வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஒரு தேசிய நீர் தொலைநோக்கு. -நிலாஞ்சன் கோஷ்

நீர் மேலாண்மை (Water governance) காலநிலை மாற்றத்திற்கேற்ப மாறும் திறன் கொண்டதாக (climate-resilient) இருக்கவேண்டும்.  அதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.


இந்தியா ஏற்கனவே நீர் நெருக்கடியின் கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முரண்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. அதிகமான நதி அமைப்புகளைக் கொண்ட ஒரு நாடு, தீவிரமடைந்துவரும் பற்றாக்குறை, மோதல் மற்றும் சூழலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதற்கான விளக்கம் நீர்ப் பற்றாக்குறையில் இல்லை. மாறாக அது நிர்வகிக்கப்படும் விதத்தில்தான் உள்ளது.


இந்தியாவில் நீர், அரசியல் எல்லைகளை தாண்டி உள்ளது. ஆறுகள் மாநிலங்களைக் கடந்து செல்கின்றன. நிலத்தடி நீர் மேற்பரப்பு நீரோட்டங்களுடன் கலக்கிறது. மேலும், நீர் ஒரே நேரத்தில் வேளாண்மை, தொழில், நகரங்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்குப் பயன்படுகிறது.


இருப்பினும், நிர்வாகம் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் பரவி உள்ளது. நீரைத் திசைதிருப்புதல், அணைகள், மாசுபாடு போன்ற மேல்மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், கீழ்மட்டத்தில் குறைவான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ஒரு சூழலியல் அமைப்பு, ஒன்றோடொன்று தொடர்பற்ற தனிப்பிரிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது.


காலநிலை மாற்றம் (Climate change) இந்தப் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துகிறது. மழைப்பொழிவில் ஏற்படும் மாறுபாடுகள், அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சி மற்றும் மாறிவரும் நீரியல் சுழற்சிகள் ஆகியவை நிலையான நிர்வாகக் கட்டமைப்புகளைப் பயனற்றதாக்கி வருகின்றன.


வேளாண்மைக்கான ஊக்கத்தொகைகள், குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலைகள், அதிக நீர் தேவைப்படும் பயிர் முறைகளை வலுப்படுத்தியுள்ளன. நெல் மற்றும் கோதுமை மூலம் உணவுப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், அது நிலத்தடி நீர் குறைதல் மற்றும் ஆற்றுப் படுகைகளில் ஏற்படும் நெருக்கடி போன்ற  அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


பல  ஆண்டுகளாக, இந்தியாவின் அணுகுமுறை "கணித அடிப்படையிலான நீரியல்" (arithmetic hydrology”) கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. நீரை அதிகமாக வழங்குவதன் மூலம் (supply) நீர் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற எளிமைப்படுத்தப்பட்ட நம்பிக்கையாக உள்ளது. பெரிய அணைகள், கால்வாய்கள் மற்றும் நீர் எடுக்கும் அமைப்புகள் குறுகிய காலத்தில் நீர் கிடைப்பதை அதிகரித்துள்ளன. மணல் ஓட்டம் (sediment flow) மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. “கணித அடிப்படையிலான நீரியல்” (arithmetic hydrology) என்ற அணுகுமுறை, அதிக நீர் அதிக பயிர்கள், அதிக வளர்ச்சி (more water, more crops, more growth) என்ற எளிமையான சிந்தனையை ஊக்குவித்துள்ளது. ஆனால், இன்றைய நீர் சிக்கல்கள் மற்றும் செங்குத்து அச்சு (ordinate) போன்ற கணித கட்டமைப்பில் மட்டும் வெளிப்படுத்தக்கூடியவையாக இருந்திருந்தால், அவை நேரியல் இயற்கணிதத்தின் வாயிலாகவே தீர்க்கப்பட்டிருக்கும். அவை இனி சிக்கலான பிரச்சினைகளாகவும் இருக்காது.


இப்போது ஒரு முக்கிய மாற்றத்தை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது “வளர்ந்த இந்தியா” (Viksit Bharat) நோக்கங்களுடன் இணைந்த ஒருங்கிணைந்த தேசிய நீர் தொலைநோக்கு (National Water Vision) ஒன்றை உருவாக்க வேண்டும்.

அந்த தேசிய நீர் தொலைநோக்கு திட்டத்தின் 12 முக்கியக் கோட்பாடுகள் (tenets) பின்வருமாறு:


12 கோட்பாடுகள்


முதலாவதாக, ஆற்றுப் படுகையே நிர்வாகத்தின் அலகாக இருக்க வேண்டும். மாநில அடிப்படையிலான சிதறிய அணுகுமுறைக்கு பதிலாக, படுகை அளவிலான நிர்வாக அமைப்புகள் உருவாக்க வேண்டும்.


இரண்டாவதாக, நீர் ஒரு நிலையான இருப்பாகக் கருதப்படாமல், ஒரு மாறும் சமூக-சூழலியல் ஓட்டமாக (dynamic socio-ecological flow) அங்கீகரிக்கப்பட வேண்டும். மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர், வண்டல்கள், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் ஆற்றல் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகளின் பாகங்களாகும். இவற்றில் ஒரு சரிவு ஏற்படும் இடையூறுகள், அமைப்பு முழுவதும் தொடர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆளுகை இந்தச் சிக்கலான தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


மூன்றாவதாக, இந்தியா, ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மையை (Integrated Water Resource Management) நதி பள்ளத்தாக்கு அளவில் செயல்படுத்த வேண்டும். வேளாண்மை, நகர வளர்ச்சி, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒரே கட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும்.


நான்காவதாக, தொடர்ச்சியான மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகளில் வெளிப்படும் தற்போதைய முரண்பாடான கூட்டாட்சி முறைக்கு பதிலாக, அதிகாரம் அளிக்கப்பட்ட நதிப் படுகை ஆணையங்கள், பல்துறை நிபுணத்துவம் மற்றும் வெளிப்படையான தரவு அமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


ஐந்தாவதாக, இலவச அல்லது குறைந்த விலை வளமாகக் கருதப்படும் நீர், திட்டமிட்ட முறையில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதற்கும் தவறாக ஒதுக்கப்படுவதற்கும் உள்ளாவதால், அதற்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.


ஆறாவதாக, இது நீர் வரவுகள், வர்த்தகம் செய்யக்கூடிய அனுமதிகள் மற்றும் நீர் வழிப்பொருட்கள் போன்ற சந்தை அடிப்படையிலான கருவிகளுக்கு இடமளிக்கிறது. இவை பாதுகாப்பு மற்றும் திறமையான ஒதுக்கீட்டிற்கான ஊக்கங்களை ஒருங்கிணைக்க முடியும்.


ஏழாவதாக, சுற்றுச்சூழல் நீரோட்டங்கள் கொள்கையின் அடிப்படையில் உருவாக்க வேண்டும். ஆறுகள் வேளாண்மை, வாழ்வாதாரங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைத் தாங்கி நிற்கும் ஒரு உயிருள்ள அமைப்புகளாகும். இந்தச் செயல்பாடுகளைப் புறக்கணிப்பது வளர்ச்சியையே சீர்குலைக்கும்.


எட்டாவதாக, இந்தியா விநியோகத்தை அதிகரிப்பதிலிருந்து தேவை மேலாண்மைக்கு மாறவேண்டும். செயல்திறன் மேம்பாடுகள், பயிர் பல்வகைப்படுத்தல், நடத்தை மாற்றம் ஆகியவை உள்கட்டமைப்பை நிரந்தரமாக விரிவுபடுத்தாமலேயே நீர் பாதுகாப்பை வழங்க முடியும்.


ஒன்பதாவது, நிர்வாகம் தரவு அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். நீரியல், சூழலியல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தரவுகளை ஒருங்கிணைக்கும் வடிநில அளவிலான தகவல் அமைப்புகள், தகவலறிந்த முடிவெடுப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும்.


பத்தாவதாக, தனியார் துறையும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ESG தொடர்புடைய நீர் மேலாண்மை, நீர் கடன் (water credits) மற்றும் பொறுப்பான தொழில் நடைமுறைகள் மூலம் முதலீடு மற்றும் புதுமையை அதிகரிக்கலாம்.


பதினொன்றாவதாக, நீர் மேலாண்மை காலநிலை மாற்றத்திற்கேற்ப தாங்கும் திறன் கொண்டதாக (climate-resilient) மாறவேண்டும். நிச்சயமற்ற நிலை மற்றும் அபாயங்களை உள்ளடக்கும் மாற்றத்திறன் (adaptive) அமைப்புகள் மிகவும் முக்கியம்.


இறுதியாக, நிர்வாகம் அனைவர் பங்கேற்புடனும் (inclusive) இருக்க வேண்டும். கீழ்மட்ட (bottom-up) மற்றும் மேல்மட்ட (top-down) அணுகுமுறைகளுக்கு இடையில் சரியான சமநிலை இருக்க வேண்டும். நீர் மேலாண்மையில் பெண்கள் முக்கியமானவர்களாகக் கருதப்பட வேண்டும்.


பரிந்துரைக்கப்பட்ட தேசிய நீர் தொலைநோக்கின் 12-வது கோட்பாடு, 2026 உலக நீர் தினத்தின் கருப்பொருளான நீர் மற்றும் பாலினம் (Water and Gender) என்பதுடன் ஒத்துப்போகிறது. இதில் “நீர் தொடர்பான தீர்வுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளை மையமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்டுரையாளர், அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான துணைத் தலைவர் ஆவார்.

                 


Original Link: A national water vision for Viksit Bharat.


Share: