செயற்கை நுண்ணறிவின் (AI) வாக்குறுதியானது நெறிமுறைகள் (ethics), கண்ணியம் (dignity) மற்றும் பொறுப்புணர்வு (accountability) ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும்.
மனித வரலாற்றின் இந்த முக்கியமான காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவுப் புரட்சியானது (AI revolution) மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியல் மற்றும் புதுமையின் எல்லையற்ற ஆற்றலைப் பயன்படுத்தும் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகத் திகழ்கிறது. மனித நடவடிக்கைகளின் ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ள முடிவற்ற சாத்தியக்கூறுகளும், தற்காலத்தின் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்வதில் செயற்கை நுண்ணறிவு அளிக்கும் வலுவூட்டும் ஆற்றலும், மனிதகுலத்தின் கூட்டுப் படைப்பாற்றலுக்குச் சான்றாக அமைகின்றன. அதனால், 'கடவுள்கள்கூட பொறாமைப்படும்படியான' சாதனைகள் குறித்த மனிதகுலத்தின் பெருமிதத்தை உறுதிப்படுத்துகிறது. இதில், சலிப்பூட்டும் மற்றும் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பணிகளைத் தானியக்கமாக்கி ஓய்வுக்கான நேரத்தை உருவாக்குதல், அத்தியாவசிய சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், மருத்துவத் துறையில் பெரும் முன்னேற்றங்கள், புற்றுநோய் பரிசோதனை மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கணித்தல் உள்ளிட்ட சிறந்த சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நீண்ட ஆயுளை உறுதிசெய்தல், நோயாளிகளைப் பராமரிப்பதில் ரோபோக்களின் பயன்பாடு, விளிம்புநிலை மக்களுக்குப் பொருளாதார உதவிகளைச் சரியாகச் சென்றடையச் செய்தல், கல்வி மற்றும் அறிவை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு அளிக்கும் பெரும் பங்களிப்பு ஆகியவை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) அளிக்கும் மிகச்சிறந்த பங்களிப்புகளில் சிலவாகும்.
தொழில்நுட்பமும், மனித நெறிமுறைகளும்
இருப்பினும், மனித சமூகத்தின் எதிர்காலம் மற்றும் 'புத்திசாலித்தனத்தின் விதி' (destiny of intelligence) குறித்த கேள்விகள் தத்துவவாதிகள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னோடிகளால் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. இவர்களில் சிலர், மனிதநேயம் குறித்த நமது கண்ணோட்டத்தையே மாற்றியமைக்கக்கூடிய அல்லது ஆக்கிரமிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவின், மேலதிக வளர்ச்சியையும் பயன்பாட்டையும் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். பொருட்கள் மற்றும் சேவைகளின் 'அற்புதமான பெருக்கம்' (amazing abundance) குறித்து செயற்கை நுண்ணறிவு ஆதரவாளர்கள் முன்வைக்கும் கருத்துகளும், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் அறிவியல் முன்னேற்றம் மந்தமடைவது குறித்த எச்சரிக்கைகளும், ஒருபுறம் இருக்க; மறுபுறம், பல ஆயிரம் ஆண்டுகால கலாச்சார பரிணாம வளர்ச்சியின் மூலம் நமது வலுவான உணர்வுகளில் பதிந்துள்ள மனிதாபிமானக் கண்ணோட்டங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் தேவைப்படும் அறநெறி சார்ந்த கட்டுப்பாடுகள் குறித்த வலுவான கேள்விகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மனிதர்களாகிய நாம் யார்? இந்தப் புதிய செயல்பாட்டுத் திறன் மற்றும் பொருள்சார் வளங்களின் பெருக்கம் ஆகியவை மனித ஆன்மாவின் ஏக்கங்கள் மற்றும் உணர்ச்சிகளின் கண்ணியம் ஆகியவற்றை விஞ்சும் வகையிலான ஒரு புதிய மனிதநேயக் கண்ணோட்டத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமா? இந்தக் கேள்விகள் தவிர்க்க முடியாதவை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஈர்க்கக்கூடியவையாக இருந்தாலும், இந்தக் கேள்வியைப் புறக்கணிக்க முடியாது. மனித உணர்வுகள் மற்றும் உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளும் திறன் உள்ளிட்ட அறிவுசார் திறன்களைச் செயற்கை நுண்ணறிவால் பிரதிபலிக்கவும், சில சமயங்களில் மனிதர்களைவிடச் சிறப்பாகச் செயல்படவும் முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
தொடர்ச்சியான தொழில்நுட்ப மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்களுக்கும், வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் நீண்டகால நிச்சயமற்ற தன்மையால் ஏற்படும் 'உலகளாவிய மன அழுத்தப் பெருந்தொற்றுக்கும்', தொழில்நுட்ப இடையூறுகளின் விளைவுகளைச் சமாளிப்பதில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத மன அழுத்தத்தால் உருவாகும், கணிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான 'பயனற்ற' வர்க்கத்திற்கும் நாம் தயாராக இருக்கிறோமா? மக்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் சமூக மற்றும் பொருளாதார அமைப்புகள் நம்மிடம் உள்ளனவா என்பது மற்றொரு முக்கியமான கேள்வி. அனைவரும் ஒரு சமூகத்தின் அங்கமாக உணரும் உணர்வையும், உணர்வுபூர்வமான நல்வாழ்வையும் இந்த அமைப்புகள் உறுதிசெய்ய முடியுமா என்றும் நாம் கேட்க வேண்டும். இவை பரந்த அளவிலான தத்துவக் கேள்விகள். மனித நெறிமுறைகளை புனிதமானவையாகவும், மனிதத்தன்மையின் அடையாளங்களாகவும் கருதும் மனிதநேயக் கண்ணோட்டத்திலிருந்து இக்கேள்விகள் எழுகின்றன.
செயற்கை நுண்ணறிவின் தீவிர ஆதரவாளர்கள், "அவசரக்கால நிறுத்த அமைப்பு (kill switch) இல்லாமல் ஒரு அரக்கனை வரவழைப்பதற்கு" (summoning the devil without a kill switch) எதிராக எச்சரித்திருப்பது, 'உணர்ச்சிகள் வெளிப்படும், உத்வேகம் பாயும், நம் விருப்பங்கள் துடிக்கும் இடமான மனதின் அந்த மறைவான பகுதியை - அதாவது நம் ஒவ்வொருவரையும் தனித்துவமானவர்களாக மாற்றும் மனித ஆன்மாவின் அந்த அகநிலை சார்ந்த பகுதியை' எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தீவிர சிந்தனையின் அவசரத்தை நமக்கு உணர்த்த வேண்டும் என்பது தெளிவாகிறது.
பயனுள்ள உலகளாவிய ஒழுங்குமுறை இல்லாவிட்டால், தரவுத் தனியுரிமை மீறல்கள், தவறான தகவல்களின் பரவல், தேர்தல் முறைகேடுகள், அதீத நுண்ணறிவு கொண்ட ஆயுத அமைப்புகள் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதற்கான சாத்தியம், செயற்கை நுண்ணறிவு மூலம் நடத்தப்படும் மோசடி முயற்சிகள் (phishing) மற்றும் கண்காணிப்பு, தணிக்கை போன்றவை சமூகம் சார்ந்த கவலைகளை ஏற்படுத்தக்கூடிய சில அபாயகரமான அறிகுறிகளாகும்.
தரவுகளின் மீதான கட்டுப்பாடு என்பது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாடுகளின் உத்திசார் சுதந்திரத்துடன் (strategic autonomy) வலுவாக தொடர்புடையாதால், தேசிய அரசுகளின் டிஜிட்டல் இறையாண்மையைப் பாதுகாப்பது ஒரு சவாலாகவே உள்ளது. தேசிய இறையாண்மையை மதிக்கும் மற்றும் விதிகளைத் திறம்படச் செயல்படுத்தும் வகையிலான ஒரு உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதை இனிமேலும் ஒத்திவைக்க முடியாது.
ஒரு தார்மீக வழிகாட்டி
மனிதகுலத்தின் அடிப்படை இயல்பையே மாற்றி எழுதக்கூடிய ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) உலகில், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், அறம் சார்ந்த மற்றும் மகிழ்ச்சியான சமூகத்திற்கான அடிப்படைத் தேவைகளையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு தார்மீகப் பார்வை அவசியமாகிறது. எளிதில் ஈர்க்கக்கூடிய சுய-நம்பிக்கை உணர்வு குறித்து டெர்ரி ஈகிள்டன் (Terry Eagleton) விடுத்த எச்சரிக்கை மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது. அதை இங்கே மேற்கோள் குறிப்பிடுவதாவது, "மிகையான சுய-நம்பிக்கை ஒரு பேரழிவுகரமான விளைவைச் சந்திக்க நேரிடலாம்; பண்டைய கிரேக்கர்களை நடுங்க வைத்து, அச்சத்துடன் வானத்தை நோக்கச் செய்தது அத்தகைய நிலையே" ஆகும்.
ஸ்பானிய தத்துவஞானி ஜோஸ் ஒர்டேகா ஒய் காசெட் (José Ortega y Gasset) நமக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டினார். அவை, "மனிதன் தன்னை ஒரு அற்புதமான படைப்பாற்றல் மிக்கவனாகக் கருதும் காலத்தில் நாம் வாழ்கிறோம்; ஆனால், எதைப் படைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அனைத்துக்கும் தலைவனாகத் திகழும் அவன், தனக்குத்தானே தலைவனாக இல்லை. தனது சொந்தச் செல்வச் செழிப்பிற்கு மத்தியிலேயே அவன் வழிதவறியவனாக உணர்கிறான். முன்னெப்போதையும்விட அதிக வளங்கள், அறிவு மற்றும் தொழில்நுட்பம் இருந்தும், இன்றைய உலகம் கடந்த காலத்தின் மிக மோசமான உலகங்களின் பாதையிலேயே செல்கிறது; அது வெறும் திசையற்ற பயணமாகவே உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
'செயற்கை நுண்ணறிவு காலத்தில் மனிதரைப் பாதுகாத்தல்' (Safeguarding the Human Person in the Time of Artificial Intelligence) என்ற தலைப்பில் திருத்தந்தை பதினான்காம் லியோ (Pope Leo XIV) வெளியிட்ட திருத்தூது மடல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான மனிதநேயச் சிக்கல்கள் குறித்த தார்மீக விவாதத்திற்கு ஒரு தெளிவான முடிவை வழங்குகிறது. தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு எதிரானது அல்ல என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், "மனித கண்ணியம் புதிய வகையிலான மனிதத்தன்மையற்ற போக்குகளால் அச்சுறுத்தப்படும்" இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில், "வலுவான மனிதத்தன்மையுடன்" இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு தனிமனிதனின் கண்ணியத்தின் அடிப்படையில் அறம் சார்ந்த பகுத்தறிவுக்கான தரநிலைகளை நிறுவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் திருத்தந்தை, "தன்னை நிலைநிறுத்திக்கொள்ளுதல்" (self-assertion) என்ற மாயையை எச்சரிப்பதோடு, ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் மற்றும் மக்களின் துயரங்களை ஆற்ற இயலாத முன்னேற்றத்திற்கு எதிராகவும் எச்சரிக்கிறார். "பலவீனமானவர்களைப் பலிகொடுக்கும் லாபவெறி (லாபத்தை ஒரு சிலையாக வழிபடுதல்), வேறுபாடுகளை அழித்து ஒரே மாதிரியான தன்மையை உருவாக்கும் போக்கு (idolatry of profit) மற்றும் ஒரே ஒரு மொழி — அது டிஜிட்டல் மொழியாக இருந்தாலும் சரி — ஒரு நபரின் தனித்துவமான மர்மம் உட்பட அனைத்தையும் வெறும் தரவுகளாகவும் செயல்பாடுகளாகவும் மொழிபெயர்க்க முடியும் என்ற பாவனை" ஆகியவற்றை நிராகரிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மனிதனின் படைப்புகளுக்கு அப்பால் ‘மனிதநேயத்தின் மேன்மை மற்றும் பிரம்மாண்டத்தை’ நினைவூட்ட வேண்டிய ஒரு சூழலில், போப்பாண்டவரின் இந்தக் கருத்துக்கள் தார்மீக வழிகாட்டுதல்களாக அமைகின்றன. அதேவேளையில், ‘உணர்ச்சிபூர்வமான, உறவுமுறை சார்ந்த அல்லது ஆன்மீகத் திறன்கள்’ ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் (AI) வரம்புகளையும் இவை சுட்டிக்காட்டுகின்றன.
வாழ்க்கை அனுபவங்கள், ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் வரலாற்று நினைவுகளின் சங்கமமாக உருவான போப்பாண்டவரின் இந்தக் கோட்பாடு, மனிதனின் ‘உறுதியற்றத் தன்மை, வரையறுக்கப்பட்ட நிலை மற்றும் பலவீனங்களிலேயே’ மனிதநேயம் செழித்தோங்குகிறது என்பதை வலியுறுத்துகிறது.
அறநெறி சார்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகம்
மனித கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை நெறிமுறைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவைச் செயல்படுத்துவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் உலகத் தலைவர்கள் ‘மனிதநேயத்தை மையமாகக் கொண்ட’ (human-centred approach) அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு முடிவிலும் தனிமனிதனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். பாரிஸில் நடைபெற்ற ‘விவாடெக் 2026’ (VivaTech 2026) மாநாடு மற்றும் புது தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா-AI இம்பாக்ட் மாநாடு 2026’ (India-AI Impact Summit 2026) ஆகிய இரண்டிலும், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை நிர்வகிக்க, கட்டாயமற்ற மற்றும் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் உறுதிமொழிகளுக்குப் பதிலாக, வலுவான மற்றும் சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவை என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ‘எல்லாவற்றையும் சமமாக்கி, எதையும் போற்றாத’ இக்காலத்தில், இத்தகைய கட்டமைப்பு அதிநவீன செயற்கை நுண்ணறிவுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தவும், பகிரப்பட்ட மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவுச் சூழலை உருவாக்கவும் உதவும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சவாலை நாடுகள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது, அரசியல் தலைமையின் தரத்தையும், சமத்துவம் மற்றும் மனித கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்திற்கான நமது அர்ப்பணிப்பையும் (இதுவே நாகரிகத்தின் உச்சகட்ட லட்சியமாகும்) தீர்மானிக்கும்.
அஸ்வானி குமார், இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் முன்னாள் மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆவார்.
Original Link: Keeping humanity at the centre of the AI revolution