான மற்றும் கூட்டு முயற்சியிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செயல்முறைகளின் தேவையை உருவாக்குகிறது. தொழில் துறை, கல்வித் துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றிற்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் நன்மைகளைச் சீன ஆளில்லா விமானத் துறை ஒரு சிறந்த உதாரணமாகக் காட்டுகிறது.
ஆளில்லா விமானம் காலத்திற்கேற்ற பொருத்தத்தின் சவால்
உத்திசார்ந்த ஆளில்லா விமானங்களைக் கொள்முதல் செய்வதில் உள்ள மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், சவால் என்பது அவற்றை வாங்குவதில் இல்லை, மாறாக அவை தொடர்ந்து காலத்திற்கேற்ப பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதில்தான் உள்ளது. 2015-ல் வாங்கப்பட்ட ஒரு அதிநவீன போர் விமானம் அல்லது பீரங்கி இன்றும் ஒப்பீட்டளவில் புதியதாகவே உள்ளது. மேலும், அது ஓரளவிற்குப் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது. எதிரிகளின் திறன்களும் அச்சுறுத்தல் சூழல்களும் தொடர்ந்து மாறிவருவதால், இன்று வாங்கப்படும் உத்திசார்ந்த ஆளில்லா விமானங்கள் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கொழிந்து போகக்கூடும். எதிரியின் மின்னணுப் போர் (EW) பிரிவுகள், ஒரு புதிய ஆளில்லா விமானங்களின் சிக்னலுக்கு ஏற்ப தங்களின் ஜாமர்களை (jammers) ஆறிலிருந்து எட்டு வாரங்களுக்குள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
உக்ரேனியப் பொறியாளர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டபோது, வேறுபட்ட தகவல் தொடர்பு இணைப்புகளுடன் கூடிய புதிய அமைப்புகளை வாங்குவது தீர்வாக அமையவில்லை. மாறாக ரேடியோ இணைப்புகளுக்குப் பதிலாக ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைப் (fibre-optic cables) பயன்படுத்துவதே தீர்வாக இருந்தது. எனவே, கொள்முதல் மற்றும் மேம்பாட்டுச் செயல்முறைகள் விரைவாக இருக்க வேண்டும். மேலும் தேவையற்ற நிர்வாகத் தடைகள் மற்றும் அதிகாரத்துவ காலக்கெடுவின் கட்டுப்பாடுகள் இன்றி, விரைவான மாற்றங்களையும் மேம்படுத்தல்களையும் செய்ய அவை வழிவகுக்க வேண்டும்.
இந்தியாவின் கொள்முதல் கட்டமைப்புகள் இந்த நிலையில் சில நல்ல விதிகளை உருவாக்கியுள்ளன. இருப்பினும், இதில் மேலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (Defence Acquisition Procedure (DAP)) வரைவானது, ஆயுதப் படைகள் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய (commercial-off-the-shelf (COTS)) அமைப்புகளைக் கொள்முதல் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம், வணிக ரீதியான ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடிய இடங்களில் எல்லாம் அவற்றை வாங்க முடிகிறது. மேம்படுத்தல்களை நெறிப்படுத்துவதற்கான விதிகளையும் இந்த பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DAP) கொண்டுள்ளது. பாதுகாப்பு கொள்முதல் கையேடு (Defence Procurement Manual (DPM)), எதிர்பாராத பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை (financial buffers) வழங்குகிறது. இவை விவேகமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளாகும்.
தற்போதைய கொள்முதல் கட்டமைப்புகளின் முக்கிய பலவீனம் என்னவென்றால், வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் பரிவர்த்தனை சார்ந்ததாகவே உள்ளது. அரசாங்கம் ஒரு தேவையை அடையாளம் கண்டவுடன், அது ஒரு ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டு, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு பொருளைக் கொள்முதல் செய்ய முடியும் என்பதே இதன் அடிப்படை அனுமானமாகும்.
இருப்பினும், தொழில்நுட்பம் வேகமாக வளரும் ஒரு துறையில், தயாரிப்புகளுக்குத் தொடர்ச்சியான மாற்றங்களும் மேம்பாடுகளும் தேவைப்படுகின்றன.
பரிவர்த்தனைகள் அல்ல, கூட்டாண்மைகள்
உத்திசார்ந்த ஆளில்லா விமானக் கொள்முதலுக்கான மிகவும் பொருத்தமான மாதிரி, வன்பொருளை (hardware) வாங்குவதைப் போலன்றி, ஒரு மேலாண்மை செய்யப்பட்ட சேவை ஒப்பந்தத்தை ஒத்திருக்கலாம்.
உதாரணமாக, பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் கணினிகளுடன் பராமரிப்பு சேவைகள், மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் மாற்று ஆதரவையும் சேர்த்து கொள்முதல் செய்கின்றன. அதேபோல், ஆயுதப் படைகள் ஆளில்லா விமானங்கள் உற்பத்தியாளர்களுடன் நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம். இத்தகைய ஒப்பந்தங்கள், எதிர்காலத் தேவை குறித்து தொழில்துறைக்கு அதிக முன்கணிப்பை வழங்கும். அதேநேரத்தில், அவை ஆளில்லா விமானங்களின் நம்பகமான விநியோகத்தை உறுதிசெய்து, மேம்படுத்தல்களுக்குத் தெளிவான வழிமுறைகளை வழங்கி, மோதல்களின் போது இதற்கான உற்பத்தியை விரைவாக அதிகரிக்கும் திறனுக்கு வழிவகுக்கும். மேலும், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் மாறிவரும் மின்னணுப் போர் அச்சுறுத்தல்களுக்கு ஏற்பத் தழுவல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கான ஒரு கட்டமைப்பையும் அவை உருவாக்கும். மிக முக்கியமாக, தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்ந்து உருவாக வரும் ஒரு களத்தில், ஆயுதப் படைகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பை அவை வளர்க்கும்.
இந்தியாவின் கொள்கைக் கட்டமைப்புகள் சரியான திசையில் தொடர்ந்து முன்னேறிவரும் வேளையில், இந்தக் கட்டமைப்புகளுக்குள் செய்யப்படும் கட்டமைப்பு மாற்றங்கள், உத்திசார்ந்த ஆளில்லா விமானங்களின் விரைவான பரிணாம வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் ஒரு சூழலை உருவாக்க உதவக்கூடும். மேலும் மேம்பட்ட கொள்முதல் உறவை ஆதரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப அடித்தளத்தை இந்தியாவின் உள்நாட்டு ஆளில்லா விமானத் தொழில் கொண்டுள்ளது. 2 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த உறுதிப்பாடு, அதற்கான அரசியல் விருப்பம் உள்ளது என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறியாகும். இந்த உறுதிப்பாட்டைச் சரியான ஒப்பந்தக் கட்டமைப்பாக மாற்றுவதே அடுத்த தர்க்கரீதியான படியாகும். அத்தகைய கட்டமைப்பு, ஒருமுறை வழங்குவதைவிட, நீடித்த திறனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆத்யா மாதவன் தக்ஷஷிலா நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார்.
Original link;
Moving from drone purchases to drone partnerships.