டெல்லியின் தூசு மாசுபாட்டை கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான அணுகுமுறையே தேவை, தற்காலிக நடவடிக்கைகள் அல்ல. -குஃப்ரான் பெய்க்

இந்தோ-கங்கைச் சமவெளி முழுவதும் இந்த முறை கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, வழக்கத்தைவிட மிக அதிக அளவில் காற்றில் தூசிகள் கிளம்பியுள்ளன. வீசும் காற்று, இந்தத் தூசிகளில் ஒரு பகுதியை இந்தோ-கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்தும், மற்றொரு பகுதியை ராஜஸ்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாலைவனப் பகுதிகளிலிருந்தும் டெல்லியை நோக்கி அடித்துச் சென்றுள்ளது. இதனால் டெல்லி நகரம் பல பக்கங்களிலிருந்தும் வரும் தூசிப் பாதைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டுள்ளது.


சமீபகாலங்களில் டெல்லியில் தூசி மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார அபாயமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சவாலை இன்னும் விரிவாக ஆராய்வதற்குமுன், காற்று மாசுபாடுகளுக்குக் காரணமான மூலங்கள் உள்ளூரிலேயேதான் இருக்கின்றன. எனவே கோட்பாட்டு ரீதியாக இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இங்கே "உள்ளூர்" என்பதை ஒரு குறிப்பிட்ட நகர எல்லையை மட்டும் வைத்துப் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்தக் காற்றுப் பகுதியையும் கணக்கில் கொள்ள வேண்டும். வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள், இந்த மூலங்களிலிருந்து வரும் மாசுக்கள் எந்தத் திசையில் பரவுகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன.




குளிர்காலத்தில், குளிர்ந்த காற்றும் மெதுவான காற்றோட்டமும் மாசுக்களை காற்றில் பரவவிடாமல் தடுத்து, ஒரே இடத்தில் தேக்கி வைப்பதால் மாசுபாட்டின் அளவு மிக வேகமாக உயர்கிறது. ஆனால் கோடைகாலத்தில், அதிக வெப்பநிலையும் பலத்த காற்றும் காற்றின் இயக்கத்தை அதிகரித்து, தூசிகள் காற்றில் எளிதாகக் கிளம்பி வேகமாகப் பரவ வழிவகுக்கின்றன. இதைத்தான் இப்போது டெல்லியில் பார்க்கிறோம். முரண்பாடு என்னவென்றால், காற்றில் இயற்கையாகவே தூசி கிளம்புவது குறைவாக இருக்கும் குளிர்காலத்தில்தான் டெல்லியில் தண்ணீர் தெளிப்பதைப் பற்றிய விவாதங்கள் தீவிரமடைகின்றன. ஆனால் உண்மையில், கோடைகாலத்தில்தான் தண்ணீர் தெளிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.


தூசி மாசுபாட்டை மூன்று தனித்துவமான வகைகளாகப் புரிந்துகொள்ளலாம். முதலாவது இயற்கையான தூசி (natural dust). இது நிலப்பரப்பின் பண்புகள், நிலப் பயன்பாடு மற்றும் நிலப் பரப்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இரண்டாவது மீண்டும் காற்றில் கலக்கும் தூசி (re-suspended dust). இது தார் மற்றும் தார் இல்லாத சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது உருவாகிறது. அதிக போக்குவரத்து நெரிசல், அதிக வாகன வேகம் மற்றும் மோசமான சாலை நிலைமைகள், குறிப்பாக குளிர்காலத்தில், தூசியின் அளவை கணிசமாக அதிகரிக்கின்றன. காற்றில் வேகம் இல்லாததால் இந்தத் தூசிகள் தானாகக் கலைந்து போகாது, அதே நேரத்தில் தொடர்ச்சியான வாகனப் போக்குவரத்து இந்தத் தூசிகளை காற்றில் பரவிக் கொண்டே இருக்கச் செய்கிறது.


மூன்றாவது வகை, கட்டுமானப் பணிகளின்போது முறையான விதிகளைப் பின்பற்றாததால் உருவாகும் தூசியாகும். இந்த மூன்று வகைகளில், கட்டுமானத் தூசியால் ஏற்படும் மாசுபாடு மிகக் குறைவுதான் என்றாலும், இதுவே நிர்வாக ரீதியாக மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. டெல்லியில் அமல்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல் திட்ட (Graded Response Action Plan(GRAP)) போன்ற அவசரகால வழிகாட்டுதல்களில் இதற்கான நடவடிக்கைகள் முக்கியமாக இடம்பெறுவதே இதற்குச் சான்றாகும்.


தற்போது, டெல்லி நகரம் மற்ற இரு தூசி ஆதாரங்களுடன் (Dust sources) சேர்த்து, முக்கியமாக இயற்கையாகவே காற்றில் அதிகளவில் தூசி பறக்கும் கடுமையானப் பிரச்சினையால் தவித்து வருகிறது. இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால்: 2026-ஆம் ஆண்டின் கோடைகாலம் ஏன் இவ்வளவு தீவிரமான பாதிப்பைக் கண்டுள்ளது? இதற்கான விடை, காலநிலை மாற்றத்தால் மேலும் தீவிரமடைந்துள்ள பெரிய அளவிலான வானிலை மாற்றங்களில்தான் உள்ளது. இந்தியா தற்போது 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) (பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான வெப்பமயமாதல்) சூழலுக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் ஆரம்பகால விளைவுகளில் ஒன்றாக, வானிலை ஆய்வு அமைப்புகள் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாகவே இருக்கும் என்று கணித்துள்ளன.

பசிபிக் பெருங்கடல் வெப்பமடைவதால், சூப்பர் எல்-நினோ நிலைமைகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வெப்பத்தைத் தீவிரப்படுத்துகின்றன. இந்த ஆண்டு, இந்திய நகரங்கள் உலகின் வெப்பமான இடங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. தெற்காசியா முழுவதும் பரவலாக ஏற்பட்ட வெப்பமயமாதல், ஒரு பரந்த பிராந்தியத்தில் மேற்பரப்பு ஈரப்பதத்தை முற்றிலும் வறண்டுபோகச் செய்துள்ளது. இதன் விளைவாக, மண் தளர்ந்து, பலத்த காற்றினால் ஏற்படும் தூசி இடப்பெயர்ச்சிக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாறியுள்ளது.


வழக்கமாக, கோடை காலத்தில் மேற்கு இந்தியாவில் கடுமையான தூசி கலந்த புயல் பாதிப்புகள் ஏற்படும். இருப்பினும், இந்த ஆண்டு, பரந்த இந்தோ-கங்கைச் சமவெளி முழுவதும் கடும் வெப்பம் நிலவியதால், வட மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக, தூசியானது மிகப் பெரிய அளவில் மேலே கிளம்பியுள்ளது. காற்றுகள் தூசியைப் பகுதியளவு இந்தோ-கங்கைப் பகுதியிலிருந்தும், பகுதியளவு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டிய பாலைவனப் பகுதிகளிலிருந்தும் டெல்லியை நோக்கி எடுத்துச் செல்கின்றன. எனவே, டெல்லி பல தூசி செல்லும் பாதைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டுள்ளது.


உள்ளூரில் 'லூ' (Loo) என்று அழைக்கப்படும் பலமான கோடைகாலக் காற்று, இந்தத் தூசி மேலும் பரவ வழிவகுத்துள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, தற்காலிகமான உடனடித் தீர்வுகளைக் காட்டிலும், நீண்டகாலத் திட்டமிடலும் கட்டமைப்பு ரீதியான தலையீடுகளும் அவசியமாகின்றன.





எனவே, பல தீர்வுகள் முக்கியமானதாகின்றன


முதலாவதாக, கொள்கை வகுப்பாளர்கள் ஒவ்வொரு மாசு மூலத்திற்குப் பின்னணியில் உள்ள அறிவியலையும், வானிலை மற்றும் பருவகால நிலைகள் அவற்றின் மீது ஏற்படுத்தும் தாக்கத்திற்கான வழிமுறைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு மாசு மூலங்கள் வெவ்வேறு பருவகாலங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன, எனவே மாசைக் குறைப்பதற்கான உத்திகள் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அர்த்தமுள்ள முடிவுகளைப் பெறுவதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் கூடிய திட்டச் செயலாக்கம் இன்றியமையாததாகும். மூன்றாவதாக, இயந்திரமயமாக்கப்பட்ட சாலை பெருக்கும் இயந்திரங்களின் (Mechanical Road Sweeping Machines (MRSM)) பயன்பாட்டை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தூசிகள் கிளம்பும் இடத்திலேயே அதை அடக்குவதற்கு, திறமையான கூட்டுதல் மற்றும் உகந்த அளவில் தண்ணீர் தெளித்தல் ஆகிய இரண்டையும் இணைக்கும் தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்க வேண்டும்.


நான்காவதாக, சாலைத் தூசுகளைக் குறைப்பதற்குச் சிறந்த போக்குவரத்து மேலாண்மை மிகவும் முக்கியமானது. மின்சார வாகனங்கள் (EVs) எரிபொருள் உமிழ்வைக் குறைக்கலாமே தவிர, வாகனங்கள் செல்லும்போது காற்றில் மீண்டும் மிதக்கும் சாலைத் தூசுகளை அவற்றால் முற்றிலுமாகத் தடுக்க முடியாது. அந்த சவாலை எதிர்கொள்ள மென்மையான போக்குவரத்து, சிறந்த சாலைப் பராமரிப்பு மற்றும் நிலையான போக்குவரத்து மேலாண்மை ஆகியவை தேவைப்படுகின்றன.


ஐந்தாவதாக, கட்டுமானப் பகுதிகளில் பசுமைப் போர்வை அமைப்பது உள்ளிட்ட கட்டுமான விதிகளானது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  அதே நேரத்தில், தூசு மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் மற்ற பெரிய காரணிகளைவிடக் கட்டுமானத் தூசுகள் மட்டுமே பெரியதாகக் காட்டப்பட்டுவிடக் கூடாது. இறுதியாக, மண் பரப்பை நிலையாக வைத்திருக்கவும், தூசிகள் காற்றில் பறப்பதைத் தடுக்கவும் நகரங்களுக்கு கணிசமான அளவில் அதிக பசுமைப் போர்வையும் நீர்நிலைகளும் தேவைப்படுகின்றன.



காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருவதால், நாம் கூடுதல் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. மாறிவரும் தூசு மாசுபாட்டின் புவியியல் அமைப்பானது நமக்கு ஒரு எச்சரிக்கையாகும்: பருவநிலையுடன் தொடர்புடைய தீவிர இயற்கை நிகழ்வுகள் மிகவும் கணிக்க முடியாததாகவும், பரவலானதாகவும் மற்றும் மனிதர்களால் கையாள்வதற்குக் கடினமானதாகவும் மாறி வருகின்றன. 


குஃப்ரான் பெய்க், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன வளாகத்தில் (IISc-Campus) அமைந்துள்ள தேசிய மேம்பட்ட படிப்புகளுக்கான நிறுவனத்தில் (NIAS) முதன்மைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) நிறுவனரும் ஆவார்.

Original link:

Delhi’s dust pollution needs science, not seasonal optics.


Share: