சூதாட்டம் அதிர்ஷ்டத்தைச் சார்ந்த விளையாட்டா அல்லது திறமையைச் சார்ந்ததா என்பது முக்கியமல்ல; சூதாடுவதற்கான அடிப்படை உரிமை எதுவும் இல்லை. - குமார் கார்த்திகேயா

 புதிய தொழில்நுட்ப முன்னெடுப்புகள் அல்லது தெளிவான சட்ட விளக்கங்கள் மூலம் அரசியலமைப்பு உரிமைகளை உருவாக்கிவிட முடியாது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


இணையவழி விளையாட்டுகள் (Online gaming) குறித்த விவாதங்கள், பெரும்பாலும் அந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சொற்களான, 'புதிய கண்டுபிடிப்புகள்', 'தொழில்நுட்பம்', 'தொழில்முனைவோர்' மற்றும் 'டிஜிட்டல் சந்தை' ஆகியவற்றைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளன. மிகவும் எளிமையான ஒரு கேள்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்தச் சொற்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன: ஒரு நபர், உறுதியற்ற ஒரு முடிவின் மீது, பண லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணத்தைப் பந்தயம் கட்டும்போது, அது அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாதுகாப்புப் பெற்ற ஒரு செயலா? பணம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் சட்டங்கள் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட தீர்ப்பு, இந்தக் கேள்விக்கு மிகத் தெளிவான பதிலை வழங்கியுள்ளது.



இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவம் இணையவழி விளையாட்டுத் துறையின் மீதான அதன் தாக்கத்தில் மட்டுமல்ல. மாறாக, வரலாற்று ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட வரம்பிற்கு வெளியே இருந்து வந்த ஒரு செயலுக்காக, அரசியலமைப்பு உரிமைகள் என்ற சொற்களைப் பயன்படுத்திக்கொள்ள நீதிமன்றம் மறுத்ததில்தான் உள்ளது. அரசியலமைப்புச் சார்ந்த நீதிமன்றத் தீர்ப்புகள், பெரும்பாலும் உரிமைகளைப் பாதுகாப்பது போலவே, அவற்றிற்கான வரம்புகளை வரையறுப்பதையும் உள்ளடக்கியதாகவே அமைகின்றன. ஒரு புதிய அடிப்படை உரிமை சேர்க்கப்படும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட செயல்பாட்டை நாடாளுமன்றத் தலையீட்டிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதா என்பதை நீதிமன்றங்கள் ஆராய வேண்டியது அவசியமாகிறது. பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான விவகாரங்களில், இதற்கான விடை தொடர்ந்து எதிர்மறையாகவே இருந்து வந்துள்ளது.


இணையவழி விளையாட்டுத் துறையின் முக்கிய வாதம் திறன் விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகளுக்கு இடையேயான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த வாதத்தின்படி, ஒரு விளையாட்டு கணிசமான அளவிலான திறமையை உள்ளடக்கியதாகக் கண்டறியப்பட்டவுடன், செயல்பாடு சட்டப்பூர்வ வணிகமாக 19(1)(g)-ன்கீழ் அரசியலமைப்புப் பாதுகாப்பைப் பெறுகிறது. இந்த வாதத்தின் வரம்புகளை உச்சநீதிமன்றம் சரியான முறையில் சுட்டிக்காட்டியுள்ளது; ஒரு பந்தய விளையாட்டில் அல்லது சூதாட்டம் என்ற அம்சம் நுழைந்துவிட்டால், அந்த விளையாட்டு திறன் அடிப்படையிலானதா அல்லது அதிர்ஷ்ட அடிப்படையிலானதா என்பது முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் கருத்தே இந்தச் சர்ச்சையின் முக்கியமான பிரச்சினையை எடுத்துக்காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டரீதியான உண்மையான கேள்வி, ஒருவர் ரம்மி, போக்கர் அல்லது ஃபேன்டஸி விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதற்கு திறமை தேவைப்படுகிறதா என்பது அல்ல. மாறாக, ஒரு செயல்பாட்டில் ஓரளவு திறமை தேவைப்படுகிறது என்ற காரணத்தால் மட்டுமே, உறுதியற்ற முடிவுகளை எதிர்பார்த்து அடிக்கடி பணத்தை பந்தயம் கட்டும் செயலை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா? என்பதுதான் உண்மையான சட்ட மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த சிக்கலாகும்.



இந்த வித்தியாசம் ஏன் முக்கியம் என்றால், சமூகப் பாதிப்புகள் ஏற்படுவது ஒருவரின் திறமையால் அல்ல, மாறாக அவர் கட்டும் பந்தயத்தால்தான். திறமையுள்ள ஒரு சூதாடியும், திறமையற்ற ஒருவரைப் போலவே தனது சேமிப்பை எளிதில் இழக்க நேரிடும். அடிமையாதல் என்பது அதிர்ஷ்ட விளையாட்டையா அல்லது திறமை விளையாட்டையா என்று பார்த்து வருவதில்லை. பந்தயம் கட்டுவதற்கு முன்னால் ஒரு நபர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினார் என்பதற்காக, அதனால் ஏற்படும் நிதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்தின்படி முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக மாறிவிடாது. லாபத்தை நோக்கமாகக் கொண்டு ஒருமுறை பணம் பந்தயம் கட்டப்பட்டுவிட்டால், அந்தச் செயல் வரலாற்று ரீதியாகவே அரசாங்கம் தலையிட்டுக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விவகாரமாக மாறிவிடுகிறது. திறமை மட்டுமே பந்தயத்தை அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட ஒரு சுதந்திரமாக மாற்றிவிடும் என்று கூறுவது, முதன்முதலில் சூதாட்டச் சட்டங்கள் ஏன் கொண்டுவரப்பட்டன என்ற நோக்கத்தையே புறக்கணிப்பதாகும்.


நீதிமன்றம், 'வணிகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விவகாரம் (a thing outside commerce) என்ற கோட்பாட்டைச் சார்ந்திருப்பது ஒரு மிக முக்கியமான புரிதலை அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், சில செயல்பாடுகள் வருவாயை ஈட்டுகின்றன என்பதற்காக மட்டுமே அரசியலமைப்புப் பாதுகாப்பிற்குத் தகுதியானவையாக ஒருபோதும் கருதப்படவில்லை. இலாபகரமான ஒவ்வொரு தொழிலையும் செய்வதற்கான உரிமையை அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை. பிரிவு 19(1)(g)-ஆல் அளிக்கப்பட்ட சுதந்திரம், சட்டப்பூர்வமான தொழில்களையும் வணிகங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இலாபம் மட்டுமே அளவுகோலாக மாறினால், சாதாரண வணிகத்திற்கும், சட்டமன்றங்கள் வரலாற்று ரீதியாக சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதிய செயல்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பதற்கு கொள்கைரீதியான அடிப்படை குறைவாகவே இருக்கும். பொருளாதார நடவடிக்கையும் அரசியலமைப்பு சட்டம் ரீதியான உரிமையும் (constitutional entitlement) ஒன்றல்ல.


தொழில்துறையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதன் விளைவுகள் இணையவழி விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். திறமை சார்ந்த விளையாட்டுகளில் பந்தயம் கட்டுவது ஒரு அடிப்படை உரிமையாக கருதப்பட்டால், சூதாட்டத்தின் மீதான சட்டமன்ற அதிகாரம் கணிசமாகக் குறைந்துவிடும். ஒவ்வொரு ஒழுங்குமுறை நடவடிக்கையும் (regulatory measure) அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்ற ஆய்வுக்கு (constitutional scrutiny) உட்படுத்தப்படும். ஆனால், அது தனிநபரின் சுதந்திரம் உண்மையாகவே அச்சுறுத்தப்படுவதால் பெறப்படுவதில்லை. மாறாக, வணிக நிறுவனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பை நாடுவதாலேயே போன்ற ஒரு நிலை ஏற்படும். இதன் விளைவாக, சட்டப்பிரிவு 19(1)(g) பொருளாதார சுதந்திரத்திற்கான உத்தரவாதத்திலிருந்து ஜனநாயக ஒழுங்குமுறைக்கு எதிரான ஒரு கருவியாக படிப்படியாக மாறும். அடிப்படை உரிமைகள் குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சந்தைகளைப் பாதுகாப்பதற்கான கருவிகளாக மாறிவிடும்.


பொது சுகாதாரம் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான கவலைகளை நீதிமன்றம் அங்கீகரித்தது மிகவும் முக்கியமானது. இணையவழி பணப் பரிமாற்ற விளையாட்டுகளுடன் தொடர்புடைய அடிமைத்தனம், அதிகரித்துவரும் நிதி இழப்புகள் மற்றும் தற்கொலைகள் குறித்த தரவுகளை மாநிலங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தன. இந்தக் கவலைகளை வெறும் அதீத பயம் என்று எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. நவீன இணையவழி விளையாட்டுத் தளங்களின் வடிவமைப்பு, பாரம்பரிய சூதாட்ட வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. டிஜிட்டல் தளங்கள் அனைத்து நேரங்களிலும் கிடைக்கக்கூடியவை, உடனடி பணப் பரிவர்த்தனைகளை அனுமதிப்பவை மற்றும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பயனர்களைச் சென்றடையும் திறன் கொண்டவை. தொடர்ச்சியான அணுகல் மற்றும் பண ஊக்கத்தொகை ஆகியவற்றின் இந்த கலவையானது, சட்டமன்றங்கள் நியாயமான முறையில் புறக்கணிக்க முடியாத ஆபத்துகளை உருவாக்குகிறது. இது போன்ற யதார்த்தங்களுக்கு மாநிலங்கள் பதிலளிப்பதைத் தடுக்கும் ஒரு அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பு, தொழில்நுட்ப மாற்றத்தின் முன்னால் ஒழுங்குமுறை அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்குச் சமமாகும்.


இறுதியாக இங்கு ஆபத்தில் இருப்பது என்னவென்றால், ஒரு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் உரிமைகளுக்கும் பொறுப்புக்கும் இடையே உள்ள உறவுதான். உரிமைகள் என்பவை மனித கண்ணியம், தன்னாட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றோடு கொண்டுள்ள தொடர்பின் மூலமே தங்களின் சட்டபூர்வமான தன்மையைப் பெறுகின்றன. பந்தயம் கட்டுவதும் சூதாட்டமும் முற்றிலும் மாறுபட்ட ஒரு இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதற்கான அரசியலமைப்பு உரிமைகோரல் என்பது எந்தவொரு அர்த்தமுள்ள சுதந்திரத்தின் அடிப்படையிலும் இல்லை, மாறாக பந்தயச் செயல்பாடுகள் மூலம் லாபம் ஈட்டுபவர்களின் வணிக நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பொது நலனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடமையைவிட, இத்தகைய வணிக நலன்களை உயர்வாகக் கருதுவது அரசியலமைப்பின் நோக்கம் அல்ல.


தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அல்லது தெளிவான சட்ட விளக்கங்கள் மூலம் அரசியலமைப்பு உரிமைகளை உருவாக்கிவிட முடியாது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒரு செயல்பாட்டை 'டிஜிட்டல் தளம்' என்று அழைப்பது அதன் அடிப்படைத் தன்மையை மாற்றிவிடாது. பந்தயம் கட்டுவதை, 'பொழுதுபோக்கு' என்று விவரிப்பது அதன் சமூக விளைவுகளைக் குறைத்துவிடாது. சூதாட்டத்தைத் 'திறமை சார்ந்த விளையாட்டு' என்று குறிப்பிடுவது, நிச்சயமற்ற முடிவுகளுக்காகப் பணம் பணயம் வைக்கப்படுகிறது என்ற உண்மையை அழித்துவிடாது.


பந்தயம் கட்டுவதற்கும் சூதாடுவதற்கும் அடிப்படை உரிமை ஏதுமில்லை. மேலும், அது போன்ற செயல்பாடுகள் பொது நலனுக்கு அச்சுறுத்தலாக அமையும்போது அதில் தலையிடுவதற்கான அதிகாரம் அரசுக்கு உண்டு என்கிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நீண்டகாலக் கோட்பாடு ஒன்றை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


கட்டுரையாளர் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், எடின்பர்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுகலை சட்டக் கல்வி மாணவரும் ஆவார்.


Original article: Game of chance or skill? It doesn’t matter; there is no Fundamental Right to gamble. -Kumar Kartikeya

Share: