புதைக்கப்பட்ட உடல்கள் முதல் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட பானைகள் வரை : விர்லி கந்தார் அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்துவது என்ன?

-ரோஷ்னி யாதவ்


விர்லி கந்தாரில் உள்ள ஒரு பெருங்கற்காலத் தளத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியானது, அப்பகுதியின் பெருங்கற்காலப் பண்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடும். அந்தத் தளத்தின் முக்கியக் கண்டுபிடிப்புகள் என்ன? அதனைத் தனித்துவமாக்குவது எது? குத்துக்கற்கள் (மென்ஹிர்கள்) என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் கீழே குறிப்பிட்டுள்ளன.

தற்போதைய நிகழ்வு என்ன?


விர்லி கந்தாரில் உள்ள ஒரு பெருங்கற்காலத் தளத்தில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியானது, தனித்துவமான புதைக்குழிக் கட்டிடக்கலை, அரியவகை கலைப்பொருட்கள் மற்றும் அசாதாரணமான மட்பாண்ட அமைப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. இது விதர்பா பிராந்தியத்தின் பண்டைய ஈமச்சடங்கு நடைமுறைகள் குறித்த புதிய பார்வைகளை வழங்குகிறது. விர்லி கந்தாரில் கிடைத்துள்ள இந்தக் கண்டுபிடிப்புகள், அப்பகுதியின் பெருங்கற்காலப் பண்பாடுகளையும் அவற்றின் பரந்த கலாச்சார நடைமுறைகளையும் புரிந்துகொள்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தச் சூழலில், அகழ்வாராய்ச்சியின் முக்கியக் கண்டுபிடிப்புகளை அறிந்து, மென்ஹிர்களைப் பற்றிப் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள பாவ்னி தாலுக்காவில் அமைந்துள்ள இந்தத் தளம், தொல்பொருள் ஆய்வாளரும், ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் (RTMNU) பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறைத் தலைவருமான டாக்டர் பிரபாஷ் சாஹுவின் தலைமையில் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.


2. பேராசிரியர் சாஹுவின் கூற்றுப்படி, இந்தத் தளம் மூன்று காரணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; அவற்றில் ஒன்று, இங்குள்ள தனித்துவமான ஈம அடக்க முறை ஆகும். "இங்கு கல் வட்டங்களும், அவற்றிற்குள் குத்துக்கற்களும் (menhirs) அமைந்துள்ளன; இது ஒரு 'கூட்டுப் பெருங்கற்காலக் கட்டமைப்பாக' அதாவது, இரண்டு வகையான ஈம அடக்க முறைகளின் கலவையாக அமைகிறது," என்று அவர் கூறினார்.


3. இதற்கு மாறாக, பிம்பல்கான் நிப்பானி மற்றும் திரோட்டா கேரி போன்ற அருகிலுள்ள தளங்களில் முக்கியமாக டால்மென் புதைப்புகள் (dolmen burials) உள்ளன. இதன்காரணமாக, விர்லி கந்தார் இந்தத் தளங்களிலிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறது.


4. இதுவரை, ஆராய்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் வரைபடமாக்கல் மற்றும் கள ஆய்வுகள் மூலம் 69 பெருங்கற்காலப் புதைகுழிகளை ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றுள் இரண்டு இடங்கள், வெளிப்புறத்தில் நெடுங்கற்கள் மற்றும் பாறாங்கற்களைக் கொண்ட கல் வட்டங்களாகவும், மற்ற இரண்டு இடங்கள் பாறாங்கற்களால் மட்டுமே அமைக்கப்பட்ட வட்டங்களும் என நான்கு இடங்கள் அகழாய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


5. புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றிலிருந்து கிடைத்த பொருட்களானவை, கழுத்தணி போன்ற செப்புப் பொருட்கள், கோடரிகள், உளிகள், அகப்பைகள் மற்றும் அம்புகள் போன்ற இரும்புக் கருவிகள், அரியவகை கல் மணிகள், குறிப்பாக செதுக்கப்பட்ட கார்னிலியன் மணிகள் மற்றும் ஒரு தங்கக் காதணி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகளுடன், சிதைந்த எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.


6. மிகவும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று, விதர்பா பிராந்தியத்தில் இதற்கு முன்னர் பதிவாகாத ஒரு தனித்துவமான மட்பாண்டத் தொகுப்பாகும். ஒரு புதைகுழியில், ஏறக்குறைய 50 பானைகள் ஒரு முறையான வழியில் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரிய கிண்ணங்கள், தலைகீழாக வைக்கப்பட்ட கிண்ணங்களால் மூடப்பட்டிருந்தன.


7. ஒரே தொகுப்பில், குறைந்தது 23 ஜோடிகளான 46 பானைகள், கூடுதல் சிவப்பு மற்றும் கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இரும்புப் பொருட்களுடன் ஆவணப்படுத்தப்பட்டன.


8. சாஹு மற்றொரு வழக்கத்திற்கு மாறான அம்சத்தைச் சுட்டிக்காட்டினார். இதில் பெரிய பானைகள் உட்பட, ஏறக்குறைய அனைத்துப் பானைகளும் தலைகீழாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட நேர்வில், ஒரு பானையின் மேல் மற்றொரு பானை கொண்டு மூடப்பட்டிருந்தது.


9. “எந்தவொரு பானையும் நேராக (செங்குத்தாக) நின்ற நிலையில் காணப்படவில்லை. அவை ஈமச்சடங்கு நடைமுறையின் ஒரு பகுதியாகவே, அவை வேண்டுமென்றே தலைகீழாக வைக்கப்பட்டிருந்ததாகத் தோன்றுகிறது,” என்று அவர் கூறினார். இந்த ஏற்பாட்டிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் இது குறித்து ஆய்வு செய்யப்படும்.


10. இயற்கையான செம்மண் (முரம்) அடித்தளத்தின் மீது பரப்பப்பட்ட கருப்புப் பருத்தி மண் அடுக்கின் மேல் பானைகள் கவனமாக வைக்கப்பட்டன. இந்த மண்ணின் பிசுபிசுப்பான தன்மை, மேலிருக்கும் மண்ணின் எடையால் உடைப்புகள் ஏற்பட்டபோதிலும், பானைகளை பெரும்பாலும் நிலையாக வைத்திருக்க உதவியது.


11. மற்றொரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக, அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட கரி எச்சங்கள், முடுக்கி நிறை நிறமாலைமானி (Accelerator Mass Spectrometry (AMS)) காலக்கணிப்பு மூலம் அதன் வயதை நிர்ணயிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட ஆய்வுகளின்படி, இந்தத் தளம் குறைந்தது 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.


மென்ஹிர்கள் (menhirs-நடுகற்கள்) என்றால் என்ன?


1. மென்ஹிர் என்பது செங்குத்தாக நிற்கும் ஒரு கல்லாகும். இது பொதுவாக மேற்பகுதியில் கூர்மையாக இருக்கும். இது மனிதர்களால் செதுக்கப்பட்டு வைக்கப்படுவதால், மனிதனால் உருவாக்கப்பட்டதாகும். மேலும், இது பொதுவாக மிகவும் பெரியதாக இருக்கும்.


2. பிரான்சின் பிரிட்டனியில் உள்ள, தற்போது எஞ்சியிருக்கும் மிகப்பெரிய மென்ஹிரான கிராண்ட் மென்ஹிர் பிரிசே அல்லது பெரிய உடைந்த மென்ஹிர், ஒருகாலத்தில் 20.6 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது.


3. ‘மென்ஹிர்’ என்ற சொல், ‘கல்’ என்று பொருள்படும் பிரிட்டானிய வார்த்தையான “மேன்” மற்றும் ‘நீண்ட’ என்று பொருள்படும் “ஹிர்” ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டு, 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொல்பொருள் ஆய்வுச் சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறியது. இதை முதன்முதலில் பிரெஞ்சு இராணுவ அதிகாரியும் செல்டிக் தொல்பொருள் ஆய்வாளருமான தியோஃபில் கொரெட் டி லா டூர் டி ஆவர்ன் (Théophile Corret de la Tour d’Auvergne) பயன்படுத்தினார்.


4. மென்ஹிர்கள் தனியாகவோ அல்லது பெரிய கற்கட்டுமானங்களான வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலக் கட்டமைப்புகளின் ஒரு பெரிய வளாகத்தின் பகுதியாகவோ காணப்படலாம். பல பெருங்கற்காலத் தளங்களின் சரியான நோக்கம் விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அவை பெரும்பாலும் சடங்கு சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்பட்டிருக்கலாம். சில கல்லறைகளின் அடையாளங்களாக இருந்தன. மற்றவை சில வானியல் நோக்கங்களுக்காகப் பயன்பட்டிருக்கலாம்.


முதுமால் பெருங்கற்கால நடுகற்கள் (Mudumal Megalithic Menhirs)


1. தெலங்கானாவின் நாராயண்பேட் மாவட்டத்தில் அமைந்துள்ள, சுமார் 3,500 முதல் 4,000 ஆண்டுகள் பழமையான முதுமால் பெருங்கற்கால நடுகற்கள், இந்தியாவிலிருந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


2. ஹைதராபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே. பி. ராவ் அவர்களின் கூற்றுப்படி, சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான முதுமால் நடுகற்கள், தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஈமச்சின்னத் தளமாக இவை அமைந்திருக்கலாம்.


3. யுனெஸ்கோ ஆவணத்தில், முதுமால் தளம் ஒரு “பெருங்கற்கால வானியல் ஆய்வகம்” என விவரிக்கப்பட்டுள்ளது. “சில நடுகற்கள், கோடை மற்றும் குளிர்காலச் சூரியத் திருப்பங்களின்போது சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் திசைகளுக்கு நேர்கோட்டில் அமைந்துள்ளன. இது, அவை ஒரு பண்டைய வானியல் ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த ஆவணம் கூறுகிறது. இன்று, முதுமால் நடுகற்கள் உள்ளூர் புராணக்கதைகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையவையாக உள்ளது. குறிப்பாக, “அங்குள்ள ஒரு குறிப்பிட்ட நடுகற்கள், எல்லம்மா தேவியாக (Goddess Yellamma) வணங்கப்படுகிறது”.

Original link:

From burials to upside down pots: What Virli Khandar excavation reveals.


Share: