மதிய உணவுத் திட்ட சர்ச்சை : வங்காளம் முட்டைகளைத் தவிர்க்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்க தமிழ்நாடு மேற்கொண்ட நூற்றாண்டுகால முயற்சிகளை நினைவுகூர்தல் -அனகா ஜெயகுமார்

முட்டைகளைத் தவிர்ப்பதற்கான மேற்குவங்க அரசு எடுத்துள்ள முடிவு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் குழந்தை நலன் குறித்த மாறிவரும் கருத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பள்ளி உணவுத் திட்டக் கொள்கையில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்நாட்டின்மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


பள்ளிகளில் குழந்தைகளுக்கு எத்தகைய உணவை வழங்க வேண்டும் என்பது குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், மதிய உணவில் இருந்து முட்டைகளை நீக்கப்போவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.


அரசு சைவ உணவுக் கொள்கையைத் திணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட இத்திட்டத்திற்காக 'இஸ்கான்' (ISKCON) அமைப்போடு இணைந்து செயல்படும் தனது முடிவை ஆளும் பாஜக நியாயப்படுத்தியுள்ளது. இதனை "ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்தம்" என்று அது விவரித்துள்ளது.


இந்த முடிவு, தமிழ்நாட்டுடன் ஒப்பீடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது, ​​தமிழ்நாடு இந்தியாவில் மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதுடன், பல ஆண்டுகளாகத் தனது திட்டத்தின்கீழ் முட்டைகளையும் வழங்கி வருகிறது.


இருப்பினும், இந்த ஒப்பீடு முட்டைகளைத் தாண்டி விரிவானது. குழந்தைகளுக்கு என்ன உணவளிக்க வேண்டும்?, ஏன் உணவளிக்க வேண்டும்? என்பதை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்ததன் விளைவாக, தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டம் கடந்த நூற்றாண்டில் சீராகப் பரிணமித்துள்ளது.


குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைத்தல்...


மெட்ராஸ் மாநில முதலமைச்சராக இருந்த கே. காமராஜ், 1956-ல் பள்ளி உணவுத் திட்டத்திற்கான யோசனையைக் கொண்டு வந்ததாகப் பெரும்பாலும் பாராட்டப்படுகிறார். ஆனால், இவர்தான் இத்திட்டத்தைத் தொடங்கிய முதல் நபர் அல்ல. சுதந்திரத்திற்கு முந்தைய மெட்ராஸ் மாகாணத்தில், குழந்தைகளைப் பள்ளிகளுக்கு வரவழைப்பதற்காகப் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் காமராஜ் இத்திட்டத்தை உருவாக்கினார்.


கட்டாயத் தொடக்கக் கல்வியை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1920-ல் மெட்ராஸ் மாகாணத்தில் பொது நிதியுதவியுடன்கூடிய முதல் பள்ளி மதிய உணவுத் திட்டம் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


வறுமை, பசி மற்றும் குழந்தைகளின் வருமானத்தையே குடும்பங்கள் சார்ந்திருக்கும் நிலை ஆகியவை பல குழந்தைகள் பள்ளிக்குத் தவறாமல் செல்வதைத் தடுத்தன என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். மேலும், கட்டாயக் கல்வியை வெறும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே அடைய முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர் என நவீன தெற்காசிய வரலாற்றாசிரியரான கேட்ரியோனா எல்லிஸ் எழுதிய 2023-ம் ஆண்டு நூல் ஒன்று குறிப்பிடுகிறது.




இந்தப் பின்னணியில், நீதிக் கட்சி தலைமையிலான மெட்ராஸ் மாநகராட்சி, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு ஈர்க்கவும் தக்கவைக்கவும் ஒரு ஊக்கத்தொகையாகப் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்று, 'குழந்தைப் பருவத்தைக் கற்பனை செய்தல், குழந்தைகளை மேம்படுத்துதல்: பிற்கால காலனித்துவ தென்னிந்தியாவில் ஒரு 'அக்கறையுள்ள' அரசின் தோற்றம்' (Imagining Childhood, Improving Children: The Emergence of an ‘Avuncular’ State in Late Colonial South India) என்ற தலைப்பிலான புத்தகம் கூறுகிறது.


பெரும்பாலான தகவல்களின்படி, கட்சித் தலைவரும் மெட்ராஸ் மாநகராட்சி மன்றத்தின் தலைவருமான பி. தியாகராய செட்டி, மாநிலத்தின் ஏழைக் குழந்தைகள் பயனடையும் வகையில் மதிய உணவுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்தார். எல்லிஸ் மற்றும் பிற ஆதாரங்களின்படி, அவரது வேண்டுகோளின் பேரில், மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சரான தலைவர் ஏ. சுப்பராயலு ரெட்டியார், 1920-ல் மெட்ராஸ் நகரின் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள காக்ரேன் பேசின் மாநகராட்சிப் பள்ளியில் அத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


இந்தத் திட்டம், பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பள்ளியின் 165 மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்றும், அதேநேரத்தில் பெற்றோரைத் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்க ஊக்குவிக்கும் என்றும் செட்டி வாதிட்டார். மாணவர்கள் வேலைக்குச் செல்லாமல் பள்ளியில் தங்கியிருக்கும்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய இந்த உணவுகள் உதவுவதாகவும், பள்ளிக்கு வராததற்காகத் தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதைவிட இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.


ஒரு குழந்தைக்கான தினசரி உணவுச் செலவு ஓர் அணா (one anna) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


'குழந்தைப் பருவத்தைக் கற்பனை செய்தல், குழந்தைகளை மேம்படுத்துதல்' (Imagining Childhood, Improving Children) என்ற நூலில், இத்திட்டம் விரைவாகத் தனது மதிப்பை நிரூபித்ததாக எல்லிஸ் குறிப்பிடுகிறார். 1926-ல், பிற்காலத்தில் இந்தியாவின் முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக ஆன சிங்காரவேலு செட்டி, உணவு வழங்கும் பள்ளிகளில் சுமார் 90% வருகைப்பதிவு இருந்ததால், இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டார்.


1927-ல் இந்தத் திட்டம் சிறிது காலம் இடைநிறுத்தப்பட்டபோது, ​​வருகை 50% குறைந்ததாகக் கூறப்படுகிறது என்பதையும் எல்லிஸ் குறிப்பிடுகிறார். நிதி ஒதுக்கீட்டுக் குறைப்புகளை எதிர்கொண்டபோதும், கவுன்சிலர்கள் குழந்தைகளுக்கான உணவை, “அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கான ஒரு ஊக்கம்” என்றும், “கல்வியை மேம்படுத்துவதே மாநகராட்சியின் முதன்மையான கடமையாகும்” என்றும் கூறி ஆதரித்துப் பேசினர்.


அந்தப் பத்தாண்டின் இறுதியில், இத்திட்டம் குறித்த விவாதங்கள் மாணவர் வருகையை மேம்படுத்துவதையும் தாண்டிச் சென்றன. 1930-ல், மெட்ராஸ் மாநகராட்சி அறிவித்தாவது, “ஒரு குழந்தையின் உடலுக்கு உணவளிக்க முடியாவிட்டால், அதன் மூளைக்கு உணவளிக்க முடியாது.” ஊட்டச்சத்து, சுகாதாரம், மருத்துவப் பரிசோதனை மற்றும் குழந்தை வளர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் ஒரு பரந்த அணுகுமுறையின் முக்கிய அங்கமாகப் பள்ளி உணவுகள் அதிகளவில் பார்க்கப்பட்டன.


…மேலும் அவர்களைத் தொடர்ந்து பள்ளியில் தக்கவைத்தல்


எல்லிஸின் (Ellis) கூற்றுப்படி, 1930-களில் மெட்ராஸில் உள்ள கல்வி அதிகாரிகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அவர்களின் கல்வியின் மையமாகக் கருதத் தொடங்கியிருந்தனர். மாநகராட்சி விவாதங்களில், பள்ளி உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பு, சமச்சீர் உணவை உறுதி செய்வதன் அவசியம் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவை அடிக்கடி விவாதிக்கப்பட்டன. வழக்கமான உட்கொள்ளப்படும் சாதம் மற்றும் தயிர் உணவை விட ரொட்டியும் பாலும் சிறந்தவை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் வாதிட்டனர். அதே நேரத்தில், உணவுகள் உள்ளூர் உணவுப் பழக்கவழக்கங்களையும் மத உணர்வுகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்று மாநகராட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியதாக அந்த நூல் குறிப்பிடுகிறது.


பள்ளி உணவுத் திட்டத்தின் ஒரு வழக்கமான அங்கமாக மருத்துவப் பரிசோதனையும் அதிகளவில் இணைக்கப்பட்டது. இது, குழந்தைகளின் உடல்நலத்தை அதிகாரிகள் கண்காணிக்கவும், பள்ளிகள் கல்விக்கு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து மற்றும் உடல் வளர்ச்சிக்கும் பொறுப்பானவை என்ற கருத்தை வலுப்படுத்தவும் வழிவகுத்தது.


அரசு குழந்தைகளைப் பார்க்கும் விதத்தில் இது ஒரு பரந்த மாற்றத்தை இது பிரதிபலித்தது. அவர்களின் உடல்நலமும் கல்வியும் பொதுச் செலவினங்களை நியாயப்படுத்தும் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் அதிகளவில் விவரிக்கப்பட்டனர் என்று எல்லிஸ் எழுதுகிறார்.


இருப்பினும், இந்த அரசியல் நடவடிக்கை எப்போதும் போதுமான நிதியை ஈட்டித் தரவில்லை. நீதிக் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் குழந்தைகளின் நலனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும், மதிய உணவுக்கான நிதிநிலை அறிக்கை ரூ.20,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிவு, செலவு காரணமாக நிராகரிக்கப்பட்டது என்று எல்லிஸ் குறிப்பிடுகிறார்.


எல்லிஸின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் பயனாளிகளில் பெரும்பான்மையானோர் தலித் குழந்தைகளாக இருந்தனர். இது அக்காலகட்டத்தின் வறுமைப் போக்குகளைப் பிரதிபலித்தது.


திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் முட்டைகளை அறிமுகப்படுத்துதல்


சுதந்திரத்திற்குப் பிறகு, அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற தனது முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, 1956-ல் முதலமைச்சர் காமராஜ் பள்ளி உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியபோது அடுத்த முக்கிய மைல்கல் எட்டப்பட்டது.


பின்னர், முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தியதுடன், பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தியது.


1989-ம் ஆண்டு ஜனவரி மாதம், சத்துணவுத் திட்டத்தின் கீழ் வரும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு வேகவைத்த முட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்ட அரசாணை, மாநிலம் முழுவதும் முட்டைகளைக் கொள்முதல் செய்தல், பரிசோதித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான விரிவான நடைமுறைகளை வகுத்தது. முட்டைகளைச் சேர்த்த இந்த நடவடிக்கை, பள்ளி உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்தது.


அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், முட்டை விநியோகத்தின் எண்ணிக்கையையும், மதிய உணவுப் பட்டியலையும் விரிவுபடுத்தி, வாழைப்பழங்கள், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துப் பொருட்களை இதில் சேர்த்தன. 2013-ல், முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, மதிய உணவுத் திட்டத்தின் ஊட்டச்சத்து மதிப்பையும் ஈர்ப்பையும் விரிவுபடுத்தும் நோக்கில் 'பல்வகை உணவுத் திட்டத்தை' (Variety Meals) அறிமுகப்படுத்தினார்.


இன்று, தமிழ்நாட்டில் வாரத்தில் ஐந்து நாட்கள் சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகளுடன் (Variety Meals), குறைந்தபட்சம் 46 கிராம் எடையுள்ள முட்டைகள் தனித்தனியாகப் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு முட்டையும் 6.12 கிராம் புரதத்தையும் 80 கிலோகலோரி ஆற்றலையும் அளிப்பதாக மாநில அரசு கூறுகிறது.


அகில இந்திய அளவிலான முயற்சிகள்


1984-ம் ஆண்டில், இந்தியாவில் பள்ளி மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது மாநிலமாக கேரளா திகழ்ந்தது. அடுத்த சில ஆண்டுகளில், பல மாநிலங்கள் இத்திட்டத்தின் தங்களது சொந்த பள்ளி மதிய உணவுத் திட்டங்களைத் தொடங்கின. இறுதியாக 1995-ல் மத்திய அரசு இதில் தலையிட்டதுடன், இது 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2,408 வட்டாரங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். ஆரம்பத்தில், இத்திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.


2001-ல், உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைத் தொடர்ந்து, மாநிலங்கள் உலர் உணவுப் பொருட்களுக்குப் (dry rations) பதிலாக சமைத்த மதிய உணவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டன. 2007-ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இத்திட்டத்தை 8-ம் வகுப்புக்கும் விரிவுபடுத்தியது.


2021-ல், இத்திட்டம் பிஎம் போஷன் (PM POSHAN) எனப் பெயர் மாற்றப்பட்டது. சூடான சமைத்த உணவுகள் மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக உலகிலேயே முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.


Original Link: Midday meal row: As Bengal drops eggs, recalling Tamil Nadu’s century-long efforts to nourish schoolkids

Share: