நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் -அலோக் மிட்டல்

உலகளவில் போட்டியை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கு,            குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (Micro, Small and Medium Enterprises (MSMEs)) உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனைப் பெரிய அளவில் உயர்த்துவது மிகவும் இன்றியமையாததாகும்.


இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs), சவால்களைத் தாங்கி மீண்டுவரும் திறனுக்காக நீண்டகாலமாக அறியப்படுபவை. அவற்றின் அடுத்தகட்ட வளர்ச்சியானது, தங்களது தொழில் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் பெரிய அளவிற்கு விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.


சமீபத்திய ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs), கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் ஏற்பட்ட வர்த்தகப் வழித்தடப் பிரச்சினைகள் போன்ற பல சவால்களை எதிர்கொண்டன. இத்தகைய கடுமையான சூழ்நிலைகளிலும், சிறு வணிகங்கள் புதிய சந்தைகளுக்குள் நுழைந்தும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டும் தங்களை மாற்றியமைத்துக் கொண்டன. இவர்களது இந்த அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தருகிறது: கடந்த பத்து ஆண்டுகால சவால்களைத் தாங்கி மீண்டு எழுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்றால், அடுத்த பத்தாண்டு காலம் தொழிலை வளர்ப்பதையும் அதன் அளவை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்க வேண்டும்.



பொருளாதார ஆய்வறிக்கை 2025-26-ன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) இந்தியப் பொருளாதாரத்தின் மிக முக்கியத் தூணாக விளங்குகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 31.1 விழுக்காடும், ஏற்றுமதியில் 48.58 விழுக்காடும் பங்களிப்பதோடு, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் 35.4 விழுக்காட்டையும் இந்த நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் 7.47 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) உள்ளன. இவை சுமார் 32.8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இதன்மூலம் வேளாண்மைக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையாக இத்துறை திகழ்கிறது. இருப்பினும், இவ்வளவு பெரிய பங்களிப்பையும் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே மிகச் சிறிய தொழில்களில் இருந்து நிலையான, நடுத்தர அளவிலான நிறுவனங்களாக வளர்ச்சி பெறுகின்றன. இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி என்பது, இன்னும் கூடுதலான குறு மற்றும் சிறு நிறுவனங்கள் இத்தகைய பெரிய வளர்ச்சியை அடைவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதில்தான் அடங்கியுள்ளது என்கின்றனர்.


விடுபட்ட நடுப்பகுதியை இணைத்தல்


இந்தியாவில் தொழில்முனைவோர் எண்ணிக்கையில் குறை எதுவும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நிலைகளுக்குப் பெரிதாக வளரும் தொழில்கள்தான் இந்தியாவில் குறைவாக உள்ளன. நமது நாட்டில் லட்சக்கணக்கான மிகச்சிறு நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு சில மட்டுமே தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, உற்பத்தித் திறனை மேம்படுத்தக்கூடிய நடுத்தர அளவிலான வணிகங்களாக வளர்ச்சி பெறுகின்றன.


பல வணிக நிறுவனங்கள் தங்களது ஆரம்பக் காலக் கட்டங்களில் தொடர்ந்து நிலைத்து நிற்கவே பெரிதும் போராடுகின்றன. இதனால் அவை தங்களின் முழுத்திறனையும் எட்டாமலேயே போய்விடுகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த ஆலோசனைச் சேவைகள், வழிகாட்டல், தொழிலை முறைப்படுத்துவதற்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான மூலதனம் ஆகியவை எளிதாகக் கிடைக்க வேண்டும். குறிப்பாக, விற்பனையாளர் நிதியுதவி திட்டங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதுதான், ஒரு நிறுவனம் பெரிய பணி ஆணைகளை பெற்று பூர்த்தி செய்யவும், தாமதமாகும் பணப் பரிவர்த்தனைகளைச் சமாளிக்கவும் மற்றும் நிலையான முறையில் வளர்ச்சி அடையவும் முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது.


வெறும் கூடுதலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSMEs) உருவாக்குவது மட்டுமே நமது நோக்கமாக இருக்கக் கூடாது.                      மாறாக, உருவாக்கப்படும் அந்த நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வலுவான அமைப்புகளாக மாறுவதற்கு வழிவகை செய்வதே உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.


டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடுத்த எல்லை


இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பானது (Digital Public Infrastructure (DPI)), தனிநபர் அடையாளம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, இதேபோன்றதொரு நவீன கண்டுபிடிப்பை வணிகம் மற்றும் கடன் வழங்கும் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். வர்த்தக வரவு தள்ளுபடி முறைமை (Trade Receivables Discounting System (TReDS)) போன்ற தளங்கள், இன்வாய்ஸ் (invoice) அடிப்படையிலான நிதியுதவியை மேம்படுத்தி, வெளிப்படைத்தன்மையையும் அதிகரித்துள்ளன. இருப்பினும், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) பலதரப்பட்டவையாக வளர்ந்து வருவதாலும், அவற்றின் விநியோகச் சங்கிலிகள் பரந்து விரிந்து கிடப்பதாலும், அவற்றுக்கு ஆதரவளிக்கும் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்கான தேவை இப்போது அதிகரித்துள்ளது.


விற்பனையாளர் நிதியுதவி (Seller financing) என்பது தனித்துவமான கவனத்திற்குரிய ஒன்றாகும். இன்வாய்ஸ் நிதியுதவி (Invoice financing) முறை தற்போது பரவலாகிவிட்டாலும், விற்பனையாளர்களுக்கான செயல்பாட்டு மூலதன வாய்ப்புகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். இது வணிகங்கள் தங்களின் பணப்புழக்கத்தை மேலாண்மை செய்யவும், பெரிய ஆர்டர்களைப் பெற்று பூர்த்தி செய்யவும், மற்றும் நிலையான முறையில் வளர்ச்சியடையவும் உதவும். வணிகங்களுக்கு இடையேயான (B2B) தனித்துவமான தளங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதன் மூலம், தாமதங்களை மேலும் குறைத்து செயல்திறனை மேம்படுத்த முடியும். இது வணிகங்கள் மிக எளிதாகவும் சீராகவும் வர்த்தகம் செய்யவும், தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.


இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடுத்த கட்டமானது, வர்த்தகத்தை எளிதாக்குதல், சந்தை இணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மூலதனம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


ஒரு ஆற்றல் பெருக்கியாக செயற்கை நுண்ணறிவு


செயற்கை நுண்ணறிவு (AI) என்பது சிறு வணிகங்களுக்கு வேலைத்திறனைப் பல மடங்கு அதிகரிக்கும் ஒரு காரணியாக மாறுவதற்கான முழுத் திறனைக் கொண்டுள்ளது. இருப்பு மேலாண்மை (Inventory management) மற்றும் வணிகக் கணிப்புகள் முதல் வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுதல் வரை, சிறு வணிகங்கள் பெரிய அளவில் முதலீடு செய்யாமலேயே தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்திக்கொள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெரிதும் உதவக்கூடும். பெருநகரங்களைத் தாண்டி, இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள சிறிய நிறுவனங்களுக்கு இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களை மலிவான விலையிலும், எளிதாகவும் கிடைக்கச் செய்வதில்தான் உண்மையான வாய்ப்புகள் உள்ளன. இந்த உற்பத்தித் திறன் மேம்பாடும் பலன்களும் ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடந்தால், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாடு என்பது முழுமையடையாத ஒன்றாகவே இருக்கும்.


பயன்படுத்தப்படாத ஒரு வளர்ச்சி இயந்திரத்தை இயக்குதல்


பெண்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள், இந்தியாவின் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளில் ஒன்றாக விளங்குகின்றன. அரசாங்கத் தரவுகளின்படி, உத்யம் (Udyam) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் (MSMEs) ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை பெண்களால் நடத்தப்படுபவை ஆகும். இருப்பினும், அவர்களுக்கான முதலீடு, வணிகத் தொடர்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவை இன்னும் சமமற்ற நிலையிலேயே உள்ளன.

பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் பெண்களின் பங்களிப்பை விரிவாக்குவது இன்றியமையாத ஒன்றாகும். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தொழில்முனைவோர் தளம் உருவாவது, இறுதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுவானதாக மாற்றும் என்கின்றனர்.


வாழ்வாதாரத்தைத் தாண்டி


உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் தொடர்ந்து பலதரப்பட்டதாக மாறி வருவதால், இந்தியா ஒரு வலுவான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுப்பதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 2025-26-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, உலகளாவிய உற்பத்தி மதிப்பு கூட்டலில் இந்தியா தற்போது சுமார் 2.9 சதவீதத்தையும், உலகளாவிய பொருட்கள் ஏற்றுமதியில் 1.8 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், வளர்வதற்கும் இந்தியாவிற்கு இன்னும் எவ்வளவு பெரிய வாய்ப்பு உள்ளது என்பதை காட்டுகிறது.


ஆனால், இந்த வாய்ப்பு வெறும் உலகளாவிய பெருநிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. இது, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் அடுத்த கட்டமாகப் பெரிய தொழில்களாக மாற முடிகிறதா என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) வரலாறு என்பது தொழில்முனைவு மற்றும் சவால்களைத் தாங்கி மீண்டெழும் திறனைப் பற்றியதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகள் என்பது அவற்றின் வளர்ச்சி மற்றும் அளவை பெரியதாக்குவதைப் பற்றியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் லட்சியம் என்பது எத்தனை சிறிய தொழில்களை உருவாக்குகிறது என்பதில் இல்லை; மாறாக, அவற்றில் எத்தனை தொழில்கள் உலக அளவில் போட்டியிடக்கூடிய, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடுத்தர அளவிலான நிறுவனங்களாக மாறுகின்றன என்பதைப் பொறுத்தே அளவிடப்பட வேண்டும்.


அவ்வாறு செய்யும்போதுதான், இந்தியா வெறும் எண்ணிக்கையிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSMEs) மட்டும் உருவாக்காமல்; இன்னும் பெரிய, வலுவான மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய நிறுவனங்களை உருவாக்க முடியும்.


அலோக் மிட்டல், ‘Indifi Technologies’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  ஆவார்.        


Original Link: Time to step up  

Share: