கேரளா, இந்தியாவின் மிக அதிக முதியோர்கள் கொண்ட மாநிலமாகும். அதிகரித்து வரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கேரளாவின் சுகாதாரம் மற்றும் சேவைத் துறைகளில், குறிப்பாக முதியோர் நலப் பராமரிப்பில் கவனம் செலுத்துவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கென ஒரு துறையை அமைப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, முதியோர் நலன் மாநில சமூக நலத்துறையின்கீழ் வருகிறது.
இந்தத் திட்டம் குறித்தும், கேரளாவின் மாறிவரும் மக்கள்தொகையியல் போக்குகள் எவ்வாறு இத்தகைய ஒரு நடவடிக்கைக்கு வழிவகுத்தன என்பது குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் குறிப்பிட்டுள்ளன.
முதியோர்கள் பெருகிவரும் ஒரு மாநிலம்
கேரளா மக்கள்தொகை மாற்றத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. கிழக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற மக்கள்தொகை அமைப்பைக் கொண்டுள்ள கேரளா, இந்தியாவின் அதிக முதியோர்கள் கொண்ட மாநிலமாகும். 2021-ஆம் ஆண்டின் 'இந்தியாவில் முதியோர்' (Elderly in India) குறித்த அறிக்கையின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 16.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அகில இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 13.1%-ஆக இருக்கும் நிலையில், 2031-ஆம் ஆண்டுக்குள் இது மொத்த மக்கள்தொகையில் 20.9%-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உழைக்கும் வயதில் உள்ள ஒவ்வொரு 100 நபர்களில் முதியோர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் 'முதியோர் சார்ந்திருப்பு விகிதம்' (Old age dependency ratio), 2011-ஆம் ஆண்டில் 19.6%-ஆக இருந்து 2021-ஆம் ஆண்டில் 26.1%-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டுக்குள் 34.3%-ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் தரவுகளின்படி, கேரளாவில் உள்ள முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2016-17-ஆம் ஆண்டில் 19,149-ஆக இருந்து 2024-25-ஆம் ஆண்டில் 37,895-ஆக அதிகரித்துள்ளது.
கேரளா ஏன் அதிவேகமாக முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறி வருகிறது?
கேரளாவில் முதியவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் பங்களிக்கின்றன. பல ஆண்டுகளாக, கேரளாவின் மொத்த கருவுறுதல் விகிதமானது (total fertility rate (TFR)), ஒரு பெண் தன் வாழ்நாளில் பெறும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. மாநிலத்தின் முக்கிய புள்ளிவிவரத் தரவுகளின்படி 2023-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.35 குழந்தைகளாக உள்ளது. இது, தலைமுறைகள் கடந்து ஒரு மக்கள்தொகை தன்னைத்தானே ஈடுசெய்வதற்குத் தேவையான விகிதத்தைக் குறிக்கும் 2.1 என்ற தேசிய மாற்று அளவைவிடக் குறைவாகும்.
இரண்டாவதாக, மேம்பட்ட மருத்துவ வசதிகள் காரணமாகக் கேரள மக்களின் சராசரி ஆயுட்காலம் (Life expectancy) கணிசமாக அதிகரித்துள்ளது.
மேலும், வேலை செய்யும் வயதுடைய மக்களில் பெருமளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதால், கேரளா முதியோர்களின் பூமியாக மாறியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகள் அல்லாத நாடுகளுக்குக் குடிபெயர்பவர்களில் பெரும் பகுதியினர், தங்கள் வயதான பெற்றோரை வீட்டிலேயே விட்டுவிட்டு அங்கேயே குடியேறுகிறார்கள். எனவே, கேரளாவில் மூத்த குடிமக்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், பல வீடுகளில் வயதான பெற்றோர்கள் மட்டுமே உள்ளனர்.
அதே நேரத்தில், மேற்கு ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் வேலை செய்யும் வயதைக் கடந்த பிறகு பெருமளவில் திரும்புவது, மாநிலத்தின் முதியோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது.
புவியியல் மற்றும் மக்கள்தொகை
2023-ஆம் ஆண்டின் 'இந்திய முதியோர் அறிக்கை' (India Ageing Report), கேரளாவின் கிராமப்புற மக்கள்தொகையில் சுமார் 17.5% பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றும், நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 15.4%-ஆக உள்ளது என்றும் தெரிவித்தது. கிராமப்புறங்களில் முதியவர்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு, உழைக்கும் வயதுடைய மக்கள் இடம்பெயர்வதே முக்கியக் காரணமாகும். குறிப்பாக முதுமைப் பருவத்தில், ஆண்களைவிட வயதான பெண்களே அதிகமாக உள்ளனர். இதில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில், 1000 ஆண்களுக்கு 1651 பெண்கள் என்ற விகிதத்தில் பெண்கள் உள்ளனர்.
ஆயுட்கால எதிர்பார்ப்பில் உள்ள வேறுபாடு மற்றொரு காரணியாகும். பெண்களின் ஆயுட்காலம் சுமார் 78.4 ஆண்டுகளாகவும், ஆண்களின் ஆயுட்காலம் 71.9 ஆண்டுகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழல் காரணமாக, தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இவர்களில் பலர் கணவரை இழந்த விதவைகளாக உள்ளனர். இவர்களில் பலருக்குப் போதுமான சமூக அல்லது நிதிசார் ஆதரவு கிடைப்பதில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) தரவுகளின்படி, கேரளாவின் தொழிலாளர் சக்தியில் 88-90% பெண்கள் உள்ளனர். அதேசமயம், தேசிய சராசரி சுமார் 55-59% ஆக உள்ளது. கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களில், சுமார் 38% பேர் 61 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மேலும் 1% பேர் 81 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இத்தரவுகள், அம்மாநிலத்தில் உள்ள பல முதியோர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டுகின்றன.
முதியோரின் ஆரோக்கியம்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால முதியோர் குறித்த ஆய்வின் முதல் அறிக்கையின்படி (2017-18), கேரளாவின் 70%-க்கும் மேற்பட்ட முதியவர்கள் குறைந்தது ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி மற்றும் இதய நோய்கள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. கேரளாவில் உள்ள முதியவர்களில் ஏறக்குறைய நான்கில் ஒருவர் மன உளைச்சலின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று இந்திய முதியோர் அறிக்கை 2023 (India Ageing Report 2023) கூறியது. மேலும், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் சுமார் 4.86% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில மறதி நோய் முன்முயற்சி (ஸ்மிருதிபாதம்) மதிப்பிடுகிறது. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கும் ஆரம்பகால நோயறிதலை உறுதி செய்வதற்கும் மறதி நோய் பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை அவசியமாக்குகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டில், மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவில் முதன்முறையாக ஒரு பகுதி-நீதிமன்ற அதிகாரம் கொண்ட 'மாநில முதியோர் ஆணையத்தை' (State Elderly Commission - Quasi-judicial forum) கேரளா அமைத்தது. அங்குள்ள முதியவர்களில் சுமார் 75% பேருக்கு நல ஓய்வூதியத் திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும், கேரளா ஏற்கனவே 'வயோமித்ரம்' (நடமாடும் மருத்துவ சேவை) ‘Vayomithram’ மற்றும் 'சமயபிரபா' (பகல்நேரப் பராமரிப்பு) ‘Samayaprabha’ போன்ற சில சமூக நலத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. முதியோருக்கான தீவிர நோயாளிகளுக்கான வலி நிவாரண மற்றும் ஆறுதல் பராமரிப்பை (Palliative care) ஒருங்கிணைக்க, 'டிஜிட்டல் பல்கலைக்கழக கேரளா' உடன் இணைந்து 'கேரளா கேர் பாலியேட்டிவ் கிரிட்' (Kerala Care Palliative Grid) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் செயல்படும் அனைத்துத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்த அமைப்பின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் படுக்கையில் உள்ள நோயாளிகளும், 4 லட்சம் இதர நோயாளிகளும் பராமரிப்புப் பெற்று வருகின்றனர். இதில் 1,387-அரசு நிறுவனங்களும் 1,227-தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அடங்கும்.
எதிர்கால வள சவால்
மூத்த குடிமக்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கை, கேரளாவின் சுகாதாரம் மற்றும் சேவைத் துறைகளில், குறிப்பாக முதியோர் நலப் பராமரிப்பில் கவனம் செலுத்துவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, கேரளா ஒரு பராமரிப்புப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து வலுப்படுத்த வேண்டியிருக்கும்.
2023-ஆம் ஆண்டில், மாநிலத்தில் சுமார் 120 முதியோர் நல மருத்துவர்கள், முதியோர் பராமரிப்பில் பயிற்சி பெற்ற 600 செவிலியர்கள், 400 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் 50 தொழில்சார் சிகிச்சையாளர்கள் இருப்பதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் கண்டறிந்தது. கணிக்கப்பட்ட சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட பல்துறை பராமரிப்பு மாதிரியுடன் இணங்குவதற்கும், 2030-ஆம் ஆண்டிற்குள் கேரளாவில் ஏறத்தாழ 300 முதியோர் நல மருத்துவர்கள், 1,500 செவிலியர்கள், 900 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் 250 தொழில்சார் சிகிச்சையாளர்கள் கொண்ட ஒரு பணியாளர் குழு உருவாக்கப்பட வேண்டும்.
Original link:
Why Kerala has announced a new department for welfare of senior citizens.