ஆக்சிடோசின் என்றால் என்ன, அறுவை சிகிச்சை பிரசவங்களில் அது ஏன் மிக முக்கியமானது? -குஷ்பூ குமாரி

சந்தேகிக்கப்படும் போலி ஆக்சிடோசினை தாய்மார்களின் மரணங்களுடன் தொடர்புபடுத்தும் அறிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) இந்தியாவிடம் தகவல்களைக் கேட்டுள்ளது. இருப்பினும், ஆக்சிடோசின் என்றால் என்ன, அறுவைசிகிச்சை பிரசவங்களின்போது அது ஏன் செலுத்தப்படுகிறது. மேலும், உயிருக்கு ஆபத்தான இரத்தப்போக்கைத் தடுப்பதில் அது ஏன் மிக முக்கியமானது?


தற்போதைய செய்தி :


ஜூன் 20 அன்று ஜோத்பூர், பவோட்டாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரசவம் செய்துகொண்ட 8 பெண்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் அறுவைசிகிச்சை பிரசவங்களின் தொடர்புடைய தாய்மார்களின் உடல்நலச் சிக்கல்கள் குறித்து ஒரு புதிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, கோட்டா, பிகானேர் மற்றும் ஜோத்பூர் ஆகிய பகுதிகளில் பல தாய்மார்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. அறுவைசிகிச்சை பிரசவம் (Caesarean section) என்பது தாயின் வயிறு மற்றும் கருப்பையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் ஒரு முறையாகும். இயல்பான பிரசவம் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஆபத்தானதாக அமையக்கூடும் சூழலில் இது பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. பல சூழல்களில், அறுவைசிகிச்சை பிரசவம் உயிர்காக்கும் ஒரு நடைமுறையாக அமைகிறது. இருப்பினும், மற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளையும் போலவே, இதிலும் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

2. அறுவைசிகிச்சை பிரசவம் சிகிச்சையின்போது, ​​பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக, அல்லது சில வாரங்கள் கழித்துக்கூட சிக்கல்கள் ஏற்படலாம். சில சிக்கல்கள் லேசானவையாகவும் சமாளிக்கக்கூடியவையாகவும் இருக்கும். ஆனால், மற்றவை விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் தீவிரமானவையாக மாறக்கூடும்.


3. மிகவும் பொதுவான சிக்கல்களில் ஒன்று தொற்று (infection) ஆகும். அறுவை சிகிச்சைக் காயத்திலோ, கருப்பையின் உள்ளேயோ அல்லது சிறுநீர்கப்பை போன்ற அருகிலுள்ள உறுப்புகளிலோ தொற்று ஏற்படலாம். தொற்று ஏற்பட்ட பெண்களுக்குக் காய்ச்சல், வலி, தையல்களைச் சுற்றி சிவத்தல், வீக்கம் அல்லது துர்நாற்றம் வீசும் வெளியேற்றம் போன்றவை ஏற்படலாம்.


4. பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு (postpartum hemorrhage) என்று  அழைக்கப்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு, மற்றொரு முக்கிய அபாயமாகும். அறுவைசிகிச்சை பிரசவம் என்பது ஒரு அறுவை சிகிச்சை என்பதால், சுகப்பிரசவத்தைவிட இதில் இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். சில சூழல்களில், இரத்தப்போக்கு அதிகமாகும்போது, ​​தாய்க்கு இரத்தமாற்றம் அல்லது அவசர சிகிச்சை தேவைப்படலாம்.


5. மயக்க மருந்து தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம். அறுவைச் சிகிச்சையின்போது, பெண்களுக்கு பொதுவாக முதுகுத்தண்டு மயக்கமருந்து (Spinal Anesthesia), எபிட்யூரல் மயக்கமருந்து (Epidural Anesthesia) அல்லது பொது மயக்கமருந்து வழங்கப்படுகிறது. இந்த மயக்கமருந்துகளின் காரணமாக சிலருக்கு ஒவ்வாமை, சுவாசப் பிரச்சினைகள், குறைந்த இரத்த அழுத்தம், கடுமையான தலைவலி அல்லது குமட்டல் (Nausea) போன்ற பக்கவிளைவுகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.


போலி மருந்துகள் எவ்வாறு சிக்கல்களையும் தாய்மார்களின் இறப்பையும் ஏற்படுத்துகின்றன?


1. கோட்டாவில், பிரசவத்திற்கு முன் பிரசவ வலியை அதிகரிக்கவும், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இரத்த இழப்பைத் தடுக்க கருப்பையைச் சுருக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மருந்தான, போலியான அல்லது தரம் குறைந்த ஆக்சிடோசின் (oxytocin) பயன்படுத்தப்பட்டதே உயிரிழப்புகளுக்குக் முக்கியக் காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. ராஜஸ்தானில் உயிரிழந்த அல்லது உடல்நலச் சிக்கல்களைச் சந்தித்த பல பெண்கள் அதிகப்படியான இரத்த இழப்பைச் சந்தித்திருந்தனர். அந்த மருந்தில் செயல்திறன் கொண்ட மூலப்பொருட்கள் இல்லை என்பதைப் பரிசோதனை முடிவுகள் சுட்டிக்காட்டின.


2. ஆக்ஸிடோசின் என்பது பாலூட்டிகளின் பிட்யூட்டரி சுரப்பியால் இயற்கையாகச் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இது பாலியல் உறவு, பிரசவம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் சமூக பிணைப்பு போன்ற சூழல்களில் வெளியிடப்படுவதால், இதனை சில சமயங்களில் “மகிழ்ச்சியான ஹார்மோன்” (Love Hormone) என்றும் அழைக்கின்றனர். இருப்பினும், இதை வேதியியல்ரீதியாகவும் தயாரிக்க முடியும். மேலும், இது பிரசவத்தின் போது பயன்படுத்துவதற்காக மருந்து நிறுவனங்களால் விற்கப்படுகிறது. இது ஊசி மூலமாகவோ அல்லது மூக்கு வழியாகச் செலுத்தும் திரவமாகவோ வழங்கப்படுகிறது.


3. ஒரு சுகப்பிரசவத்தின்போது, ​​பிரசவ வலியின் தூண்டுதலுக்கு ஏற்ப உடல் கணிசமான அளவு இயற்கையான ஆக்சிடோசினை வெளியிடுகிறது. இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது, ​​தண்டுவட அல்லது எபிடியூரல் மயக்க மருந்துகளின் கீழ், இந்த இயற்கையான ஹார்மோன் சுரப்பு போதுமானதாக இல்லாமல் போகலாம்.


4. அறுவை சிகிச்சை பிரசவத்தின்போது ஏற்படும் சுருக்கங்களின்போது, ​​கருப்பை வலுவாகவும் சீராகவும் சுருங்குவதற்கு உதவுவதற்காக ஆக்சிடோசின் கொடுப்பது ஒரு வழக்கமான நடைமுறையாகும். பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இரத்தப்போக்கைக் குறைப்பதற்கும், உலகளவில் தாய் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தக் கசிவைத் தடுப்பதற்கும் இந்தச் சுருக்கங்கள் முக்கியமானவை.




5. ஆக்சிடோசின் தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதோடு, நஞ்சுக்கொடி பிரிந்து வெளியேறவும் உதவுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.


6. மும்பை சென்ட்ரலில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகரான டாக்டர் ரிச்சா பரத்வாஜ், கருப்பையை ஒரு இயற்கையான அழுத்தக் கட்டு (Natural Pressure Bandage) என்று கருதுவதாக விளக்கினார். பிரசவத்திற்குப் பிறகு, நஞ்சுக்கொடி (Placenta) இணைந்திருந்த இடத்தில் உள்ள இரத்த நாளங்கள் திறந்த நிலையிலேயே இருக்கும் என்று கூறினார். 


7. ஆக்ஸிடோசின் கருப்பைத் தசைகளைச் சுருங்கச் செய்து, அந்த இரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலம் இரத்த ஓட்டம் குறைந்து, அதிகப்படியான இரத்தப்போக்கு தடுக்கப்படுகிறது. ஆனால், கருப்பை தளர்வாகவே இருந்து, போதுமான அளவு சுருங்கவில்லை என்றால், இரத்த இழப்பு  வேகமாகவும் தீவிரமாகவும் ஏற்படலாம். இது போன்ற சூழலில் அவசர மருத்துவச் சிகிச்சை, இரத்தம் செலுத்துதல் (Blood Transfusion) அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவு  ஆதரவு தேவைப்படலாம் என்று டாக்டர் ரிச்சா பரத்வாஜ் தெரிவித்தார்.


போலி மருந்துகளை கட்டுப்படுத்துவதற்காக க்யூஆர் (QR) குறியீட்டு முறை


சில நாட்களுக்கு முன்னர் அனைத்து தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், போதைப்பொருட்கள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றில் பார்கோடு அல்லது கியூஆர் குறியீட்டு முறை இடம்பெற வேண்டும் என ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், மருந்தின் ஒவ்வொரு குப்பி அல்லது மாத்திரை பொட்டலத்தையும் கண்காணிக்க முடியும்.


மருந்து விதிகளின் அட்டவணை H2-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மருந்துகளின் உற்பத்தியாளர்களும், மருந்தின் முக்கியப் பொதியின் மீதோ அல்லது இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், இரண்டாம் நிலை பொதியின் மீதோ ஒரு தனித்துவமான பார்கோடு அல்லது QR குறியீட்டை ஒட்ட வேண்டும்.



மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO))


1. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO)), ராஜஸ்தானில் சர்ச்சைக்குள்ளான ஆக்சிடோசினைத் தயாரிக்கும் ஜாக்சன் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உற்பத்தி அலகுகளை அந்த இரு மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து கூட்டாக ஆய்வு செய்தது.


2. 1940-ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Drugs & Cosmetics Act) சட்டமும், 1945-ஆம் ஆண்டின் விதிகளும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு பொறுப்புகளை ஒன்றிய மற்றும் மாநில ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு வழங்கியுள்ளன. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின், சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை ஆணையமாக (National Regulatory Authority (NRA)) இருந்து வருகிறது.


3. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்கீழ், மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்தல், மருத்துவப் பரிசோதனைகளை நடத்துதல், மருந்துகளுக்கான தரநிலைகளை வகுத்தல், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்துவதில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவரும் வகையில்  ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO)) பொறுப்பு ஏற்றுள்ளது.


4. சமீபத்தில், ஒன்றிய அரசு 16 நிலையான அளவு கலவை மருந்துகள் (Fixed Dose Combination (FDC)) மருந்துகளுக்கு உடனடித் தடைவிதித்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Drugs and Cosmetics Act) சட்டத்தின் பிரிவு 26A-ன்கீழ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


நிலையான அளவு கலவை மருந்துகள் ஒரே மருந்தளவு வடிவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரியமிக்க மூலப்பொருட்களைக் கொண்டுள்ளன. மருந்துத்துறையில் இவற்றின் உற்பத்தியும் பயன்பாடும்  அதிகரித்துள்ளன.


5. இந்த நடவடிக்கை, இந்திய மருந்துச் சந்தை குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட ஆய்வின் விளைவாகும். நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation (CDSCO)) மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Drugs Technical Advisory Board (DTAB)), தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துக் கலவைகளை முழுமையாக நீக்குவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.


Original Link: What is oxytocin and why is it critical in c-sections?

Share: