இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பில் ஈரானிய கச்சா எண்ணெயின் பங்கு என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• ஈரான் நாட்டுத் துறைமுகங்கள்மீது விதித்திருந்த கடற்படை முற்றுகையை நீக்குவதற்கும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. பல ஆண்டுகளாகத் தங்களது கச்சா எண்ணெய் பெரும்பாலும் சீனாவிற்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் இந்த முற்றுகை நீக்கம் மற்றும் பொருளாதாரத் தடைகளில் இருந்து அளிக்கப்பட்டுள்ள விலக்கு ஆகியவை, தங்கள் நாட்டு எண்ணெயை உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்ய உதவும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது.


• ஈரான் மீதான தடைகளில் இருந்து அளிக்கப்பட்டுள்ள இந்த விலக்கு,                ஒரு காலத்தில் ஈரானிய கச்சா எண்ணெய்யை பெருமளவில் இறக்குமதி செய்து வந்த இந்தியாவிற்கு, மீண்டும் அங்கிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தபடி, ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனம் (National Iranian Oil Company (NIOC)) இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச எண்ணெய் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளது. தங்களுடனான வணிகத் தொடர்புகளை மீண்டும் தொடங்குவதற்கும், இதுகுறித்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


• இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் துறை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்திய நிறுவனங்கள் ஈரான் தரப்புடன் தொடர்பில் இருந்து வருகின்றன. மேலும், அமெரிக்கா வழங்கியுள்ள சிறப்பு விலக்கின்கீழ், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியிலான சாத்தியக்கூறுகள் குறித்து இருதரப்பும் ஆலோசித்து வருகின்றன.


• ஒரு குறிப்பிட்ட கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் பொருந்துமா மற்றும் அதை விலைக்கு வாங்குவது வணிக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் சாத்தியமான ஒன்றுதானா என்பதைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் ஒரு விரிவான மதிப்பீடே தொழில்நுட்ப-வணிகச் சாத்தியக்கூறு ஆய்வு (Techno-commercial feasibility study) ஆகும்.


• எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், அடுத்த இரண்டு மாதங்களில் சில ஈரானிய கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வந்தடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்போதைக்கு பெரிய அளவிலான இறக்குமதிகள் இருக்காது என்றே தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.


• இந்த அமைதி ஒப்பந்தம் மிகவும் பலவீனமான ஒன்றாக இருப்பதாலும், ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்து நீண்டகாலத்திற்குத் தெளிவான சூழல் இல்லாததாலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தற்காலிக விலக்கு கிடைத்தாலும்கூட, ஈரான் எண்ணெய் வர்த்தகத்தில் வழக்கமாக எதிர்கொள்ளப்படும் போக்குவரத்து மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான சிக்கல்கள் சீராகுமா என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.


• ஈரான் நாட்டின் கச்சா எண்ணெயை வாங்கத் திட்டமிடும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் முக்கியமாக மூன்று காரணிகளைக் கருத்தில் கொள்கின்றன, அவை: பொருளாதாரத் தடைகளில் இருந்து அளிக்கப்படும் விலக்கு எவ்வளவு காலம் நீடிக்கும், அதன் விலை மற்றும் தள்ளுபடிகள், மற்றும் பணம் செலுத்துதல், காப்பீடு, கப்பல் போக்குவரத்துத் தொடர்புகள் ஆகியவை ஆகும். இந்த மூன்றில், பணப் பரிவர்த்தனை செய்வதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும், என்று கச்சா எண்ணெய் மற்றும் வணிகச் சந்தை ஆய்வு நிறுவனமான கெப்ளரின் (Kpler) சுத்திகரிப்புப் பிரிவு மேலாளர் சுமித் ரிடோலியா கூறினார்.


• ஈரானின் பெட்ரோலியத் துறை மட்டுமன்றி, அதன் நிதித் துறையும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பணப் பரிவர்த்தனை மற்றும் இதர விநியோக நடைமுறைகளில் பெரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன.                 இந்தச் சிக்கல்களில் தெளிவான தீர்வு கிடைத்த பிறகே, ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து முடிவு செய்ய முடியும் என்று இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளுக்கு ஈரான் ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவே, அமெரிக்கத் தடைகளின்கீழ் உள்ள நாடுகளிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை இந்திய நிறுவனங்கள் தவிர்க்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


• மேற்காசியப் போரின்போது ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா ஒரு மாதகால விலக்கு அளித்திருந்தது. அந்த ஒருமாத காலத்தில் இந்தியா வாங்கிய எண்ணெயின் அளவை வைத்துப் பார்க்கும்போது, ஈரான் நாட்டில் இருந்து இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை உடனடியாகவோ அல்லது வேகமாவோ அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


• ஏறத்தாழ ஏழு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கியுள்ளன. இருப்பினும், வணிகத் தகவல் மற்றும் புள்ளியியல் பொது இயக்குநரகத்தின் (Directorate General of Commercial Intelligence and Statistics (DGCIS)) தரவுகளின்படி, ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அளவு வெறும் 5,30,000 டன்கள் மட்டுமே ஆகும். இது அந்த மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 3% மட்டுமே ஆகும். இதற்கு முன்பு வழங்கப்பட்ட கட்டண விலக்கு முறையின்போது, பணப்பரிவர்த்தனைக் கட்டுப்பாடுகள் மற்றும் இதர சவால்கள் காரணமாக சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது என்று ரிடோலியா தெரிவித்தார்.



• மேலும், கடந்தமுறை ஈரான் மீதான தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தபோது, இந்தியா முக்கியமாக ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்தது. ஏனெனில், அப்போது பிற மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டதால் இந்தியாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகும்பட்சத்தில், ஈரானிய எண்ணெயை வாங்குவதில் இருக்கும் சர்வதேச விதிமுறைச் சிக்கல்களையும் ஆபத்துகளையும் ஏற்பதற்கு இந்தியாவுக்குப் பெரிய காரணங்கள் எதுவும் இருக்காது என்று கடோனா தெரிவித்துள்ளார்.


• மார்ச்  மாதம் 20-ஆம் தேதி வழங்கப்பட்ட முந்தைய விதிவிலக்கை கவனிப்பது இதற்கு உதவிகரமாக இருக்கும். அதன்படி, ஈரான் நாட்டிடமிருந்து இந்தியா இரண்டு முறை மட்டுமே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது; அவை ஏப்ரல் மாத பாதியில் இந்தியாவை வந்தடைந்தன. அந்த நடைமுறையை வைத்துப் பார்க்கும்போது, ஜூலை மாதத்தின் இரண்டாவது பாதியில் ஈரான் எண்ணெயை வாங்குவதில் இந்திய நிறுவனங்களுக்குப் மிகப்பெரிய அளவில் ஆர்வம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் ஏனெனில், அந்த விதிவிலக்கு காலம் முடிவதற்குள் பணப் பரிவர்த்தனைகளையும், எண்ணெய் விநியோகத்தையும் முழுமையாக முடிப்பதற்குப் போதிய நேரம் இருக்க வேண்டும் என்பதால், நிறுவனங்கள் அந்த ஜூலை இறுதி வாரங்களில் தங்களால் முடிந்தவரை அதிக எண்ணெயை வாங்கிப் பாதுகாக்கவே முயற்சிக்கும் என்றும் கடோனா தெரிவித்துள்ளார்.


• அவருடைய கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதிக்குப் பிறகு ஈரானிய நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணங்கள், கடுமையான விதிமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வாய்ப்பில்லை. அதன்பிறகும், அவர்கள் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவார்களா என்பது, பெரும்பாலும் அதற்கான விலக்கு நீட்டிக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது.



• கச்சா எண்ணெயை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மேம்பட்டாலும் கூட, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் வரை, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயைப் பெருமளவில் வாங்குவதற்கு வாய்ப்பில்லை. இப்போதைய முக்கிய சவால், இன்று ஈரானிய கச்சா எண்ணெயைப் பெறுவது மட்டுமல்ல; எதிர்காலத்திலும் இந்த வர்த்தகத்தை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும், என்று ரிடோலியா கூறினார்.


• ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியவுடன், ஈரானின் கச்சா எண்ணெயை மிக அதிகமாக வாங்கும் நாடாக சீனா மீண்டும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு வரை, ஈரான் ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த கச்சா எண்ணெயில் ஏறக்குறைய பெரும்பாலான அளவை சீனாதான் இறக்குமதி செய்து கொண்டிருந்தது. சீன வியாபரிகளுக்கும் ஈரான் விற்பனையாளர்களுக்கும் இடையே ஏற்கனவே மிகவும் பாதுகாப்பான, வலுவான போக்குவரத்து மற்றும் பணப் பரிவர்த்தனை முறைகள் நடைமுறையில் உள்ளன. எனவே, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்தால், அவர்கள் சீன வியாபரிகளுடனும், அந்த எண்ணெயை வாங்க ஆர்வமாக இருக்கும் மற்ற நாடுகளுடனும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Original Link: What is the role of Iranian oil in India’s energy security?

Share: