கடவுச்சீட்டு (passport) குடியுரிமைக்கான சான்று இல்லையென்றால், எதுதான் சான்று? இந்தியாவின் பல்வேறு சட்டங்கள் என்ன சொல்கின்றன? -தீப்திமான் திவாரி

குடியுரிமைக்கு சான்றாக கடவுச்சீட்டு (Passport) : தற்போதைய விவாதம் இந்திய அமைப்பின் ஒரு தனித்துவமான நிலையை வெளிப்படுத்துகிறது. பல நாடுகளைப் போலல்லாமல், இந்தியா அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான குடியுரிமைச் சான்றிதழை வழங்குவதில்லை. அப்படியென்றால், குடியுரிமை எவ்வாறு நிறுவப்படுகிறது?


இந்தியக் கடவுச்சீட்டு (Passport) என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் என்றும், அதை குடியுரிமைக்கான (citizenship) ஒரு முழுமையான சான்றாகக் கருதக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) புதன்கிழமை தெளிவுபடுத்தியது. கடவுச்சீட்டு சேவை தினத்தில் (Passport Seva Divas) வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான இந்தியர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகவும் அதிகாரப்பூர்வமான ஆவணமாகக் கடவுச்சீட்டு விளங்குகிறது. இதில் 'இந்தியக் குடியரசு' (Republic of India) என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அரசாங்க அதிகாரிகளின் சரிபார்ப்புக்குப் பிறகே வழங்கப்படுகிறது.


இருப்பினும், வெளியுறவு அமைச்சகத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒரு சட்ட நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்று அரசாங்கம் திருப்தியடைந்த பின்னரே கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால், கடவுச்சீட்டு மட்டுமே ஒருவருக்கான குடியுரிமையை உருவாக்குவதில்லை அல்லது, ஒரு நீதிமன்றத்தில் ஒருவரின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, ​​கடவுச்சீட்டு மட்டுமே குடியுரிமைக்கான இறுதியான அல்லது மறுக்க முடியாத சான்றாகக் கருதப்படுவதில்லை.


இந்த சர்ச்சை, இந்தியா பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஒரு வலுவான கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. கடவுச்சீட்டு குடியுரிமைக்கான சான்று இல்லையென்றால், வேறு எதுதான் சான்று?


குடியுரிமை என்பது ஒரு சட்டப்பூர்வமான தகுதி, ஆவணம் அல்ல.


இதற்கான விடை, இந்தியச் சட்டத்தின் (Indian law) கட்டமைப்பில் அடங்கியுள்ளது. அரசியலமைப்பின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகளும், 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டமும், யார் இந்தியக் குடிமகன் என்பதை வரையறுக்கின்றன. இருப்பினும், அரசியலமைப்போ அல்லது அந்தச் சட்டமோ, குடியுரிமைக்கான சான்றாக எந்தவொரு குறிப்பிட்ட ஆவணத்தையும் அடையாளம் காட்டவில்லை.



மாறாக, பிறப்பு (birth), பெற்றோர் வழி உறவு (parentage), வசிப்பிடம் (domicile) அல்லது இயல்பு குடியுரிமை பெறுதல் (naturalisation) போன்ற உண்மைகளிலிருந்து எழும் ஒரு சட்டப்பூர்வமான தகுதியாகவே குடியுரிமை கருதப்படுகிறது. ஆவணங்கள் அந்த உண்மைகளுக்கான சான்றுகளாகச் செயல்படுகின்றன. இந்தியாவில் பிறந்த ஒருவருக்கு, குடியுரிமையானது அவர் எப்போது பிறந்தார் என்பதையும், சில சமயங்களில், அவரது பெற்றோரின் குடியுரிமை நிலையையும் சார்ந்துள்ளது. இயல்பு குடியுரிமை பெற்ற ஒருவருக்கு, அது சட்டப்பூர்வ நிபந்தனைகளுக்கு இணங்குவதைப் பொறுத்தது.


பிப்ரவரி 2020-ல் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த, பெரிதாகக் கவனிக்கப்படாத ஒரு பதிலில் இந்த வேறுபாடு வெளிப்படுகிறது. ஆதார் அட்டை (Aadhaar card), கடவுச்சீட்டு (passport), வாக்காளர் அடையாள அட்டை (voter ID), பான் அட்டை (PAN card) அல்லது பிறப்புச் சான்றிதழ் (birth certificate) ஆகியவை குடியுரிமைக்கான செல்லுபடியாகும் சான்றுகளா என்று கேட்கப்பட்டபோது, ​​அரசு குறிப்பிட்டதாவது, "இந்தியக் குடியுரிமையைப் பெறுவது என்பது 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. பிறப்பு, வம்சாவளி, பதிவு, இயல்புரிமை (naturalisation) அல்லது ஒரு பகுதி இணைக்கப்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். குடியுரிமையைப் பெறுவதற்கும் தீர்மானிப்பதற்கும் ஆன தகுதி நிலையானது 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் விதிகளின்படியே அமைகின்றன."


முக்கியமாக, கேள்வியில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் எதையும் குடியுரிமைக்கான ஆவணங்களாக அரசாங்கம் அடையாளம் காட்டவில்லை. இருப்பினும், 2003-ம் ஆண்டின் குடியுரிமை விதிகளின்கீழ், சில பிரிவுகளின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையைக் கோருபவர்கள், தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்கத் தங்கள் பெற்றோரின் கடவுச்சீட்டுகளின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.


கடவுச்சீட்டு ஏன் முக்கியமானது? — ஆனால் குடியுரிமைக்கு அது ஏன் முழுமையான சான்றாக அமையாது?


இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படுவதாலும், அது வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும், நடைமுறையில் ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்பதற்கு இது மிக வலுவான சான்றுகளில் ஒன்றாக விளங்குகிறது.


இருப்பினும், சட்டரீதியாகப் பார்க்கும்போது, 'கடவுச்சீட்டுச் சட்டம்' (Passports Act) காரணமாக நிலைமை சற்று சிக்கலானதாக உள்ளது. பொதுநலன் கருதித் தேவை என்று கருதினால், இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவருக்கும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணத்தை வழங்க மத்திய அரசுக்கு இச்சட்டத்தின் பிரிவு 20 அதிகாரம் அளிக்கிறது.


சிறப்புச் சூழல்களில் கடவுச்சீட்டுகளை வழங்க இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சக (MEA) வட்டாரங்கள் தெரிவித்தன. புவிசார் அரசியல் மாற்றங்களால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குடியுரிமையற்றவராக (stateless) மாறும் சூழலில் இது பொருந்தக்கூடும் என்று அதிகாரி ஒருவர் விளக்கினார். அதேபோல, இந்தியாவில் வசிக்கும் ஒருவர் குடியுரிமையற்றவராக இருந்தாலும், அவர் வெளிநாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டிய சூழலிலும் இது பொருந்தலாம்.


வரலாற்றுரீதியாக, இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்திய அதிகாரிகளால் சிறப்புப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2023-ல், கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 20-ன்கீழ் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்குக் கடவுச்சீட்டு வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.


இந்தக் கோட்பாடு அனைத்து ஜனநாயக நாடுகளிலும் பொதுவானது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும், ஒரு நபர் குடிமகன் என்று அரசு ஏற்கனவே தீர்மானித்ததன் அடிப்படையிலேயே கடவுச்சீட்டுகள் (passports) வழங்கப்படுகின்றன. ஒரு கடவுச்சீட்டு ஒருவரை குடிமகனாக மாற்றிவிடாது. அது பயணத்திற்கான ஒரு ஆவணமாக மட்டுமே செயல்படுகிறது. இதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அந்த இரு நாடுகளிலும் மிகவும் வலுவான குடிமக்கள் பதிவு அமைப்புகள் (civil registration system) உள்ளன. மேலும், மேலும், இயல்புரிமை மூலம் குடியுரிமை பெற்றவர்களுக்கு (naturalised citizens), முதன்மைச் சட்டப்பூர்வச் சான்றாகச் செயல்படும் முறையான குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


சட்ட விதிகளுக்கும் பொதுமக்களின் புரிதலுக்கும் இடையே பெரும்பாலும் வேறுபாடுகள் இருப்பதால்தான் இந்தக் சர்ச்சை எழுந்தது என்று முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் கூறினார்.


"கடவுச்சீட்டு குடியுரிமையை உருவாக்குவதில்லை. நீதிமன்றத்தில் குடியுரிமை தொடர்பான விவகாரம் சவால் செய்யப்படும்போது, குடியுரிமையைத் தீர்மானிக்கக்கூடிய சட்டப்பூர்வ ஆவணமும் அதுவல்ல," என்று ராவ் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார். "பல ஜனநாயக நாடுகளைப் போலவே, இந்தியாவும் குடியுரிமைச் சட்டத்திற்கும் கடவுச்சீட்டுச் சட்டத்திற்கும் இடையே வேறுபாடு காட்டுகிறது."


நீதிமன்றங்கள் என்ன கூறியுள்ளன?


நீதிமன்றத் தீர்ப்புகள் இதற்கு எளிய அல்லது ஒரே மாதிரியான பதிலை வழங்குவதில்லை.

கடந்த ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மீதான விசாரணைகளின்போது, நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பின்வருமாறு குறிப்பிட்டது. அதில், "நீங்கள் இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.... அந்தப் பட்டியலில் உள்ள 11 ஆவணங்களும் வெறும் உதாரணங்கள் மட்டுமே என்று நாங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளோம். அந்த 11 ஆவணங்களைப் பார்த்தால், கடவுச்சீட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களைத் தவிர, மற்றவை எதுவும் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரம் அல்ல" என்று குறிப்பிட்டிருந்தது.


இந்தக் கருத்து, வாக்காளர் சரிபார்ப்புக்காக தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்ற ஆவணங்களைவிட, கடவுச்சீட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களும் அதிக ஆதார மதிப்பைக் கொண்டுள்ளன என்பதை உணர்த்தியது.



இருப்பினும், குடியுரிமை தொடர்பான சர்ச்சைகளை நேரடியாகக் கையாளும் வழக்குகளில், கடவுச்சீட்டுகளுக்கு அப்பாலும் உள்ள ஆதாரங்களை நீதிமன்றங்கள் பெரும்பாலும் பரிசீலித்துள்ளன.


2013-ல், சட்டவிரோதக் குடியேறிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்கள், (பின்னர் ரத்து செய்யப்பட்ட) கடவுச்சீட்டுகள், ஆதார் அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த போதிலும், மும்பை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்தது.


"விண்ணப்பதாரர்களில் ஒருவரின் பிறப்புச் சான்றிதழ் மட்டும் போதுமானதாக இருக்காது. ஏனெனில், அத்தகைய விண்ணப்பதாரர் தனது பெற்றோர் இந்தியக் குடிமக்களாக இருந்தனர் என்பதை நிரூபிப்பது சட்டப்படி அவசியமாகும். அத்தகைய ஆதாரம் எதுவும் இங்கு சமர்ப்பிக்கப்படவில்லை," என்று நீதிபதி கே.யு. சண்டிவால் குறிப்பிட்டார்.


2005-ம் ஆண்டு 'சர்பானந்த சோனோவால் vs இந்திய அரசு' (Sarbananda Sonowal vs Union of India) வழக்கின் தீர்ப்பில், குடியுரிமை கோரும் நபரே அக்குடியுரிமையை நிரூபிப்பதற்கான பொறுப்பைக் கொண்டிருப்பார் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. "ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் என்று உரிமை கோரும் நபர் மீதே நிரூபிக்கும் பொறுப்பைச் சுமத்துவதற்குச் சரியான மற்றும் வலுவான காரணமும் உள்ளது," என்று நீதிமன்றம் கூறியது.


இதற்கு முன்பே, 'ஆந்திரப் பிரதேச மாநிலம் vs அப்துல் காதர்-1962' (Andhra Pradesh vs Abdul Khader) வழக்கில், உச்சநீதிமன்றம் கடவுச்சீட்டை (passport) தேசியத்துக்கான சான்றாகக் கருதினாலும், குடியுரிமையை உறுதி செய்வதற்கு முன் பிறப்பு, நிரந்தர வசிப்பிடம் மற்றும் இடம்பெயர்வு வரலாறு போன்ற அரசியலமைப்பு அளவுகோல்களையும் அது பரிசீலித்தது.





ஒரு பெரிய சிக்கல் : இந்தியாவிடம் அனைவருக்கும் பொதுவான குடியுரிமை ஆவணம் எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.


தற்போதைய விவாதம் இந்திய அமைப்பின் ஒரு தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துகிறது. பல நாடுகளைப் போலன்றி, இந்தியா தனது அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான குடியுரிமைச் சான்றிதழை வழங்குவதில்லை.


இந்தியாவில் குடியுரிமைச் சான்றிதழ்கள் உள்ளன; ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அதாவது, குடியுரிமைச் சட்டத்தின் 5 மற்றும் 6-வது பிரிவுகளின் கீழ் பதிவு அல்லது இயல்புரிமை (naturalisation) மூலம் குடியுரிமை பெறுபவர்களுக்கு மட்டுமே இவை வழங்கப்படுகின்றன. அத்தகைய நபர்கள் தாங்கள் குடியுரிமை பெற்றதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ சான்றிதழ்களைப் பெறுகிறார்கள்.


இருப்பினும், பெரும்பான்மையான இந்தியர்கள் பிறப்பாலேயே குடிமக்களாக உள்ளனர். அவர்களுக்கு அதற்கு இணையான குடியுரிமைச் சான்றிதழ் எதுவும் வழங்கப்படுவதில்லை.


இதன் விளைவாக, இந்தியாவில் குடிமக்கள் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒரே குடியுரிமை ஆவணம் எதுவும் இல்லை.


இந்த இடைவெளிக்கு ஒரு காரணம் வரலாற்றுப் பின்னணியாகும். இந்தியாவின் குடிமக்கள் பதிவு முறை பல ஆண்டுகளாகச் சீரற்ற முறையில் வளர்ந்து வந்தது. மேலும், அனைவருக்கும் பிறப்புப் பதிவு என்பது மிகச் சமீபத்திய நிகழ்வாகும். வயதான லட்சக்கணக்கான இந்தியர்களைப் பொறுத்தவரை, குடியுரிமை என்பது ஒரே ஒரு உறுதியான ஆவணத்தின் மூலம் நிறுவப்படுவதற்குப் பதிலாக, வாக்காளர் பட்டியல், பள்ளிச் சான்றிதழ்கள், நில ஆவணங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் தொகுப்பிலிருந்து பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.




தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) : குடியுரிமை ஆவணத்தைத் தேடும் முயற்சி


அத்தகைய ஆவணத்தை உருவாக்குவதற்கு இந்தியா மிக நெருக்கமாகச் சென்ற முயற்சி 'தேசியக் குடிமக்கள் பதிவேடு' (National Register of Citizens (NRC)) ஆகும்.


இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டிற்கான (National Register of Citizens (NRC)) சட்டக் கட்டமைப்பு, வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் 'குடியுரிமை விதிகள்-2003' (Citizenship Rules) மூலம் உருவாக்கப்பட்டது. இந்த விதிகள், உள்ளூர் மற்றும் மாநில அளவிலான பதிவேடுகளுடன் சேர்த்து 'இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேடு' (National Register of Indian Citizens) ஒன்றை உருவாக்கவும், குடியுரிமையுடன் இணைக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கவும் திட்டமிட்டிருந்தன. குடியுரிமைச் சரிபார்ப்புக்கு முன்னதாக அடையாளச் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கும் (UIDAI) இடையே ஏற்பட்ட ஒரு மோதலின்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த யோசனை மீண்டும் வெளிப்பட்டது.


'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுடனான உரையாடலில், முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்பட முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வாதிட்டதை நினைவு கூர்ந்தார்.


அப்போது, "ஆதார் பயன்பாடு பெருமளவிலான ஊடுருவல்காரர்கள் ஆவணங்களைப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் கூறியிருந்தோம். இது குறித்து பிரதமர் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் நந்தன் நிலேகனியும் கலந்துகொண்டார். நாங்கள் எங்கள் தரப்பை முன்வைத்தோம். அது குடியுரிமைக்கான சான்றாக இருக்க முடியாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன். ஆதார் சரிபார்ப்பு என்பது மேலோட்டமான ஒன்றுதான் என்பதை நிலேகனி ஒப்புக்கொண்டார்," என்று சிங் கூறினார்.



"கடவுச்சீட்டைப் பொறுத்தவரை, அதன் சரிபார்ப்பு நிலைகள் வலுவானவை. ஆனால் கடவுச்சீட்டு ஒரு குடியுரிமை ஆவணமாக வடிவமைக்கப்படவில்லை. அது எப்போதும் ஒரு பயண ஆவணமாகவே கருதப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) யோசனை, குடியுரிமைக்கான ஒரு முறையான சான்றை வழங்குவதோடு பிணைக்கப்பட்டிருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.


இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஒருபோதும் நாடுதழுவிய அளவில் செயல்படுத்தப்படவில்லை. இந்த நடவடிக்கை அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரியதாக மாறியதுடன், இறுதியில் குடியுரிமை (திருத்த) சட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை மற்றும் நாடு தழுவிய குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கை குறித்த அச்சங்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.


பெரிய அளவிலான தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடவடிக்கை அசாம் மாநிலத்தில் மட்டுமே 2015 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு விண்ணப்பதாரர்கள், தாங்களோ அல்லது தங்கள் முன்னோர்களோ 1971-ம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு முந்தைய அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆவண முரண்பாடுகள், எழுத்துப்பிழை வேறுபாடுகள், காணாமல் போன பதிவுகள் மற்றும் குடும்ப உறவுகளை நிரூபிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 19 லட்சம் பேர் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.


"காணாமல் போன அல்லது முரண்பாடான ஆவணங்களால் குடியுரிமை ஒருபோதும் பாதிக்கப்படாத வகையில், வலுவான மற்றும் விரிவான குடிமைப் பதிவு, உலகளாவிய பிறப்புப் பதிவு மற்றும் நம்பகமான காப்பகப் பதிவுகள் தேவை என்பதே இதிலிருந்து கிடைக்கும் பெரிய பாடம்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ராவ் வாதிட்டார்.


கடவுச்சீட்டு சர்ச்சை வெளிப்படுத்திய முக்கியமான முரண்பாடு இதுவாக இருக்கலாம். இந்தியாவில் ஒரு விரிவான குடியுரிமைச் சட்டம் உள்ளது. ஆனால், அதன் பெரும்பாலான குடிமக்களுக்கு, அவர்கள் இந்த நாட்டை சார்ந்தவர்கள் என்பதை உறுதியாக நிரூபிக்கும் ஒரே ஒரு ஆவணம் கூட இல்லை.


Original Link: If passport not a proof of citizenship, what is? What India’s various laws say


Share: