டெல்லி காற்றின் தரம் 328-ஆக சற்று முன்னேற்றம் அடைந்த பிறகும் 'மிகவும் மோசமான' நிலையில் உள்ளது.

ஆனந்த் விஹார் நகரம் அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்டிருந்தது, அதன் AQI 341-ஆக இருந்தது, இது "மிகவும் மோசமான" பிரிவின்கீழ் வருகிறது.


டெல்லியில் புதன்கிழமை காலை காற்றின் தரம் சற்று மேம்பட்டது. காலை 8 மணிக்கு ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (Air Quality Index (AQI)) 328-ஆகப் பதிவாகியுள்ளது. இது இன்னும் 'மிகவும் மோசமான' நிலையிலேயே உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) தெரிவித்துள்ளது.


செவ்வாய்க்கிழமையைவிட இன்று காற்றின் தரம் சற்று மேம்பட்டது ஏனெனில்,  மாலை 4 மணிக்கு காற்று தரக் குறியீடு (Air Quality Index (AQI)) அளவு 354-ஆக இருந்தது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், நகரின் பெரும்பாலான பகுதிகள் நச்சுப் புகையால் இன்னும் சூழப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த காற்றின் தரம் இன்னும் மோசமாகவே உள்ளது.


ஆனந்த் விஹார் பகுதி கடுமையான புகை மூட்டத்தில் சூழப்பட்டிருந்தது. அங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) 341-ஆக இருந்தது, இது "மிகவும் மோசம்" என்ற நிலையைக் குறிப்பிடுகிறது. இதேபோல் கடுமையான புகை மூட்டம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தௌலா குவான், எய்ம்ஸ் மற்றும் காஜிப்பூர் தேசிய நெடுஞ்சாலை (NH-24) ஆகிய இடங்களிலும் இதை நிலை காணப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.


மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) அளித்த தரவுகளின்படி, பவானா (376), வருமான வரி அலுவலகம் (360), ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் (324), நரேலா (342) உள்ளிட்ட தில்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசமான' நிலையில் உள்ளது.


வஜீர்பூரில் காற்றின் தரம் மோசமாகப் பதிவானது, காற்று தரக் குறியீடு (AQI) அளவு 359-ஆக இருந்தது. இருப்பினும், டெல்லியின் பல பகுதிகளில் புதன்கிழமை காலை காற்றின் தரத்தில் சிறிய மாறுபாடுகள் காணப்பட்டன.


உதாரணமாக, புராரி கிராசிங் பகுதிகளில் (Burari Crossing) காற்றின் தரக் குறியீடு அளவு 298 (மோசம்)-ஆகப் பதிவாகியுள்ளது. இது நகரத்தின் பிற இடங்களைவிட ஒப்பீட்டளவில் சிறந்தது. இந்திரா காந்தி விமான நிலைய முனையம் 3 (263), IIT டெல்லி (300) மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் மதுரா சாலை (297) போன்ற பிற பகுதிகளும் மேம்பட்ட காற்றின் தரம் பதிவானபோதிலும் மோசமான நிலையில்தான் உள்ளன. 


மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) காற்று தர வகைப்படுத்தலின்படி, (0-50) என்பது 'நல்லது' (good), (51-100) 'திருப்திகரமானது' (satisfactory), (101-200) 'மிதமானது' (moderate), (201-300) 'மோசம்' (poor), (301-400) 'மிகவும் மோசம்' (very poor), மற்றும் (401-500) 'கடுமையானது' (severe) என்கிற அளவில் காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 


முன்னதாக, டெல்லியில் வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா அறிவித்தார். 


அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) இல்லாத வாகனங்களுக்கு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள பெட்ரோல் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படாது என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.


வாகனங்களின் புகையைக் கட்டுப்படுத்த, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC) காண்பித்தால் மட்டுமே எரிபொருள் வழங்க வேண்டும் என அனைத்து பெட்ரோல், டீசல், CNG நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


டெல்லியின் காற்றின் தரத்தைப் பாதுகாப்பதற்காக, படிநிலை அடிப்படையிலான பதிலளிப்பு திட்டம் - நிலை III (Graded Response Action Plan - Stage III (GRAP-III) மற்றும் படிநிலை அடிப்படையிலான பதிலளிப்பு திட்டம் - நிலை IV (Graded Response Action Plan - Stage IV (GRAP-IV)) அமல்படுத்தப்படும்போது, டெல்லிக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட மற்றும் பாரத் நிலை VI (Bharat Stage VI (BS-VI)) வகைக்கும் குறைவான வகையைச் சேர்ந்த எந்த வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் மாசு ஏற்படுத்தும் எந்த வாகனமும் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், GRAP-IV அமலில் இருக்கும்போது, ​​எந்தவொரு கட்டுமானப் பொருட்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) மற்றும் வாகனப் பிரிவுகள் தானியங்கி வாகன எண் பலகை அடையாளம் காணும் அமைப்பு (Automatic Number Plate Recognition (ANPR)) அமைப்புகள் மற்றும் கள அளவிலான சோதனைகள் மூலம் சரிபார்க்கப்படும் என்று அமைச்சர் கூறினார். கடுமையான நடவடிக்கைகளை அறிவித்த அதேவேளையில், சிரமங்களைத் தவிர்க்க, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களை எடுத்துச் செல்லுமாறு அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய அரசாங்கம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான, தரவு சார்ந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது என்று சிர்சா கூறினார்.


கடுமையான தினசரி நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் காரணமாக, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 11 மாதங்களில், ஏறக்குறைய  8 மாதங்களில் காற்றின் தரம் சிறப்பாக இருந்தது என்றும், நவம்பர் மாதத்தில்கூட சராசரி காற்று தரக் குறியீடு அளவானது (AQI) சுமார் 20 புள்ளிகள் குறைவாக இருந்தது என்றும் அவர் கூறினார்.


டெல்லி மக்களிடையே உரையாற்றிய திரு. சிர்சா, 9 முதல் 10 மாதங்களில் மாசுபாட்டை முழுவதுமாக அகற்ற முடியாது என்றாலும், திசையும் நோக்கமும் தெளிவாக உள்ளன. மேலும், காற்றில் உள்ள தரக் குறியீட்டைக் (AQI) குறைக்க தினசரி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.


வாகன உரிமையாளர்கள் அனைவரும் செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களைப் பெற வேண்டும் என்றும், புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டெல்லிக்கு தூய்மையான காற்றையும், மாசு இல்லாத எதிர்காலத்தையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்."

Original link:

Delhi air quality sees slight improvement at 328, remains in 'very poor' category


Share: