இந்தியா ஏன் 112-ஐ அனைவருக்குமான அவசரக்கால எண்ணாக தேர்ந்தெடுத்தது? -தீரஜ் மிஸ்ரா

எந்த உதவி எண்ணை அழைப்பது? அவசரக்கால சூழலை எதிர்கொண்ட  பின் இந்தியர்கள் எதிர்கொள்ளும் முதல் சிக்கலாக இது இருந்து வருகிறது. இந்தியாவில் பிளவுப்பட்டிருக்கும் பல்வேறு அவசர உதவி எண்களை ஒருங்கிணைப்பதற்காக, அரசு '112' என்ற அனைவருக்குமான எண்ணை அறிமுகப்படுத்தியது. அந்த எண் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் இங்கே உள்ளன.


சாலை விபத்து ஏற்படும்போது எந்த உதவி எண்ணை அழைப்பீர்கள்? அல்லது தீ விபத்து ஏற்பட்டால்? அல்லது மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டால்?


அவசரநிலை ஒன்றுக்குப் பிறகு இந்தியர்கள் எதிர்கொள்ளும் முதல் சிக்கலாக இது இருந்து வருகிறது. பல்வேறு உதவி எண் எண்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தாமதத்தை ஏற்பத்துகின்றன.


இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஒன்றிய அரசு 2019-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 911-ஐப் போலவே, நாடு முழுவதும் அவசரகால பதிலளிப்பு அமைப்பு (Nationwide Emergency Response System (NERS)) எண் 112-ஐ அறிமுகப்படுத்தியது. 100 (காவல்துறை), 101 (தீயணைப்பு), 102 (அவசர மருத்துவ சேவைகள்), 108 (ஆம்புலன்ஸ்), 1033 (நெடுஞ்சாலை), 181 (பெண்கள்), 1098 (குழந்தை) மற்றும் 1091 (துன்பத்தில் உள்ள பெண்) போன்ற அனைத்து அவசரகால எண்களையும் ஒரே குறியீட்டின்கீழ் கொண்டு வருவதே இதன் நோக்கமாக இருந்தது.


இருப்பினும், 112 சேவை தொடங்கப்பட்டு 7  ஆண்டுகள் ஆன பிறகும், டெல்லி, கேரளா, குஜராத், ஹரியானா மற்றும் லட்சத்தீவு ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அனைத்து அவசர உதவி எண்களையும் 112 என்ற நாடு முழுவதும் அவசரகால பதிலளிப்பு அமைப்பு சேவையில் ஒருங்கிணைத்துள்ளன என்பதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மூலம் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' கண்டறிந்துள்ளது.


உத்தரப் பிரதேசம் அனைத்து அவசர உதவி எண்களையும் 112 என்ற ஒரே அவசர உதவி எண்ணின்கீழ் ஒருங்கிணைக்கும் பணியை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. தற்போது 102 அவசர மருத்துவ சேவை மட்டும் 112-ல் இணைக்கப்பட வேண்டியுள்ளது.


மே 26 அன்று, அனைத்து அவசர எண்களையும் 112 உதவி எண்ணுடன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகள்ரீதியாகவும் ஒருங்கிணைக்கும் பணியை நிறைவு செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்சநீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் வழங்கியது.


இவை அனைத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. இந்தியாவின் பொது உதவி எண் குறியீடு ஏன் 112-ஆக உள்ளது. வேறு எந்த எண்ணும் இல்லையா?


112 ஏன் இந்தியாவின் அனைவருக்குமான அவசர எண்ணாக உள்ளது?


இது போன்ற எண்ணை இந்தியா மட்டும் பின்பற்றவில்லை. 112 என்ற உதவி எண் ஐரோப்பிய உறுப்பு நாடுகளாலும் மற்றும் பல நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது.


ஐரோப்பிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகங்களின் மாநாடு (Conference of Postal and Telecommunications Administrations (CEPT)) 1976-ஆம் ஆண்டிலேயே 112-ஐ ஒரு பொதுவான அவசரகால எண்ணாக முதலில் பரிந்துரை செய்தது. மேலும், ஐரோப்பா  இரண்டு நடைமுறைக் காரணங்களுக்காக அவ்வாறு செய்தது.


முதலாவதாக, அந்தக்காலகட்டதில் தொலைபேசிகளில் சுழலும் எண்வட்டைச்சுழற்று (rotary dials) இருந்தன.  அவற்றில் ‘112’ என்ற எண்ணை சுழற்றுவதற்கு  குறைந்த நேரமே தேவைப்பட்டது. இரண்டாவதாக, ‘3’ என்ற எண்ணை சுழற்றினால் சுழற்சிநிலை முடிவடைந்து விடும். எனவே, தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் ‘112’ என்ற எண்ணை சுழற்ற முடிந்தது என்று உத்தரப் பிரதேச அரசின் 2019-ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று கூறுகிறது.


தவறுதலாக அழைப்பு விடுக்கப்படுவதைத் தவிர்க்க, 111 அல்லது 999 போன்ற அடிக்கடி வரும் இலக்கங்களுக்குப் பதிலாக, வெவ்வேறு இலக்கங்களை ஐரோப்பிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகங்களின் மாநாடு தேர்வு செய்தது.


தற்போதைய நவீன தொடுதிரைகளிலும், 108 அல்லது 102 போன்ற எண்களை விட 112 என்ற எண்ணை டயல் செய்வது எளிதாக இருக்கிறது.


இந்தியா ஏன் அனைவருக்குமான ஒரு  உதவி எண்ணை வழங்க முடிவு செய்தது?


இந்தியாவில், 2012-ஆம் ஆண்டு டெல்லி பேருந்து கூட்டுப் பாலியல் கொடுமை வழக்கு தொடர்பான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 112 அவசரகால பதில் அமைப்பு (Emergency Response System (ERSS)) தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி லீலா சேத் மற்றும் இந்தியாவின் முன்னாள் பொது வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் ஆகியோரையும் உள்ளடக்கிய நீதிபதி ஜே. எஸ். வர்மா குழு, அவசரகால அழைப்புகளுக்குப் பதிலளித்து அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு அவசரகால பதில் பிரிவை அனுப்பும் திறனைக் கொண்ட அனைவருக்குமான ஒரு அவசரகால பதில் அமைப்பை அமைக்குமாறு பரிந்துரை செய்தது.


அதனைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறை 112 என்ற அவசர எண்ணை ஒதுக்கியதுடன், அனைத்து விதமான அவசரநிலைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு வழங்கும் வகையில், உள்துறை அமைச்சகம் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று நிர்பயா நிதியின் மூலம் இதனை இந்தியா முழுவதும்  அறிமுகப்படுத்தியது.


உச்சநீதிமன்றத்திடம் அளித்த பதில்களில், 16 மாநிலங்கள் பல உதவி எண்களைப் பொதுவான குறியீட்டுடன் (common code) பகுதியளவில் ஒருங்கிணைத்துள்ளதாகத் தெரிவித்தன. 10 மாநிலங்கள் எந்தவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மூன்று மாநிலங்களின் பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.


112 என்ற எண் எவ்வாறு உதவும்?


112 என்பது ஒரு அனைவருக்குமான அவசரக்கால எண்ணாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மாவட்டம் அல்லது மாநில அளவில் ஒரே கட்டுப்பாட்டு மையம் (Centralised Command Centre) மூலம் கண்காணித்து நிர்வகிக்க உதவுகிறது. உதாரணமாக, உத்தரப் பிரதேசம் லக்னோவில் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது. கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் வரும் அவசரக்கால அழைப்புகள் கையாளப்படுகின்றன.


"UP-112 என்ற சேவை 2017-ல் தொடங்கப்பட்டது. பதற்றமான பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 6,278 காவல் துறை வாகனங்கள் உள்ளதாகவும், தினமும் 30,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெறுகிறோம். மேலும், 'பாதுகாப்பான நகரம் லக்னோ', 'லக்னோ ஸ்மார்ட் சிட்டி', 'UPSRTC மொபைல் செயலி' மற்றும் 'குழந்தைகள் உதவி எண்' போன்ற 25 சேவைகளை ஒருங்கிணைத்துள்ளோம். மேலும், சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் 'PM-Rahat' சேவையை ஒருங்கிணைத்துள்ளோம். இதன்மூலம், கட்டணமில்லா சிகிச்சை பெறக்கூடிய அருகிலுள்ள மருத்துவமனை குறித்த விவரங்களை நாங்கள் வழங்குகிறோம். ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு, வளங்களைச் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது என்று UP-112-ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.


அந்த அதிகாரி கூறியதாவது: "எங்களுக்கு அழைப்பு வரும்போது, ​​தீ விபத்து, அவசரஊர்தி அல்லது காவல் உதவி போன்ற அவசரத் தேவைக்கேற்ப அந்த அமைப்பு ஒரு நிகழ்வு அல்லது கோரிக்கைப் பதிவை உருவாக்குவதுடன், அருகிலுள்ள காவல் சுற்றுக்காவல் வாகனத்தையும் உடனடியாகச் செயல்படத் தூண்டுகிறது”.             


Original Link: Why India adopted 112 as its universal emergency number.

Share: