இந்தியாவிற்குப் புத்தொழில் நிறுவனங்கள் மட்டும் போதாது, உலகளாவிய பெரிதாக வளரக்கூடிய நிறுவனங்களும் தேவைப்படுகின்றன. -சச்சிதானந்த் சுக்லா

இந்தியா பல பெரிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், புதுமையான கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்பட்டு, உலகப் பொருளாதாரத்தின் மிக அதிக லாபம் தரும் பிரிவுகளில் செயல்படக்கூடிய மற்றும் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவிற்கான நிறுவனங்களை இன்னும் போதுமான எண்ணிக்கையில் உருவாக்கவில்லை.


தற்போது நிலவும் லாப வளர்ச்சி விகிதத்தின்படி பார்த்தால், ‘Samsung’ மற்றும் ‘SK Hynix’ ஆகிய நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் செலுத்தவிருக்கும் வரிகள் மட்டும் சுமார் 430 பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று பரவலாக விவாதிக்கப்படும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது தென்கொரியாவின் மொத்த தேசியக் கடனில் பாதியளவுக்குச் சமமாகும். இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளுக்கு இடையில், உலகளவில் போட்டியிடக்கூடிய மாபெரும் பெருநிறுவனங்களை உருவாக்குவது குறித்த நம்பிக்கையை இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன.  ஏப்ரல் மாத தொடக்கத்தில், ‘Amul’ நிறுவனம் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டிய இந்தியாவின் முதல் அதிவேக நுகர்பொருட்கள் (Fast-Moving Consumer Goods (FMCG)) நிறுவனமாக மாறியது. அதற்கு அடுத்தபடியாக, ‘Reliance Industries Limited’ நிறுவனம் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபத்தை ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது.


2025-ஆம் நிதியாண்டில், 35 இந்திய நிறுவனங்கள் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்துள்ளன. இருப்பினும், ஒரே ஒரு நிறுவனம் மட்டும்தான் 10 பில்லியன் டாலர் (சுமார் 83,000 கோடி ரூபாய்) லாப வரம்பைக் கடந்துள்ளது. இது இந்திய பெருநிறுவனத் துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இதுபோன்ற பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.  மேலும், ஜப்பான் நாட்டிலும் இந்த அளவிலான லாபத்தை இயல்பாக ஈட்டும் பல நிறுவனங்கள் உள்ளன.


இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இவ்வளவு பெரிய அளவிலான லாபத்தை ஈட்டும் பிரம்மாண்ட நிறுவனங்கள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியம்? அதிக வருவாய் இருந்தும் அதற்கு நிகரான லாபம் இல்லாமல் போவது, நமது பொருளாதாரத்தில் ஏதேனும் உள்கட்டமைப்பு சார்ந்த சிக்கல் இருப்பதைக் காட்டுகிறதா? மக்கள் லாபத்தை எதிர்மறையாகப் பார்ப்பதற்கு "பொருளாதார ஜனரஞ்சகம்" (Economic populism - எளிய மக்களைக் கவரப் பேசப்படும் பொருளாதாரக் கருத்துக்கள்) அல்லது பெரிய நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை ஏதேனும் காரணமாக இருக்கிறதா?


பொருளாதார வளர்ச்சியின் வரலாறு, பெரிய மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கத்தின் மிகவும் நம்பகமான உந்துசக்திகளாக இருந்து, உலக அரங்கில் போட்டியிடவும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் தேவையான பேரளவு சிக்கனத்தை (Economies of scale) உருவாக்கியுள்ளன என்பதைக் காட்டுகிறது.



முதலில், உற்பத்தித்திறனை எடுத்துக் கொள்வோம். பெரிய நிறுவனங்களால் தங்களின் நிலையான செலவுகளை—அதாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கான செலவுகளை, அதிக அளவிலான உற்பத்திப் பொருட்களின்மீது பகிர்ந்து பரவலாக்க முடியும். இது ஒரு பொருளுக்கான உற்பத்திச் செலவைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளும் பெரும்பாலும் நிறுவனத்தின் அளவை பொறுத்தே அமைகின்றன. பெரிய கண்டுபிடிப்புகளுக்கு நீண்டகால முதலீடு, தோல்விகளைத் தாங்கும் திறன் மற்றும் பல்வேறு திறமையாளர்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஆகியவை தேவை.                                இவை அனைத்தும் பெரிய நிறுவனங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை இதற்கு ஒரு தெளிவான உதாரணம் ஆகும்.


முதலீடு செய்யவும், உலகளாவிய சந்தைகளை ஒருங்கிணைக்கவும் கூடிய இந்தத் திறனிலிருந்துதான் உலகளாவிய போட்டித்தன்மை உருவாகிறது. பெரிய நிறுவனங்கள் வலுவான வணிக அடையாளங்களை (brands) உருவாக்குகின்றன, விநியோக வலையமைப்புகளை நிர்வகிக்கின்றன, மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலிகளை ஒருங்கிணைக்கின்றன. அவை தொழில்துறை தரநிலைகளில் தங்களின் செல்வாக்கைச் செலுத்துவதோடு, உலகளாவிய சந்தைகளில் அதிக லாபத்தையும் மதிப்பையும் ஈட்டுகின்றன. இந்த நிறுவனங்கள் நேரடியாகப் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, தங்களது சேவை வழங்குநர்கள் மற்றும் விநியோகர்களின் வலையமைப்பு மூலமாக மறைமுகமாகவும் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இவை பொதுவாக அதிக ஊதியமும் வழங்குகின்றன.


கட்டமைப்பு சார்ந்த சிக்கலைப் பொறுத்தவரை, இந்தியாவின் பெருநிறுவன வளர்ச்சியை வெறும் நிறுவனங்களின் வருவாயை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது. அந்த அளவுகோலின்படி பார்த்தால், இந்தியா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், பல வருடங்களாகக் கடன்களைக் குறைத்ததன் மூலம், நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் முன்பைவிட இப்போது மிகவும் வலுவாக உள்ளன. இருப்பினும், இந்த வெற்றிக்கு அடியில் ஒரு முக்கியமான சமநிலையின்மை உள்ளது. இந்தியா பெரிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளது உண்மைதான், ஆனால் உலகளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய, புதிய கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்படக்கூடிய மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மிக உயர்ந்த மதிப்புமிக்க பிரிவுகளில் இடம்பிடித்துள்ள நிறுவனங்களை இன்னும் போதுமான அளவு உருவாக்கவில்லை.


மூன்று முக்கிய அம்சங்கள் இந்த இடைவெளியை வரையறுக்கின்றன 


முதலாவதாக, இந்திய நிறுவனங்கள் பொதுவாக உலகளவில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதைவிட, உள்நாட்டுச் சந்தைக்குள்ளேயே வளர்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான காரணியாக இருந்து வருகிறது.                   இது பல நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தவும் உதவியுள்ளது. இருப்பினும், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், மருந்தகத் துறை (Pharmaceuticals) மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாகனத் துறை (Automobiles) மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆகிய சில துறைகளைத் தவிர, மற்ற துறைகளில் உலகளாவிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு இன்னும் குறைவாகவே உள்ளது.                  இந்தத் துறைகளிலும்கூட, சொந்தமாகப் பொருட்கள், டிஜிட்டல் தளங்கள் அல்லது காப்புரிமைகளைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஏற்றுமதி, உதிரிபாகங்களை இணைத்தல் அல்லது மறு-ஏற்றுமதி ஆகியவற்றின் மூலமே வளர்ச்சி அடைகிறது. இதற்கு நேர்மாறாக, ‘Apple’ மற்றும் ‘Toyota’ போன்ற உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்கள், உலகளாவிய சந்தைப் பங்கு, சர்வதேச விநியோகச் சங்கிலிகள் மற்றும் வலுவான பிராண்டுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்று வலுவாக விளங்குகின்றன.


இரண்டாவதாக, இந்தியாவின் பெருநிறுவன லாபம் நிதித் துறை மற்றும் கச்சாப் பொருட்கள் சார்ந்த துறைகளிலேயே இன்னும் அதிகமாகக் குவிந்துள்ளது. மொத்த வரிக்குப் பிந்தைய லாபத்தில் (Profit After Tax (PAT)) நிதி நிறுவனங்கள்              41 சதவீதமும், கச்சாப் பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள் 19 சதவீதமும் பங்களிக்கின்றன. இந்த முறை இந்தியாவுக்கு மட்டுமே உரியது அல்ல என்றாலும், இங்கு இதன் செறிவு மிக அதிகமாகத் தெரிகிறது. இத்துறைகள் அதிக முதலீடு தேவைப்படுபவை மற்றும் பெரும்பாலும் சுழற்சி முறைக்கு உட்பட்டவை ஆகும்.  அதாவது, இலாபங்கள் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளால் வராமல், உலகளாவிய கச்சாப் பொருட்களின் விலை அல்லது கடன் சுழற்சிகளால் மட்டுமே பாதிக்கப்படுகின்றன. வளர்ந்த பொருளாதார நாடுகளில், இலாபத்தின் பெரும்பகுதி தொழில்நுட்பம், மருந்தகத் துறை மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளிலிருந்து வருகிறது. அங்கு நிறுவனங்கள் தங்களின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் வலையமைப்பு விளைவுகள் மூலம் வலுவான லாப வரம்புகளைப் பராமரிக்கின்றன.


மூன்றாவதாக, அதிக லாபம் தரும், கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இயங்கும் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. உலகளாவிய தொழில்நுட்பக் கட்டமைப்பின் முக்கியப் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘NVIDIA’ நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக இங்கு உள்நாட்டு நிறுவனங்கள் மிகக் குறைவு. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வெற்றிகரமான பல தளங்களை உருவாக்கியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டுச் சந்தையை மட்டுமே மையமாகக் கொண்டவை ஆகும். மேலும், அவை கடுமையான போட்டி நிறைந்த, குறைந்த லாப வரம்பு உள்ள சூழலிலேயே இயங்குகின்றன. இதன் விளைவாக, மென்பொருள், குறைமின்கடத்திகள் (Semiconductors) மற்றும் மேம்பட்ட தொழில்முறைத் தொழில்நுட்பங்கள் மூலம் கிடைக்கும் முக்கிய லாபங்கள் தொடர்ந்து வெளிநாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களுக்கே சென்றடைகின்றன.


இந்த இடைவெளி என்பது வெறும் அரசாங்கக் கொள்கைகள் அல்லது வணிக உத்திகளால் மட்டுமே ஏற்பட்டது அல்ல. இது இன்னும் ஆழமான உள்கட்டமைப்பு சார்ந்த காரணிகளையும் பிரதிபலிக்கிறது. இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 1%-க்கும் குறைவான தொகையையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்துகிறது. இது நம்முடன் ஒப்பிடக்கூடிய மற்ற பல நாடுகளைவிட மிகக் குறைவு ஆகும்.                             அதிநவீன தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் நீண்டகால முதலீட்டு அபாய நிதித் தொகையைப் பெறுவதற்கு இன்னும் போராடி வருகின்றன.          மேலும், விதிமுறைகளில் இருக்கும் நிலையற்ற தன்மை மற்றும் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே  ஒருங்கிணைக்கப்படாத சந்தை அமைப்புகள் ஆகியவை வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான செலவை அதிகரிக்கின்றன. இந்தியா உலகளாவிய வர்த்தகக் கட்டமைப்புகளில் ஒரு அங்கமாக மாறியிருந்தாலும், சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின் அதிக லாபம் தரும் முதன்மையான பிரிவுகளில் இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கவில்லை.


வேகமாக மாறிவரும் உலகச் சூழலில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீட்டில் அடுத்த பெரிய பாய்ச்சல் என்பது, படிப்படியான வளர்ச்சியால் மட்டும் வராது; லாபகரமாக இயங்கும் பல நிறுவனங்களை உருவாக்குவதன் மூலமே சாத்தியமாகும். 2017-18-ஆம் ஆண்டின் பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic Survey 2017-18) குறிப்பிட்டிருந்த, "நட்புமுறை சோசலிசத்திலிருந்து (Crony socialism) களங்கப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தை (Stigmatised capitalism) நோக்கி நகர்தல்" என்ற நிலையைத் தாண்டி இந்தியா இப்போது முன்னேறியிருக்கும் என்று நம்பலாம். இதன் மூலம், 'லாபம்' ஈட்டுவது என்பது இனி ஒரு தவறான விஷயமாகப் பார்க்கப்படாது. மேலும், சீர்திருத்தங்களைத் தடுத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் வணிகங்களை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலையும் மாற வேண்டும்.


இந்தியா ஒரு உயர் வருவாய் பொருளாதாரமாக மாறுவதற்கு ஆதரவளிக்க, 10 பில்லியன் டாலருக்கும் (சுமார் ₹83,000 கோடிக்கும்) மேல் லாபம் ஈட்டும் அளவும், லட்சியமும், திறனும் கொண்ட இன்னும் பல உள்நாட்டு நிறுவனங்கள் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. தென்கொரிய நிறுவனங்களின் வளர்ச்சியும், அமெரிக்காவின் ‘Magnificent 7’ நிறுவனங்களின் உதாரணங்களும் இதற்கு என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. இந்தியாவுக்குப் புதிய தொழில்முனைவு நிறுவனங்கள் மட்டும் போதாது; பெரிய அளவில் லாபம் ஈட்டி, உலகளாவிய மாபெரும் நிறுவனங்களாக வளரக்கூடிய "அடுத்த கட்டத்திற்கு விரிவடையும் நிறுவனங்கள்" (Scale-ups) தேவை. கொள்கை வகுப்பாளர்களும் தொழிலதிபர்களும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியக் கேள்வி இதுதான்: நாம் வெறும் வருவாயை அதிகரிப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறோமா, அல்லது நல்ல லாபம் மற்றும் சந்தையில் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஆகிய இரண்டின் மூலமும் உலகளாவிய போட்டித் திறனை வளர்க்கப் பாடுபடுகிறோமா?


கட்டுரையாளர், ‘Larsen & Toubro’ நிறுவனத்தின் குழுமத் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆவார்.


Original Link: India doesn’t just need start-ups, but scale-ups that become global giants.

Share: