ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான ஆண்டுப் புத்தகம், உலகளாவிய பாதுகாப்பு குறித்து என்ன கூறுகிறது? -குஷ்பூ குமாரி

எந்தெந்த நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன, அவற்றின் ஆயுதக் கையிருப்புகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன? இந்தியாவின் நிலை என்ன? "அணு மற்றும் மரபுசார் ஆயுதங்களின் பிணைப்பு" (nuclear–conventional entanglement) மற்றும் பல தனித்தனியாகக் குறிவைக்கக்கூடிய மீள்நுழைவு வாகனங்கள் (Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV)) என்றால் என்ன?


தற்போதைய செய்தி?


சுவீடனை தலைமையிடமாகக் கொண்ட 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' (Stockholm International Peace Research Institute (SIPRI)) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியா 2025-ஆம் ஆண்டில் இராணுவத்திற்காக 92.1 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. இது உலகிலேயே ஐந்தாவது அதிகபட்ச இராணுவச் செலவாகும். இது கடந்த ஆண்டைவிட 8.9 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.




முக்கிய அம்சங்கள்:


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) என்றால் என்ன?


— 1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) என்பது மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான சர்வதேச அமைப்பாகும். இது கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் தரவுகள், பகுப்பாய்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.


— ஆயுதப் பரிமாற்றங்கள் குறித்து 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' வழங்கும் புள்ளிவிவரத் தரவுகள், அந்த அமைப்பால் வரையறுக்கப்பட்ட பெரிய அளவிலான ஆயுதங்களின் உண்மையான விநியோகங்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். சர்வதேச அளவில் நடைபெறும் பெரிய ஆயுதப் பரிமாற்றங்களின் அளவை, 'Trend-Indicator Value' (TIV) என்ற பொதுவான அளவீட்டு முறையைப் பயன்படுத்தி ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கணக்கிடுகிறது.


Trend-Indicator Value (TIV): ஆயுதங்களின் பண மதிப்பை மட்டும் கணக்கிடாமல், அந்த ஆயுதங்களின் தரம் மற்றும் இராணுவத் திறனை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச ஆயுதப் பரிமாற்றத்தின் போக்கைக் கண்டறிய ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்தும் ஒரு பிரத்யேக அளவீட்டு முறை.





2026-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள் யாவை?


1. உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து 2025-ஆம் ஆண்டில் தங்களது ராணுவத்திற்காக முன்னெப்போதும் இல்லாத அளவாக 2.9 டிரில்லியன் டாலர்களை (சுமார் 2.9 லட்சம் கோடி டாலர்) செலவிட்டுள்ளன. இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதார உற்பத்தியில் 2.5 சதவீதத்திற்குச் சமமாகும். உலகளாவிய ராணுவச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரிப்பது இது 11-ஆவது ஆண்டாகும். மேலும், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது வரலாற்றிலேயே பதிவு செய்த மிக அதிகபட்சத் தொகை இதுவாகும். 


2. உலகிலேயே ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய நாடாக அமெரிக்கா (US) முதலிடத்தில் உள்ளது. அது 2025-ஆம் ஆண்டில் 954 பில்லியன் டாலர்களைச் செலவிட்டது (இது 2024-ஆம் ஆண்டைவிட 7.5 சதவீதம் குறைவு). இது உலக ஒட்டுமொத்த ராணுவச் செலவில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காகும். சீனா 336 பில்லியன் டாலர்களுடன் (உலக அளவில் 12%) இரண்டாம் இடத்திலும், ரஷ்யா 190 பில்லியன் டாலர்களுடன் (6.6%) மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி 114 பில்லியன் டாலர்களையும், இந்தியா 92.1 பில்லியன் டாலர்களையும் செலவிட்டுள்ளன. 

3. இந்தியா-பாகிஸ்தான் மோதலை இந்த ஆண்டின் மிகவும் அபாயகரமான பதற்றப் பகுதிகளில் ஒன்றாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தானின் விமான மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் சில அணுசக்தி தொடர்பான பணிகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியது. இருப்பினும், பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க இரு தரப்பினரும் நடவடிக்கைகளை எடுத்தனர் என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டது.



4. ஆயுத மோதலின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை வெளிப்படையாக இணையவழித் தாக்குதல்களைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளின் காலவரிசையில், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இவ்வாறு பதிவு செய்துள்ளது: "மே 7-10: இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பகுதியில் தீவிரமான துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டன."




5. கடந்த 2021-25-ஆம் ஆண்டு காலகட்டத்தில், பெரிய அளவிலான ஆயுதங்களின் சர்வதேசப் விற்பனை மற்றும் இறக்குமதி, பனிப்போர் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இது 2016-20-ஆம் ஆண்டு காலகட்டத்தோடு ஒப்பிடும்போது 9.2% அதிகமாகும். உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 70 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், 2021-25-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை வாங்கிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2% ஆகும். 


உலகளாவிய அணுசக்தி குறித்து அந்த அறிக்கை என்ன கூறுகிறது?


6. 2026-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியா 2025-ஆம் ஆண்டில் தனது அணு ஆயுதக் கையிருப்பைச் சிறிதளவு விரிவுபடுத்தி, புதிய வகை அணு ஆயுத விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் 2025-ஆம் ஆண்டில் புதிய விநியோக அமைப்புகள் மற்றும் அணுக்கருப் பிளவு பொருட்களை (Fissile material) சேகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.


7. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் (SIPRI) மதிப்பீடுகளின்படி, 2026-ஆம் ஆண்டு  ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்களும் இருந்தன. 2025-ஆம் ஆண்டில் இந்தியா தனது ஆயுதக் கையிருப்பைச் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும், நீண்டதூரம் பயணிக்கக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.







2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகின் அணு ஆயுதங்களைக் கொண்ட முதல் 9 நாடுகள்:

தரவரிசை

நாடு

மொத்த அணு ஆயுதங்கள்

1

ரஷ்யா

5,420

2

அமெரிக்கா

5,042

3

இங்கிலாந்து

225

4

பிரான்ஸ்

370

5

சீனா

620

6

இந்தியா

190

7

பாகிஸ்தான்

170

8

வட கொரியா

60

9

இஸ்ரேல்

90

மொத்தம்


12, 187


8. “ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் 2026-ஆண்டுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள (SIPRI Yearbook 2026) முக்கியக் கண்டுபிடிப்புகள் என்னவென்றால், நாடுகள் தங்களின் தேசிய அதிகாரத்தின் ஆயுதமாக அணுஆயுதங்களை அதிகளவில் நம்பத் தொடங்கியுள்ளன. இது அணுஆயுதங்களின் எண்ணிக்கையையும் அவற்றின் பங்கையும் குறைப்பதற்காகப் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகளை தலைகீழாக மாற்றியுள்ளது. அதேநேரத்தில், தவறான கணக்கீடுகள் மற்றும் மோதல்கள் தீவிரமடைவதற்கான அபாயங்களும் அதிகரித்து வருகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

9. சமீபத்திய நவீனமயமாக்கலும் அறிவியல் முன்னேற்றங்களும் உலகை  ஆபத்தானதாக மாற்றி வருகின்றன என்று இந்த ஆண்டுப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. அணு ஆயுத-மரபுவழிப் போர் முனைப்பு, ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பம் (MIRVs) அதிகரிப்பது மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த அணுஆயுத விநியோக அமைப்புகள் ஆகியவை உலகை அச்சுறுத்தும் வளர்ச்சிகளாகும். இவை உலகளாவிய அணுஆயுதப் போர் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.


10. அணு-மரபுவழிப் போர்ச் சிக்கல்: ஒரே மாதிரியான உபகரணங்கள், குறிப்பாக ஏவுகணைகள், அணு மற்றும் மரபுவழி இராணுவத் திறன்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் ஒரு தெளிவற்ற நிலையைக் குறிக்கிறது. இது, மோதல்கள் அணு ஆயுத மோதலாக மாறிவிடும் அபாயத்தை உருவாக்குகிறது.


11. ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பம் (MIRVs): இத்தொழில்நுட்பம், ஒரே ஒரு ஏவுகணையில் பல அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்டது. மேலும், அவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு இலக்குகளைத் தாக்குமாறு நிரலாக்கம் (Program) செய்ய முடியும். இதனால் அந்த ஏவுகணையின் அழிவுத்திறன் பல மடங்கு அதிகரிக்கிறது.

2026-ஆம் ஆண்டு மே மாதத்தில், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை, ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பத்துடன்  (MIRVs) இணைத்து, இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதனை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence (MoD)) அறிவித்தது. ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைப் பரிசோதனையானது ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் மேற்கொள்ளப்பட்டது.


12. நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த அணுஆயுத விநியோக அமைப்புகளும் உலகளவில் அதிகரித்து வருகின்றன. அணுஆயுதம் வைத்துள்ள நாடுகள், தங்களின் ஆயுதங்களை நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிகளவில் நிலைநிறுத்தி வருகின்றன.


உலக நாடுகள் அணு ஆயுதங்களை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன?


1. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (Non-Proliferation of Nuclear Weapons (NPT)): 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். அணு ஆயுதங்கள் மற்றும் ஆயுதத் தொழில்நுட்பம் பரவுவதைத் தடுத்தல், அணு ஆற்றலின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் ஆயுதக் குறைப்பு இலக்கை முன்னெடுத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.


ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 1967-ஆம் ஆண்டுக்குமுன் அணு வெடிப்புச் சாதனத்தை உருவாக்கிச் சோதித்த நாடுகளை (அமெரிக்கா, ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா) இந்த ஒப்பந்தம் 'அணு ஆயுத நாடுகள்' என்று சுட்டிக்காட்டுகிறது. மேலும், வேறு எந்த நாடும் அணு ஆயுதங்களைப் பெறுவதை இது  தடை செய்கிறது. 191 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இந்தியா 1974-ஆம் ஆண்டில் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதற்குப் பதிலாக, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உலக நாடுகள் அனைத்திற்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தியது.




2. அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (Treaty on the Prohibition of Nuclear Weapons (TPNW)) 2017): இது அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முதல் சட்டப்பூர்வ சர்வதேச ஒப்பந்தமாகும். அணு ஆயுதங்களை உருவாக்குவது, சோதனை செய்வது, தயாரிப்பது, வைத்திருப்பது அல்லது அணு ஆயுத மிரட்டல் விடுப்பது என அணு ஆயுதம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஒப்பந்தம் முற்றிலும் தடை செய்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.


3. விரிவான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) 1996): இது இராணுவ அல்லது அமைதி நோக்கங்களுக்காக நடத்தப்படும் அனைத்து வகையான அணு வெடிப்புகளையும் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். 1996-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இது இன்னும் ஒப்புதல் அளிக்கும்  நிலையிலேயே உள்ளது. 18 நாடுகள் இன்னும் இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கவில்லை (ஒரு நாடு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவிக்கும் செயல்முறையே ஒப்புதல் அளித்தல் ஆகும்). இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.


4. புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (New Strategic Arms Reduction Treaty (New START)): அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் பயன்பாட்டில் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றை ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் "புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்" (New START) கடந்த பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் காலாவதியானது. இருநாடுகளுக்கும் இடையே எஞ்சியிருந்த கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இதுவே ஆகும்.



குறிப்பாக, இந்த ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது.            சமீபத்தில், உக்ரைன் போருக்கு இடையில் 2023-ஆம் ஆண்டில், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நடக்கும் அணு ஆயுதக் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்குத் தன்னிச்சையாக நீட்டிக்க முன்மொழிந்தார்.

 

Original article : What does SIPRI Yearbook 2026 reveal about global security? -Khushboo Kumari

Share: