2022–2024 காலகட்டத்தில், அனைத்து இறப்புகளிலும் 60 சதவீதம் தொற்றா நோய்களே காரணமாக அமைந்தன -பிந்து ஷாஜன் பேரப்படன்

 தொற்றா நோய்கள், பெண்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும்  மக்களிடையேயும் இடையே, அதிகரித்து வரும் மரணத்திற்கான முக்கிய  காரணியாக இருந்து வருகின்றன.


இந்த மாதம் வெளியிடப்பட்ட மாதிரிப் பதிவு முறை (Sample Registration System (SRS)) புள்ளிவிவர அறிக்கை 2024-ன் படி, 2022-2024 காலகட்டத்தில் நிகழும் மொத்த இறப்புகளில் 60%-க்கு தொற்றா நோய்களே (Non-Communicable Diseases (NCDs)) காரணமாக இருப்பதால், இந்தியாவின் இளைஞர் இறப்பு நிலை மாறி வருகிறது. 2015-2017-ஆம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7.3 சதவிகிதப் புள்ளிகள் அதிகமான அளவாகும். அந்தக் காலகட்டத்தில், தொற்றா நோய்களே மொத்த இறப்புகளில் 52.8%-க்கு முக்கிய காரணியாக இருந்தன. கீழேயுள்ள விளக்கப்படம், 2015-2017-ஆம் ஆண்டுகள் முதல் இந்தியாவில் நிகழ்ந்த இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களைக் காட்டுகிறது.


பகுப்பாய்வின்படி, தொற்றா நோய்களில், இருதய நோய்கள் மட்டுமே 2022-2024 காலகட்டத்தில் நிகழ்ந்த மொத்த இறப்புகளில் 32.1%-க்குக் முக்கிய காரணியாக அமைந்துள்ளன. இது 2015-2017 காலகட்டத்தில் 27.1%-ஆக இருந்ததைவிட, மீண்டும் ஐந்து சதவிகிதப் புள்ளிகள் அதிகமான அளவாகும். இதற்கிடையில், இந்தியாவில் இறப்பிற்கான முக்கியக் காரணியாக இருந்துவரும்  தொற்றுநோய்கள், தாய்வழி, மகப்பேறு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பங்கு, 2015-2017 காலகட்டத்தில் 22%-ஆக இருந்ததிலிருந்து, 2022-2024 காலகட்டத்தில் 19.7%-ஆகக் குறைந்துள்ளது.


இந்தியாவில் இறப்புக்கான காரணங்கள்: 2022-2024-ஆம் ஆண்டுகளின் அறிக்கையில் வயது வாரியாக வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி, தொற்றா நோய்களால் ஏற்படும் மொத்த இறப்புகளில் இதய நோய்கள் 32.1% பங்கைக் கொண்டுள்ளனன். 30 முதல் 69 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மட்டும் இவை 37.3%-ஆகப் பதிவாகியுள்ளன. 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள பெரியவர்களை இதய நோய்கள் அதிகளவில் பாதிப்பை சந்ததித்து வருவதாகச் சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் வேலை செய்துவரும் பணியாளர்களில்   இந்தப்பிரிவினர் அதிகமாக இருப்பதால், தரவு கவலைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.


இந்தியாவில் கருவுறுதல் விகிதங்கள் (fertility level) குறைந்துவரும் நிலையில், இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பல மாநிலங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று கருவுறுதல் அளவிற்குக் கீழே உள்ளன.


2022–2024 அறிக்கைக் காலத்தில், 69.3% இறப்புகள் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஏற்பட்ட அதேவேளையில், 30 முதல் 44 வயதுக்குட்பட்டோர் 19.5% இறப்புகளுக்குக் காரணமாக அமைந்தனர். இது இளம் வயதினரிடையே ஏற்படும் அகால மரணங்களை ஒரு பொருளாதார மற்றும் சமூகம் தொடர்பான கவலையாக மாற்றுகிறது.


பல ஆண்டுகளாக தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. நகர்ப்புறங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 64.8% தொற்றா நோய்களால் ஏற்பட்டன. அதே, சமயம் ஊரகப்பகுதிகளில் அவை மொத்த இறப்புகளில் 58.8% மட்டுமே காரணமாக இருந்தன. இதேபோல், ஆண்களிடையே ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 62.3% தொற்றா நோய்களாலும், பெண்களிடையே 56.9% தொற்றா நோய்களாலும் ஏற்பட்டன. இருப்பினும், ஊரகப் பகுதிகளில் வசித்து வரும்  மக்கள் மற்றும் பெண்களிடையே தொற்றா நோய்களே இறப்பிற்கான முக்கிய காரணமாக மாறும் போக்கு தெளிவாகத் தெரிகிறது. கீழேயுள்ள விளக்கப்படம், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகளின்  அளவைக் காட்டுகிறது.


2022-2024 அறிக்கைக் காலத்தில், இருதய நோய்களுக்குப் பிறகு, இறப்புக்கான முக்கியக் காரணங்களாகப் புற்றுநோய் மற்றும் பிற கட்டிகள், சுவாச நோய்கள், செரிமான நோய்கள் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் ஆகியவை இருந்தன; இவை ஒவ்வொன்றும் மொத்த இறப்புகளில் 5%-க்கும் அதிகமாகப் பங்களித்தன. கீழேயுள்ள அட்டவணை, இந்தியாவில் அனைத்து வயதுப் பிரிவினரிடையேயும், மேலும் 15-29 மற்றும் 30-69 வயதுப் பிரிவினரிடையேயும் ஏற்பட்ட முதல் 10 இறப்புக் காரணங்களைக் காட்டுகிறது.

பல நடுத்தர மற்றும் அதிக அளவு வருமானம் பெறும் நாடுகளில் காணப்படுவது போன்ற ஒரு நோய்ப்பரவல் மாற்றத்தை இந்தியா தற்போது சந்தித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.  அது போன்ற நாடுகளில், இறப்புகள் ஏற்படுவதற்கு நாள்பட்ட நோய்களே முக்கியக் காரணியாக இருந்து வருகின்றன. அதேவேளையில், தொற்றுநோய்கள் தொடர்ந்து சவாலானதாகவே இருந்து வருகின்றன. இது, பொது சுகாதார வல்லுநர்கள் “இரட்டை நோய்ச்சுமை” (double burden) என்று விவரிக்கும் நிலையை உருவாக்குகிறது.


15-29 வயதுக்குட்பட்டோரிடையே தற்கொலையே மரணத்திற்கான முக்கியக் காரணமாகத் தொடர்கிறது என்று அட்டவணை-1 காட்டுகிறது. 2015-2017-ல் 16.3%-ஆக இருந்த தற்கொலைகள், தற்போது இந்த வயதினரின் மரணங்களில் 19% ஆக உள்ளன. தற்கொலைகளின் இந்த அதிகரிப்பு, வேலையின்மை, கல்வி தொடர்பான மன அழுத்தம், நிதிச் சிக்கல்கள் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அதிகரித்து வரும் மனநல அழுத்தங்களைச் சுட்டிக்காட்டுகிறது.


அசாம் மற்றும் பிற மாநிலங்களுடன் சேர்த்து, அரசாங்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் (Empowered Action Group (EAG)) கீழ் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட 8 மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கடுமையான வேறுபாடுகளையும் அந்த அறிக்கை காட்டியது. அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு மாநிலங்கள் மற்றும் அசாமில், மொத்த இறப்புகளில் 53.9% தொற்றா நோய்களால் ஏற்பட்டன. மற்ற மாநிலங்களில் இது 63.5%-ஆக இருந்தது. கீழேயுள்ள விளக்கப்படம், அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு மாநிலங்கள் மற்றும் அசாம் ஆகியவற்றுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே தொற்றா நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கைக் காட்டுகிறது.


வரைபடங்களுக்கான தரவுகள், மாதிரிப் பதிவு முறை புள்ளிவிவர அறிக்கைகள் மற்றும் இந்தியாவில் இறப்புகளுக்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டன. இந்த வரைபடங்களில், அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவின் (Empowered Action Group (EAG)) அறிக்கை என்பது அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவைக் குறிக்கிறது.

Original link:

Non-communicable diseases accounted for 60% of all deaths in 2022-2024 


Share: