இந்தியாவில் பருவமழை குறித்து… -ரோஷ்னி யாதவ்

பருவமழை என்பது, நிலத்திற்கும் கடலுக்கும் இடையே ஏற்படும் மாறுபட்ட வெப்பமயமாதல் மற்றும் அதன் விளைவான ஏற்படும் அழுத்த வேறுபாடுகளால், பருவகாலத்திற்கேற்ப காற்றுகள் தலைகீழாக மாறுவதாகும். கோடைக்காலத்தில், அருகிலுள்ள கடல்களைவிட நிலப்பரப்புகள் வேகமாக வெப்பமடைகின்றன. இதனால், நிலத்திற்கு மேலுள்ள காற்று உயர்ந்து, ஒரு குறைந்த அழுத்தப் பகுதியை உருவாக்குகிறது. இந்தக் குறைந்த அழுத்தமானது, கடலுக்கு மேலுள்ள உயர் அழுத்தப் பகுதிகளிலிருந்து குளிர்ச்சியான, ஈரப்பதம் நிறைந்த காற்றை உள்ளிழுக்கிறது. இது, நிலத்தை அடையும்போது பரவலான மழையைக் கொண்டுவரும் பருவமழைக் காற்றை உருவாக்குகிறது.




குளிர்காலத்தில், இந்தச் செயல்முறை தலைகீழாக மாறுகிறது. குளிர்ச்சியான நிலப்பரப்புகளிலிருந்து கடலை நோக்கி காற்று வீசுகிறது. இந்த நிகழ்வு, பின்னடையும் பருவமழை (Retreating Monsoon) என்று அழைக்கப்படுகிறது. இந்த விளக்கம் பருவமழை சுழற்சி குறித்த ஒரு எளிமையான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

இந்தியாவில் உள்ள பருவமழை வகைகள்


இந்தியாவில் இரண்டு குறிப்பிடத்தக்க பருவமழை வகைகள் உள்ளன : அவை,


(1) தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) : இது ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழ்கிறது. இது தென்மேற்குக் கடற்கரையில் உள்ள கேரளாவைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பரவுகிறது. இந்தப் பருவமழையே இந்தியாவைப் பாதிக்கும் முதன்மைப் பருவமழையாகும். இது கோடைக்கால வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் பொருளாதாரத்திற்கும், குறிப்பாக காரிஃப் பயிர்களின் (Kharif crops) வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. இந்தியாவின் ஆண்டு மழையளவில் 70%-க்கும் அதிகமான மழை, இந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் கிடைக்கிறது. இக்காலகட்டத்திற்கான இந்தியாவின் நீண்டகால சராசரி (Long Period Average (LPA)) மழையளவு 880 மி.மீ ஆகும்.


நீண்டகால சராசரி (Long Period Average (LPA)) என்பது என்ன?


நீண்டகால சராசரி (LPA) என்பது 50 ஆண்டு கால மழையளவுத் தரவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்டு, ஜூன் முதல் செப்டம்பர் வரை பதிவுசெய்யப்பட்ட சராசரி மழைப்பொழிவு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பெய்யும் மழையளவைக் கணிப்பதற்கான ஒரு அளவுகோலாக (benchmark) இந்த நீண்டகால சராசரி (LPA) விளங்குகிறது.


(2) வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) : இது இந்தியத் துணைக்கண்டத்தின் காலநிலை அமைப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான அம்சமாகும். இதன் பெயர், வடகிழக்கிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கி வீசும் பருவக்காற்றுகளின் திசையிலிருந்து இதற்கு இப்பெயர் வந்தது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்து, தீபகற்ப இந்தியாவைப் பாதிக்கிறது. இது தென்மேற்குப் பருவமழை அளவுக்குத் தீவிரமானது அல்ல என்றாலும், ராபி (rabi) பயிர்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது.


வடகிழக்குப் பருவமழையானது (Northeast Monsoon) தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள ஏனாம் ஆகிய பகுதிகளிலும் பருவமழை மிகவும் முக்கியமானது. மொத்த ஆண்டு மழையளவில், தமிழ்நாடு ஏறக்குறைய 48 சதவிகிதத்தை (443.3 மி.மீ) அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் பெறுகிறது. இது ராபி சாகுபடிக்கு முக்கியமானதாகும். வடகிழக்குப் பருவமழையானது குளிர்காலப் பருவமழை (winter monsoon), பின்வாங்கும் பருவமழை (retreating monsoon) அல்லது தலைகீழ் பருவமழை (reverse monsoon) என்றும் அழைக்கப்படுகிறது.

கேள்வி 2 : இந்தியப் பருவமழையைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் யாவை?


இந்தியாவின் பல பகுதிகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் மாதங்களில் மிதமான அல்லது வலுவான 'எல் நினோ' (El Niño) உருவாகக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஆய்வு (United Nations weather agency) அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தப் பருவமழை வரும் மாதங்களில் உருவாகக்கூடும் என்பதால், அதிக வெப்பநிலை, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் உணவு, நீர் அமைப்புகளுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்த கவலைகள் எழுகின்றன. இந்தச் சூழலில், இந்தியப் பருவமழையைப் பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகிறது.


பருவமழையானது, வளிமண்டல மற்றும் கடல்சார் நிகழ்வுகளின் சிக்கலான ஒன்றிணைப்பால் பாதிக்கப்படுகிறது. எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation (ENSO)), மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation (MJO)), மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) ஆகியவை இதன் முக்கியக் காரணிகளாகும். இவை அனைத்தும் நாடு முழுவதும் மழைப்பொழிவின் நேரம், தீவிரம் மற்றும் பரவலைக் கணிசமாகப் பாதிக்கக்கூடும்.

எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation)


எல் நினோ தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation) என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் மேலுள்ள வளிமண்டலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் குறிக்கப்படும் ஒரு காலநிலை நிகழ்வாகும். இது உலகளாவிய வளிமண்டல சுழற்சியை மாற்றியமைத்து, அதில் குறுக்கிடக்கூடும். இதன் விளைவாக உலகம் முழுவதும் வானிலை பாதிக்கப்படுகிறது. இது மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. வெப்ப நிலை (எல் நினோ - ஸ்பானிஷ் மொழியில் 'சிறுவன்' என்று பொருள்), குளிர் நிலை (லா நினா - ஸ்பானிஷ் மொழியில் 'சிறுமி' என்று பொருள்) மற்றும் நடுநிலை ஆகும். இது 2 முதல் 7 ஆண்டுகள் வரையிலான ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கிறது.


இயல்பான நிலையில், பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியைவிட (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு அருகில்) அதன் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில்) குளிர்ந்த நிலையில் இருக்கும். இதற்குக் காரணம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் நிலவும் காற்று அமைப்புகளே ஆகும். இவை வெப்பமான மேற்பரப்பு நீரை இந்தோனேசியக் கடற்கரையை நோக்கி அடித்துச் செல்கின்றன. கீழிருந்து வரும் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான நீர், இடம்பெயர்ந்த அந்த நீருக்குப் பதிலாக மேலே வருகிறது.


எல் நினோ (El Niño) நிகழ்வின் போது, ​​பசிபிக் பெருங்கடலின் இப்பகுதியில் உள்ள மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதால், இந்தியாவில் ஈரப்பதமான காற்றின் ஓட்டம் தடைபடுகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் பருவமழை பலவீனமாகவோ அல்லது தாமதமாகவோ பெய்கிறது. அத்துடன் முக்கிய விவசாய மாநிலங்களில் வறட்சியும் ஏற்படுகிறது. மேலும், இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகளின் (heatwaves) நிகழ்வெண் மற்றும் தீவிரத்தன்மைக்கும் எல் நினோ நிகழ்வுக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகளும் உள்ளன.


லா நினோ (La Niña) நிகழ்வின் போது இதற்கு நேர்மாறான சூழல் ஏற்படுகிறது. அதாவது, கிழக்கு பசிபிக் பகுதியின் மேற்பரப்பு நீர் குளிர்ச்சியடைகிறது. இதனால், இந்தியாவில் வலுவான, ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுவதோடு, வழக்கமாக அதன் தென்மேற்குப் பருவமழையும் அதிகரிக்கிறது. தீவிரமான சூழ்நிலைகளில், இந்த அதிகப்படியான மழை வெள்ளப்பெருக்கையும் பயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (Inter-Tropical Convergence Zone (ITCZ))


வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) என்பது பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மாறுதலுக்குட்பட்ட மண்டலமாகும். இங்கு வட மற்றும் தென் அரைக்கோளங்களின் வர்த்தகக் காற்றுகள் ஒன்றிணைகின்றன. கடுமையான சூரிய ஒளியும் கடலின் வெதுவெதுப்பான நீரும் இப்பகுதியில் காற்றைச் சூடாக்கி, அதன் ஈரப்பதத்தை அதிகரிக்கின்றன. காற்று மேலே எழும்போது, ​​அது குளிர்ச்சியடைந்து, தேங்கிய ஈரப்பதத்தை வெளியிடுகிறது. இதன்மூலம் மழைப்பொழிவு ஏற்படுகிறது. இந்தியப் பருவமழையில் வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) ​​ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.


பருவமழை காலத்தில், இந்த வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) இந்திய நிலப்பரப்பின் மீது அமைந்திருக்கும். செப்டம்பர் மாதத்தில், வட அரைக்கோளத்தில் வெப்பநிலை குறையத் தொடங்கும் போது, ​​இந்த வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) தெற்கு நோக்கி, பூமத்திய ரேகையை நோக்கியும், மேலும் தென் அரைக்கோளத்திற்குள்ளும் நகரத் தொடங்குகிறது. அங்குதான் கோடைக்காலம் உருவாக ஆரம்பிக்கிறது.

மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation (MJO))

மேடன்-ஜூலியன் அலைவு (MJO) என்பது இந்தியப் பருவமழைகளைப் பாதிக்கும் மிக முக்கியமான மற்றும் சிக்கலான கடல்-வளிமண்டல நிகழ்வுகளில் ஒன்றாகும். இது இந்தியப் பெருங்கடலில் உருவாகிறது. குறிப்பிடத்தக்க வகையில், எல்-நினோ ஒரு நிலையான அமைப்பாகும். ஆனால் மேடன்-ஜூலியன் அலைவு (MJO) என்பது பூமத்திய ரேகையைச் சுற்றி வரும்போது மழையைக் கொண்டுவரும் காற்று, மேகம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் ஒரு நகரும் அமைப்பாகும்.


மேடன்-ஜூலியன் அலைவின் (MJO) ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மேகங்கள், காற்று மற்றும் காற்றழுத்தத்தின் ஒரு சீர்குலைவு வினாடிக்கு 4-8 மீட்டர் வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்கிறது. 30 முதல் 60 நாட்களுக்குள், மேடன்-ஜூலியன் அலைவு (MJO) காற்றுப் பட்டைகள் உலகைச் சுற்றிப் பயணித்து, அவற்றின் இயக்கத்தின் போது குறிப்பிடத்தக்க வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். சாதகமான ஒரு கட்டத்தில், இது பருவமழைக் காலத்தில் இந்தியாவில் மழைப்பொழிவை அதிகரிக்கச் செய்யும்.

இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD))


இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) என்பது இந்தியப் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையேயான கடல் மேற்பரப்பு வெப்பநிலைகளின் (surface temperatures (SST)) வேறுபாடு ஆகும். எல் நினோ-தெற்கு அலைவைப் (El Niño-Southern Oscillation (ENSO)) போலவே, இதற்கும் நேர்மறை, எதிர்மறை மற்றும் நடுநிலை என மூன்று கட்டங்கள் உள்ளன. நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும் அதேவேளையில், எதிர்மறையான நிலை குறைந்த மழைப்பொழிவை விளைவிக்கிறது. நடுநிலை இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department (IMD)) வண்ணக் குறியீடு கொண்ட வானிலை எச்சரிக்கைகள் யாவை?


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), பருவமழைக் காலத்தில் அவ்வப்போது வண்ணக் குறியீடு கொண்ட வானிலை எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இவை குடிமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதோடு, கணிக்க முடியாத வானிலை நிலவும் காலங்களில் சிறந்த தயார்நிலைக்கு உதவுகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை வண்ணக் குறியிடப்பட்டுள்ளன.


1. ‘பச்சை’ (Green) நிறம் ‘எச்சரிக்கை இல்லை’ என்பதைக் குறிக்கிறது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. மேலும் லேசானது முதல் மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின்படி, 15.6 மி.மீ முதல் 64.4 மி.மீ வரையிலான மழைப்பொழிவு “மிதமானதாக” கருதப்படுகிறது.


2. ‘மஞ்சள்’ (Yellow) நிற எச்சரிக்கை என்பது “கண்காணிக்கவும்” (Watch) நிலையைக் குறிக்கிறது. மேலும், இந்த நிலைமை குறித்து “தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு” அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். வானிலை ஆய்வு மையத்தின்படி, 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரையிலான மழை “கனமழை” எனக் கருதப்படுகிறது.


3. ‘ஆரஞ்சு’ (Orange) நிற எச்சரிக்கை என்பது "விழிப்புணர்வு" (Alert) என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகள் “தயாராக இருக்க வேண்டும்” என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரஞ்சு எச்சரிக்கையின்போது, ​​கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) படி, 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரையிலான மழை "மிகக் கனமழை" எனக் கருதப்படுகிறது.


4. ‘சிவப்பு’ (Red) நிற எச்சரிக்கை என்பது "எச்சரிக்கை" (Warning) என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகளை “நடவடிக்கை எடுக்குமாறு” கேட்டுக்கொள்கிறது. மிக அதிகப்படியான கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இருப்பினும், "சிவப்பு நிற எச்சரிக்கை என்பது 'ரெட் அலர்ட்' (Red Alert) என்பதைக் குறிக்காது" என்றும், அது "நடவடிக்கை எடுப்பதைக்" மட்டுமே குறிக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்துகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, 204.5 மி.மீ-க்கு மேல் பெய்யும் மழை "மிக அதிகப்படியான கனமழை" (extremely heavy) எனக் கருதப்படுகிறது.


கேள்வி 3 : இந்தியப் பருவமழை ஏன் இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது?


இந்தியப் பருவமழை என்பது ஒரு முக்கியமான புவியியல் நிகழ்வு மட்டுமல்ல. அது பெரும் பொருளாதார மதிப்பையும் கொண்டுள்ளது. இந்தியாவின் முழு விவசாயச் சுழற்சியும் இந்தப் பருவமழையையே மையமாகக் கொண்டு இயங்குகிறது. ஏனெனில், இந்தியாவில் சுமார் 64 சதவீத மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையைச் சார்ந்துள்ளனர். மேலும் வேளாண்மையும் தென்மேற்குப் பருவமழையையே சார்ந்துள்ளது.

இந்தியாவில் விவசாயச் செழிப்பு, சரியான நேரத்தில் மற்றும் போதுமான அளவில் பெய்யும் மழையைப் பெரிதும் சார்ந்துள்ளது. மழை பொய்த்துப் போனால், குறிப்பாக நீர்ப்பாசன வசதிகள் வளர்ச்சியடையாத பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு நல்ல பருவமழை, வேளாண் உற்பத்தியை அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, கிராமப்புற வருமானம் மற்றும் நுகர்வை மேம்படுத்துகிறது. எனவே, இது இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.



பருவமழைத் திட்டம் (Monsoon Mission) என்பது என்ன?


பருவமழைத் திட்டம் என்பது, வெவ்வேறு கால அளவுகளில் பருவமழைப் பெயவதற்கான அதிநவீன இயக்கவியல் முன்கணிப்பு அமைப்புகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், புவி அறிவியல் அமைச்சகத்தால் (MoES) தொடங்கப்பட்ட ஒரு தேசியத் திட்டமாகும்.




இந்தியாவில் உள்ள பிராந்திய காலநிலை வேறுபாடுகள், அங்குள்ள பல்வேறு வகையான உணவு, உடை மற்றும் வீட்டு வகைகளில் பிரதிபலிக்கின்றன. பருவமழைக் காலநிலையில் ஏற்படும் பிராந்திய வேறுபாடுகள், பல்வேறு வகையான பயிர்களை வளர்க்க உதவுகின்றன. வட இந்தியாவில் மிதவெப்ப மண்டலச் சூறாவளிகளால் ஏற்படும் குளிர்கால மழையானது, ராபி பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

Original Link: What is the Monsoon in India?

Share: