ராமர் கோயில் நிதி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் மறுப்பு : இது சட்டப்படி சரியா? - சதாஃப் மோடக்

ஒரு வழக்கறிஞர், நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில், தனது தொழில்முறை தகுதி மற்றும் வழக்கின் தன்மைக்கு ஏற்ற கட்டணத்தில் எந்தவொரு வழக்கையும் (brief) ஏற்று நடத்தக் கடமைப்பட்டவர். இத்தகைய அறிவிப்புகள் குறித்து நீதிமன்றங்கள் முன்பு வழங்கிய தீர்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


இராமர் கோயில் நிதியை முறைகேடு செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட எட்டு பேர் சார்பாகத் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட மாட்டார்கள் என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் திங்கள்கிழமை (ஜூன் 29) அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சங்கம் கூறியது.


"அரசியலமைப்புச் சட்டம், சட்ட விதிகள் மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு முரணானது" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதிலும், வழக்கறிஞர்கள் சங்கங்கள் இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுவது இது முதல் முறையல்ல.


குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்குத் தற்காத்துக்கொள்ளும் உரிமை குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?


அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(1), ஒவ்வொரு நபருக்கும் தங்களுக்கு விருப்பமான ஒரு வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்கவும், அவர் மூலம் தற்காத்துக்கொள்ளவும் உள்ள உரிமையை மறுக்கக்கூடாது என்ற அடிப்படை உரிமையை வழங்குகிறது.



பிரிவு 14, இந்திய எல்லைக்குள் சட்டத்தின் முன் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சட்டங்களின் சமமான பாதுகாப்பை உறுதி செய்கிறது. அரசு கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியான பிரிவு 39A, நீதி அமைப்பானது நீதியை ஊக்குவிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருளாதார அல்லது பிற தடைகள் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதியைப் பெறுவதற்கான சம வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்காக இலவச சட்ட உதவியை வழங்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.


இத்தகைய தீர்மானங்கள் குறித்து உச்சநீதிமன்றம் என்ன கூறியுள்ளது?


2010-ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்கும்போது, ​​நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் ஜியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கறிஞர்கள் சங்கங்கள் நிறைவேற்றும் தீர்மானங்களின் சட்டவிரோதத் தன்மை குறித்து விரிவாக ஆய்வு செய்தது.


2006-ம் ஆண்டில் கோயம்புத்தூரில் ஒரு வழக்கறிஞருக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த வழக்கு உருவானது. அதைத் தொடர்ந்து, காவல்துறை ஊழியர்களுக்காக எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட அனுமதிக்கக்கூடாது என்று வழக்கறிஞர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். சென்னை உயர்நீதிமன்றம் இச்செயலை "தொழில்முறைக்கு முரணானது" என்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.


அந்த மேல்முறையீட்டு வழக்கின் ஏ.எஸ். முகமது ரஃபி vs தமிழ்நாடு அரசு (A S Mohammed Rafi vs State of Tamil Nadu)  விசாரணையின் போது, ​​"மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த" இந்த விவகாரம் நீதிபதிகள் அமர்வுக்கு "ஆழ்ந்த மனவேதனையை" ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றம் கூறியது. "எங்கள் கருத்தின்படி, இத்தகைய தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானவை, வழக்கறிஞர் தொழிலின் அனைத்து மரபுகளுக்கும் மற்றும் தொழில்முறை நெறிமுறைகளுக்கும் எதிரானவை. ஒரு நபர், சமூகத்தால் எவ்வளவுதான் தீயவராக, சீரழிந்தவராக, கீழ்த்தரமானவராக, வக்கிரமானவராக, அருவருப்பானவராக, கொடியவராக அல்லது வெறுக்கத்தக்கவராகக் கருதப்பட்டாலும், அவருக்கு நீதிமன்றத்தில் வாதாட உரிமை உண்டு. அதற்கேற்ப, அவருக்காக வாதாடுவது வழக்கறிஞரின் கடமையாகும்," என்று நீதிமன்றம் கூறியது.


எழுத்தாளர் தாமஸ் பெயினின் (Thomas Paine) உதாரணத்தையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 1792-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றது. வேல்ஸ் இளவரசரின் தலைமைச் சட்ட அதிகாரியாக (Attorney General) இருந்த தாமஸ் எர்ஸ்கின், தாமஸ் பெயினுக்கு ஆதரவாக வாதாடினால் தனது பதவியை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டார். அந்த எச்சரிக்கையையும் மீறி, எர்ஸ்கின் அந்த வழக்கை ஏற்றுக்கொண்டார். குற்றச்சாட்டின் தன்மை அல்லது முன்வைக்கப்படும் வாதங்களின் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஒருவருக்காக வாதாட மறுத்தால், அவர் தவறான முறையில் நீதிபதியின் தன்மையை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகும் என்று அவர் கூறினார்.


பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான புரட்சியாளர்கள், மகாத்மா காந்தி மற்றும் இந்திரா காந்தியின்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்கள், மற்றும் நூரம்பெர்க் விசாரணைகளில் இலட்சக்கணக்கானோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாஜி போர்க் குற்றவாளிகள் போன்ற, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடப்பட்ட பிற வரலாற்று உதாரணங்களையும் உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டியது.


நீதிபதி கட்ஜு எழுதிய உச்சநீதிமன்றத் தீர்ப்பில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்காலத்தில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய புரட்சியாளர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்டரீதியான பாதுகாப்பை வழங்கினர். சில குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்காக வாதாட வழக்கறிஞர் சங்கங்கள் மறுப்பதாக வரும் செய்திகளால் தாங்கள் "கலக்கமடைந்துள்ளதாக" நீதிமன்றம் கூறியிருந்தது. "ஒரு வாடிக்கையாளர் தனது கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருக்கும் வரையிலும், வழக்கறிஞர் வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாத வரையிலும், ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கை ஏற்க மறுக்க முடியாது என்பதே தொழில்முறை நெறிமுறையாகும்."



"எனவே, ஒரு குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்டவருக்காகத் தங்கள் உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர் சங்கம் ஏதேனும் தீர்மானம் நிறைவேற்றுவது, அது சம்பந்தப்பட்டவர் ஒரு காவலராகவோ, அல்லது பயங்கரவாதி, பாலியல் வன்கொடுமையாளர், அல்லது பலரைக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படுபவராகவோ இருந்தாலும் சரி அரசியலமைப்புச் சட்டம், சட்ட விதிகள் மற்றும் தொழில்முறை அறநெறிகள் ஆகிய அனைத்திற்கும் முரணானதாகும்," என்று கூறிய நீதிமன்றம், இத்தகைய தீர்மானங்களை "சட்டத் துறைக்கே ஒரு அவமானம்" என்றும் வர்ணித்தது.


மேலும், அத்தகைய தீர்மானங்கள் செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம், "இந்நாட்டில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் நேர்மையான சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், இத்தகைய தீர்மானங்களைப் புறக்கணிக்கவும் அவற்றை மீறவும் வேண்டும்" என்றும் வலியுறுத்தியது. 


வழக்கறிஞர்களின் தொழில்முறை நெறிமுறைகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன?


வழக்கறிஞர்கள் சட்டத்தின் (Advocates Act) கீழ் பின்பற்றப்பட வேண்டிய 'தொழில்முறை நடத்தை மற்றும் கண்ணியத்திற்கான தரநிலைகளின்' ஒரு பகுதியாக, 'தொழில்முறை தரநிலைகள்' குறித்த விதிகளை இந்திய வழக்கறிஞர்கள் மன்றம் (Bar Council of India) வகுத்துள்ளது. நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில் எந்தவொரு வழக்கையும் (brief), தனது தொழில்முறை தகுதி மற்றும் வழக்கின் தன்மைக்கு ஏற்ற கட்டணத்தில் ஏற்று நடத்த வேண்டிய கடமை ஒரு வழக்கறிஞருக்கு உண்டு.


"சிறப்புச் சூழ்நிலைகளில்" ஒரு குறிப்பிட்ட வழக்கை ஏற்று நடத்த மறுப்பதற்கான வாய்ப்பையும் இவ்விதிகள் வழங்குகின்றன. ஒரு தனிப்பட்ட வழக்கறிஞர் குறிப்பிட்ட ஒரு வழக்கில் ஆஜராகாமல் இருக்கத் தீர்மானிப்பதையே இது குறிக்கிறது என்று உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தெளிவுபடுத்தியது. ஆனால், ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடுவதிலிருந்து அவரைத் தடுக்கும் வகையில், வழக்கறிஞர் சங்க உறுப்பினர் பதவியைப் பறிப்பதாக மிரட்ட முடியாது.


குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடக்கூடாது என்ற தீர்மானங்கள் பொதுவாகக் காணப்படுபவைதானா?


நாடு முழுவதும் உள்ள பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சட்டப் பிரதிநிதித்துவம் கிடைப்பதைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களை அவ்வப்போது நிறைவேற்றியுள்ளன. பொதுவாகப் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள், பயங்கரவாத வழக்குகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்குகளில் இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.


2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதிராக இதேபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வழக்கை நடத்த நியமிக்கப்பட்ட சட்ட உதவி வழக்கறிஞர் கசாப் சார்பாக வாதாட மறுத்துவிட்டார். அதேவேளையில், அவருக்காக வாதாட முன்வந்த மற்றொரு வழக்கறிஞர் ஒரு அரசியல் கட்சியால் அச்சுறுத்தப்பட்டார். பின்னர், ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு அவருக்குக் காவல் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.


Saket Court :  டெல்லியின் தெற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களுக்கான முதன்மை நீதிமன்றம் சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகம் (Saket Court Complex) ஆகும். இது ஆகஸ்ட் 28, 2010 முதல் புது டெல்லியில் செயல்படத் தொடங்கியது.


டிசம்பர் 16, 2012 டெல்லி கூட்டுப் பலாத்கார வழக்குக்குப் பிறகு, சாகேத் நீதிமன்றத்தில் (Saket court) வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க மறுத்து இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். 2019-ல் ஹைதராபாத்தில் 26 வயதுடைய கால்நடை மருத்துவர் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் சட்டப் பிரதிநிதித்துவம் அளிக்க வழக்கறிஞர் சங்கம் மறுத்துவிட்டது. பின்னர் அவர்கள் காவல் துறை என்கவுண்டரில் (மோதலில்) கொல்லப்பட்டனர்.



குருகிராமில் உள்ள ஒரு பள்ளியில் ஏழு வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடும் எந்தவொரு வழக்கறிஞரையும் தடுக்கக்கூடாது என்று குர்கான் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்திற்கு 2017-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆரம்பத்தில் ஒரு பேருந்து நடத்துனரைக் கைது செய்திருந்த காவல்துறை, பின்னர் அக்குற்றத்திற்காக அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு சிறாரைக் கைது செய்தது.


இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றியதற்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?


ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடுபவர்களின் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று கோட்வார் வழக்கறிஞர் சங்கம் (Kotdwar Bar Association)  தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, 2019-ல் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு (writ petition) தாக்கல் செய்யப்பட்டது. அந்தத் தீர்மானம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


எதிர்காலத்தில் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றும் எந்தவொரு வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில வழக்கறிஞர்கள் கவுன்சிலுக்கு (State Bar Council) நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்கள் மீது, 1971-ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் பிரிவு 15(2)-ன் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கலாம் என்று அது கூறியது.


தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களுக்கு நீதிமன்றத்தில் வாதாட எதிர்ப்புத் தெரிவித்து உள்ளூர் வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றிய சூழலில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் வாதாட மறுத்து தீர்மானம் நிறைவேற்றுவது நெறிமுறையற்றதும் சட்டவிரோதமானதுமாகும் என்று 2020-ம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.


Original Link: Ayodhya Bar Association refuses to represent the accused in Ram Temple funds case. Is this legal?

Share: