திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு : அது என்ன? அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? இந்தியா ஏன் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது? - ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி :


நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கா– இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இதுவரை இந்தியாவின் எரிவாயு துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமையலுக்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மற்றும் தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு அதற்குள் இருக்கும், வணிகரீதியான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு நுகர்வோர் (உணவகங்கள், தாபாக்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் வழக்கமான எரிவாயு இணைப்புகள் இல்லாத புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள்) மற்றும் உரங்கள், பெட்ரோ கெமிக்கல்கள் முதல் மட்பாண்டங்கள் மற்றும்  பஞ்சிரும்பு வரை, இயற்கை எரிவாயு மூலப்பொருளைச் சார்ந்திருக்கும் உற்பத்தியாளர்களாக உள்ளனர்.


முக்கியக் குறிப்புகள்:


1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) என்பது ஒப்பீட்டளவில் சுத்தமான, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் செயல்திறன் மிக்க எரிசக்தி மூலமாகும். இது நிறமற்றதும், மணமற்றதாகும். மிகச்சிறிய கசிவைக்கூட எளிதில் கண்டறியும் வகையில், இதில் ஒரு கடும்  "துர்நாற்றத்தை" (stenching) ஏற்படுத்தும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.


2. சாதாரண வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு வாயுவாக இருக்கும். ஆனால், குறைந்த அழுத்தம் அல்லது குளிர்வித்தல்  பணிகளை செய்யும் போது அது திரவமாக மாறுகிறது. திரவநிலையில் இருப்பதால் அதை எளிதாக சேமிக்கவும், எடுத்துச் செல்லவும் முடியும். குளிர்விக்கப்பட்டு அல்லது அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட பிறகு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பொதுவாக எஃகு அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்ட கொள்கலன்களில் (containers) சேமிக்கப்படுகிறது.


3. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்பது அதிக ஆற்றல்கொண்ட எரிபொருள் ஆகும். இது டீசல், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோல் மற்றும் உயிரிப் பொருள் தொகுப்பு (biomass) மூலம் பெறப்படும் ஆல்கஹால்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் எரிபொருட்களைவிட ஒரு அலகிற்கு அதிக வெப்ப மதிப்பை (calorific value) வழங்குகிறது. இதன் காரணமாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு அதிக வெப்பத்துடன் எரிகிறது. இது அதிக செயல்திறனை அளிக்கும் ஒரு முக்கிய நன்மையாகும். இதன் தனித்துவமான பண்புகள் காரணமாக, இது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலமாக இருந்து வருகிறது.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?


1. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போதோ அல்லது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பதப்படுத்தும்போதோ, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயற்கையாகவே காணப்படும் ஹைட்ரோகார்பன்களான புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


2. உலக லிக்விட் கேஸ் சங்க அளித்த (World Liquid Gas Association) தகவலின்படி, உலகளவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் 60% இயற்கை எரிவாயு செயலாக்கத்திலிருந்து கிடைக்கிறது. மேலும், 40% மூல எண்ணெய் சுத்திகரிப்பில் (refining) இருந்து பெறப்படுகிறது. ஆனால், இந்த விகிதங்கள் பகுதிகளுக்கு ஏற்பவும், காலத்துக்கு ஏற்பவும் மாறுபடலாம். எனவே, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்பது ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரித்தலின் போது இயற்கையாகவே உருவாகும் ஒரு துணைப் பொருளாகும்.




திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பயன்பாடுகளும் நன்மைகளும் என்ன?


1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவிற்கு பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. இது வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்துத் துறை, விவசாயம், மின் உற்பத்தி, சமையல், வெப்பமூட்டும் அமைப்புகள் எனப் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் சமையல் எரிவாயுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பயன்படுத்தப்படுகிறது. மேலும், வேளாண் துறையிலும், குறைந்த அளவு புகையை வெளியிடும் வாகனப் போக்குவரத்து எரிபொருளாகவும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


2. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு முழுச் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் கிராமப்புற சமூகங்களுக்கு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பாரம்பரிய சமையல் எரிபொருட்கள் மரக்கட்டி, கரி, மாட்டு சாணம் போன்றவைக்கு மாற்றாக முதல் நவீன தீர்வாக அமைகிறது. இதன் மூலம் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.


3. 'உலக திரவ எரிவாயு சங்கத்தின்' (World Liquid Gas Association) கூற்றுப்படி, "வீடுகளுக்குள் சமையல் செய்யும்போது விறகு அல்லது பிற உயிரிப் பொருட்கள்  தொகுப்பு (biomass) எரிக்கப்படுவதால் உருவாகும் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்களின் கலவை, ஏழைச் சமூகங்களில் வாழும் பல மக்களிடையே பரவலான நோய்களுக்கும், அவர்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைவதற்கும்  முக்கிய காரணமாக அமைகிறது. இயல்பாகவே சுத்தமாக எரியும் தன்மையைக் கொண்டிருப்பதால், நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு நடைமுறை வழிமுறையை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு வழங்குகிறது.


4. அதிக மாசு ஏற்படுத்தும் திட எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், 'கருப்பு கார்பன்' (black carbon) மற்றும் நுண்துகள்களின் வெளியேற்றத்தைக் குறைக்க திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு உதவுகிறது. இதன்மூலம் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள காற்றின் தரம் மேம்படுவதுடன், அதனால் ஏற்படும் உடல்நல அபாயங்களும் குறைகின்றன.



இந்தியாவின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் இறக்குமதி சார்பு நிலை பற்றி


1.  ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (Petroleum Planning and Analysis Cell (PPAC)) வெளியிட்ட தரவுகளின்படி, தரவுகள் கிடைத்த முந்தைய ஆண்டான 1999 முதல், இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் நிகர இறக்குமதியாளராக இருந்து வருகிறது.


2. நாடு படிப்படியாகத் தனது சொந்தப் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் திறனைப் பெற்று வந்தபோதிலும், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மட்டும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. தற்போது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு  நாட்டின் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருளாகவும் திகழ்கிறது.


3. இந்தியா தனது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) தேவையில் 60 சதவீதத்தைப் பூர்த்திசெய்ய இறக்குமதியை சார்ந்துள்ளது. மேலும், அதன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதிகளில் 90 சதவீதம், ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கு ஆசியாவிலிருந்து வருகிறது.


4. பிற எரிபொருள் பொருட்களுக்கான இறக்குமதிச் சார்புநிலையை இந்தியா கணிசமாக குறைத்தாலும், சமையல் எரிவாயுவிற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேவையை பூர்த்திசெய்ய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதியை  அதிக அளவு சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


5. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதற்குப் பின்னால், அதற்கான தேவை உயர்ந்து வருவதே முக்கியக் காரணமாகும். வேகமாக நடந்துவரும் நகரமயமாக்கல், நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வளர்ச்சி மற்றும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு சிலிண்டர்களை வழங்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் இந்தத் தேவை அதிகரிப்பிற்குப்  முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.


                                  உங்களுக்குத் தெரியுமா?


மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் கடுமையான தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டில் மின் தூண்டல் அடுப்புகள் (induction cooktops) விற்பனை அதிகரித்துள்ளது. பாரம்பரிய எரிவாயு அடுப்புகள் (gas stoves) திறந்த எரிப்பு (combustion) செயல்முறையை பயன்படுத்தி தீயை உருவாக்குகின்றன. ஆனால், ஒரு மின் தூண்டல் அடுப்பு இந்த எரிப்பு வேதியியல் செயல்முறையை தவிர்க்கிறது.


6. 1998–99 முதல் 2023–24 வரை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பயன்பாடு ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் உற்பத்தி மூன்று மடங்கிற்கு குறைவாகவே உயர்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பயன்பாட்டு வளர்ச்சி குறைந்தாலும், தேவைக்கு ஏற்ப உற்பத்தித் திறனை (production capacity) அதிகரிக்க இந்தியா போராடி வருகிறது.


7. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு துணைப் பொருளாக இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்முறையின் திறனை இந்தியா விரிவுபடுத்திய போதிலும், உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு உற்பத்தி ஒரு வரம்பை (ceiling) எட்டியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


8. உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோலியப் பொருட்களின் மொத்த உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பங்கு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 1998-99-ல், மொத்த சுத்திகரிப்பு உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் அளவு 5.2%-ஆக இருந்தது. ஆனால், 2024-25-ல், உற்பத்தித் திறன் அதிகரித்து வந்தபோதிலும், சுத்திகரிப்பு உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பங்கு 4.2% ஆக மட்டுமே உள்ளது.




அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?


1. மேற்கு ஆசியப் போரின் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிபொருள் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த எரிபொருளைச் சார்ந்திருக்கும் "முன்னுரிமைத் துறைகளுக்கு" (priority sectors) இயற்கை எரிவாயுவை திசைதிருப்பும் வகையில், மார்ச் 9-ஆம் தேதியன்று அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைப் பயன்படுத்தியது.


2. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (Essential Commodities Act (ECA)) 1955-ல், பொது மக்களின் நலன் கருதி, சில பொருட்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக” இயற்றப்பட்டது. பதுக்கல் அல்லது கள்ளச்சந்தையில் விற்கப்படும் அபாயத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அல்லது தயாரிப்புகளின் விநியோகம் தடைபட்டால், அது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்.

3. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் (Essential Commodities Act) படி, “அத்தியாவசிய பொருட்கள்” என்பது, மாட்டுத் தீவனம், நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் அணிகலன்கள், பருத்தி மற்றும் கம்பள துணிகள், மருந்துகள் (Drugs and Cosmetics Act, 1940-ன் பிரிவு 3-ல் வரையறுக்கப்பட்டவை ஆகும். மேலும், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் அவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், மூல பருத்தி, மூல சணல் போன்றவை. ஒன்றிய அரசு அறிவிப்பின் மூலம் (notified order) சேர்க்கும் பிற பொருட்களும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில்  இடம் பெற்றிருக்கும்.


4. சட்டத்தின்கீழ், “அத்தியாவசியப்” பொருளாகக் கருதப்படும்  வகைப்படுத்தப்பட்ட எந்த ஒரு பொருளுக்கும் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க அதிகாரம் கொண்டுள்ளது.


5. ஜூன் 2020-ல், ஒன்றிய அரசு ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம், குறிப்பிட்ட சில பண்டங்களை 'அத்தியாவசியப் பண்டங்கள்' பட்டியலிலிருந்து நீக்கியது. இதன் விளைவாக, போர், பஞ்சம், பொருட்களின் விலை   உயர்வு மற்றும் அதிக தக்கதை கொண்ட இயற்கை சீற்றங்கள் போன்ற "அசாதாரணச் சூழல்களில்" மட்டுமே, அப்பண்டங்களின் விலைகளை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பண்டங்களில், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கும். இத்தகைய சூழ்நிலைகளில், தனிநபர்கள் வைத்திருக்கும் கையிருப்பு அளவிற்கும் அரசு வரம்புகளை விதிக்கலாம்.


Original Link: LPG in Focus: What it is, how it is produced, and why India depends on imports


Share: