குறிப்பு மற்றும் தனித்துவமான மெய்நிகர் முகவரிக்கான டிஜிட்டல் மையத்தின் (Digital Hub for Reference and Unique Virtual Address (DHRUVA))-ன் பயன்பாட்டு நிகழ்வுகள் என்னவாக இருக்கும்?
மே மாதத்தில், அஞ்சல் துறை குறிப்பு மற்றும் தனித்துவமான மெய்நிகர் முகவரிக்கான டிஜிட்டல் மையம் (DHRUVA) எனப்படும் ஒரு அமைப்பை பரிந்துரைத்தது. இது மின்னஞ்சல் முகவரிகளைப் போலவே, மக்கள் பயன்படுத்த எளிதான டிஜிட்டல் அடையாளக் குறிகளை (labels) உருவாக்கி அதைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. குறிப்பு மற்றும் தனித்துவமான மெய்நிகர் முகவரிக்கான டிஜிட்டல் மையம் அரசாங்க சேவைகளை மேம்படுத்துவதையும், அவற்றை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதையும், பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. DHRUVA-வை செயல்படுத்துவதற்காக, 2023ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலகச் சட்டத்தில் (Post Office Act) ஒரு வரைவுத் திருத்தத்தை அரசாங்கம் வெளியிட்டது. இருப்பிட ஆயத்தொலைவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 10 இலக்கக் குறியீடான DIGIPIN அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இது நிகழ்கிறது.
DHRUVA என்றால் என்ன?
ஆதார் மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) போன்றவற்றுடன் DHRUVA ஒரு பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பாக (Digital Public Infrastructure (DPI)) முன்மொழியப்படுகிறது. இந்த சேவை, இந்தியா அஞ்சல் துறை, அமேசான் அல்லது உபர் போன்ற நிறுவனங்களுக்கு, பயனர்கள் தங்கள் முழு முகவரியையும் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக ஒரு எளிய "அடையாள குறியை" பெற அனுமதிக்கும். பின்னர், அடையாளக் குறி இறுதி பயனரால் அங்கீகரிக்கப்படும். இது கேள்விக்குரிய தளம் "விளக்கமான" முகவரி மற்றும் "புவிசார்-குறியிடப்பட்ட" DIGIPIN இரண்டையும் பெற அனுமதிக்கும்.
டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண் (Digital Postal Index Number (DIGIPIN) என்பது ஒரு திறந்த மூல இருப்பிட பின் அமைப்பாகும். இந்திய அஞ்சல் துறையே இதை உருவாக்கியது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 12 சதுர மீட்டர் தொகுதிக்கும் அதன் தனித்துவமான DIGIPIN உள்ளது. குறைந்தபட்சம் அஞ்சல் வலையமைப்பிற்குள், துல்லியமான விளக்க முகவரிகள் எப்போதும் கிடைக்காத (அல்லது சாத்தியமான) கிராமப்புறங்களில் இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், அஞ்சல் குறியீட்டிற்கு கூடுதலாக, ஒரு துல்லியமான இருப்பிடத்துடன் அஞ்சல் விநியோக ஊழியர்களுக்கு உதவும் என்றும் இந்தியா அஞ்சல் துறை நம்புகிறது.
DHRUVA-வின் அமைப்பில் பல்வேறு குழுக்கள் உள்ளன: முகவரி சேவை வழங்குநர்கள் எளிய முகவரி அடையாளக் குறிகளை உருவாக்குகிறார்கள் (amit@dhruva போன்றவை); முகவரி சரிபார்ப்பு முகவர்கள் முகவரிகள் உண்மையானவையா என்பதைச் சரிபார்க்கிறார்கள்; முகவரி தகவல் முகவர்கள் பயனர்கள் தங்கள் முகவரியை யார் காணலாம் என்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறார்கள்; மேலும், தேசிய கட்டணக் கழகத்தைப் (National Payments Corporation of India) போன்ற ஒரு முக்கிய அமைப்பு, முழுக் கட்டமைப்பையும் நிர்வகித்து மேற்பார்வையிடும்.
DHRUVA எவ்வாறு பயன்படுத்தப்படும்?
ஒப்புதல் அடிப்படையிலான தரவுப் பகிர்வுதான் இதன் முக்கியப் பணியாக இருக்கும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்குகளுக்கு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) செய்வது போல, மக்கள் தங்கள் முகவரிகளை டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றலாம். இது ஒப்புதல் முறையைப் பயன்படுத்தி யார் தங்கள் முகவரியை எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. மற்றொரு பயனுள்ள அம்சம் முகவரி புதுப்பிப்புகளை எளிதாக்குவதாகும், இதன் மூலம் மக்கள் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகும்கூட வழக்கமான டெலிவரிகளை சீராகப் பெற முடியும்.
இதனால் DHRUVA பயனர்கள் தங்கள் முகவரிகளை பொது மற்றும் தனியார் டிஜிட்டல் தளங்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும். இடைத்தரகர்கள் தங்கள் இருப்பிடத்தில் என்ன சேவைகள் கிடைக்கின்றன என்பதைக் காட்ட அனுமதிப்பதன் மூலம், இது பயனர்களுக்கு "சேவை கண்டுபிடிப்பிலும்" உதவும் என்று அஞ்சல் துறை கூறியது. இத்தகைய கட்டமைப்பு செயல்பட தரவுகளைச் சேகரிக்க வேண்டியிருப்பதால், நிதி உள்ளடக்கம் (financial inclusion) போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இலாப நோக்கமற்ற கொள்கை ஆராய்ச்சிக் குழுமமான Dvara Research, இதற்கு அங்கீகாரம் அளிக்க ஒரு சட்ட வரைவு தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது நகர்ப்புற நிர்வாகத்திற்கு உதவியாக இருக்குமா?
DHRUVA-வின் எதிர்கால நிதி முன்முயற்சியை வழிநடத்தும் பெனி சுக், நகர்ப்புற நிர்வாகத்தை செயல்படுத்த இந்த அமைப்பு உதவியாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று வாதிட்டார். ஏனெனில், இது கற்பனை செய்த முகவரிகள் மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, தன்னிச்சையாக ஆய்வு செய்யப்பட்ட கட்டமைப்புகள் அல்ல. இந்த அமைப்பு முகவரிகளுடன் தனிப்பட்ட விவரங்களையும் சேகரிப்பதால், அந்தத் தகவலைப் பகிர்வதற்கு ஒப்புதல் அடிப்படையிலான வழிமுறையைப் (consent-based mechanism) பயன்படுத்த வேண்டும் என்று சக் கூறினார்.
மக்கள் தங்கள் முகவரிகளைப் பகிரவோ அல்லது முகவரிக் குறியீடுகளை உருவாக்கவோ விரும்பவில்லை என்றால், கட்டிடங்கள் மற்றும் மக்கள் தொகை பற்றிய தரவு முழுமையடையாமல் போகலாம். இது நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கு இந்த அமைப்பைப் பயன்படுத்துவதைக் குறைக்கக்கூடும். உலகின் பெரும்பாலான பகுதிகளில், முகவரிகளின் டிஜிட்டல் மயமாக்கல் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்குவதில்லை; இது பயனர்களின் ஒப்புதல் தேவையை முன்கூட்டியே தவிர்த்து, மிகவும் செழுமையான தரவுத்தொகுப்புகளை அனுமதிக்கிறது.
Original article : What is the India Post’s DHRUVA framework? -Aroon Deep