ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தபின், அவர்கள் தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்வார்களா? -விகாஸ் பதக்

மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இப்போது இந்த உறுப்பினர்கள் எதிர்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன?


ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சதா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, ஸ்வாதி மாலிவால் மற்றும் விக்ரம்ஜித் சாஹ்னி ஆகிய ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள்  கடந்த வெள்ளிக்கிழமையன்று பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தனர். இவர்களின் இந்த முடிவால், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் வெறும் மூன்று உறுப்பினர்களாகக் குறைந்துள்ளது. இப்போது இந்த உறுப்பினர்களும் ஆம் ஆத்மி  கட்சியினரும் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் யாவை ?

ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை எதிர்கொள்வார்களா?


PRS சட்ட ஆய்வாளர் சக்ஷு ராய் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் கூறுகையில், கடந்தகால உதாரணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.


ஆம் ஆத்மி கட்சி இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், மாநிலங்களவை தலைவர், தாம் தலைமை வகிக்கும் அவையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைந்துவிட்டதால், அவர்கள் இனி பாஜக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என்றும், தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளமாட்டர்கள் என்று தலைவர் அறிவிக்கக்கூடும் என்று ராய் தெரிவித்தார். வெங்கையா நாயுடு தலைவராக இருந்தபோது, ​​தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சி.எம். ரமேஷ், கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடன் அக்கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அந்த இணைப்பிற்குத் அவைத் தலைவரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்.


இருப்பினும், முன்னாள் மக்களவை பொதுச்செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி இதனை மறுக்கிறார். ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் மட்டுமல்ல, பல்வேறு சட்டமன்றங்களிலும் உறுப்பினர்கள் உள்ளனர். 1985-ஆம் ஆண்டின் 52-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டு, 2003-ஆம் ஆண்டின் 91-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் வலுப்படுத்தப்பட்ட 10-வது அட்டவணையின் பத்தி 4-ஐ அவர் சுட்டிக்காட்டினார். அதன் படி,  ஒரு அவையில்  அவரது கட்சி மற்றொரு அரசியல் கட்சியுடன் இணைந்தால் அவர் மற்றும் அவரது கட்சியின் பிற உறுப்பினர்களும் புதிய கட்சியின் உறுப்பினர்களாகவோ அல்லது அந்த இணைப்பால் உருவான புதிய அரசியல் கட்சியுடன் இணைந்து, அதன் ஒரு பகுதியாக மாறினால் மட்டுமே தகுதி நீக்கத்திலிருந்து தப்ப முடியும் என்று விளக்கினார்.


அதாவது, அரவிந்த் கெஜரிவாலே முன்வந்து ஆம் ஆத்மி கட்சியை பாஜகவுடன் இணைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரி கூறுகிறார். ஆம் ஆத்மி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் கட்சி மாறியுள்ளதால், மாநிலங்களவை தலைவரிடம் தற்போது எந்தவொரு உறுப்பினரும் தகுதி நீக்க மனுவைச் சமர்ப்பிக்கலாம் என்றும், தலைவர் ஒன்று அந்த 'இணைப்பை' அங்கீகரிக்கலாம் அல்லது அந்த ஏழு ஆம் ஆத்மி உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த முடிவை, எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் ஆச்சாரி தெரிவித்தார்.


சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கட்சியைப் பிளவுபடுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தபோது, ​​சட்டமன்றப் பெரும்பான்மையைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையம்  உண்மையான கட்சிச் சின்னங்களைப் பிரிந்து சென்ற குழுக்களுக்கே வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின்கீழ் உள்ள 4-வது பத்திக்கு முரணானது என்று ஆச்சாரி கருதுகிறார்.



ராகவ் சதா பாஜகவுடன் இணைந்துவிட்டதாகக் கூறப்படுவதால், தேர்தல் ஆணையம் (EC) முடிவு செய்வதற்கு ஆம் ஆத்மியில் (AAP) இப்போது பிளவுகள் ஏதுமில்லை என்று ஆச்சாரி கூறினார். இருப்பினும், மாநிலங்களவைத் தலைவர் தீர்ப்பு வழங்கும் வரை, கட்சி மாறிய அந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். பத்தாவது அட்டவணையின் (10th Schedule) பிரிவு 2(1)(a)-ஐ அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர், அவரைத் தேர்தலில் நிறுத்திய கட்சியைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்.


இருப்பினும், மாநிலங்களவைத் தலைவரின் தீர்ப்பு நிலுவையில் இருக்கும்போது, ​​ஏதேனும் ஒரு சட்ட விவகாரத்தில் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்தால், அவர்கள் சட்டப்படி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்களுடைய 7 வாக்குகள் பாஜகவின் 106 வாக்குகள் எண்ணிக்கையுடன் சேர்க்கப்படும். மாநிலங்கவையில் உள்ள நடைமுறையிலிருந்து  மாறுபட்டு, ஒரு விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின்  வாக்குகளின் எண்ணிக்கை இப்போது 148-ஆக இருக்கும். மேலும், இது ஒரு இணைப்பு என்று தலைவர் அங்கீகரித்தால், பாஜகவின் இடங்களின் எண்ணிக்கை 113 ஆக உயரும்.


தகுதிநீக்க மனு நிலுவையில் இருக்கும்போது இது ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்குகிறது என்றும் ஆச்சாரி குறிப்பிட்டார். 10-வது அட்டவணைப்படி, கட்சி உத்தரவை மீறிச் செயல்படுவதும் தகுதி நீக்கத்திற்கு (disqualification petition) வழிவகுக்கும். ஆம் ஆத்மி கட்சி இன்னும் சதா குழுவினருக்கு கொறடா உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும், அவர்கள் அதைத் தொடர்ந்து புறக்கணித்தால், அதன் அடிப்படையிலும் தகுதி நீக்க மனுக்கள் மீது தலைவர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.


மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவான உறுப்பினர்கள் கட்சி மாறியிருந்தால் என்னவாகியிருக்கும்?


அத்தகைய சூழலில், ஒரு  சட்டமன்றத்திலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். கட்சி மாறிய அதிருப்தியாளர் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு, சபையின் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் மாநிலங்களவைத் தலைவரிடம் மனுவைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.


இருப்பினும், கட்சி மாறுவதற்காகவோ அல்லது கட்சியின் உத்தரவை மீறியதற்காகவோ ஒரு உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க, அவைத் தலைவருக்கு 10-வது அட்டவணை எந்தவொரு கால வரம்பையும் நிர்ணயிக்கவில்லை.





அவைத்தலைவரின் தீர்ப்பின் மீதான நீதித்துறை மறுஆய்வும், அவைத்தலைவர் தனது தீர்ப்பை வழங்கிய பின்னரே நடைபெறுகிறது. இதனால், தகுதிநீக்கம் செய்யப்படக்கூடிய ஒரு உறுப்பினர் சபையின் உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், சபாநாயகர் ஒரு மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். சபாநாயகர்கள் ஒரு  மனுவின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தபோதிலும், நடைமுறையில் இந்தத் தாமதம் நீடிக்கிறது..


கட்சித் தாவல் தடைச் சட்டம் (anti-defection law) என்ன சொல்கிறது?


2003-ஆம் ஆண்டின் 91-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இரண்டு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.


முதலாவதாக, தகுதிநீக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு, அவையில் உள்ள ஒரு கட்சியின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பேர் மற்றொரு கட்சியில் இணைந்தால் மட்டுமே, அது ஒரு இணைப்பு எனக் கருதப்படும் என்றும் கூறியது. அந்த எண்ணிக்கை, அவையில் அந்தக்கட்சியின் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவாக இருந்தால், கட்சி மாறும் உறுப்பினர்கள் தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.


இரண்டாவதாக, அமைச்சரவையின் அளவை மக்களவை அல்லது மாநிலச் சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கையில் அதிகபட்சம் 15%-ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தியது. மிகச்சிறிய மாநிலங்களில் குறைந்தபட்சம் 12 அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்றும் வரையறுத்தது.


1985-ஆம் ஆண்டின் 52-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 10-வது அட்டவணையை, இந்தச் சட்டம் மேலும் வலுப்படுத்தியது. இருப்பினும், 1985-ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த 10-வது அட்டவணையானது, ஒரு அவையில் உள்ள கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பிரிந்து செல்வதை (split) சட்டபூர்வமான நடவடிக்கையாக அங்கீகரித்திருந்தது. இந்த விதி அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், 91-வது திருத்தம் அந்த விதியை நீக்கி, கட்சித் தாவலைத் தடுக்கும் விதமாக, கட்சி இணைப்பிற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்டாயம் தேவை என்ற கடுமையான நிபந்தனையை விதித்தது.


கட்சித் தாவல் தடைச் சட்டம் முதலில் எதற்காக இயற்றப்பட்டது?


1960-கள் மற்றும் 1970-களில் நடந்த பெரிய கட்சித் தாவல்கள் காரணமாக இது  முக்கியமானதாகக் கருதப்பட்டது. அடிக்கடி கட்சிகள் மாறுவதைக் குறிக்க, "ராம் வந்தார், ராம் போய்விட்டார்' (Aaya Ram Gaya Ram) என்ற சொற்றொடர் 1960-களின் பிற்பகுதியில் வழக்கத்திற்கு வந்தது. PRS சட்ட ஆய்வகத்தின் தகவல்படி,, "1967-ஆம் ஆண்டில் ஹரியானா சட்டமன்ற உறுப்பினர் கயா லால் ஒரே நாளில் மூன்று முறை தனது கட்சியை மாற்றினார்.


‘International Journal for Legal Research and Analysis’ என்கிற இதழில் ரித்விக் ஜெயின் எழுதிய ஒரு கட்டுரையின்படி, “1967 மற்றும் 1972-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 4-வது மற்றும் 5-வது பொதுத் தேர்தல்களுக்கு இடையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றங்களின்  4,000 உறுப்பினர்களிடையே, 2,000 கட்சித் தாவல் மற்றும் எதிர்-கட்சித் தாவல் வழக்குகள் பதிவாகியுள்ளன. மார்ச் 1971-ஆம் ஆண்டில் இறுதியில், ஏறக்குறைய 50% சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியிருந்தனர். அவர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை, சிலர் ஐந்து முறை வரை கூட கட்சி மாறியிருந்தனர்.


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் எதிர்மறை அம்சங்கள் என்னென்ன?


குதிரை பேரங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட கட்சித் தாவலுக்கு எதிரான விதிகள், சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களின் கட்சி நிலைப்பாட்டிற்கு கட்டுப்பட்டவர்களாக மாற்றியுள்ளன. ஏனெனில், ஒரு விஷயத்தில் கட்சியின் உத்தரவை மீறினால் அவர்கள் தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். இதன் விளைவாக, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி அல்லது மாநிலத்தின் நலன்களுக்காகச் செயல்படும் சுதந்திரத்தை இழந்து, கட்சித் தலைவர்களின் முடிவுகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுபவர்களாக மாறிவிட்டனர். இது அரசியல் கட்சிகளுக்குள் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Original link:

Will AAP Rajya Sabha MPs face disqualification after joining BJP?


Share: