ஐ.நா. சாசனத்தின் 81 ஆண்டுகள்: இது எப்படி உருவானது? -அபிஷேக் நாயர்

ஜூன் மாதம் 26-ஆம் தேதி, 1945-ஆம் ஆண்டு, மற்றொரு உலகப் போர் உருவாவதைத் தடுப்பதற்காக 50 நாடுகள் இணைந்து ஒரு சாசனத்தில் (Charter) கையெழுத்திட்டன. இந்தச் சாசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்த நாடுகளும்கூட, காலப்போக்கில் இதில் இணைந்து கையெழுத்திட்டன. இருப்பினும், அவர்கள் அன்று உருவாக்கிய அந்த ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations (UN)) கட்டமைப்பு இன்றுவரை பெரிய அளவில் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக, 21-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.


ஜூன் மாதம் 26-ஆம் தேதி, 1945-ஆம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள 'Veterans’ War Memorial' கட்டிடத்தில், 50 நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் கையெழுத்திட்டனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த சாசனம், 19 அத்தியாயங்களில் பரவியுள்ள 111 விதிகளைக் கொண்டதாகும்.


சர்வதேச அமைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட இந்த மாநாடு, ஜப்பானுக்கு எதிரான உலகப்போர் இன்னும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போதே, ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி கூட்டப்பட்டது. இந்த மாநாடு நடந்து கொண்டிருந்த பாதியிலேயே, அதாவது மே மாதம் 8-ஆம் தேதி ஜெர்மனி போரில் சரணடைந்தது.


இந்தச் சாசனம் ஜூன் மாதம் 25-ஆம் தேதி மாநாட்டில் இருந்த அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதற்கடுத்த நாள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.





அன்று கையெழுத்திடப்பட்ட இந்த சாசனம், அதன் முதல் விதியின்படி                        (Article 1) நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கு இடையே நட்பு உறவை வளர்த்தல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் மற்றும் மனிதநேயப் பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை நாடுதல், மற்றும் இந்த இலக்குகளை நோக்கி நாடுகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாகச் செயல்படுதல் ஆகியனவாகும்.


அந்த சாசனத்தில் எதைப் பற்றியெல்லாம் குறிப்பிடவே இல்லையோ, அதுவும் சம அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சுற்றுச்சூழல்,                  நிலையான வளர்ச்சி, காலநிலை, அணு ஆயுதங்கள், உலகளாவிய பெருந்தொற்றுகள் அல்லது இணையவழித் தாக்குதல் போர்முறை (Cyberwarfare) பற்றிய எந்தவொரு குறிப்பும் அதில் இடம்பெறவில்லை.


திட்டத்தை உருவாக்கிய அந்த உச்சிமாநாடு 


ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் (The UN Charter) திடீரென்று உருவானது அல்ல. அதன் அறிவுசார்ந்த வரலாறு, இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நடந்த பல உச்சிமாநாடுகள் மற்றும் பிரகடனங்களின் வழியாகவே வளர்ந்து வந்தது. ஆகஸ்ட் மாதம் 1941-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மற்றும் பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகியோர் 'அட்லாண்டிக் சாசனத்தில்' (Atlantic Charter) கையெழுத்திட்டபோதுதான், 'ஐக்கிய நாடுகள்' என்ற யோசனை முதன்முதலில் வடிவம் பெறத் தொடங்கியது. இது போருக்குப் பிந்தைய அமைதியான சர்வதேச ஒழுங்கிற்கான நேச நாட்டுப் படைகளின் (Allied powers) கூட்டுப் பிரகடனம் ஆகும்.


அக்டோபர் மாதம் 1943-ஆம் ஆண்டில் நடந்த மாஸ்கோ மாநாட்டில்     (Moscow Conference), அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து 'மாஸ்கோ பிரகடனத்தை' வெளியிட்டனர். உலக அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த                                  ஒரு பொதுவான சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சோவியத் யூனியனின் முதல் உறுதியான வாக்குறுதி இதுவாகும்..



அதே ஆண்டு நவம்பர் மாதம், ரூஸ்வெல்ட் மற்றும் சர்ச்சில் ஆகிய தலைவர்கள் கெய்ரோ மாநாட்டிற்காக (நவம்பர் 22-26, 1943) கெய்ரோவிற்கு பயணம் மேற்கொண்டனர். சீனாவின் சியாங் கே-ஷேக் உடன் நடந்த இந்த உச்சிமாநாட்டில், ஜப்பானுக்கு எதிரான நட்பு நாடுகளின் நிலைப்பாடு விவரிக்கப்பட்டது.                      மேலும், ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று கோரும் 'கெய்ரோ பிரகடனம்' வெளியிடப்பட்டு, ஆசியாவின் எதிர்காலம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இதற்கு அடுத்தபடியாக, இந்த மூன்று தலைவர்களும் தெஹ்ரான் மாநாட்டிற்காக (நவம்பர் 28 - டிசம்பர் 1, 1943) தெஹ்ரானில் மீண்டும் கூடினர். அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் (Big Three) ஆகிய மூன்று வல்லரசுத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சந்தித்த முதல் மாநாடு ஆகும்.                          இங்கு ரூஸ்வெல்ட், உலக அமைதியை நிலைநிறுத்தும் ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்குவதற்கு ஸ்டாலின் மற்றும் சர்ச்சிலை ஒப்புக்கொள்ள வைத்தார்.


பிரெட்டன் வூட்ஸ் மாநாடு (Bretton Woods Conference) நடந்த அடுத்த மாதத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வாஷிங்டனில் உள்ள டம்பர்டன் ஓக்ஸ் (Dumbarton Oaks) என்ற இடத்தில் சந்தித்தனர். நாடுகள் அனைத்தும் இறையாண்மையுடன் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், பொதுச் சபை, பாதுகாப்புப் பேரவை மற்றும் செயலகம் ஆகியவற்றைக் கொண்ட "ஐக்கிய நாடுகள் சபை" (The United Nations) என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து விவாதித்தனர். இருப்பினும், பாதுகாப்புப் பேரவையின் மிக முக்கியமான 'வாக்களிப்பு முறை' குறித்த கேள்விக்கு அப்போது தீர்வு காணப்படாமல் இருந்தது.


அந்தக் குறைபாடு 1945-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த யால்டா மாநாட்டில் (Yalta Conference) சரி செய்யப்பட்டது. அங்கு சந்தித்த அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகிய மூன்று பெரும் நாடுகளின் தலைவர்கள்  தடையுரிமை அதிகார (Veto formula) வழிமுறையை இறுதி செய்தனர். இதுவே இன்றுவரை பாதுகாப்புப் பேரவையின் கட்டமைப்பைத் தீர்மானிப்பதாக உள்ளது.




அதன்பின்னர், இந்த அமைப்பை முன்னின்று நடத்திய அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளும், ஜெர்மனி அல்லது ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்திருந்த பிற நாடுகளை சான் பிரான்சிஸ்கோ மாநாட்டிற்கு அழைத்தன. இதில் ஐம்பது நாடுகள் பங்கேற்றன. 1942 பிரகடனத்தில் ஆரம்பத்திலேயே கையெழுத்திட்டிருந்த போலந்து (Poland) நாடு இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை, எனினும் பின்னர் கையெழுத்திட்டு அதன் 51-வது ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது.


பாதுகாப்புப் பேரவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் இதரப் பெரும்பாலான நாடுகளும் அதன் சாசனத்தை ஏற்று அங்கீகரித்ததைத் தொடர்ந்து, 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நாள் தற்போது 'ஐக்கிய நாடுகள் தினமாக' (United Nations Day) கொண்டாடப்படுகிறது.


ஐ.நா சாசனத்தின் விதிகள் 53 மற்றும் 107-ன்கீழ் (இவை பின்னர் "எதிரி நாட்டு விதிகள்" (Enemy State Clauses) என்று அழைக்கப்பட்டன), ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 'எதிரி நாடுகள்' என முத்திரையிடப்பட்டன. சட்டப்படி, எந்தவொரு ஐ.நா உறுப்பு நாடும் பாதுகாப்புப் பேரவையின் முன்அனுமதி இல்லாமலேயே இந்த நாடுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.


போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கைக் கட்டுப்படுத்தப்போகும் இந்த                   ஐ.நா சாசனத்தை உருவாக்குவதில், இரண்டாம் உலகப் போருக்குக் காரணமான முக்கிய மூன்று 'அச்சு நாடுகளுக்கு' (Axis powers - ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) எந்தப் பங்கும் இருக்கவில்லை. இத்தாலி 1935-ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவையும், ஜப்பான் 1931-ஆம் ஆண்டில் மஞ்சூரியாவைக் கைப்பற்றி 1937-ஆம் ஆண்டில் சீனாவையும் ஆக்கிரமித்தன. ஜெர்மனி 1938-ஆம் ஆண்டில் பிற நாடுகளைத் தன்னுடன் இணைக்கத் தொடங்கியது. இத்தகைய தொடர் ஆக்கிரமிப்புகள்தான் ஏற்கனவே இருந்த சர்வதேச நாடுகளின் அமைப்பை             (League of Nations) அழித்து, இந்த உலகப் போருக்குக் காரணமாக அமைந்தன.




எதிரி நாடுகளிலிருந்து உறுப்பு நாடுகளாக 


இரண்டாம் உலகப் போரில் தோற்ற அச்சு நாடுகளுக்கு (ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக நுழைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி, 1955-ஆம் ஆண்டு ஒரு "தொகுப்பு ஒப்பந்தத்தின்" ஒரு பகுதியாக இத்தாலி ஐநா சபையில் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் பாதுகாப்புச் சபை ஒரே நேரத்தில் பதினாறு நாடுகளை உறுப்பினர்களாக சேர்க்கப் பரிந்துரைத்தது. மேற்கத்திய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரச உடன்படிக்கையே இதுவாகும்; ஏனெனில், மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாக இருந்த நாடுகள் ஐ.நா-வில் சேருவதைத் தடுக்க சோவியத் யூனியன் தனது 'தடுப்புரிமை' (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி அதுவரை தடுத்து வந்தது.


ஜப்பான் ஐ.நா-வில் சேருவதற்கு இன்னும் கூடுதல் காலம் எடுத்தது. 1950-களின் தொடக்கத்தில் சோவியத் யூனியன் ஜப்பானின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடர்ந்து தடுத்து வந்தது. 1956-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பான் மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு, ஜப்பானின் ஐ.நா உறுப்பினர் சேர்க்கை முயற்சியை ஆதரிக்க சோவியத் யூனியன் ஒப்புக்கொண்ட பிறகே, டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி,                    1956-ஆம் ஆண்டு ஐ.நா சபை தொடங்கப்பட்டு பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.


சோவியத் ஒன்றியம், அன்றைய மேற்கு ஜெர்மனியை (Federal Republic of Germany) அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் கூட்டாளியாகவே பார்த்தது. அதேபோல, சோவியத் ஒன்றியத்தின் ஆதரவைப் பெற்றிருந்த கிழக்கு ஜெர்மனி (German Democratic Republic) தங்களோடு இணைவதையோ அல்லது தங்களது கூட்டணியில் சேருவதையோ அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இருதரப்பினருமே தங்களுக்கு எதிரே இருந்த மற்றொரு நாடான ஜெர்மனியை ஒரு சட்டவிரோதமான நாடாகவே கருதினர்.



மேற்கு ஜெர்மனி (ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசு) மற்றும் கிழக்கு ஜெர்மனி (ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு) ஆகிய இரண்டு நாடுகளும் செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி, 1973-ஆம் ஆண்டு ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையில் சேர்க்கப்பட்டன.


அதிகரித்து வரும் முக்கியத்துவமின்மை மற்றும் சீர்திருத்தம் குறித்த கேள்வி 


காசா (Gaza) மற்றும் உக்ரைனில் (Ukraine) நடந்து வரும் போர்கள்,                       ஐநா சபையின் கூட்டுப் பாதுகாப்பு என்ற வாக்குறுதிக்குக் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடான ரஷ்யா உக்ரைன்மீது படையெடுத்தது.                 அதே நேரத்தில் காசா போர் மிகப்பெரிய அளவில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும், தடுப்புரிமை (Veto) அதிகாரம் பயன்படுத்தப்பட்டதால் ஏழு வரைவுத் தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இது 1986-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். அமெரிக்கா, காசா விவகாரத்தில் மூன்று முறை தனது தடுப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அதே நேரத்தில் ரஷ்யா, காசா, உக்ரைன், சூடான் மற்றும் விண்வெளி தொடர்பான தீர்மானங்களின் மீது நான்கு முறை தனது மறுப்பாணை அதிகாரத்தைப் பயன்படுத்தியது.


ஐக்கிய நாடுகள் சபை எந்த ஒரு சாசனத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதோ, அதை நிலைநிறுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக இன்று பல ஆய்வாளர்களும் உறுப்பு நாடுகளும் கூறுகின்றனர். ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் இன்றைய உலகிற்குப் பொருந்தாத, காலாவதியான, அநீதியான மற்றும் செயலற்ற ஒரு அமைப்பு என்று சாடியுள்ளார். மேலும் சூடான், காசா மற்றும் உக்ரைன் போன்ற பகுதிகளில் நடக்கும் பெரிய அளவிலான போர்களை நிறுத்துவதில் இந்த அமைப்பு தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




ஐநா பாதுகாப்புச் சபையின் 'தடுப்புரிமை' (Veto) அதிகாரம் என்பது, தொடக்கத்தில் உலகின் முன்னணிப் வல்லரசு நாடுகளை ஐநா அமைப்போடு தொடர்ந்து பிணைத்து வைத்திருப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது.                  இருப்பினும், அதற்கு மாறாக, அது இன்று ஐநாவின் அவசர நடவடிக்கைகளைத் தடுக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது. 1945-ஆம் ஆண்டிலிருந்து இந்த மறுப்பாணை அதிகாரம் ஏறக்குறைய 300 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 1963-ஆம் ஆண்டில், பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து பத்தாக உயர்த்தப்பட்டது. பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அதில் செய்யப்பட்ட ஒரே கட்டமைப்பு மாற்றம் இதுமட்டுமே ஆகும்.


ஐநா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் அப்படியே இருக்கிறார்கள். இன்றைய மக்கள்தொகை, உலகப் பொருளாதாரம் அல்லது புவிசார் அரசியல் நிதர்சனங்களை இந்த அமைப்பு பிரதிபலிக்கவில்லை என்றும், இது 1945-ஆம் ஆண்டின் பழைய உலக அதிகாரப் சமநிலையின் எஞ்சிய அடையாளம் என்றும் இப்போது விமர்சிக்கப்படுகிறது.


தன்னுடைய பரப்பளவு, உலகளாவிய பங்களிப்புகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளின் காரணமாகத் தனக்கு ஒரு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்று இந்தியா வாதிடுகிறது. ஐநா பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்பினராக இந்தியா ஏற்கனவே எட்டு முறை பணியாற்றியுள்ளது. பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட ஒரு சபை இன்றைய நவீன உலகிற்குப் பொருந்தாது என்று இந்தியாவும் தனது கருத்தைப் பதிவு செய்கிறது.


உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, ஐநா அமைப்பிற்கு நீண்டகாலமாக வழங்கி வரும் பங்களிப்புகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே தனக்குள்ள தலைமைப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்தியா இந்த நிரந்தர இடத்தைக் கோருகிறது. ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் நான்கு நாடுகள் இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கின்றன. ஆனால், சீனா மட்டுமே இதை எதிர்க்கும் ஒரே நிரந்தர நாடாக உள்ளது. இருப்பினும், நிரந்தர இடத்திற்கான இந்த விவாதம் என்பது ஒரு பெரிய பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், உலகளாவிய பெருந்தொற்றுகள் அல்லது இணையவழித் தாக்குதல் போர்முறை போன்ற நவீனப் பிரச்சினைகளை உள்ளடக்க ஐநா சாசனம் இதுவரை திருத்தப்படவில்லை. காலநிலை மாற்றம், பெருந்தொற்றுகள், பெருமளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் அணுஆயுதப் பரவல் உள்ளிட்ட இன்றைய மிகப்பெரிய உலகளாவிய சவால்கள் எதுவுமே, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த ஐநா சாசனம் எழுதப்பட்டபோது கற்பனைகூடச் செய்து பார்க்கப்படவில்லை.


ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை சாசனத்தை மாற்றி எழுதுவதற்குப் பதிலாக, அதன் அசல் கட்டமைப்புடன் புதிய உடன்படிக்கைகளையும் பிரத்யேக அமைப்புகளையும் உருவாக்குவதன் மூலமாகவே இந்த புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.


அபிஷேக் நாயர், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் பயிற்சிப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.


Original Link: 81 years of the UN Charter: How did it come about?

Share: