வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்ட (VB-G RAM G) விதிமுறைகள்: ஜூலை 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட முறைக்கு மாற்றாக வரும் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்ட (Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) விதிகள் 125 நாட்கள் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு, மாற்றியமைக்கப்பட்ட நிதிப் பகிர்வு முறை, நேரடிப் பயன் பரிமாற்றம் மூலமாக நேரடியாக ஊதியம் வழங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான புதிய முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்றன.


வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம், 2025 (VB-G RAM G)) Act, 2025) சட்டம், 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) மாற்றாக வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, ஒன்றிய அரசு இதனைச் செயல்படுத்துவதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.


இந்த வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம், உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதிய வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் நிதிப் பொறுப்பின் பெரும்பகுதியை மாநிலங்களின்மீது சுமத்துகிறது மற்றும் நிதி ஒதுக்கீடு செயல்முறையை ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.


இந்தப் புதிய விதிகளில் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சரிபார்க்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) அடையாள அட்டை (Job card) வைத்திருப்பவர்கள், இந்த புதிய திட்டத்தின் கீழும் வேலை பெற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க பதினாறாவது நிதிக் குழுவின் (Sixteenth Finance Commission) திட்ட செயல்முறையைப் பயன்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. மற்றொரு புதிய விதியின்படி, குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டின் ஒரு பகுதியை அரசு தனியாக ஒதுக்கி வைக்கவும் அனுமதிக்கிறது.


இந்தப் புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் என்னென்ன, மற்றும் அவை தொழிலாளர்கள், இந்தத் திட்டம் மற்றும் மாநிலங்களின் நிதி நிலைமை ஆகியவற்றில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். 


முதலாவதாக, வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம் (VB-G RAM G), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம் (VB-G RAM G Act), கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் ஐந்து கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு வேலை வழங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அமையும் என்கின்றனர்.


இந்தச் சட்டம் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துகிறது. மேலும், வேளாண் சாகுபடிக்கு போதிய தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பயிர் விதைப்பு மற்றும் அறுவடை தீவிரமாக நடக்கும் காலங்களில் 60 நாட்கள் வேலை இடைவேளையையும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.


ஒன்றிய அரசு 100% ஊதியச் செலவை ஏற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) போலல்லாமல், புதிய வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம் (VB-G RAM G) திட்டமானது 40% நிதிச் சுமையை மாநில அரசுகளின்மீது சுமத்துகிறது. எனினும், வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்கள், மற்றும் சொந்தமாகச் சட்டமன்றத்தைக் கொண்டுள்ள யூனியன் பிரதேசங்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது; இந்த பிராந்தியங்களில் ஒன்றிய அரசே 90% நிதிச் சுமையைப் பகிர்ந்துகொள்ளும். அதேநேரத்தில், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களின் முழு நிதிச் சுமையையும் ஒன்றிய அரசே முழுமையாக ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும், இந்தப் புதிய திட்டம் மாநிலங்களின் தொழிலாளர் நிதி ஒதுக்கீடு திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGS) முறையை முற்றிலும் மாற்றியமைக்கிறது.  இனி மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசே நேரடியாகத் தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


புதிய விதிகள் யாவை?


மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் (Ministry of Rural Development (MoRD)) கடந்த மே மாதம் 23-ஆம் தேதியன்று, வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (VB-G RAM G) விதிகளை வெளியிட்டது. இதில் தினசரி கூலி வழங்குதல், வேலையின்மைக்கான உதவித்தொகை, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டக் கண்காணிப்பு தொடர்பான முக்கியமான எட்டு வரைவு விதிகள் இடம்பெற்றுள்ளன. அந்த விதிகள் பின்வருமாறு:


  • தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு விதிகள் 

  • குறை தீர்க்கும் விதிகள் 

  • நிர்வாகச் செலவின விதிகள்

  • வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இடைக்கால ஏற்பாடுகளுக்கான விதிகள் 

  • வழக்கமான நிதி ஒதுக்கீட்டிற்கான கொள்கை அளவுகோல் விதிகள் 

  • மத்திய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதக் குழு விதிகள் 

  • கூலி மற்றும் வேலையின்மை உதவித்தொகை வழங்குவதற்கான நடைமுறை விதிகள் 

  • மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கமான நிதியைவிட கூடுதலாகச் செய்யும் செலவினங்களின் நடைமுறைகள் மற்றும் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கான திட்டச் செலவின விதிகள், 2026


ஒரு மாதத்திற்குள் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் மத்திய அமைச்சகம் கோரியுள்ளது. இதற்குப் பிறகு, அமைச்சகம் இந்த புதிய விவாதத்திற்குரிய விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய விதிகள், தற்போது பணியில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கின்றன?


புதிய விதிகளின்படி, தற்போதைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) தொழிலாளர்களுக்கு "இடைக்கால விதிகளே" மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவர்களின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) அடையாள அட்டைகள் புதுப்பிக்கப்பட்டு, மின்-வாடிக்கையாளர் சரிபார்ப்பு (e-KYC) மூலம் உறுதி செய்யப்பட்டவுடன், அவை 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத்  திட்டத்தின்கீழ் (VB-G RAM G Act) வேலை பெறுவதற்கும் செல்லுபடியாகும். புதிய சட்டத்தின்கீழ் மாநில அரசுகள் 'ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டைகளை' வழங்கும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அனைத்து  ஊதியத் தொகை மற்றும் வேலையின்மைக்கான உதவித்தொகை வழங்கல்கள், நேரடியாகப் பயனாளிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குகளில் 'நேரடிப் பலன் பரிமாற்றம்' மூலம் மட்டுமே செலுத்தப்படும் என்று புதிய விதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், ஒன்றிய அரசு வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத்  திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய தினசரி ஊதிய விகிதத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 




மாநிலங்களுக்கு இந்தப் புதிய விதிகளின் முக்கியத்துவம் என்ன?


2026–27-ஆம் நிதியாண்டுக்கான வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ.95,692.31 கோடியை ஒதுக்கியுள்ளது.


மாநிலங்களைப் பொறுத்தவரை, நிதி ஒதுக்கீடு மற்றும் கூடுதல் செலவினங்கள் தொடர்பான விதிகளே மிகவும் முக்கியமானவையாகும்.


2026-ஆம் ஆண்டின் நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு விதிகளுக்கான வரைவு குறிக்கோள் அளவுகோல்களின்படி (Draft Objective Parameters for Normative Allocation Rules, 2026), அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்த விதிகளின்படி, மாநிலங்களுக்கான நெறிமுறை சார்ந்த நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க, ஒன்றிய அரசு பதினாறாவது நிதி ஆணையத்தின் கிடைமட்டப் பகிர்வு பரிந்துரைகளைப் பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பதினாறாவது நிதி ஆணையத்தின் கணக்கீட்டு முறைகளின்படி, சில மாநிலங்களுக்கு 2025-26-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (MGNREGS) கிடைத்த நிதியோடு ஒப்பிடும்போது, புதிய வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத்  திட்டத்தின் (VB-G RAM G) மூலம் கிடைக்கப் பெறும் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கக்கூடும். இத்தகைய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை அடங்கும். இதற்கு நேர்மாறாக, உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், அசாம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் நிதிப் பங்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.



முக்கியமாக, இந்த வரைவு விதிகளில் நிலையான நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி வைப்பதற்கான ஒரு வழிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியாக வைக்கப்படும் தொகையானது - தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், சமூகத் தணிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுதல், ஒரு நிதியாண்டில் பணிகளை முடிக்கும் வீதம் மற்றும் ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும் பிற செயல்திறன் குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படும். இருப்பினும், இவ்வாறு தனியாக எடுத்துவைக்கப்பட வேண்டிய நிதியின் பங்கு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.


இந்த புதிய வழிமுறையானது அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.


சட்டப்பிரிவில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான விதியின்படி, மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையான நிதியைத் தாண்டிச் செய்யும் கூடுதல் செலவினங்களை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும். அதாவது, அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால், அந்த கூடுதல் செலவை அந்த மாநில அரசே ஏற்கவேண்டும் என்று விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

Original link:

VB-G RAM G rules: What changes as the new job scheme replaces MGNREGS from July 1?


Share: