இந்தியாவில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் (arsenic) மற்றும் ஃபுளூரைடு (fluoride) மாசுபாட்டிற்கான முதன்மைக் காரணங்கள் யாவை? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


தாமாக முன்வந்து தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) முதன்மை அமர்வானது, செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் நிலத்தடி நீர் மாசுபடுதல் பிரச்சினையை ஆராய்ந்து வருகிறது. மேலும், அது அனைத்து 28 மாநிலங்களையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளதுடன், மாவட்டங்கள், கிராமங்கள் மற்றும் வட்டாரங்கள் முழுவதும் உள்ள ஆர்சனிக் (arsenic) மற்றும் ஃபுளூரைடு (fluoride) மாசுபடுதல் குறித்த தரவுகளைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் முழுவதும் மேற்கொள்ளப்படும் தணிப்பு நடவடிக்கைகளை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (Central Ground Water Authority (CGWA)) தவறாமல் கண்காணித்து, உரியமுறையில் சரிசெய்யும் நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த பசுமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணர் உறுப்பினர்களான ஏ. செந்தில் வேல், அஃப்ரோஸ் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சரிசெய்யும் நடவடிக்கைகளைப் பதிவுசெய்து, ஏப்ரல் 17 அன்று பிறப்பித்த உத்தரவில் இந்நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் உத்தரவிட்டது.


ஆர்சனிக் கலந்த குடிநீரைக் குடிப்பது, ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகும். இது ஆர்சனிகோசிஸ் நோயை (arsenicosis disease) ஏற்படுத்துகிறது. இது, தோல் புண்கள் மற்றும் அசாதாரண தோல் நிறமாற்றம் போன்ற அறிகுறிகளுடன், நீண்டகால வெளிப்பாட்டின்போது புற்றுநோயையும்கூட இது ஏற்படுத்தக்கூடும். இதற்கிடையில், ஃபுளூரைடு (Fluoride) வெளிப்பாடு எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது.


கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ஆர்சனிக் அதிக அளவில் இருப்பதும், மத்திய, கிழக்கு மற்றும் தென், மேற்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஃபுளூரைடு அதிக அளவில் இருப்பதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் தெரியவந்துள்ளது.


நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில வாரியான தரவுகளும் ஒரு மோசமான சூழ்நிலையைக் காட்டுகின்றன. நீதிமன்ற உத்தரவில், பீகாரில் 4,709 வார்டுகளில் ஆர்சனிக்கும், 3,789 வார்டுகளில் ஃபுளூரைடும் இருப்பதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில், ஆர்சனிக் எட்டு மாவட்டங்களையும், ஃபுளூரைடு ஏழு மாவட்டங்களையும், உத்தரப் பிரதேசத்தில் தலா 16 மாவட்டங்களையும் பாதித்துள்ளன. இதேபோல், கர்நாடகாவில் 20 கிராமங்களில் ஆர்சனிக் நிலத்தடி நீரையும், 2,083 கிராமங்களில் ஃபுளூரைடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொழிற்சாலை மாசுபாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மற்றும் பாறைகள் சிதைதல், மண் அரிப்பு போன்ற இயற்கை செயல்முறைகள் ஆகியவை இந்த மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களில் அடங்கும் என்று மத்திய நீர் ஆணையம் (Central Ground Water Authority(CGWA)) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பீகார், மேற்கு வங்கம், அசாம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில், ஆர்சனிக்கின் இருப்பு முதன்மையாக கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகளில் காணப்படும் வண்டல் பாறை அமைப்புகளுடன் தொடர்புடையது என்று ஆணையம் குறிப்பிட்டிருந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீர் நுகர்வோராகும். இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 230 கன கிலோமீட்டர் நீரை உறிஞ்சி எடுக்கிறது. இந்த அளவு, உலகின் மொத்த ஆண்டு நிலத்தடி நீர் பயன்பாட்டில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானதாகும். மேலும், இந்தியாவின் குடிநீர் தேவைகளில் ஏறத்தாழ 85 சதவீதம் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன.



மத்திய நிலத்தடி நீர் வாரியமும் (Central Ground Water Board(CGWB)) மாநில அரசுகளும் இணைந்து, நாட்டின் மாறும் நிலத்தடி நீர் வளங்களை ஆண்டுதோறும் மதிப்பிடுகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 6,762 மதிப்பீட்டு அலகுகளாக (வட்டாரங்கள்/வட்டங்கள்/மண்டலங்கள்) பிரிக்கப்பட்டு இம்மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது. அவற்றின் 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, நாட்டின் ஆண்டு நிலத்தடி நீர் மறுஊட்டம் (recharge) மொத்தம் 448.52 பில்லியன் கன மீட்டர்களாக (BCM) உள்ளது. இது 2017-ம் ஆண்டில் இருந்த 432 பில்லியன் கன மீட்டர் அளவிலிருந்து அதிகரித்த ஒன்றாகும். மேலும், அதே ஆண்டில் 247.22 பில்லியன் கன மீட்டர் அளவிலான நீர் நிலத்தடியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Original link:

What are the primary causes of arsenic and fluoride contamination in groundwater in India?


Share: