இந்தியாவின் போக்குவரத்துத் துறை மாற்றத்திற்கு எத்தனால் பயன்பாடு ஏன் மிக முக்கியமானது? -சந்தீப் சிங்

 இந்தியாவின் தூய்மையான போக்குவரத்து முறைக்கான மாற்றத்திற்கு மின்சார வாகனங்கள் (EVs), ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் எத்தனால் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த பயன்பாடும் அவசியம் என்று டொயோட்டாவின் விக்ரம் குலாட்டி கூறுகிறார். மேலும், ஹைப்ரிட் வாகனங்களுக்குக் கூடுதல் கொள்கைரீதியான ஆதரவு தேவை என்றும் குறிப்பிடுகிறார்.


பல்வேறு வகையான எரிசக்தி உந்து அமைப்புகள் (powertrains) மற்றும் பெட்ரோலில் அதிக அளவில் எத்தனால் கலப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் வாகனப் போக்குவரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அனைத்து தூய்மையான தொழில்நுட்பங்களுக்கும் ஆதரவளிக்கப்பட வேண்டும் என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸின் இந்தியத் தலைவரும் செயல் துணைத் தலைவருமான விக்ரம் குலாட்டி, சந்தீப் சிங்கிடம் தெரிவித்தார்.


எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிப்பது எரிபொருள் சிக்கனத்தைக் (fuel efficiency) குறைக்கக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், E10-லிருந்து E20-க்கு மாறுவதால் ஏற்படும் பொருள்சார் தாக்கம் மிகக் குறைவு என்றும், எரிபொருள் செயல்திறன் மீதான தாக்கம் சுமார் 3-5% வரம்பில் உள்ளது என்றும் ஆய்வுகள் காட்டுவதாக அவர் கூறினார். இருப்பினும், E25-க்கு மாறுவதற்கு முன்பு, புதிய மற்றும் பழைய வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.





பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் பயன்பாட்டை விரைவாகக் குறைப்பதற்காக, ஹைப்ரிட் வாகனங்களுக்குக் கொள்கை ரீதியான ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 


நாட்டின் போக்குவரத்து மாற்றத்தில் மின்சார வாகனங்கள்(EVs),, ஹைப்ரிட் வாகனங்கள், எத்தனால் அடிப்படையிலான கலப்பு எரிபொருட்கள் (flex-fuel) ஆகியவை எங்கு பொருந்தும் எனக் கருதுகிறீர்கள்?


இந்தியாவின் முன்னுரிமைகளை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், அதன் நோக்கங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. இந்தியா புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், மாசுபாட்டைக் குறைத்தல், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரித்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் விரும்புகிறது.


இந்தச் சூழலில், அனைத்து தூய்மையான தொழில்நுட்பங்களையும் ஆதரிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இது மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் ஹைப்ரிட் (hybrid) வாகனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தேர்வாக இருக்கக்கூடாது. இந்தியாவிற்கு இவ்விரு வகை வாகனங்களும் தேவைப்படுகின்றன. அதனுடன், கலப்பு எரிபொருட்கள் (flex fuels) சிஎன்ஜி (CNG), அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (compressed biogas), ஹைட்ரஜன் மற்றும் பிற தூய்மையான எரிசக்தித் தீர்வுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்கொள்ள வேண்டிய சவால் மிகப் பெரியது, இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மேம்பட்டாலும் கூட, ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். மேலும் புதைபடிவ எரிபொருட்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து நீடிக்கும்.


மின்சார வாகனம் (EV) வாங்க விரும்பும் எவரும் அதையே வாங்குவார்கள். ஒரு ஹைப்ரிட் வாகனம் அந்த வாடிக்கையாளரின் கவனத்தைத் திசை திருப்பாது. ஆனால், பெட்ரோல் அல்லது டீசல் வாகனம் வாங்க நினைப்பவர், ஒரு ஹைப்ரிட் வாகனம் தங்களுக்கு ஒட்டுமொத்தப் பராமரிப்புச் செலவைத் தருகிறதா என்று ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கக்கூடும். எனவே, விற்கப்படும் ஒவ்வொரு ஹைப்ரிட் வாகனமும் உண்மையில் ஒரு பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்திற்கு மாற்றாக அமைகிறது. இது நாட்டிற்கும், நகரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவுகிறது. வாடிக்கையாளர் இத்தகைய தூய்மையான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக, அவர் மீது தவறுதலாக கூடுதல் வரி விதிக்கப்படாமல் இருப்பதை அரசு கொள்கைகள் உறுதி செய்ய வேண்டும்.


மறுபுறம், எத்தனால் (Ethanol) இந்தியாவிற்கு மிகவும் ஏற்றது. ஏனெனில் இது நமது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஒரு எரிபொருள் ஆதாரம், இது வேளாண் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது, நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலின் அளவைக் குறைக்க உதவுகிறது, மேலும் சாலைப் போக்குவரத்தில் கார்பன் அளவை மிக வேகமாகவும் மலிவாகவும் குறைப்பதற்கான வழியாகவும் இருக்கிறது.


இந்தியாவின் எரிசக்தி சவால் மிகவும் பெரியது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, வரும் ஆண்டுகளில் உலகளாவிய பெட்ரோல், டீசல் தேவையின் பெரும்பகுதி இந்தியாவில் இருந்துதான் வரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.                                                 இதை எதிர்கொள்வதற்கான ஒரே வழி, வாகனங்களின் எரிபொருள் திறனை மேம்படுத்துவதும், மின்சாரம் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டின் மூலமும் எரிபொருள் மாற்றத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.


இந்தியா எத்தனால் கலப்புத் திட்டத்தை (Ethanol blending) மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. எத்தனால் திட்டத்தை வேகப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறீர்களா?


நிச்சயமாக. எத்தனால் தொழில்துறைக்கு ஏற்கனவே கணிசமான உற்பத்தித் திறன் உள்ளது. பல எத்தானால் ஆலைகள் அவற்றின் முழுத் திறனுக்குக் குறைவாகவே இயங்குகின்றன என்றும், எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான வாய்ப்புகள் உள்ளன என்றும் இந்தத் தொழில்துறை சுட்டிக்காட்டி வருகிறது. இது, இந்தியா தனது பெட்ரோல் பயன்பாட்டையும் புதைபடிவ எரிபொருள் சார்பையும் குறைக்க உதவும். எனவே, அந்த திசையை நோக்கி பயணிப்பதற்கு இதுதான் சரியான நேரம் ஆகும். 




பிரேசில் நாட்டின் அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தை வழங்குகிறது. கச்சா எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, பிரேசில் ஆரம்பத்தில் எத்தனாலில் மட்டுமே இயங்கும் வாகனங்களை ஊக்குவித்தது. இருப்பினும், பல வாடிக்கையாளர்கள் வெவ்வேறு எரிபொருட்களைப் பயன்படுத்தும் நெகிழ்வுத்தன்மையை விரும்பியதால், அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. கலப்பு-எரிபொருள் வாகனங்கள் (flex-fuel vehicles (FFVs)) அறிமுகப்படுத்தப்பட்டபோதுதான் பெரிய மாற்றம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் விரைவாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் கொள்கைகள் மூலம் அரசாங்கம் கலப்பு-எரிபொருள் வாகனங்களை (FFV) ஊக்குவித்தது. கிடைக்கும் தன்மை மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்து வெவ்வேறு எத்தனால் கலவைகளைப் பயன்படுத்தும் திறன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தவுடன், எத்தனால் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. பிரேசிலில் இருந்து கிடைக்கும் முக்கியப் பாடம் தெளிவாக உள்ளது. கலப்பு-எரிபொருள் வாகனங்கள் (FFV) தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகவும், வாங்குவதற்கும் இயக்குவதற்கும் மாற்ற வேண்டும் என்பதுதான்.


இந்தப் பாதையைப் பின்பற்றுவதற்கு இந்தியாவிற்கு ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. கலப்பு எரிபொருள் வாகனங்களை (flex-fuel vehicles) வாங்கும்போதும், எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தும்போதும் வாடிக்கையாளர்களுக்குப் பொருளாதார மதிப்பை உருவாக்கும் கொள்கைகளைக் கொண்டிருந்தால், அதன் பயன்பாடு மிக விரைவாக வளரக்கூடும். உற்பத்தியாளர்களுக்கும், உற்பத்தி அளவு முக்கியமானது. உற்பத்தி அளவு அதிகரித்தால், கலப்பு எரிபொருள் தொழில்நுட்பத்திற்கான இயந்திர விநியோகச் சங்கிலிகளைப் பெரிய அளவில் உருவாக்க முடியும், இது உற்பத்திச் செலவுகளைக் குறைக்க உதவும்.


மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மாற்றம் முறையான திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட வேண்டும் மற்றும் வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம், அரசாங்கக் கொள்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், மேலும் நுகர்வோருக்கு இதில் ஒரு மதிப்பு கிடைக்க வேண்டும்.





அதிக எத்தனால் கலப்பு மற்றும் வாகனங்களின் எரிபொருள் செயல்திறன், இயந்திரங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


வெவ்வேறு எத்தனால் கலவைகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். E85 என்பது, அதிக எத்தனால் உள்ளடக்கத்தை கலவையாகப் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலப்பு எரிபொருள் வாகனங்களுக்கு (flex-fuel vehicles) மட்டுமேயானது. தற்போதுள்ள வாகனங்களை E20-லிருந்து, உதாரணமாக E25-க்கு மாற்றுவது குறித்தும் சில விவாதங்கள் நடந்தன. அதற்கு கவனமான மதிப்பீடு தேவைப்படுகிறது. இதைச் செய்யவே முடியாது என்பதல்ல பிரச்சனை; மாறாக, முன்பு E20-க்குச் செய்யப்பட்டது போல, போதுமான சோதனைகளை முடித்து மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.


இந்தியா E10-லிருந்து E20-க்கு மாறியபோது, ​​ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. வெவ்வேறு உற்பத்தியாளர்களின் பழைய வாகனங்கள் சோதிக்கப்பட்டன. பொருட்களின் இணக்கத்தன்மை, உதிரி பாகங்களின் சிதைவு மற்றும் எரிபொருள் செயல்திறன் மீதான தாக்கம் ஆகியவை மதிப்பிடப்பட்டன. பொருட்களின் மீதான தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது என்பதே அதன் முடிவாகும். எரிபொருள் செயல்திறன் மீதான தாக்கம் மிகக் குறைவாக, சுமார் 3-5% வரம்பில் மதிப்பிடப்பட்டது. எனவே, சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வெளியாகும் கவலைகள் அறிவியல் பூர்வமான உண்மைகளின் அடிப்படையிலோ அல்லது முறையான தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையிலோ அமைந்தவை அல்ல.


ஆனால், E25 கலவையைப் பொறுத்தவரை, இது போன்ற விரிவான சோதனைகள் இன்னும் நடக்கவில்லை. இந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன் புதிய வாகனங்களையும், பழைய வாகனங்களையும் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த சோதனைகளே இதற்கான விடையைத் தரும். இருப்பினும், கலப்பு எரிபொருள் வாகனங்களே (FFV) தற்போதைய சூழ்நிலைக்குப் நெகிழ்வுத்தன்மை கொண்ட, மிகச் சிறந்த மற்றும் சரியான வழியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.



மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?


மின்சார வாகனங்கள் (EVs) எதிர்காலத்திற்கு முற்றிலும் அவசியமான மற்றும் ஒரு சிறந்த தொழில்நுட்பம் ஆகும். மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், குறைந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சலுகை மற்றும் மின்னேற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு ஆகியவை நுகர்வோர் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், மின்சார வாகனங்கள் தங்களுக்குப் பொருளாதார ரீதியாக நியாயமான மற்றும் வசதியான தேர்வாக மாறும்போது மட்டுமே நுகர்வோர் அவற்றை வாங்குவார்கள். மின்சார வாகனங்களில் உள்ள மிகப்பெரிய சவால், மதிப்புக் கூட்டலை உள்நாட்டிலேயே உருவாக்குவதும், மூலப்பொருட்கள் மீதான சார்பைக் குறைப்பதும் ஆகும். இந்த மின்சார வாகன மாற்றத்தை நீண்டகாலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், இந்தச் சவாலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.


கடந்த ஒரு வருடமாக ஹைப்ரிட் வாகனங்களுக்கான (Hybrid vehicles) தேவை அதிகரித்துள்ளது. இதில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? 


இப்போது நுகர்வோர் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாட்டையும் அதன் முக்கியத்துவத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால், இந்தத் தொழில்நுட்பத்தை அவர்கள் மிக நன்றாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில், ஹைப்ரிட் வாகனங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. சமீபத்தில், உலக சுற்றுச்சூழல் தின விவாதத்தின் போது, மின்சார வாகனங்கள் (EVs), கலப்பு எரிபொருள்கள் (Flex fuels), ஐசோபியூட்டனால் (isobutanol) சோதனைகள், ஹைட்ரஜன் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் ஒரு முக்கியமான புள்ளியும் விவாதிக்கப்பட்டது — அது, எரிபொருள் சிக்கனத்தை கணிசமாக அதிரடியாக உயர்த்திக் கொடுக்கக்கூடிய வாகனங்களின் தேவை என்பதாகும். அங்குதான் ஹைப்ரிட் வாகனங்கள் மிக முக்கியமானதாக மாறுகின்றன. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பலனளிக்கும் ஒரு தொழில்நுட்பமாக இது இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விரைவாக மாற்றுவதற்கு அரசாங்கக் கொள்கைரீதியாகவும் இதற்கு ஆதரவு தேவைப்படுகிறது.


ஹைப்ரிட் வாகனங்களுக்கு கூடுதல் கொள்கை ஆதரவு தேவை என்று கூறுகிறீர்களா?


ஆம், அவற்றுக்கு இன்னும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும். சான்றளிக்கப்பட்ட தரவுகளின்படி, ஹைப்ரிட் வாகனங்கள் எரிபொருள் சிக்கனத்தை 40-50% வரை மேம்படுத்தித் தரும். டெல்லி போன்ற போக்குவரத்து நெரிசலும், குறைந்த வேகத்தில் மட்டுமே ஓட்டக்கூடிய சூழலும் உள்ள ஒரு நகரத்திற்கு ஹைப்ரிட் வாகனங்கள் மிகவும் பொருத்தமானவை. ஏனெனில், நகரங்களில் வாகனங்களை ஓட்டும்போது, வழக்கமான பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள் இயந்திரம் இயங்கு நிலையில் நிற்கும்போதும் (Idling) மெதுவாக நகரும்போதும்தான் (Crawling) அதிக எரிபொருளை வீணடிக்கும். ஆனால், இந்தச் சமயங்களில் ஹைப்ரிட் வாகனங்கள் மிகவும் திறம்படச் செயல்படுகின்றன. ஏனெனில், அவை மின்சார வாகன (EV) பயன்முறையில் இயங்கும். ஒரு ஹைப்ரிட் வாகனம் நடைமுறையில் இயந்திரம் அணைக்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய 60% நேரத்தை மின்சார வாகன பயன்முறையிலேயே இயங்க வைக்க முடியும். இதற்கு வெளியிலிருந்து சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பு எதுவும் தேவையில்லை. மேலும், மின்சார வாகனங்களுடன் (EVs) ஒப்பிடும்போது, இது மிகச் சிறிய மின்கலனை (சுமார் 1-2 kWh) மட்டுமே பயன்படுத்துகிறது. இருப்பினும் நாம் எதிர்பார்க்கும் சுற்றுச்சூழல் மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்ற அனைத்து முக்கிய நன்மைகளையும் இது சிறப்பாக வழங்குகிறது.


Original article: Why ethanol is crucial for India’s mobility transition? -Sandeep Singh

Share: