உடல் உழைப்பின்மையையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைப் போலவே தீவிரமான ஒன்றாகக் கருதப்பட வேண்டும். பள்ளிகள், முறையான உடற்பயிற்சியையும், விளையாட்டுகளையும் விருப்பத் தேர்வுகளாக அல்லாமல், கல்வித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உறுதி செய்ய வேண்டும்.
கோடை விடுமுறைக்குப் பிறகு, நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, லட்சக்கணக்கான வளரிளம் பருவத்தினரின் ஆற்றல், லட்சியங்கள் மற்றும் கவலைகளால் வகுப்பறைகள் மீண்டும் நிரம்பின. இருப்பினும், அவர்களின் வளர்ந்து வரும் லட்சியங்களுக்குப் பின்னால், வளரிளம் பருவத்தினரின் ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற ஒரு அமைதியான பொது சுகாதார நெருக்கடி மறைந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) 2023-24-ஆம் ஆண்டின் ஆய்வின் முடிவுகள் கவலைக்குரிய ஒரு சூழலை வெளிப்படுத்துகின்றன. 15-49 வயதுடைய பெண்களிடையே உடல் பருமன் 24%-லிருந்து 30.7% ஆகவும், ஆண்களிடையே 22.9%-லிருந்து 27.3% ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களிடையே உயர் இரத்த சர்க்கரை அளவு 15.6%-லிருந்து 20.9% ஆகவும், பெண்களிடையே 13.5%-லிருந்து 17.8% ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு காலத்தில் நகரங்கள் மற்றும் வசதியான சமூகங்களுடன் தொடர்புடையதாக இருந்த, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மன அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள், இப்போது கிராமப்புற மக்களையும் பாதிக்கின்றன. இந்தியா இப்போது ஒரு இரட்டைச் சுமையை எதிர்கொள்கிறது. இதில், குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பெரியவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இத்தகைய உடல்நலப் பிரச்சினைகள் வயதுவந்த பிறகு தொடங்குவதில்லை. அவற்றின் வேர்கள் பதின்ம பருவத்திலேயே உருவாகின்றன. எனவே, ஊட்டச்சத்துக் குறைபாடு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பள்ளிகளே மிக முக்கியமான இடமாக அமைகின்றன.
வளரிளம் பருவத்தினரிடையே உடல் பருமனை எதிர்த்துப் போராடுதல்
உணவு முறைகளை வித்தியாசமான முறையில் அணுகுதல்
ஊட்டச்சத்துக் குறைபாடு (malnutrition) என்பது இனி எடை குறைவாக இருப்பது மட்டுமல்ல என்பதைப் பள்ளிகள் உணர வேண்டும். இந்தியா 'கொழுப்பு மிகுந்த மெல்லிய தோற்ற' உடலமைப்பைக் (thin-fat phenotype) காண்கிறது. இதன் பொருள், ஒல்லியாகத் தோற்றமளிக்கும் குழந்தைகள் ஆபத்தான வளர்சிதை மாற்ற அபாயத்தைக் கொண்டுள்ளனர். விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வின்படி-2019 (Comprehensive National Nutrition Survey (CNNS)), 27.4% இந்திய வளரிளம் பருவத்தினர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். அதே நேரத்தில், உடல் பருமன் குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35% பேர் வளர்ச்சி குன்றியவர்களாக இருந்தாலும், வயது வந்தோருக்கான அளவிலான டிரைகிளிசரைடுகளைக் (adult-level triglycerides) கொண்டுள்ளனர். இது, வயது வந்தோருக்கான நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய ஒரு வளர்சிதை மாற்ற அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த நோய்களைத் தடுப்பது பள்ளிகளிலேயே தொடங்க வேண்டும், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு மருத்துவமனைகளில் அல்ல.
வளரிளம் பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள்
டெல்லியில் பள்ளி செல்லும் வளரிளம் பருவத்தினரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பால் மற்றும் பால் பொருட்கள், கீரை வகைகள் மற்றும் பழங்களின் நுகர்வு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மிக அதிகமான குழந்தைகள் தானியங்கள் நிறைந்த உணவை உட்கொள்கின்றனர். அதேசமயம், புரதச்சத்துக்களும் பாதுகாப்பு உணவுகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. மேம்படுத்தப்பட்ட மதிய உணவுகள், ஆரோக்கியமான உணவகங்கள் மற்றும் சமச்சீரான உணவைத் தட்டுகளில் எவ்வாறு சேர்ப்பது என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் உணவு செயல்விளக்கங்கள் மூலம் பள்ளிகள் இதைச் சரிசெய்ய முடியும். இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் 2024, தட்டின் அளவில் பாதியளவு பழங்கள் மற்றும் காய்கறிகளாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. இருப்பினும், அதிகநேரம் உட்கார்ந்து மற்றும் திரைகளைப் பயன்படுத்தும் குழந்தைகள் தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறைகளின் தீங்கு விளைவிக்கும் கலவையை உருவாக்குகிறது. பள்ளித் தோட்டங்கள், பழ இடைவேளைகள் மற்றும் உள்ளூர் பருவகால விளைபொருட்களின் பயன்பாடு ஆகியவை ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை அன்றாட வாழ்வில் ஒரு வழக்கமான அங்கமாக மாற்ற உதவும்.
சர்க்கரை மற்றும் அதிகளவு-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-Processed Foods (UPFs)) குறித்து கவனம் செலுத்துதல்
அதிகப்படியான சர்க்கரையால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துத் தெளிவாக விளக்கப்பட வேண்டும். சர்க்கரை கலந்த பானங்கள், அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு (High Fat, Sugar and Salt (HFSS)) கொண்ட உணவுகள், மற்றும் அதிகளவு-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPF) ஆகியவை பாரம்பரிய உணவுகளுக்குப் பதிலாக வேகமாக இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தியப் பதின்ம வயதினரிடையே 'ஃப்ரீ சுகர்' (free sugar - உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை) மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு ஆபத்தான அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிகளவு-பதப்படுத்தப்பட்ட உணவுகளின் (UPF) நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு 13.7%-க்கும் அதிகமாக அதிகரித்து வருவதாக சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கசப்பான உண்மை என்னவென்றால், இன்று உட்கொள்ளப்படும் அதிகப்படியான சர்க்கரை நாளை வளர்சிதை மாற்ற அபாயமாக மாறுகிறது. பள்ளிகள் சர்க்கரை கலந்த பானங்களை உட்கொள்வதை தீவிரமாகத் தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும். மேலும், பொதுவாக உட்கொள்ளப்படும் பானங்கள் மற்றும் உணவுகளில் மறைந்திருக்கும் சர்க்கரையின் அளவை வெளிப்படுத்தும் அறிவிப்புப் பலகைகளையும் அவை காட்சிப்படுத்த வேண்டும். ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் பிரச்சாரங்களைவிட, தொடர்ந்து சொல்லப்படும் செய்திகளே அறிவை ஆரோக்கியமான பழக்கவழக்கங்களாக மாற்ற உதவுகின்றன.
உடல் உழைப்பின்மையையும் மோசமான உணவுப் பழக்கத்தைப் போலவே தீவிரமாகக் கருதவேண்டும். பள்ளிகள், முறையான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை விருப்பத் தேர்வுகளாக அல்லாமல், கல்வித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உறுதிசெய்ய வேண்டும். குறைந்த உடல் இயக்கம், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் மற்றும் அதிகரித்துவரும் உடல் பருமன் போன்ற நகர்ப்புற வாழ்க்கை முறைப் பழக்கங்கள் இப்போது கிராமப்புற சமூகங்களையும் பாதித்து வருவதால், இது மிகவும் முக்கியமானதாகும். இதனால் உடல் உழைப்பின்மை என்பது நகரப் பள்ளிகளின் பிரச்சனை மட்டுமல்ல, இது ஒரு நாடுதழுவிய பெருந்தொற்றாக மாறுகிறது.
அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் போதுமான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே தொற்றா நோய்கள் (non-communicable diseases) ஏற்படுவதற்கான பொதுவான ஆபத்துக் காரணிகளாக உள்ளன. வளரிளம் பருவத்தினரிடையே உடல் பருமன் வேகமாக அதிகரிப்பது, இளம் வயதிலேயே ஏற்படும் வகை-2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இது எதிர்காலத்தில் சுகாதாரச் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கவும் வழிவகுக்கும். எனவே, வலுவான மற்றும் நிலையான அரசு கொள்கைகளின் ஆதரவுடன், 'அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இல்லாத பள்ளி வளாகங்கள்' (UPF-free school zones) என்பது ஒரு நாடு தழுவிய இயக்கமாக மாற வேண்டும்.
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் பள்ளிகள்
இங்குதான் 'நமது உணவைச் சரிசெய்வோம்' ((Let’s Fix Our Food - LFOF)) முன்முயற்சியானது, ஒரு வலுவான பயணத்தை வழங்குகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்-தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (Indian Council of Medical Research-National Institute of Nutrition (ICMR-NIN)) தலைமையிலான நமது உணவைச் சரிசெய்வோம் (LFOF) கூட்டமைப்பு, ஆதார அடிப்படையிலான கொள்கையை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து கல்வியறிவு மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்காகப் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றின் மூலம் வளரிளம் பருவத்தினருக்கு ஆரோக்கியமான உணவுச் சூழல்களை உருவாக்கப் பணியாற்றும் ஒரு பலதரப்பு பங்குதாரர் முன்முயற்சியாகும். அதன் வெளியீடுகளில் அதிகக் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட (HFSS) உணவு விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகள், ஆரோக்கியமற்ற பானங்கள் மீதான வரிவிதிப்பு, மாதிரி பள்ளி ஊட்டச்சத்து பாடத்திட்டம் மற்றும் உணவு அடையாள சீட்டு வாசிப்புத் தொகுப்பு ஆகியவை அடங்கும்.
2050-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 21.8 கோடி ஆண்களும் 23.1 கோடி பெண்களும் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள் என்று 'லான்செட்' (Lancet) இதழின் 2025-ம் ஆண்டு ஆய்வு ஒன்று கணித்துள்ளது. இதில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட வளரிளம் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே இந்த அதிகரிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் பாடப்புத்தகங்கள் மூலம் ஊட்டச்சத்து குறித்த தகவல்களைக் கற்பிப்பதோடு நின்றுவிடக் கூடாது. அவை திறன் சார்ந்த கற்றல் முறையைக் கடைபிடிக்க வேண்டும். உணவுப் பொருட்களின் லேபிள்களைப் படித்தல், சரியான உணவு அளவுகளைத் தீர்மானித்தல், உணவுச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் அடிப்படை சமையல் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிகள் வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, அவை பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த நிறுவனங்களாகத் திகழும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்தியாவில் பள்ளிகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உணவுப் பழக்கவழக்கங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், சர்க்கரை கலந்த பானங்களின் நுகர்வு குறைவதையும் நிரூபித்துள்ளன. ஆரோக்கியமற்ற உணவு முறைகளிலிருந்து இன்று பாதுகாக்கப்படும் ஒரு குழந்தை, எதிர்காலத்தில் நோயாளியாக மாறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
சுப்பாராவ் எம். கவரவரப்பு (SubbaRao M. Gavaravarapu) அவர்கள் ICMR-தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் 'அறிவியலாளர் G' (Scientist G) ஆகப் பணியாற்றுவதுடன், 'லெட்ஸ் ஃபிக்ஸ் அவர் ஃபுட்' (LFOF) முன்னெடுப்பையும் வழிநடத்துகிறார். பாரதி குல்கர்னி (Bharati Kulkarni) அவர்கள் ICMR-தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.