அவசரநிலை மீண்டும் கவனம் பெற்றுள்ளது -ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி


சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய வரலாற்றின் மிகவும் கடுமையான காலகட்டங்களில் ஒன்றான 1975-77-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட  அவசரநிலை, முதன்முறையாக 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய ஜனநாயகம் கடந்து வந்த முக்கிய சவால்களில் ஒன்றாக இதனை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (National Council of Educational Research and Training (NCERT)) விளக்கியுள்ளது.


இந்தச் சூழலில், நமது அரசியலமைப்பில் அவசரநிலை தொடர்பாக என்ன விதிகள் உள்ளன என்பதையும், இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட வரலாறு என்ன என்பதையும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்திய அரசியலமைப்பின் பகுதி XVIII-ல், அரசியலமைப்புச் சட்டத்தின் 352 முதல் 360 வரை உள்ள பிரிவுகள், மூன்று வகையானஅவசரநிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்த விதிகள் ஜெர்மனியின் வீமர் அரசியலமைப்பிலிருந்து ஈர்க்கப்பட்டவை (German Weimar constitution) ஆகும்.


2. இந்திய அரசியலமைப்பில் அவசரநிலைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள்


இந்திய அரசியலமைப்பின் 352-வது பிரிவு, “அவசரநிலை பிரகடனம்” (proclamation of emergency) குறித்து விவரிக்கிறது.


பிரிவு 353, “அவசரநிலைப் பிரகடனத்தின் தாக்கம்” (Effect of Proclamation of Emergency) குறித்து விவரிக்கிறது.


பிரிவு 354, “அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருக்கும்போது வருவாய்ப் பகிர்வு தொடர்பான விதிகளைப் பயன்படுத்துதல்” குறித்து விவரிக்கிறது.


பிரிவு 355, “வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களிலிருந்து நாடுகளைப் பாதுகாக்கும் ஒன்றிய அரசின் கடமையை” பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவு 356, “மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்ட அமைப்பு தோல்வி அடையும் சூழலில்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்” பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவு 357, “பிரிவு 356-ன் கீழ் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் சட்டமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்துதல்” பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவு 358 – தேசிய அவசரநிலை   அறிவிக்கப்பட்டவுடன், சட்டப் பிரிவு 19-ன் வழங்கப்பட்டுள்ள "சுதந்திர உரிமைகள்" (Right to Freedom) மீதான அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் அரசுக்கு விலக்கு அளிக்கிறது.


  பிரிவு 359, அவசரநிலைக் காலங்களில் பகுதி III-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளைச் செயல்படுத்துவதை நிறுத்திவைப்பது தொடர்பான விதிகளைப் பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவின் 360-ன் கீழ் நிதி நெருக்கடி (financial emergency) குறித்த விதிகள்  இடம் பெற்றுள்ளன.


அவசரநிலைகளின் வகைகள் யாவை?


அரசியலமைப்பின் XVIII-வது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விதிகள், மூன்று வகையான அவசரநிலைகளுக்கு வழிவகை செய்கின்றன: அவை தேசிய அவசரநிலை, குடியரசுத் தலைவர் ஆட்சி, நிதி நெருக்கடி நிலை ஆகும்.


தேசிய அவசரநிலை


அரசியலமைப்பின் 352-வது பிரிவின்கீழ், “போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சி” ஆகியவற்றால் இந்தியாவின் அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியின் பாதுகாப்பிறக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் அவசரநிலைப் பிரகடனம் பற்றியை வெளியிடலாம். (குறிப்பு: 1975-ல், ஆயுதக் கிளர்ச்சிக்குப் பதிலாக, “உள்நாட்டுக் குழப்பம்” (internal disturbance) என்ற அடிப்படையில் அரசாங்கம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது. இது போன்ற  அவசரநிலை பொதுவாக “தேசிய அவசரநிலை” (national emergency) என்று குறிப்பிடப்படுகிறது.





உங்களுக்குத் தெரியுமா?


அவசரநிலையின் போது, மக்களவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் ஒவ்வொரு முறையும் ஓராண்டு வீதம் நீட்டிக்கலாம். மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் குறித்துச் சட்டங்களை இயற்றலாம். ஒன்றிய அரசு தனது நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தலாம். ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நிதி வளப் பகிர்வு தொடர்பான அரசியலமைப்பு விதிகளை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் மாற்றியமைக்கலாம்.


குடியரசுத் தலைவர் ஆட்சி


அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356(1)-ன்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநரிடமிருந்து அறிக்கை பெறுவதன் மூலம் அல்லது வேறு எந்த ஒரு நிலையிலும், அந்த மாநிலத்தின் அரசு அரசியலமைப்பின் விதிகளின்படி மாநில  அரசை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திருப்தியடைந்தால், அவர் ஒரு பிரகடனத்தை (Proclamation) வெளியிட்டு:


(அ) மாநில அரசின் அனைத்து அல்லது ஏதேனும் ஒரு பணியையும், மாநிலச் சட்டமன்றத்தைத் தவிர்த்து மாநிலத்திலுள்ள ஆளுநர் அல்லது ஏதேனும் அமைப்பு அல்லது அதிகார அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அல்லது அவர்களால் செயல்படுத்தப்படக்கூடிய அனைத்து அல்லது ஏதேனும் சில அதிகாரங்களையும்  வைத்துக் கொள்ளலாம்.

(ஆ) மாநிலச் சட்டமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழோ செயல்படுத்தலாம் என்று அறிவிக்கலாம்;


(இ) பிரகடனத்தின் நோக்கங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அல்லது தேவை (necessary) என்று குடியரசுத் தலைவருக்குத் தோன்றும் தற்செயலான மற்றும் தொடர்ச்சியான விதிகளை உருவாக்கலாம். இதில் மாநிலத்தில் உள்ள எந்தவொரு அமைப்பு அல்லது அதிகாரம் தொடர்பான இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தவொரு விதிகளையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்துவதற்கான விதிகளும் இடம் பெற்றிருக்கும்


நிதி நெருக்கடி நிலை (Financial Emergency)


இந்திய அரசியலமைப்பின் 360-வது பிரிவு நிதி நெருக்கடி நிலை குறித்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதிலோ அல்லது அதன் எந்தப் பகுதியிலோ நிதி நிலைத்தன்மை (Financial Stability) அல்லது கடன் நம்பகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால், அதனை அறிவிக்கும் வகையில் அவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டு நிதி அவசரநிலையை அறிவிக்கலாம்.


இந்தியாவில் எத்தனை முறை அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது?


இந்தியாவில் இதுவரை மூன்று முறை அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது:


1. முதல் அவசரநிலை, 1962-ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, போர்க் காரணங்களுக்காக அறிவிக்கப்படுத்தப்பட்டது.


2. இரண்டாவது அவசரநிலை 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அப்போதைய போரின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.


3. மூன்றாவது அவசரநிலை ஜூன் 25, 1975 அன்று "உள்நாட்டு அமைதியின்மை" காரணமாக அறிவிக்கப்பட்டது. குறிப்பு: "உள்நாட்டு அமைதியின்மை" (internal disturbance) என்ற வார்த்தை, 1978-ஆம் ஆண்டின் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது.






Original Link: Emergency back in focus


Share: